கண்ணன் தன் காதலைச் சொன்னதில் ஜான்சிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும்.. “என்ன கண்ணா சொல்றீங்க” என்று அவள் செவிகளை நம்ப முடியாமல் கேட்க.. “ ஆமா ஜான்சி.. ஐ ஆம் இன் லவ் வித் யூ..” என்று அவன் மொத்த காதல் உணர்வுகளையும் அவன் கண்களில் தேக்கிச் சொல்ல”.. ஜான்சிக்கு சிறகே இல்லாமல் வானில் பறப்பது போல தோன்ற.. அதே நேரம் சரண்யாவின் நினைவும் வந்தது. “ நீங்க.. சரண்யாவை லவ் பண்றதா நினைச்சேன்” என்று ஜான்சி மனதில் இருப்பதை மறைக்காமல் கேட்டாள். “ஓ.. அதான் உன் பிரச்சினையா?.. சரண்யாவை நான் காதலிக்கிறதா உனக்கு யாரு சொன்னா?.. ஷீ இஸ் மை ஃப்ரண்ட்.. அவ்வளவு தான்.. அதுக்கு மேல எங்களுக்கு இடையில ஒன்னும் இல்லை..” என்று அவன் சொல்ல.. ஜான்சிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஜான்சி மனதுக்குள் கண்ணன் எப்போதோ புகுந்து விட்டான். இன்று அவனே அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறான். ஆனால் அவள் மனது.. அவள் நிலையை அவனுக்கு புரிய வைக்காமல் அவன் காதலை ஏற்கக் கூடாது என்று தடை விதித்து இருந்தது. கண்ணன் அவளின் பதிலுக்காக அவள் முகத்தையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “கண்ணா நீங்க என்ன பற்றி எதுவுமே தெரியாம.. என்னை லவ் பண்றதா சொல்றீங்க”.. என்றாள். கண்ணன் சிரித்தான்.. “உன்னைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதா.. ரெண்டு வருஷமா உன்னைத் தான் பார்த்துகிட்டே இருக்கேனே..” என்று அவன் கூற.. “அது இல்ல கண்ணா.. என் பிறப்பு.. என் வளர்ப்பு.. என் தகுதி..” என்று ஜான்சி சொல்ல ஆரம்பிக்க”..
“ ஏ சில்லி.. நான் உன்ன தான் லவ் பண்றேன். உன் ஸ்டேட்டஸை இல்ல.. அதுவும் இல்லாம ஜான்சி.. உன் கேரக்டர்க்கு.. நீயே உன் மேல நம்பிக்கை இல்லாம பேசுறது ரொம்ப தப்பு.. எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட துணிச்சல் தான்.. யாரு என்னன்னு பாக்காம எதிர்த்து நிக்கிற உன் தைரியம் தான்..” என்று கண்ணன் அவளது குணத்தை.. அவளுக்கே சுட்டிக்காட்ட.. ஜான்சி ஒரு நிமிடம்.. அந்த பாராட்டில் நெகிழ்ந்த போதிலும்.. “ இல்ல கண்ணா.. அது எல்லாமே நான் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். இது நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கை. நீங்க என் ஸ்டேட்டஸ் பத்தி யோசிக்காம இருக்கலாம். ஆனால் நிச்சயம் அது பத்தி உங்க வீட்டில் யோசிப்பாங்க”.. என்றவளை கண்ணன் இடைமறித்தான். “ யூ.. சீ.. ஜான்சி.. என் லைஃப்ல.. என் முடிவுகளை என்னைக்குமே நான்தான் எடுப்பேன். அன்ட் ஒன் மோர் திங்.. நீ ஒரு டாக்டர்.. அதை மறந்துடாத. எங்க வீட்ல எல்லாருமே டாக்டர்ஸ். அதனால.. அந்த குவாலிஃபிகேஷன் உனக்கு ஏற்கனவே வந்தாச்சு”.. என்று கண்ணன் ஜான்சி மனதை மாற்ற முயற்சிக்க.. “கண்ணா.. உங்க வீட்ல என்ன ஏத்துக்குவாங்களா.”. என்று அவள் சந்தேகமாக கேட்க.. “நிச்சயமா ஏத்துப்பாங்க..” என்று அவன் உறுதியாகக் கூற.. ஜான்சியின் முகம் தெளிந்தது. “ஜான்சி ரொம்ப நேரமா.. இந்த மாலையை.. உன் கழுத்துல போடனும்னு ரொம்ப ஆசையோடு காத்திருக்கிறேன்” என்று கையில் இருந்த மாலையை கண்ணன் காட்ட.. ஜான்சிக்கு தான் கேட்ட வரம் கிடைத்ததில் உள்ளமெங்கும் ஆனந்தம் பொங்கியது. “சாமியே வரம் கொடுத்திடுச்சு.. இந்த அம்மனுக்கு தான் இன்னும் மனசு வரமாட்டேங்குது”.. என்று கவலையுடன் கண்ணன் கூற. “அதெல்லாம் இந்த மாயக் கண்ணனைப் பார்த்து.. என்னைக்கோ மயங்கியாச்சு” என்ற ஜான்சியின் கண்களும் காதலில் பளிச்சிட்டன. ஜான்சி தன் சம்மதத்தை மறைமுகமாகச் சொல்ல.. கண்ணன் சந்தோசத்தில் துள்ளி குதித்தான். கண்ணனின் உற்சாகத்தில் ஜான்சி நாண..
