இந்துபிருந்தா சுபாஷ் திருமணம் நடைபெற்று இரண்டு வாரம் முடிந்திருக்க, இன்று கணவனோடு தாய்வீட்டிற்கு வரவிருக்கிறாள் இந்துபிருந்தா.
தங்கையின் திருமணம் முடிந்த அடுத்தநாளே, மாமா இங்கிருக்கும்வரைதான் நீயும் இருக்கனும், மாமா கிளம்பினால் நீயும் கிளம்பித்தான் ஆகவேண்டும், இதில் எதாவது பிரச்சனை செய்தால், கிளம்பறதுனா உங்க பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்புங்கனு நேரா மாமாகிட்டயே பேசிடுவேன் என ரேவதியிடம் மிக கண்டிப்போடு சொல்லிவிட்டான் வான்முகிலன்.
வான்முகிலன் சொன்னால் நிச்சயம் செய்வான் என வேறு வழியில்லாமல், பிருந்தாவும் இல்லாம அம்மா ரொம்ப டல்லாகிடுவாங்க, ஒரு இரண்டு வாரத்துக்கு இங்கையே இருக்கலாம் என முதல் முறையாக நரேந்திரனிடம் அனுமதி கேட்டாள் ரேவதி.
ஆறு வருடங்களுக்குப் பிறகு தன்னை மதித்து அனுமதி கேட்கும் மனைவியின் விருப்பத்தை விருப்பத்தோடு ஏற்றான் நரேந்திரன்.
ஆறு வருடங்களுக்கு பிறகு, குழந்தை கணவனோடு ரேவதி தன் வீட்டிலிருப்பது சுப்புலஷ்மிக்கு பெருத்த சந்தோசத்தை தர, புது உற்சாகத்திலிருந்தார் சுப்புலஷ்மி.
தங்கையை எப்படி பிரிந்திருப்பேன் என உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருந்த வான்முகிலனை மொத்தமாய் தனதாக்கிக்கொண்டு, இந்துபிருந்தா பிரிவின் தாக்கத்தை அவனறியாமலே முடிந்தவரை குறைத்திருந்தான் ப்ரவீன்.
நடை பழகிய பின்னே ரேவதியோடு ஓரிரு முறை வந்திருக்கிறான் ப்ரவீன். ஆனால் அப்போதெல்லாம் இந்துபிருந்தா பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பதால், அதிகம் வீட்டில் இருக்கமாட்டாள், வான்முகிலன் வீட்டில் இருப்பதும் மிக மிக அரிதே. அப்படியே வீட்டில் இருந்தாலும் குழந்தை பெரிதாய் தன் தாய்மாமனோடு ஒட்டமாட்டான்.
நரேந்திரனின் தாய்க்கு ப்ரவீன் முதல் பேரக்குழந்தை, அதிலும் நான்கு வருடம் கழித்து வரமாய் வந்த பேரன் ஆதலால் ப்ரவீனோடுதான் நாளெல்லாம் பொழுதை கழிப்பார்.
இங்கு வந்தால் சுப்புலஷ்மியும் வேலையில் கவனமாய் இருக்க, வான்முகிலன், பிருந்தாவும் அதிகம் வீட்டிலிருக்கமாட்டார்கள்.
ரேவதி மகனிற்கு ஊட்டுவது, போன்ற முக்கிய வேலைகளை சரியாகத்தான் செய்வாள். ஆனால் அவனின் பாட்டி போல குழந்தையோடு சிரித்து விளையாடமாட்டாள். அப்படி மனநிலையிலும் அவளில்லை. ஆனால் குழந்தைக்கு அவர்கள் கவலைதானே அவர்களுக்கு பெரிது.?
தன் வீட்டில் இருக்கும் இன்பம் இங்கு கிட்டவில்லை என நினைத்தானோ என்னவோ.. இங்கு வந்தால் அழுது கொண்டிருந்தவன், தனது இரண்டாவது வயதை நெருங்கியதும் ரேவதியோடு இங்கு வரவேமாட்டான் ப்ரவீன்.
