இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. இடையில் நான்குமுறை வான்முகிலனை அவனின் நடைப்பயிற்சியின் போது சந்தித்தாள். ஆனால் இவளின் முகம் பார்ப்பதை தவிர்க்கும்படி வான்முகிலன் கடந்திடுவான்.
வான்முகிலனை பிடித்திருக்கிறது என தற்போது தெளிவாக புரிகிறது என்றாலும், அதை யாரிடமும் சொல்லும் மன தைரியம் இல்லை தேன்நிலாவிற்கு.
பெண் கேட்டு வந்த ரேவதியோடும், ஆன்ட்டியோடும் பிரச்சனையானதால, உன்னை என்னோட பேசவேண்டாம், தனக்கு உதவ வேண்டாம்னு சொன்னேன்.
நான் அப்படி சொன்ன கோபத்தில என்னோட பேசக்கூட பிடிக்கலைனு ரோசமா சொல்லிட்ட..
நீ கண்முன்ன வந்தாலும், எனக்கு மட்டும் மானரோசம் இல்லையா? உன்னை நினைக்கும் போதெல்லாம் உன் அக்கா என் தாய் தந்தையை இழிவாய் பேசியதும் நினைவுக்கு வருதே..
அதையெல்லாம் மறந்து உன்னோடான வாழ்வு எவ்வழியிலும் சாத்தியமேயில்லை. எப்படியாவது உன்னை மனதிலிருந்து அகற்ற வேண்டும் என பலவாறாக யோசித்திருந்த தேன்நிலாவிற்கு காதல் எத்தனை வலிமையானது என இன்னும் புரியவில்லை.
வழக்கம்போல் பணி முடித்து ஆறு மணிக்கு தேன்நிலா வந்துகொண்டிருக்க.. அந்த போக்குவரத்து அதிகமில்லாத பாதையில் சரண்ராஜ் காத்திருந்தான் தேன்நிலாவிற்காக.
போக்குவரத்து அதிகமில்லையென்றாலும், ஏதோ நினைவில் இவனை கவனிக்காத தேன்நிலா, தன் ஸ்கூட்டியில் மிதமான வேகத்தில் சரண்ராஜை கடந்து செல்ல, “நிலா.” என உரக்க குரல் கொடுத்தான்.
அதன்பிறகே கண்ணாடியில் சரண்ராஜைப் பார்த்தவள் அதிர்ந்து வண்டியை நிறுத்திட, தன்னை கண்டதும் கிளம்பிடுவாளோ என தனது பைக்கினை கிளப்பியவன் இரண்டு நொடியில் அவளிடம் வந்திருந்தான்.
“ஏன் இவ்வளோ பதட்டம்?” என கனிவாய் கேட்டவன்.. “உனக்கப்புறம் நாலு பொண்ணு பார்த்துட்டேன், யாரையும் பிடிக்கல. ஏன் என்னை வேணாம்ன்னு சொன்னனு தெரிஞ்சிட்டா உன்னை மறக்கறது கொஞ்சம் ஈசியா இருக்கும்னு தோணுச்சு, அதான் வந்தேன்.” என்றான்.
அவ்வழியில் உள்ள கடைக்காரன் வான்முகிலனுக்கு அழைத்து விபரத்தை சொல்ல.. “அதை ஏண்டா என்கிட்ட சொல்ற? நானென்ன அவளுக்கு பாடிகாடா?” என அதட்டி இணைப்பை துண்டித்தவன்,
உடனே தங்கைக்கு அழைத்து.. “உன் ஃப்ரண்டை யாரோ வழிமறைச்சி பேசிட்டிருக்கானாம், அவ பயத்தோட பேசிட்டிருக்காளாம், கான்ஃப்ரண்ஸ் கால் பண்ணி என்னனு கேளு. நான் லைன்ல இருக்கிறதை காட்டிக்காத.” என்றான்.
“அண்ணா போன் பண்ற நேரம் நீயே போய் பாரேன்.” என்று சொல்ல, “லூசு.. நான் இப்போதான் வாக்கிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தேன், அவ இருக்க இடத்துக்கு போக அஞ்சி நிமிஷமாகிடும்..
அதோட நான் போனேன்னா எனக்கு போன் செய்தவனே இரண்டு பேருக்கும் தொடர்புனு பரப்பி விட்டுடுவான். சொன்னதை மட்டும் செய்..” என கடிய..
