சரண்ராஜை தேன்நிலா தவிர்த்ததில் பெரும் ஏமாற்றம் லிங்கேசனுக்கு. ஆனால் தேன்நிலா விபரமறியாதவள் இல்லை. என்ற கவலையோடு, இப்படி வரன் மீண்டும் அமைவது கடினம் என்ற வேதனையும் சேர்ந்துகொண்டது.
ஆனாலும்.. சிறு வயதிலிருந்தே அடுத்தவர் நிலையை புரிந்து நடக்கும் மகளிடம் கோபப்படவும் முடியவில்லை லிங்கேசனால். நல்ல வரனை இழந்துவிட்டோம் என ஆதங்கம்தான் என்றாலும், எதோ ஒரு காரணத்திற்காக சரண்ராஜை பிடிக்கவில்லை எனும் மகளை எப்படி வற்புறுத்துவது? என அமைதி காத்தார்.
மங்களம்.. “அந்த தம்பிக்கு என்ன குறை நிலா?” என்றார் ஆற்றாமையோடு.
“அம்மா..” என தடுமாறினாள் தேன்நிலா.
“ரொம்ப நல்ல பையனை இழந்துடக்கூடாதேனு மனசு அடிச்சுக்குது நிலா.” என்றார் ஆதங்கமாக.
லிங்கேசன்.. “துரோகமா? அப்படினா?” என ஊன்றிப்பார்க்க.. அச்சோ இப்படியா சொன்னேன்? என பதறிட.. “சொல்லும்மா? யாரையாவது? விரும்பறியா?” என்றார் கனிவாகவே.
வான்முகிலனோடு நிறைய பேசியதில்லை, அதிகம் பார்த்துக்கொண்டது கூட இல்லை என்றாலும் சிறு வயதிலிருந்து இந்துபிருந்தா மூலமாக வான்முகிலன் குணம் பற்றித் தெரியும்..
(இந்துபிருந்தாவும் அண்ணனின் தொழில், பெரிய ஆட்களோடான பழக்கவழக்கம் என ஒருபோதும் பெருமை பேசமாட்டாள். அதனால்தான் வான்முகிலனின் ஆள்பலம் பணபலம் பற்றி தந்தையும், தமிழரசனும் சொல்லும்போது ஆச்சர்யமாக கேட்டாள்.)
இந்துபிருந்தாவின் தந்தை இறந்த பின்னே அண்ணன் இல்லையென்றால் தன் குடும்பம் நிலையிழந்திருக்கும், நான் படித்திருக்க முடியாது, என் அக்கா மாமாவோடு வாழ்ந்திருக்க மாட்டாங்க, என தன் அண்ணனின் பெருமைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள் இந்துபிருந்தா.
வான்முகிலன் முதன்முதலாய் தன் வீட்டிற்கு வந்தது ரேவதியின் செயலுக்கு மன்னிப்பு கேட்கத்தான். அவன் வந்துபோய் ஒருமாதம் பக்கம் ஆகிறது. இத்தனை நாள் இப்படி கண்முன் தோன்றாதவன், இன்று தோன்றியதுதான் தேன்நிலாவிற்கே ஆச்சர்யமாக இருந்தது.
“வேணாம்மா..” என தாமதியாமல் மறுக்க.. பொறுக்க முடியாமல் மங்களம் எதோ சொல்ல வர.. “விடு மங்களம். நிலாம்மாக்கு பிடிக்கலயில்ல?” என மகளுக்காக மனைவியை அடக்கினார் லிங்கேசன்.
தன் தவறை நினைத்து தலைகுனிந்தாள் தேன்நிலா.
யாரையும் விரும்பவில்லை என்று தேன்நிலா சொன்னதும் மகளை நம்பினார்தான் என்றாலும், ஒருவரை வரவரழைத்து மனம் நோக செய்வதெல்லாம் தேன்நிலாவின் குணமேயில்லையே? இன்று ஏன் இப்படி? பிடிக்கவில்லையென்றால் தெளிவாக சொல்லிடுவாளே..
எதையும் தெளிவாய் முடிவெடுக்கும் மகள் இன்று வழகத்திற்கு மாறாக குற்றவுணர்வோடும், குழப்பத்தோடும் இருக்கிறாளே என பலமாய் யோசித்தார். ஆனாலும் மகளிடம் மீண்டும் கேட்டால் சந்தேகிப்பது போல் ஆகிடும் என்பதால் அமைதிகாத்தார்.
சற்று நேர யோசனைக்குப் பின்.. “தமிழ் படிப்புக்காக உனக்கு வரும் நல்ல வாழ்க்கையை இழந்துட்டா எனக்கு நிம்மதி கிடைக்குமா நிலாம்மா?
பார்க்குறவங்க என்ன சொல்வாங்க? தமிழ் படிப்புக்காக இந்த பொண்ணை கட்டிக்கொடுக்காம வச்சிட்டிருக்கான், பெத்த பொண்ணா இருந்தா இப்படி செய்வானானு நினைக்கமாட்டாங்களா?” என தன் மனதை விளக்கினார் வருத்தத்தோடு.