இந்த முறை அன்னையோடு சேர்த்து தந்தையும் கிளம்பியதால்தான் வந்தான். வந்தவனுக்கு சித்தியின் திருமணம் புது அனுபமாய் இருக்க, அதோடு தன் தந்தையும் கூடவே இருக்கவே தன் வீட்டிற்கு போக அழவில்லை.
இந்துபிருந்தா திருமணத்திற்கு பின்னே வான்முகிலனும் வீட்டிலேயே இருக்க, இத்தனை பெரிய வீடு, வான்முகிலனோடு மாலை வேளைகளில் நடைப்பயிற்சி, மொட்டை மாடியில் நிலாச்சோறு உண்பது..
காலை வேளையிலும் தன் மாமனின் சொற்படி மதில் சுவற்றிற்குள்ளேயே சின்ன சின்ன உடற்பயிற்சிகளுக்குப் பின்னே சிறிது நேர ஓட்டம், பிறகு தட்டு எறிதல், கயிறாட்டம், போன்ற விளையாட்டுகள் பழகுவது என அனைத்தும் புது அனுபவமாய் இருக்க, தன் மாமனோடு நன்றாக ஒட்டிக்கொண்டான் சிறுவன்.
ஆறுவயதை தொட்ட நிலையில், மணி மணியாய் பேசுவான் என்றாலும், தன் பள்ளி தோழன் தோழிகள், ஆசிரியர்கள் பற்றி விளக்கும்போது ஒரு சில வார்த்தைகளில் சிறுவனிடம் எட்டிப்பார்க்கும் மழலையில் வான்முகிலனும் இன்பமாய் பொழுதை கழித்தான்.
சுபாஷ் ஆசிரியர் என்பதோடு பனிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடமெடுக்கும் ஆசிரியர் என்பதால், திருமணத்திற்கென விடுப்பெடுக்கும்போதே ஹனிமூன் சென்றால்தான் ஆச்சு..
இல்லையேல் பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னேதான் போக முடியும் என மறு வீட்டு சாங்கியம் முடித்து அன்றே மனைவியோடு சென்றவன், தன் தேனிலவை சந்தோசமாய் முடித்து பதிநான்கு நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் மாமியார் வீட்டிற்கு வந்தான்.
“முகிலா.. பிருந்தாவும் மாப்பிள்ளையும் வந்துட்டாங்க.” என குரல் கொடுத்து ஆரத்தி எடுத்து உள்ளே வரப்பணித்தார் சுப்புலஷ்மி.
அறையிலிருந்து ப்ரவீனை முதுகில் சுமந்தபடி வான்முகிலன் வெளியே வர, “அண்ணா..” என அருகே சென்று கட்டிக்கொண்டவள்.. “ஹே.. யார் டா நீ? இறங்குடா.” என பொய்யாய் மிரட்டினாள் சிறுவனை.
“இது என் மாமா.” என்றான் உரிமையாக.
“ஆ.” என விழிவிரித்தவளிடம் இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி?” என நரேந்திரனை காண்பித்தான்.
“ம்… அம்மா சொன்னாங்கண்ணா.” என நரேந்திரனிடம் வந்தவள்.. “நல்லாயிருக்கிங்களா மாமா..” என்றாள்.
“ம்.. என் மச்சான் தயவால ரொம்ப நல்லாயிருக்கேன்.” என்றான் வான்முகிலனைப் பார்த்தவாறே.
ரேவதி கணவனை முறைக்க.. “அங்க பாருங்க பத்ரகாளியை.” என சிரிப்போடு சொன்னவன்.. சுபாஷிடம் நலம் விசாரித்து, விருந்துண்டு கலகலப்பாக பொழுதை கழித்தனர்.