அவளை பார்வையாலே ரசித்தவன்.. தன் கையில் இருந்த மாலையை அவள் கழுத்தில் சூட்டினான். அவன் மாலை அணிவித்ததும்.. ஜான்சிக்கு தன்னையும் அறியாமல் ஒருவித பந்தத்தால் அவனுடன் இணைக்கப்பட்டது போல் தோன்றியது. “கண்ணா.. என்ன கண்ணா இப்படி யோசிக்காம என் கழுத்துல மாலையை போட்டுட்டீங்க.. மாலையிட்டா.. என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமா..” என்று ஜான்சி வினவ.. “ஏன் தெரியாம.. நான் உன்னையே.. என் உயிரா.. உறவா.. ஏத்துக்கிறேன். இனி நீதான் எனக்கு எல்லாம்னு அர்த்தம்..” என்று கண்ணன் விளக்கம் கொடுக்க.. ஜான்சி அவன் பதிலில் உருகிப்போனாள். “எப்படி கண்ணா.. எப்படி உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு மாற்றம். நான் உங்களை கைநீட்டி அடிச்சுருக்கேன். கோபத்தில் கார் கண்ணாடியை உடைச்சு இருக்கேன்”.. என்று பழைய நினைவுகளில் அவள் கூற.. “அதான் எனக்கும் தெரியல.. ஜான்சி” என்றவன் அவள் கைகளைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டான். அவனின் முதல் தொடுகை.. ஜான்சிக்கு அது உடல் எங்கும் குளிர் நீரை ஓட விட்டது போல் சில்லிடத் தொடங்கியது. “இந்த ரவுடியைப் பார்த்து எப்படி விழுந்தேன்னு எனக்கே தெரியல”.. என்று அவன் அவளைச் சீண்ட.. அவனை லேசாக முறைத்தவள்.. “கண்ணா நேரமாயிடுச்சு போவோமா” என்றாள். “என்ன அவசரம்” என்று அவள் கைகளை விட மனமில்லாமல் அவன் கூற.. “என் ஃப்ரென்ட்ஸ் என்னைத் தேடுவாங்க ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச.. “சரி சரி.. வா போகலாம்” என்று அவன் எழ முயற்சிக்க.. “ கண்ணா.. இருங்க.. நாம இப்படியே போனா.. நாம ரெஜிஸ்டர் ஆபிஸ்ல போய் கல்யாணத்தை முடிச்சிட்டு வர்றதா நினைச்சிக்கு வாங்க”.. என்று பயந்து சொல்ல. “நினைச்சா நினைச்சிட்டு போறாங்க.. என்னைக்கோ ஒரு நாள் பண்ண தானே போறோம்” என்று அவன் அசராமல் கூற.. “உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல.. என்னை என் ஃப்ரெண்ட்ஸ் ஒட்டியே தள்ளிடுவாங்க..” என்று அவள் இருவர் மாலையையும் தன் பைக்குள் வைத்துக்கொண்டு.. குங்குமத்தையும் சரிசெய்து கொண்டாள். “மம்..இப்ப போகலாம்” என்று ஜான்சி சொல்ல.. பின் இருவரும் பைக்கில் கிளம்ப.. கண்ணனின் தோள்களில் உரிமையுடன் சாய்ந்த ஜான்சி.. “கண்ணா இந்த நாளை நான் மறக்கவே மாட்டேன்” என்று மனமுருகி சொல்ல.. கல்லூரியை எட்டி இருந்தார்கள். கல்லூரி வளாகத்துக்கு முன்னதாகவே.. ஜான்சி பைக்கில் இருந்து இறங்கி விட்டாள். பின் பையில் வைத்திருந்த சிறிய கிஃப்ட்டை