“பிடிக்காதுனு இல்ல, இதுக்கு முன்ன வளர்க்கனும்னு தோணல, பிருந்தா கல்யாணத்துக்கப்புறம் ரொம்ப தனியா இருக்குற மாதிரி ஃபீல் ஆனது, அதான் இந்த குட்டிமாவை வாங்கி வந்தேன்.” என தன் மடிமீதமர்ந்திருந்த கிளியின் அலகை நீவினாள்.
“உன் தனிமையை இப்படி போக்கினாலும் போக்குவ.. ஆனா ஒரு பத்து நாள் நம்ம வீட்டுல வந்து இருக்கமாட்டியாக்கா?” என தமிழரசன் முகம் வாடினான்.
“அப்படியில்லடா, வேலைக்கு இங்கயிருந்து போறதுதான் வசதி. அதோட யாருக்கும் பயந்து நான் அங்க வந்ததா இருக்க கூடாதுனு ஒரு ஆதங்கம், கூடவே புது அனுபவமா இருக்கட்டுமேனு வாங்கினேன்.” என்றாள் சமாதானமாக.
மூவரும் அமைதியாக இருக்க.. சூழலை சகஜமாக்க.. “என்ன பேருனு கேட்டல்ல? இன்னும் வைக்கல, இப்போதைக்கு குட்டிமானுதான் கூப்பிடறேன். நீயே எதாவது சொல்லேன்.” என்றாள் ஆசையாக.
“அப்போ கர்ணன்னு வை. உயிரே போனாலும் உன்னை விட்டு போகமாட்டான்.” என்றான் பெருமையோடு.
“அப்போ நான் துரியோதனனா?” என இவள் முறைக்க, “அச்சோ அப்படியில்லக்கா..” என பதறி.. “சரி இரு, வேற பேரு யோசிக்கலாம்.” என்க..
“வேணாம் வேணாம், இதுவே நல்லாயிருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு..” என சந்தோசத்தோடு ஒப்புக்கொண்டு, கிளிக்கு பெயர் சூட்டினர்.
“நிலாம்மா.. உன்னை நல்ல இடத்துல கேட்குறாங்கடா, பேர் பொருத்தம் அம்சமா பொருந்தி வருது. நீ சம்மதிச்சா பத்து நாள்ல பொண்ணு பார்க்க வந்திடுவாங்க.” என்றார் லிங்கேசன்.
இந்துபிருந்தாவிடம் சத்தியம் செய்ததை நினைத்தவள்.. “வர சொல்லுங்கப்பா, எனக்கு அவரையும், அவருக்கு என்னையும் பிடிச்சிருந்தா பார்க்கலாம்.” என்றாள்.
“என்னடாம்மா இப்படி பட்டுனு ஓ.கே சொல்லிட்ட? நிஜமா வர சொல்லவா?” என்றார் ஆச்சர்யத்தோடு.
“ஆமாம்ப்பா, நிஜமாதான் சொல்றேன்.” என அன்று தோழிக்கு சத்தியம் செய்ததையும் சொல்ல.. “ம்.. ரேவாம்மா இப்படி மாறும்னு நாங்க நினைச்சே பார்க்கல, ஆனா, இத்தனை நடந்த பின்னும் பிருந்தாம்மாக்கு உன்மேல பாசம் குறையல பார்த்தியா? அதுதாண்டா ஆச்சர்யம்.” என்றார் பெருமையாக.
“ஆமாம்ப்பா.. அவளுக்கு நான் ரொம்ப பிடிக்கும். எனக்கும் அப்படித்தான்.” என்றாள்.
“சரிடாம்மா. மாப்பிள்ளை பெங்களூர்ல தனியார் கம்பெனியில வேலைல இருக்காராம். லட்சத்துல சம்பளம் வாங்குறாப்பிலனு தரகர் சொன்னார்.