மாலை மூன்று மணிபோல் தனதறையிலிருந்து வெளிவந்த இந்துபிருந்தா, அண்ணனின் அறைக்கதவை தட்டினாள்.
“ப்ரவீன் தூங்கறான், சத்தம் போடாம வா பிருந்தாம்மா.” என்றான்.
பிருந்தா உள்ளே வர.. “ம்.. சுபாஷ் தூங்கறாரா?” என்றான் சிரிப்போடு.
வான்முகிலன் அமைதியாய் இருக்க.. சுபாஷ் எதாவது நினைப்பார் என அண்ணன் நினைக்கிறாரோ என்று.. “பொண்ணழைக்கை வந்தவங்க அன்னைக்கு நாங்க இரண்டு பேரும் அழுததை சுபாஷ்கிட்ட சொல்லியிருக்காங்க, அதனால தேன்நிலாப் பத்தி நான் சொல்லாமலே சுபாஷ்க்கு தெரிஞ்சுடுச்சி. இப்படி ஃப்ரண்ட்ஸிப் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்னு சொன்னார்.” என்றாள் பெருமையாக.
“பிரச்சனை அதுயில்ல பிருந்தாம்மா.” என்றவன் தங்கையை ஆழ்ந்து பார்த்து.. “அவளுக்கு கல்யாணம் ஆனபின்ன அவ வீட்டுக்கு நீ போனாலும் சரி, இல்ல உன் வீட்டுக்கு அவ வந்தாலும் சரி. யாருக்கும் பிரச்சனையிருக்காது. அதுவரை நீ போன்ல பேசிக்கோயேன்.” என்றான்.
வான்முகிலனிடமிருந்து இப்படி பதிலை எதிர்பார்க்காத இந்துபிருந்தா பெரும் ஏமாற்றத்தோடு.. “ஏண்ணா இப்படி சொல்ற?” என்றாள்.
“எல்லாம் உன் ஃப்ரண்ட் நல்லதுக்காகத்தான்.” என்க.. புரியாமல் பார்த்தாள் இந்துபிருந்தா.
“ம்.. அன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் அழுததை சிலர் மண்டபத்துலயும் பேசிக்கிட்டாங்க. இவ்வளோ அன்பை வச்சிக்கிட்டு ஏன் இந்த பொண்ணு கல்யாணத்துக்கு வரல? அதுவும் பக்கத்து வீட்டுலயே இருக்குனு சந்தேகமா பேசிக்கிட்டாங்க.
நீ வேற அவளை சீக்கிரம் கல்யாணம் செய்துக்கனும்னு சத்தியம் கேட்டியா? அவ தயங்கவும் அவளை அதட்டி சத்தியம் செய்ய சொன்னேன்ல? அதுதான் பிரச்சனையாகிடுச்சி.” என்க, இந்து பிருந்தா கலக்கமானாள்.
“அவ தனியா இருக்க வேணாமேனு நீ சத்தியம் செய்ய சொன்ன.. நேரம் ஆகுதேன்னும், எல்லாரும் உங்களையே பார்த்திட்டிருக்காங்கனும் நான் அவளை அதட்டினேன்..
அதை பார்த்திட்டிருந்த நம்ம க்ளீனர் பையன் நான் அவளை விரும்பறேனு நினைச்சிட்டான் போல.. என்னணா? அன்னைக்கு அக்காக்காக பல்சரை நகர்த்தி வைக்க சொல்லி என்னை மிரட்டுனிங்க? நேத்து நைட் கல்யாணம் செய்துக்கறேனு சத்தியம் செய்னு அவ்வளோ உரிமையா மிரட்டுறிங்க?
தங்கையோட ஃப்ரண்ட்கிட்ட எப்படி லவ்வை சொல்றதுனு யோசிக்கிறிங்களா? அப்படி எதாவதுனா சொல்லுங்க.. நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்னு ஆரம்பிச்சிட்டானுங்க.