அண்ணன் பேசிய அவசரத்திலேயே எதோ ஆபத்தென உணர்ந்து உடனே தேன்நிலாவிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றாள் தேன்நிலா.
“எங்க இருக்க நிலா?” என்க.. “இ.. இங்க..” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
நிலாவின் திணறலை பொறுக்க முடியாமல் புயலென தனதறை விட்டு வெளிவந்தவன் பைக்கை கிளப்பியபடி.. தனது இணப்பை துண்டித்து மீண்டும் அழைத்தான் தங்கைக்கு.
நிலாவின் இணைப்பை துண்டித்து அண்ணனின் அழைப்பை ஏற்றவள்……. “ண்ணா.. அவ பதட்டத்துல எதுவும் சொல்லமாட்றா, நீ கிளம்பேன்.” என்றாள் கெஞ்சலாக.
“அவளுக்கு போன் செய்து, அவனை தைரியமா மிரட்ட சொல்லு, இல்ல அங்கயிருந்து கிளம்ப சொல்லு. அதுவும் முடியலன்னா வண்டியை விட்டுட்டு பக்கத்துல இருக்க கடைக்கு போக சொல்லு.” என்றான்.
கான்ஃப்ரன்ஸிலேயே பிருந்தா தேன்நிலாவிற்கு அழைக்க.. “பிருந்தா..” என்க.. “எனக்கு பதில் சொல்லு, போன் அப்புறம் பேசிக்கலாம்.” என்ற சரண்ராஜின் குரலை கேட்டவன் இணைப்பை துண்டித்து, அடுத்த ஐந்தாவது நிமிடம் தேன்நிலாவை நெருங்க..
“பொண்ணு பார்க்க வர சொல்லிட்டு” என்ற வார்த்தை காதில் விழாமல் போனாலும், “இப்படி அவமானம் செய்யுறதாலதான் பசங்களுக்கு பழிவாங்குற எண்ணம் வருது.” என்று சரண்ராஜ் சொன்னது காதில் விழ.. தேன்நிலா குற்றவுணர்வோடு நின்றிருந்த கோலம் கண்டு நிதானித்தவன்.. “யாரிவன்.?” என்றான்.
அப்பொழுதுதான் வான்முகிலனைப் பார்த்தவள்.. புதுத்தெம்பு வந்தாற்போல், “இரண்டு மாசம் முன்ன இவங்க என்னை பார்க்க வந்தாங்க. நான் கல்யாணம் வேணாம்னதும் ஏன் பிடிக்கலனு கேக்குறாங்க.” என்றாள்.
இத்தனை நேரம் திக்கியவள், தற்போது திக்காமல் பேசியதால் வான்முகிலனை அர்த்தமாய் பார்த்தான் சரண்ராஜ்.
சரண்ராஜை கண்டுகொள்ளாமல்.. “பிடிச்சிருக்குனு சொல்லி வரவச்சி, வந்த பின்ன பிடிக்கலன்னுட்டியா?” என்றான் விசாரனையாக.
தேன்நிலா ஸ்கூட்டியை எடுக்கப்போக, “பிடிக்கலனு நேரடியா சொன்னா வருந்துவனுதான நாசூக்கா கல்யாணம் வேணாம்னுருக்கா? டீசண்டா விலகுறதை விட்டுட்டு பசங்க பழிவாங்க கிளம்புவாங்கனு க்ளாஸெடுத்துட்டு இருக்கியா? எங்க சொல்லு? அப்படி என்ன பழிவாங்கிடுவ?” என கேட்ட வான்முகிலன், தேன்நிலாவை முறைக்க கிளம்பியிருந்தாள்.
“இவ அந்த தெருமுனையை தாண்டுறதுக்குள்ள நீ என் கண்ணுக்கு எட்டாத தூரத்துக்கு போய்டனும். நான் ஒரு அடி உன்னை அடிச்சிட்டேன்னாலும் அதுக்கப்புறம் இந்த தெரு பக்கமே வர முடியாது உன்னால. அசிங்கப்பட்டு போய்டுவ.” என வான்முகிலன் எச்சரிக்க..
“என்னை விட நீங்க எக்ஸைர்ஸ் பாடிதான். அதுக்காக நீங்க பத்து அடி அடிச்சா நாலு அடியாவது திருப்பி கொடுக்க முடியாதளவுக்கு சோப்பலாங்கி இல்ல நான்.” என தானும் கோபத்தோடே சொல்லி..