நாம சம்மதம் சொன்ன பின்ன லீவ் போட்டுட்டு வருவாங்க, நாளைக்கே அவங்ககிட்ட பொண்ணு பார்க்க வர சம்மதம் சொல்லிடறேன். என்னைக்கு இங்க வராங்கன்றதையும் கேட்டுக்கறேன்.” என்றார் சந்தோசமாக.
“சரிப்பா.” என சம்மதித்தவள்.. “ஆனா ஒரு கண்டிசன்.. தமிழ் படிப்பு முடியும்வரை என் சம்பளத்தைப் பத்தியோ, வேலைக்கு போகக்கூடாதுனோ என்னை கட்டிக்கப் போறவன் சொல்லக்கூடாது. இதுக்கு ஓ.கே சொல்றவங்களைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்.” என்றாள் உறுதியாக.
லிங்கேசன்.. “பழைய கடன் ஏதும் இல்ல, அவன் படிப்பை நாங்க பார்த்துப்போம். அதைப்பத்திலாம் யோசிக்காத நிலாம்மா.” என்றார்.
“இல்லப்பா, நீங்க கட்டுறிங்க, நான் கட்டுறேன்றதெல்லாம் நமக்குள்ள.. ஆனா என்னை கட்டிக்கப்போறவன் இந்த ஒரு விசயத்துல தலையிடக்கூடாது. தமிழ் படிப்பு முடிஞ்சிட்டா அவங்க வேலைக்கு போகவேணாம்னாலும் கேட்டுக்குவேன்.” என்றாள்.
லிங்கேசன் அமைதியாக, “ஏன்ப்பா இவ்வளோ கவலைப்படுறிங்க. அப்படியொன்னும் எல்லாரும் கெட்டவங்க கிடையாது. நிறைய நல்ல பசங்க இருக்காங்க. தேடுங்க கிடைப்பாங்க.” என்றாள் இலகுவாக.
“சரிம்மா..” என அன்று மாலைவரை நிலாவோடிருந்தவர்கள் கிளம்பியதும், கிளியை கூண்டோடு வெளியே எடுத்துவந்து துணி காயப்போடும் கம்பியில் மாட்டிவிட்டு, செடிகளுக்கு தண்ணீர் விட ஆரம்பித்தாள்.
வான்முகிலனோடு மாடியிலிருந்த ப்ரவீன்.. “ஐ.. கிளி..” என குதூகலித்து, “மாமா.. அங்க பாருங்க, எனக்கு அது வேணும்.” என்றான்.
குழந்தை குரல் என்பதால் மேலே பார்த்த நிலாவிற்கு, அவனின் மாமா என்ற அழைப்பில் ரேவதியின் குழந்தை என்பதை புரிந்தவள் உடனே பார்வையை விலக்கி, தண்ணீர் விடும் பணியை தொடர்ந்தாள்.
“டேய்.. அது அவங்களுது டா, உனக்கு வேற வாங்கி தரேன்.” என வான்முகிலன் சொல்ல, “எனக்கு இப்பவே வேணும்.” என அடம்பிடித்தான்.
“ப்ரவீன்.. அது அவங்களுது. வா கீழ போலாம்.” என மிரட்ட.. குழந்தை பெரிதாய் அழ ஆரம்பித்தான்.
மனம் கேளாமல் உள்ளே சென்றவள், ஒரு கயிற்றை எடுத்து வந்து கிளியின் காலில் கட்டி, கயிற்றின் ஒரு முனையை பிடித்துக்கொண்டு, மாடியை நோக்கி பறக்கவிட்டாள் கிளியை.
அத்தனை பெரிய மாடியில் பறக்க முடியாமல் கிளி வான்முகிலன் வீட்டு ஜன்னலில் அமர்ந்திட, “கயிறை மேல போடறேன், பிடிச்சிக்கிறியா?” என சிறுவனிடம் கேட்டு, வான்முகிலனைப் பார்த்தாள்.
“பேச வேணாம்னு சொன்ன? இப்போ எதுக்கு பேசுற? கிளியை வேற கொடுக்க நினைக்கிற?” என கடுகடுக்க..