எடுத்தவள்.. “ஹாப்பி பர்த்டே” என்று வாழ்த்து சொல்லி அவனிடம் கொடுத்தாள். “தேங்க் யூ”.. என்றவன்.. “இது ஜான்சி கண்ணனுக்கு கொடுக்கிறது.. ஆனால் திருமதி ஜான்சி.. மாலையிட்ட மணவாளனுக்கு என்ன பரிசு கொடுக்கப் போறாங்க..” என்று அவளை ஆவலாக பார்க்க.. வெட்கத்தில் சிவந்தவள்.. ஒன்றுமே அறியாதவளை போல்.. “என்ன வேண்டும்” என்று கேட்க.. அவன் மோகத்துடன் “எனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு தெரியாதா..” என்று ஏக்கத்துடன் கேட்க.. “ஓ தெரியுமே.. முதல் நாள் உங்க கன்னத்துல கொடுத்ததா”.. என்று குறும்புடன் கேட்டு அவள் விலக.. “உன்ன.. என்ன பண்றேன்னு பாரு” என்ற கண்ணன் அவளை எட்டுவதற்குள்.. அவள் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து இருந்தாள். ஜான்சி எழிலாக செல்வதையே பார்த்துக் கொண்டு நின்ற கண்ணனுக்கும்.. அன்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாகத் தோன்றியது. அவள் பேச்சில் அவன் நினைவும் அன்றைய தினத்திற்கு சென்றது. பத்து பேர் பார்க்க.. அவனை ஒரு முதல் வருட பெண் கை நீட்டி விட்டாளே என்ற அவமானம் அன்று உண்மையில் அவனை கொதிக்க வைத்திருந்தது. அவளைப் பழி தீர்க்க அவன் மனம் நினைத்து காத்து இருந்தது. மறுநாள் அவளே சந்திக்க வருவதாக கூற அவளை அவமானப்படுத்த நிறைய வழிமுறைகளை யோசித்து வைத்து வஞ்சம் தீர்க்க காத்திருந்தான். அவன் லேப் அருகில் ஒதுக்கமான அறையை தேர்வு செய்து அழைக்க.. அவள் நிச்சயம் வர மாட்டாள் என்று தான் நினைத்தான். ஆனால் அவள் துணிந்து காத்திருக்க.. அவன் மனதுக்குள் அவ்வளவு திமிரா உனக்கு என்று எண்ணியவன். அவன் அந்த அறைக்குள் நுழைந்து.. கதவைத் தாளிட்டு.. சாவியை தன்னோடு வைத்துக் கொண்டான். ஆனால் அந்த அச்சுறுத்தலும் அவளை ஒன்றும் பெரிதாகத் தாக்கி விடவில்லை. அவள் அப்போதும் மிடுக்காகவே.. அவன் செய்த பிழையால் ஏற்பட்ட விபரீதம்.. அவள் மீது எந்த தப்பும் இல்லை என்று வாதாட.. அவனுக்குள் எல்லையில்லா கோபத்தை பெருகச் செய்து கொண்டிருந்தாள். “ராக்சசி.. இவளை எல்லாம் அடக்கவே முடியாதா.. பேசிக்கொண்டே போற.. அவள் செவ்விதழ்களை அப்படியே என் அதரங்களால் சிறைப்பிடிக்க வேண்டும்”.. என்று ஒரு எண்ணம் தோன்ற.. “ச்ச.. என்ன நினைப்பு இது..” என்று அவன் மனசாட்சி அவனை கண்டிக்க.. கண்ணன் ஜான்சியை அவமானப்படுத்தவே.. அந்த அறைக்கு வரச் சொல்லி இருந்தான். ஆனால் இயல்பில் நல்லவனான கண்ணனுக்கு.. அது சற்று அதிகப்படியாக தோன்ற.. அவள் மன்னிப்பு கோரினால் மனம் மாற எண்ணி இருந்தான்.