“அப்பா.. யாரும் அப்படி சொல்லமாட்டாங்க, எனக்கு பிடிக்கலனுதானே வேணாம்னேன்?” என்றாள் தவிப்பாக.
அக்காவின் உணர்வை புரிந்து.. “அப்பா.. இந்த பேச்சு விடுங்க.” என்ற தமிழரசன்.. புதிதாய் வந்த படங்களில் தனக்குப் பிடித்தவைகளை சொல்லி, “டைம் இருக்கும்போது பாருக்கா, செமையா இருக்கு.” என தேன்நிலாவின் மனநிலையை மாற்ற முயற்சித்தான்.
சரி என்பதாய் தலையசைத்தவளுக்கு என்ன முயன்றும் வாடிய முகம் இயல்பை கூட எட்டவில்லை.
சரண்ராஜிற்கு முன் இரண்டு மூன்று பேர் பெண் கேட்டுருக்கிறார்கள். அவர்களெல்லாம் தேன்நிலாவின் குறையை முன்னிருத்தி, இப்படிபட்ட பெண்ணிற்கு வாழ்வு கொடுக்கும் பெருந்தன்மையில் கேட்டார்கள் என்பதால் சிறு தாட்சன்யமுமின்றி அவர்களை நிராகரித்தாள் தேன்நிலா.
தற்போது சரண்ராஜை தவிர்த்தது, தேவையில்லாமல் பெண் பார்க்க வரவழைத்து, அவனிற்கும், தன் தாய் தந்தைக்கும் மன உளைச்சலை உண்டாக்கி விட்டோம் என்ற தேன்நிலாவின் முகம் வாடியே இருக்க.. “ப்ச்.. அக்கா, முடிஞ்சதை நினைச்சிட்டிருந்தா இங்க இருக்க விடாம, கூடவே கூட்டிட்டு போய்டுவேன்.” என அதட்டினான் தமிழரசன்.
தேன்நிலா பாவமாய் பார்க்க.. அதில் லிங்கேசனுக்கு மகள்மீது இரக்கமாகவும்.. “விடுடா, அதையே ஏன் நினைச்சிட்டிருக்க? சரண்ராஜ் மட்டும்தான் மாப்பிள்ளையா என்ன? என் நிலாப்பொண்ணுக்கு அம்சமான மாப்பிள்ளை கிடைப்பான்.” என்றார் தேறுதலாக.
“ம்மா.. பிடிக்கலன்ற ஒரு காரணம் போதாதா? சும்மா அக்காவை ஏன் கோவிக்கிற?” என்றான் தமிழரசன்.
“போனது போகட்டும்டா, இனியும் இப்படி நடக்கக்கூடாதில்ல? உன் அக்காளுக்கு நல்லது கெட்டது கூட சொல்லக்கூடாதா?” என கோபித்தார் மங்களம்.
“ஏன் சொல்லக்கூடாது? அதெல்லாம் சொல்லலாமே…” என விட்டுக்கொடுத்தான் சிரிப்போடு.
தான் இப்படி இருந்தால் வீட்டிற்கு போயும் தன்னையே நினைப்பார்கள் என்று தேன்நிலா இயல்புக்கு வர முயற்சித்து.. “ம்மா.. இனி இதுபோல நடந்துக்கமாட்டேன், பொண்ணு பார்க்க வரும் முன்னவே போட்டோ பார்த்துடறேன். எனக்கு பிடிச்சிருந்தா வர சொல்லலாம். இல்ல வேணாம்.” என்றாள் சமாதானமாக.
மங்களத்தின் முகம் சற்றே நிம்மதியை காட்ட.. “ஆனா இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுக்குறிங்களா? ஒரே ஒரு வருசம்.” என்றாள் சலுகையாக.
“இப்பவே இருபத்திமூனு நிலா, கல்யாணத்துக்கு இதுதான் சரியான வயசு.” என மங்களம் புலம்ப.. “ம்மா.. ஒரு ஆறு மாசம்.” என்றாள் கெஞ்சலாக.
“சரிடா.. இன்னும் ஆறு மாசம்தான? தாராளமா எடுத்துக்கோ, ஆனா அதுக்கப்புறமும் காலம் கடத்த கூடாது.” என்றார் லிங்கேசன்.
“சரிப்பா.” என்றாள் நிம்மதியோடு.
மங்களம் லிங்கேசனுக்கு இன்று மகளோடு இருக்கத்தான் ஆசை, ஆனால் தாய் தந்தையருக்கு வயதாகிவிட்டதால் கடைப் பண்டங்களெல்லாம் ஒவ்வாமை ஆகிவிடுதால், அவர்களுக்கு சமைக்க மங்களம் இருந்தே ஆகவேண்டும்.
நிலாவை அழைத்தாலும் வரமாட்டாள் என்பதால் வழக்கம்போல் மாலைவரை பேசியிருந்து ஐந்து மணிபோல் கிளம்பினர்.
** ** ** ** **
அனைவரும் சென்றதும், தாத்தா பாட்டி இறந்த புதிதில் உணர்ந்த தனிமையை இன்றைக்கு மீண்டும் உணர்ந்தாள் தேன்நிலா. மனம் வெகுவாய் தோழியை தேடியது.