“குழந்தை பாவம்னுதான்… வேணாம்னா விடுங்க.” என இவள் ரோசமாய் சொல்ல.. “என் அக்கா உன்னை தவறா பேசினதுக்கப்புறமும், நீ பிருந்தா மேல வச்சிருக்க பாசத்தை நினைச்சி இப்போ வரைக்கும் எனக்கு எதோ போல இருக்கு.
அதாவது நீ பெரிய மனசுகாரி போலவும், என் குடும்பம் உனக்கு பெரிய வேதனை கொடுத்த மாதிரியும் ஏற்கனவே உன்னைப் பார்க்க ரொம்ப கில்ட்டியா இருக்கு.
இதுல கிளியை இவனுக்கு கொடுத்தினா, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு உன் நினைப்புதான் வரும்.. என்னோட பேச வேணாம், என் உதவி தேவையில்லனு சொன்ன பொண்ணை நினைச்சிட்டிருக்க எனக்கு சுத்தமா பிடிக்கல..
குழந்தைனா கேட்கத்தான் செய்வான். அதுக்காக பார்க்குறதெல்லாம் வாங்கி கொடுத்துட முடியுமா?” என கடுகடுத்து.. “பார்க்கிறதெல்லாம் வேணும்னு ஆசைப்படக் கூடாது, உன்கிட்ட என்ன இருக்கோ அதை வச்சி சந்தோசப்பட பழகனும்.” என குழந்தைக்கு எடுத்துரைத்தபடி கீழிறிங்கினான் வான்முகிலன்.
இத்தனை பிரச்சனைக்குப் பிறகு, கிளியை கொடுக்க நினைத்ததும், வான்முகிலனிடம் பேசியதும் தவறுதான் என தேன்நிலாவிற்கும் புரிகிறதுதான், குழந்தை அழுவதை தாளமுடியாமல் கொடுக்க நினைத்தால் எத்தனை பேச்சு பேசுறான்? என ஆற்றாமையோடு நினைத்தவள்..
“கர்ணா.. வா.” என கயிற்றை இழுத்து கிளியை எடுத்துக்கொண்டு உள்ளே போனவள்.. அந்த குழந்தை ஊருக்கு போகும்வரை நீ உள்ளயே இருந்துக்கோ கர்ணா.” என கிளியிடம் பேசி, தன்னை சமாதானம் செய்ய முயன்றாள்.
** ** *** *** *** ***
ஒரு மாதம் முடிந்திருக்க, இன்று தேன்நிலாவை பெண் பார்க்க வரவிருப்பதாய் சொன்ன லிங்கேசன், “இன்னைக்கு மதியமே வீட்டுக்கு வந்துடு நிலாம்மா, மூனு மணிக்கு நல்ல நேரமாம், அந்த டைம்லதான் பொண்ணு பார்ப்போம்னு மாப்பிள்ளையோட அம்மா சொன்னாங்க..” என்றார் லிங்கேசன்.
“சரிடாம்மா, சரிடாம்மா.” என மிகுந்த சந்தோசமடைந்த லிங்கேசன்.. “அப்போ நானும் அம்மாவும் இப்போவே கிளம்பி வரோம்.” என்றார்.
“சரிப்பா.” என இணைப்பை துண்டித்தவள்.. வீட்டினை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் மங்களமும் லிங்கேசனும் வந்தனர். கொஞ்சம் முறுக்கு செய்து, வடை பாயசமும் செய்ய, “அம்மா.. எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? சும்மா பார்க்கத்தான வராங்க.?” என்றாள் சிணுங்கலாக.
“இல்ல நிலா, இந்த இடம் கண்டிப்பா அமைஞ்சிடும்னு எனக்கு தோணுது. உன் போட்டோ பார்த்த்தும் பையனுக்கு பிடிச்சிடுச்சாம். உன்னைப்பத்தி சொல்லவும், இதெல்லாம் ஒரு குறையானு கேட்டாராம்.” என்றார் நம்பிக்கையோடு.