டேய்… அப்படிலாம் எதுவுமில்லனு நான் சொன்னாலும் நம்பாம, கல்யாணத்துக்கு வந்த பாஸ்கிட்ட வேற உளறிட்டானுங்க.
அவர் என்னை தனியா கூப்பிட்டு, என்ன முகிலா? உன் பக்கத்து வீட்டு பொண்ணை சீக்கிரம் கல்யாணம் செய்துக்கிறேனு உன் தங்கைகிட்ட சத்தியம் செய்ய சொல்லி மிரட்டுனியாம்?
காரணமில்லாம நீ யார் விசயத்துலயும் தலையிட மாட்டியே.. உன் மனசுல அந்த பொண்ணிருந்தா சட்டுபுட்டுனு கல்யாணம் செய்.. இல்ல இரண்டு பேருக்குமே தேவையில்லாத கெட்ட பேர் ஆகிடும்னு சொன்னார்.
என்னை யார் தவறா பேசினாலும் அவன் கையை காலை உடைச்சி திரும்ப பேசவிடாம செய்திடுவேன்.. ஆனா அவளால அது முடியாது.. அவளுக்காக நான் செய்தாலும், இப்படி பேச்சுக்கப்புறம் அதையும் சந்தேகத்தோடதான் பார்ப்பாங்க.
ஏற்கனவே நம்ம அம்மாவும் ரேவாவும் அவளை வேதனை படுத்திட்டாங்க, இப்போ அவளோட என்னை சேர்த்து பேச்சு கிளம்பினா அவளும் ரொம்ப வேதனைப்படுவா.. அவ எதிர்காலத்துக்கும் அது நல்லதில்ல.
அம்மா ரேவா அவளோட கண்டிப்பா பேசமாட்டாங்க, கல்யாணம் முடியும் வரை அவ நல்லதுக்காகனு கூட நான் அவளோட பேசாம இருக்கிறதும், நீ அவளை சந்திக்காம இருக்கிறதும்தான் அவளுக்கு நல்லது. அதுதான் சரியும் கூட..” என்றான்.
தன் தோழியை எவ்வளவு பிடித்தபோதும், தனக்கு அண்ணியாகும் கனவை ஒருநாளும் கண்டதில்லை. ஆனால் ரேவதியும் அன்னையும் தேன்நிலாவை பெண் கேட்டதிலிருந்து, தேன்நிலாவே தனக்கு அண்ணியானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைக்காத நாளில்லை.
ஆனால், தன் அக்கா பேசிய பேச்சிற்கு இனி அது நடக்கவே நடக்காதென்றும் தெரியும்.. இதில் நிலாவும் தன் அண்ணனிடம் இனி பேசவேணாம் என்றுவிட்டாள்.
மஹிமாவோடு ஆசையாசையாய் ஏற்பாடு செய்த திருமணம்.. திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் மஹிமா திருமணம் வேணாம் என்றதும் சிறிதும் யோசிக்காமல் திருமணத்தை நிறுத்திய அண்ணன், தன்னிடம் பேச வேணாம் என்ற நிலாவை மட்டும் எப்படி ஏற்பார்? என வேதனையோடு தன் ஆசையை தனக்குள்ளே புதைத்தாள்.
கண்விழித்த ப்ரவீன் பிருந்தாவை பார்க்க, இருவர் பேச்சும் நின்றது. “ஹாய் குட்டி..” என ஆசையாய் அழைக்க, அவளிடம் ஏதும் பேசாமல், வான்முகிலனைப் பார்த்து தன்னை தூக்கும்படி இரு கைகளையும் விரித்தான்.
“எப்படிண்ணா உன்கிட்ட இப்படி ஒட்டினான்? மாமாவும் இத்தனை நாள் இங்கிருக்கிறார்? ரேவதிக்கா மாமியார் எப்படி அனுமதிச்சாங்க?” என ஆச்சர்யமானாள்.