“அவ ஏன் என்னை வேணாம்னு சொன்னானு இப்போ புரியுது. இதை அன்னைக்கே சொல்லியிருந்தாள்னா நான் எதுக்கு இங்க வரைக்கும் தேடி வரப்போறேன்.” என சொல்லியே கிளம்பினான் சரண்ராஜ்.
இவனை நாலு தட்டு தட்டி அனுப்பிருக்கனும் என பல்லை நெறித்தவாறு கிளம்பியவன், தேன்நிலா வீட்டை அடையும் முன் அவளின் கேட்டின் முன் பைக்கை நிறுத்தி அதன்மீது அமர்ந்திருந்தான்.
தேன்நிலா வர, “பிருந்தாக்கு சத்தியம் செய்து கொடுத்துட்டு, இவனை ஏன் வேணாம்ன? நல்லாத்தான இருக்கான்?” என்றான் வான்முகிலன்.
தலைகுனிந்தவாறே வண்டியை விட்டு இறங்கி, கேட்டினை திறக்க, “நீ என்னை அவாய்ட் பண்ணினாலும் உன்னை பார்த்துக்க சொல்லி பிருந்தா தொல்லை தாங்க முடியல, இப்போ கூட அவ சொல்லித்தான் வந்தேன்.
உனக்கு கல்யாணம் ஆகிட்டா என் தங்கை நிம்மதியா இருப்பால்ல? அதுக்காகத்தான் கேட்கிறேன், பதில் சொல்லு.” என்றான் அதட்டலாக.
“அவன் நடுரோட்டுல கேட்கவும் எனக்கு பேச வரல.” என கண்கலங்கினாள் இயலாமையோடு.
அவனை பிடிக்கவில்லை, ஆனாலும் முகத்தில் அடித்தாற்போல் சொல்ல மனமில்லாமல்தான் தவித்து நின்றிருக்கிறாள் என தேன்நிலாவின் மென்மையான மனம் புரிந்தாலும், இந்த கால கட்டத்திற்கு இப்படி குணம் ஏற்றதா என்று வெளியுலகில் வேலைக்கு போகும் இவளிற்கு தெரியாதா? என இன்னும்தான் கோபம் வந்தது தேன்நிலா மீது.
“முதல்ல எதுக்கு நடு ரோட்டுல நிக்கனும்?” என முறைத்தவன்.. “அவன் சொன்னா நின்னுடுவியா? பொண்ணு பார்க்க வந்தான், உனக்கு பிடிக்கல, வேணாம்னுட்ட.. இவ்வளோதான நடந்தது?
இப்போ என்ன? அவனை நம்ப வச்சா மோசம் பண்ணிட்ட? இப்படிலாம் பாவம் பார்த்திட்டிருந்தா உன் இமேஜ்தான் டேமேஜ் ஆகும். சில விசயங்களை பேச வேண்டிய நேரத்துல பேசிடனும். இல்ல இப்படித்தான் பிரச்சனைல முடியும். பார்த்து இருந்துக்கோ.” என சரண்ராஜ் மீதான தேன்நிலாவின் குற்றவுணர்வை போக்கி தனது வீட்டிற்குள் பைக்கை நகர்த்த.. தேன்நிலாவும் உள்ளே சென்றாள்.
இந்துபிருந்தாவிற்கு அழைத்து.. “எதுக்கு உன் அண்ணாகிட்ட சொன்ன?” என்றாள் ரோசத்தோடு.
“உன்னை பார்த்துக்க ஒருத்தரை ஏற்பாடு செய். அதுக்கப்புறம் என் அண்ணன் என்ன? நானே உன்னை கண்டுக்கமாட்டேன்.” என அசால்ட்டாய் சொன்னவள்..
“என்ன நடந்தது நிலா?” என பாசத்தோடு கேட்க.. தேன்நிலா விசயத்தை சொல்ல.. “லூசாடி நீ? உனக்கு பின்ன நாலு பொண்ணை பார்த்தேன், பிடிக்கலனு சொன்னான்ல? நீ எப்படி பிடிக்காதவளை கட்டிக்கலயோ..அதே மாதிரிதான் உன்னை என்னால கட்டிக்க முடியாதுனு தெளிவா சொல்றதை விட்டுட்டு கை கட்டி நின்னுட்டிருந்தியா?” என அவளின் அண்ணனை போலவே திட்டி இணைப்பை துண்டித்தாள் இந்துபிருந்தா.