“ஓ.ஹோ.” என்றாள் மெச்சுதலாக.
சொன்னதை போலவே சரியாக மூன்று மணிக்கு பெண்பார்க்க வந்திருந்தனர் சரண்ராஜ் குடும்பத்தினர்.
தேன்நிலா வெளியே வர, அவளின் முக வடிவத்தில் லயித்தபடி அமர்ந்திருந்தான் சரண்ராஜ். “இதை கொடு நிலா.” என தேநீர் தட்டை நீட்டினார் மங்களம்.
“ம்.” என வாங்கியவள் பெரிதாய் தடுமாறிப்போனாள்.
காலையிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என எதிர்பார்ப்போடுதான் இருந்தாள். ஆனால் தற்போது சரண்ராஜ் அமர்ந்திருந்த இடம், அன்று வான்முகிலன் அமர்ந்திருந்ததை நியாபகப்படுத்த.. என்ன இது? இத்தனை நாள் இவ்விடத்தில் இப்படி தோன்றியதில்லையே என திணறிப்போனாள் தேன்நிலா.
போட்டோவை விட நேர்ல ரொம்ப அழகாயிருக்க. நான் எப்படியிருக்கேன்? உனக்கு பிடிச்சிருக்கா?” என நேரடியாக கேட்ட சரண்ராஜின் முகத்திலும் வான்முகிலனே தெரிய திண்டாடினாள் தேன்நிலா.
சரண்ராஜ் அழகாகத்தான் இருந்தான். ஆனால் இவனின் அழகை விட வான்முகிலனின் கம்பீரம்தான் கண்முன் வந்தது.
சரண்ராஜின் சீரான நீண்ட புருவத்தை விட, நெற்றிக்கும் நாசிக்கும் தடுப்புச் சுவர்போல் இணைந்து நீண்டிருந்த வான்முகிலனின் புருவம் கண்முன் தோன்ற, சரண்ராஜின் கேள்விக்கு பதிலளிக்க முடியாதவளாய் நின்றிருந்தாள்.
“பொண்ணுங்களுக்கு வெக்கமா இருக்காதாடா? இப்படியா கேட்டு வைப்ப? அவசரக் குடுக்கை.” என மகனைக் கடிந்த சரண்ராஜின் அன்னை.. “இவன் இப்படித்தான்ம்மா, நீ வா.” என வெளியே அழைத்து வந்து, “என் மகனைப் பிடிச்சிருக்கா?” என்றார் எதிர்பார்ப்போடு.
“அ.. அ..து.” என தேன்நிலா திணற.. அவளின் குறையறிந்து.. “வாய் மொழியாதான் சொல்லனும்னு இல்ல, தலையசைத்து கூட சொல்லலாம். இல்ல என் கையைப் பிடிச்சினா கூட உனக்கு சம்மதம்னு எடுத்துக்குவேன்.” என்றார் கனிவாக.
“இ.. இல்ல.. ஆன்ட்டி.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். என் தம்பி படிப்பு முடியட்டுமே.” என்றாள் படபடப்பாக.
“ம்.. மங்களம் சொன்னாங்க. நீ உன் தம்பியை படிக்க வைக்கிறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.” என்றார் ஆதரவாக.
அச்சோ என்றானது தேன்நிலாவிற்கு. “இ.. இல்ல ஆன்ட்டி, நான் யோசிக்காம உங்களை வர சொல்லிட்டனோனு தோணுது. பெங்களூர்க்கு வந்து என்னால வேலை பார்க்க முடியுமானு தெரியல.
சப்போஸ் எனக்கேத்த வேலை கிடைக்கலனா ரொம்ப கஷ்டமாகிடும். தமிழ் படிப்பு முடியட்டுமே.” என்றாள் கெஞ்சலாகவே.