“ம்.. அதெல்லாம் இன்னொரு நாளைக்கு பேசலாம், ப்ரவீனுக்கு பசிக்கும், சுபாஷ் தனியா இருப்பார், வா வெளில போலாம்.” என வெளியே அழைத்து வந்தான்.
நரேந்திரன் மற்றும் சுபாஷோடு வான்முகிலன் பேசிக்கொண்டிருக்க, வான்முகிலனுக்கு கேளாதபடி.. “பிருந்தா, அன்னைக்கு நீங்க இரண்டு பேரும் அழுததை எத்தனை பேர் எப்படிலாம் பேசினாங்க தெரியுமா? இனி அந்த நிலாவோட பேசாத.” என முனுமுனுத்தாள் ரேவதி.
“ஏன் பேசக்கூடாது? நிலா என்ன தப்பு செய்தா.?” என பிருந்தா கடிய.. “ஏய்.. சத்தமா பேசாதடி, நிலா பேச்சு எடுக்கவே கூடாதுனு முகிலன் சொல்லியிருக்கான்.” என பயந்து அதட்டினாள்.
ஆனால் நிலா என பிருந்தா சொன்னது நன்றாக செவியில் விழுந்ததால், ரேவதியிடம் வந்த வான்முகிலன்.. “தேன்நிலா பத்தின பேச்செடுத்தா என் உறவை இழந்துடுவனு சொல்லியும் அவளை மறக்கலயா நீ?” என்றான் முறைப்பாக.
“இனி அவளோட பேசாதனு மட்டும்தான் சொன்னேன்.” என்றாள் சிறு பயத்தோடு.
“நீ தேன்நிலாவை அவ்வளோ பேசியும் இவங்க இவ்வளவுதானு ஒதுங்கியிருக்கிறதுதான் நமக்கு நல்லதுனு தெளிவான முடிவோட அவளோட இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட்டா..
ஆனா நீ இன்னும் அவளையே நினைச்சிட்டு, என்னையும் சேர்த்து நினைக்க வைக்கிற.” என முறைத்தான் ரேவதியை.
“உன்னையும் சேர்த்து நினைக்க வைக்கிறேனா? இப்போ பிருந்தாகிட்ட பேசினதை தவிர்த்து, இத்தனை நாள்ல அவளைப் பத்தி யார்க்கிட்டயும் பேசலையேடா.” என ரேவதி அதிர..
“செய்ய கூடாத விசயத்தை செய்துட்டு, இப்போ அமைதியாகிட்டா செய்தது இல்லனு ஆகிடுமா? என்னைப் பொருத்தவரை தேன்நிலா பக்கத்து வீட்டுப்பொண்ணு, கொஞ்சம் பரிதாபத்துக்குரிய பொண்ணு… ஆனா நல்ல பொண்ணு.. இப்படி மட்டும்தான் நினைச்சிருந்தேன். நம்ம பிருந்தாவோட அவ இவ்வளோ க்ளோஸ்னு கூட தெரியாது.
ஆனா என்னைக்கு எனக்காக தேன்நிலாவை கேட்டிங்களோ? அன்னைலயிருந்து, இப்போ வரைக்கும் எதாவது ஒரு காரணத்துனால தினம் தினம் அவளை பெருமையா நினைக்கிற மாதிரி ஆகுது.” என கடுகடுத்தான்.
“விடு முகிலா, இரண்டு மாப்பிள்ளையும் வந்திருக்காங்க, நாம இப்படி முறைச்சிட்டிருந்தா நல்லாவா இருக்கும்?” என கெஞ்சி.. “பிருந்தாகிட்ட எதுக்கு அவளைப்பத்தி பேச்செடுக்குற?” என கடுகடுத்து, “பிருந்தா.. கிச்சன்ல பலகாரம் இருக்கு, எல்லாருக்கும் எடுத்து வந்து கொடுடா.” என்று அனைவரையும் சகஜமாக்க முயன்றார் சுப்புலஷ்மி.