ஆனால் ஜான்சி தன் துடுக்குப் பேச்சால்.. அவனிடம் மேலும் மேலும் மல்லுக்கட்ட.. “இவளுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது” என்று எண்ணிக் கொண்டான். கண்ணன் அவளிடம் “இது தனி அறை.. நான் பழி உணர்ச்சியுடன் இருக்கிறேன்.. நான் நினைத்தால் உன்னை எதுவும் செய்ய முடியும்” என்று அவன் கோடிட்டுக் காட்ட.. அவள் அதற்கும் அஞ்சாமல்.. நீ என்ன சிங்கமா.. புலியா.. என்று கேட்க.. அடங்க மாட்டேன் என்கிறாளே.. இவளை எப்படியாவது பணிய வைக்க வேண்டும்.. என்று.. தன் பார்வையாலே அவளை மிரட்ட எண்ணி.. அவள் மீது அவன் கண்களை வரைமுறை இன்றி பயணிக்க விட.. அவன் பார்வை தாளமாட்டாமல் ஜான்சி தவிக்க.. அதுவே அவனுக்கு திருப்தி தர.. வேலை முடிந்தது.. பார்வையை எடுக்கலாம் என்று மூளை கட்டளை இட.. ஆனால் மூளை இட்ட கட்டளையை கண்கள் ஏற்க மறுத்து.. அவள் இதழ்களில் பதிந்திருந்த அவன் கண்களை எடுக்க மனமின்றி அங்கேயே நிறுத்தி வைத்திருந்தான். மூளையை இப்போது இதயம் ஆட்கொள்ள.. அவளை மிரட்ட வந்தவன்.. இப்போது தன்னையே அவளிடம் தொலைத்திருந்தான். ஆனால் இந்த வேதியியல் மாற்றம் எல்லாம் அவனுக்கு அப்போது புரியவில்லை. அவன் பார்வை அவளை வீழ்த்தி விட்டது என்று மனம் கொக்கரிக்க.. உண்மையில் வீழ்ந்தது அவன் என்பதை உணராமல்.. அவளுக்காக அவன் தீட்டியிருந்த திட்டப்படி நேரத்தை சரி பார்த்தவன் கதவைத் திறந்துவிட்டான். அவளும் துள்ளலாக நன்றி தெரிவித்து வெளியில் செல்ல.. “போடி போ.. இனி உன் பெயரே கண்ணனின் காதலி தான்”.. என்று வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டான். அவள் முத்தமிட்டு சென்றதைப் போல்.. லேப் அருகில் நின்றவர்களின் முன் தன் கைக்குட்டையை கொண்டு.. அவள் இதழ் ஒற்றலைத் துடைப்பதை போல் பாவனை செய்தான். பின் அவளையும் அவனையும் சேர்த்து வைத்து சுவரில் தோழர்களின் துணையுடன் படம் வரைந்து வஞ்சம் தீர்த்துக் கொண்டான். ஜான்சி அவனைத் தேடி வருவாள் என்று கண்ணனுக்கு உறுதியாக தெரியும். ஜான்சி சூறாவளி போல் கோபத்துடன் வருவதைப் பார்த்த கண்ணனுக்கு அவனுக்கு அன்று அவளால் ஏற்பட்ட அவமானத்திற்கு மருந்திட்டது போல் இதமாக இருந்தது. அவள் அவனிடம் வார்த்தைகளால் வசை பாடிக் கொண்டிருக்க.. அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு.. அவள் செவ்விதழ்களைப் பார்க்கும் ஆவல் தோன்ற.. அவன் கட்டுபாட்டை மீறி அவன் விழிகள் அவள் இதழ்களில் சரணடைய.. அவள் இதழ்களை சிறைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அன்றைக்கு போல் இன்றும் தோன்ற.. கண்ணன் சுதாரித்தான். அவள் மீதிருந்த பார்வையை.. அவள் காரைப் பற்றி விசாரிக்கவும்.. காரின் மீது பதித்தான். அதே நேரம் அவள் கார் கண்ணாடியை சிதற செய்து விட்டு.. கணக்கு சரியானது என்று சொல்லிச் செல்ல.. “ “ராட்சசி”.. என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன. காரின் நிலையைப் பார்த்தவனுக்கு கோபம் வந்த போதிலும்.. அவளிடம் திரும்ப வம்பு இழுக்க அவனுக்கு மனமில்லை. அவள் அருகில் இருந்தால்.. அவன் தன்னிலை மறந்து.. அவள் புறமாக ஈர்க்கப்படுவதை அவன் மனம் பகிரங்கமாக ஒத்துக் கொண்டது. இப்படியே சென்றால் அது இருவருக்குமே நல்லதல்ல என்று உணர்ந்தவன் அவளிடமிருந்து விலகி நிற்க முடிவு எடுத்திருந்தான். அப்படியும் சில நாட்கள் அவளைக் கடந்து செல்ல நேரிடும்.. அப்பொழுது எல்லாம் அவளை பார்க்கக் கூடாது என்று கெத்தாகத் தான் செல்வான்.. ஆனால் அவள் முகம் அவனைக் காந்தம் போல் இழுக்க.. சின்ன பார்வையை மட்டும் அவள் புறம் செலுத்த.. அந்த பார்வை நொடிப்பொழுதில் அவளை ஆழமாக படம் பிடிக்க அது அவன் இதயத்தில் பத்திரமாக சேகரிக்கப்பட்டது. இப்படியே இரண்டு வருடங்கள் கடந்திருக்க.. அது கண்ணனின் இறுதி ஆண்டு. யாரைப் பார்த்தால் பலவீனம் ஆகிவிடுவோம் என்று பயந்து ஒதுங்கி இருந்தானோ.. அவளே அவன் முன் வந்து நின்றாள்.