“தமிழ் படிப்பு முடிய இரண்டு வருசம் இருக்கு, அவ்வளோ நாள் கல்யாணம் செய்துக்காம இருக்க நினைச்சிருந்தா, எங்களை வர சொல்லியிருக்க வேணாமே?” என்றார் குற்றப்பார்வையோடு.
மங்களம் வெளியே வர, தேன்நிலா சொன்னதை சரண்ராஜின் அம்மா விளக்க.. அதை கேட்டுக்கொண்டிருந்த சரண்ராஜ் வெளியே வந்தான்.
“யோசிக்க என்ன இருக்கு சரண்? ஜாதகம் பார்த்தாச்சு, இரண்டு பேருக்கும் பொருந்தி வரவும்தான் பொண்ணு பார்க்கவே வந்தோம். இரண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா அடுத்து கல்யாணம்தான்.
உனக்கு நிலாவை பிடிச்சிருக்குனு தெளிவா சொல்லிட்ட, அதே போல பிடிச்சிருக்கு, பிடிக்கலன்றதை வெளிப்படையா சொல்லிட்டா அடுத்த பொண்ணை பார்க்கலாமில்ல? லேட் செய்தா எதிர்பார்ப்பு கூடும்,
எதிர்பார்த்து கிடைக்கலனா அது இன்னும் கஷ்டம். அந்த கஷ்டத்தை உனக்கு கொடுக்க எனக்கு விருப்பமில்ல. நல்லதோ கெட்டதோ இன்னைக்கே எனக்கு தெரிஞ்சாகனும்.” என பிடிவாதமாய் சொன்னார் சரண்ராஜின் அன்னை.
வான்முகிலனை பிடிக்கிறதா என தெளிவாக தெரியாவிட்டாலும், சரண்ராஜை திருமணம் செய்துகொள்ள பிடிக்கவில்லை என்பது தெளிவாய் புரிந்தது..
“உள்ள வாங்க. நிலாக்கு நான் புரிய வைக்கிறேன்.” என மங்களம் சொல்ல.. சரண்ராஜின் அன்னை உள்ளே போனார்.
சரண்ராஜிற்கு தன்னை பிடித்திருக்கும்போது, தன் விருப்பம் சொல்ல தாமதமானால் அவனிடம் எதிர்பார்ப்பு கூடிவிட்டால் இவர்கள் சொல்வது போல், அவனின் நிலையும் கடினம்தானே? முயன்று தன்நிலையை தற்போதே பதிலை சொல்லிவிட்டால் யாருக்கும் பாதகமில்லை என முடிவெடுத்து.. “சாரி.. என்னால இப்போ கல்யாணம் செய்துக்க முடியாது. என் தம்பி படிப்பு..” எனும்போது இடைமறித்த சரண்ராஜ்..
“அது எனக்கு பிரச்சனை இல்லைனு உன் போட்டாவே பார்த்ததுமே சொல்லிட்டேன். உன் சம்பளத்தை எதிர்பார்த்து உன்னை கேட்கல.. ஓபனா சொல்லனும்னா.. உன் அழகு பிடிச்சிருக்கு, தம்பியை படிக்க வைக்க நினைக்கிற உன் குணமும் பிடிச்சிருக்கு.
இப்போ சொல்லு.. உனக்கு என்னை பிடிக்குதா பிடிக்கலயா?” என்றான்.
பெண்பார்க்க வரவும் சம்மதித்து, தன்னை தனக்காக கேட்கும் ஆடவனை மறுக்க திணறித்தான் போனாள் தேன்நிலா. அக்காளின் நிலையறிந்து.. “கல்யாணம் வேணாம்னு சொல்றாங்க, இதுக்கு மேல எப்படி சொல்வாங்க?” என்றான் தமிழரசன்.
“அப்படியா?” என சரண்ராஜ் தேன்நிலாவை பார்க்க.. வேதனையோடும் குற்றவுணர்வோடும் தலைகுனிந்தாள் தேன்நிலா. தன்னை இவளிற்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாய் புரிய.. “கிளம்பலாம் வாம்மா.” என்றான் சரண்ராஜ்.