இன்று பெண் பார்க்க வருவதை இந்துபிருந்தாவிடம் சொல்லியிருந்ததால், வந்துட்டு போய்ட்டாங்களா? மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சிருக்கா? எல்லாரும் போனதுக்கப்புறம் கண்டிப்பா கால் பண்ணு என இந்துபிருந்தா மதியமே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
இந்துபிருந்தா அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் பார்த்தபடி, என்றுமில்லாமல் எதற்கு கண்முன்ன வந்த? என வான்முகிலனிடம் மனதோடு கேட்டாள்.
தந்தை கேட்டபோது வான்முகிலனோடு காதல் என்று உணரவில்லை. ஆனால் தற்போது அப்படியிருக்குமோ? அல்லது தன் அக்காள் அன்னையின் செயலுக்கு தன்னை மதித்து, தன் உணர்வுகளை மதித்து மன்னிப்பு கேட்க வந்ததால் இருக்குமோ? என அரைமணி நேரம் வரை அவளுக்குள்ளே பதிலை தேடினாள்.
மீண்டும் மீண்டும் வான்முகிலன் மின்னி மறைய.. அவனை பிடித்திருக்கிறதோ? அச்சோ.. அவனையா? என் உதவியை வேணாம்னு சொன்னவகிட்ட பேச எனக்கு சுத்தமா பிடிக்கலனு கத்தினவனையா பிடிச்சிருக்கு?
அவனாவது என்னை கட்டிக்கிறதாவது? அதிலும் அவன் அம்மாவையும் அக்காவையும் நினைச்சா அந்த வீட்டுல வாழத் தோணுமா? கடவுளே.. எனக்கேன் இப்படி விபரீதத்தை பிடிக்க வைக்க நினைக்கிற?
வேண்டாம், வேண்டாம்.. அவன் எனக்கு வேணவே வேணாம்.. என் மனசை மாத்திவிடு.. என கடவுளிடம் அவசர வேண்டுதல் வைத்த நேரம் இந்துபிருந்தா அழைத்தாள்.
“பிருந்தா..” என ஆழ்ந்து அழைத்தவளின் குரலில் நெகிழ்ந்த இந்துபிருந்தா.. “நிலா.. என்னாச்சு? மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சிருக்கா? ஏன் இவ்வளோ நேரம் கால் பண்ணல? அவங்க போனதும் பண்ண சொன்னேன்தான?” என கோபித்தாள் தோழி.
தேன்நிலா அமைதியாகிட.. தேன்நிலாவின் குறையை நினைத்து, சந்தோசத்தில் வார்த்தைகள் திணறுகிறதோ என சந்தோசித்தவள்.. “ஏய்.. என்கிட்ட சொல்லவே இவ்வளோ வெக்கப்பட்டா? கல்யாணத்துக்கு பின்ன..” எனும்போது.. “பிருந்தா..” என குரலுயர்த்தினாள் தேன்நிலா.
“ஏன் பிடிக்கல? உன் குறையை சொன்னானா? உன் அம்மா திருமணத்தைப் பத்தி பேசினானா? இல்லை அவனின் முகம் பிடிக்கலயா?” என கேள்விகளை அடுக்க.. “அப்படிலாம் எதுவும் இல்ல பிருந்தா. ஆனா ஏனோ அவனுக்கு சம்மதம் சொல்ல மனசு ஒத்துழைக்கில.” என்றாள் சோர்வாக.
“நீ காரணமில்லாம ஒருத்தனை நிராகரிக்க மாட்டனு எனக்கு தெரியும்.. ஆனா எனக்கு கூட உண்மையை சொல்லமாட்டியா?” என்றாள் ஆதங்கமாக.
“உன்கிட்ட சொல்லாம யார்க்கிட்ட சொல்லப்போறேன்? சரண்ராஜை கட்டிக்கிட்டா என்னால சந்தோசமா இருக்க முடியாதுனு உள் மனசு சொன்னது, அதனால வேணாம்னேன்..” என்றாள் சலிப்பாக.
அழைப்பை ஏற்றதும் தன் பெயரை ஆழ்ந்து உச்சரித்ததை நினைத்த இந்துபிருந்தாவிற்கு தேன்நிலாவின் காரணம் பொய்யென தோன்ற.. “என்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்ட்டைன் பண்ண நினைக்கிறியா நிலா?” என்றாள் ஏமாற்றத்தோடு.
இந்த பிசாசு பிருந்தாகிட்ட ஒன்னு தப்பாது என மனதினுள் திட்டியவள்.. “அம்மா.. தாயே.. எப்படியாவது ஆறு மாசத்துக்குள்ள கல்யாணத்தை பண்ணிக்கிறேன். நீ தயவு செய்து என்னை நினைச்சிட்டு சுபாஷ் அண்ணாவை கஷ்ட்டப்படுத்தாத..” என்றாள் கோபம்போல்.
இவ்விடம் தள்ளிப் போனதில் மனமுடைந்த இந்துபிருந்தா… “ப்ச்.. போடி.” என இணைப்பை துண்டித்தாள் ஏமாற்றத்தோடு.