நான் கண்ட கனவு
கனவு 12
இரண்டு வருடங்கள் ஜான்சியைப் பார்க்காமல்.. அவளைத் தவிர்த்த கண்ணனுக்கு.. இப்போது அவளை எதிர்கொள்ளும் திடம் வந்திருந்தது. முடிந்த அளவுக்கு அவள் முகத்தைப் பார்க்காமலே சமாளித்து பார்ப்பான். அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொண்டான். ஆனாலும் ஜான்சி அன்று அவன் முன் அவமானப்பட்டு விடக்கூடாது என்று தவித்து.. பின்பு நிம்மதி உற்றதை.. அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
அன்று செல்வம் சாரைப் பார்த்து அவள் பயந்து விழித்த போது.. அவள் மனம் தவித்த தவிப்பைப்.. பொறுக்க முடியாதவன்.. பழியைத் தன் மீது ஏற்றுக் கொண்டான்.
ஒரு வாரத்தில் அவளை அருகில் பார்த்துப் பழகியவனுக்கு அப்போது தான் ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. இரண்டு வருடமாக அவளைப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வுக்கான காரணமும் அதுதான் என்பதும் புரிந்தது. “காதல்”.. கண்ணனுக்கே ஆச்சரியம்தான்.
அந்த ராட்சசியை நான் எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சேன்.. என்று அவன் மனமே கேள்வி கேட்க.. “ராட்சசியா..”!! “என் தேவதை” என்று எச்சரித்து.. மனசாட்சியிடம் கூட.. யுத்தத்திற்கு சென்று விட்டான்.
இவன் மனதில் காதல் வந்திருப்பது உறுதியாயிற்று. அவள் மனதிலும் அப்படி ஒரு எண்ணம் இருக்க வேண்டுமே.. என்று எண்ணுகையில் சரியாக ஜான்சியிடம் இருந்து அழைப்பு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஜான்சி அவனுக்காக கார்டுடன் ஃபுட்பால் மைதானம் அருகில் காத்திருந்தாள்.
ஒருவேளை நமக்கு ஏற்பட்ட மாற்றம் அவளுக்கும் நேர்ந்திருக்குமோ.. என்ன கார்டாக இருக்கும்.. என்று அவன் ஆவலுடன் திறக்க.. காதலை எதிர்பார்த்தவனுக்கு.. சாரி கார்டு தான் கிடைத்தது. மருத்துவமனையில் ஜான்சியிடம் தொழில் சம்பந்தமாக நிறைய பேசி இருப்பான்.
ஆனால் இன்று தான் ஜான்சி அவனை நாடி வந்து அவனிடம் கனிவாக பேசத் தொடங்கி இருந்தாள். காதலில் விழுந்த கண்ணனுக்கு.. அவளின் சின்னச் சின்ன அசைவு கூட அவனுக்கு ஓவியமாக, காவியமாகத் தோன்றியது.
அவள் விடை பெற்றுச் செல்ல.. ஏக்கத்தோடு பார்த்தவன்.. மறுநாள் அவள் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் சரண்யா தான் முதலில் வந்தாள். சரண்யா நல்ல தோழி தான். ஆனால் அவன் ஜான்சிக்காக காத்திருக்க.. சரண்யா வந்தால்.. லேசில் செல்ல மாட்டாளே.. என்று மனம் வருந்தியது.
ஜான்சியும் அதே நேரம் வர.. சரண்யா அவனை ஜான்சியிடம் திரும்ப விடாமல் பேசிக்கொண்டே இருக்க.. பொறுமை இழந்தவன்.. நேரமாகி விட்டது என்று கஷ்டப்பட்டு அவளை அனுப்பி வைத்தான். ஜான்சி அங்கிருந்த சேரில் அமர்ந்து.. அவள் முன் இருந்த புத்தகத்தைத் தவிர எதையும் பார்க்க மறந்து இருந்தாள்.
அவள் புத்தகத்தை மாற்றி வைத்து.. சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதைப் பார்த்தவனுக்கு அதற்கான காரணம் புரியவில்லை. ஆனால் சரண்யா வந்து போனது அவளுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் புரிந்தது.
கண்ணனின் படிப்பு முடிய இன்னும் சில மாதங்களே இருந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அவன் மனதுக்குள் புகுந்தவளை இப்போதுதான் அவன் உணர்ந்து இருந்தான். ஆனால் காதலை உணர்ந்ததிலிருந்து.. அவளிடமிருந்து விலகி நிற்பது அவனுக்கு தண்டனையாகத் தெரிந்தது.
அதனால் இனியும் தாமதிக்காமல் அவன் காதலை அவளிடம் சொல்லி விட முடிவு எடுத்திருந்தான். நாளை அவன் பிறந்த நாள்.. அதனால் ஏதாவது சாக்கு சொல்லி அவளைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். அவளை எதார்த்தமாக சந்திப்பது போல் சந்தித்து அழைக்க வேண்டும் என்று எண்ணியவன்.. அவள் வழக்கமாக படிக்கும் இடங்களுக்குச் சென்று தேடிப் பார்த்தான்.
அவள் எங்கும் இல்லாது போக ஒருவேளை பார்க் அருகில் இருப்பாளோ என்று அந்தப் பக்கம் வந்தவன் கண்களில்.. ஜான்சி தூரத்தில் ஓடி வருவது போல் தெரிய.. அவளை நாடிச் சென்றான். ஜான்சியின் மருண்ட விழிகள்.. அவள் ஏதோ ஆபத்தில் இருந்திருக்கிறாள் என்பதை உணர்த்தியது.
அவனைக் கண்ட ஜான்சி.. ஓடி வந்து.. அவனிடம் தஞ்சம் புக… கண்ணனுக்கு நெடுநாளாக இழந்த உறவு தன்னோடு சேர்ந்ததைப் போல் உணர்ந்தான். ஜென்ம ஜென்மமாக தொடரும் உறவு.. என்று யாராவது சொன்னால் நிச்சயம் நம்பி இருக்க மாட்டான். ஆனால் ஜான்சி அவனை அணைத்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றி.. அவனுக்கும் அந்த வாக்கியத்தில் நம்பிக்கை ஏற்பட்டது.
அவள் நிலையைப் பார்த்த போது ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும்.. மறுபக்கம் கோபம் தான் வந்தது. படிச்சா மட்டும் போதாது ஜான்சி.. நம்மைச் சுற்றி என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கவனமாக இருக்கனும்.. அங்க யாரும் இல்லை தைரியமா பாரு.. என்று அவன் பயத்தில் நடுங்கியவளிடம் சொல்ல.. அவள் சுய உணர்வு பெற்றவளாக அவனிடம் இருந்து விலகினாள்.
இன்னும் கொஞ்ச நேரம் அவள் அணைப்பில் இருக்காமல் அவசரப்பட்டு சொல்லி விட்டோமோ என்று தன்னையே நொந்து கொண்டான். பின் அவளைக் கல்லூரியில் இறக்கிவிட்ட போது எதேச்சையாக அவளை கோவிலுக்கு அழைப்பது போல் அழைத்தான்.
பயத்தில் ஜான்சி உரிமையுடன் அணைத்ததில் அவள் மனதிலும் அவன் இருக்கிறான் என்று தான் தோன்றியது. இருந்தாலும் ஜான்சியின் குணம் அவனுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருந்தது. அவன் காதலைச் சொல்ல.. அதை அவள் ஏற்ற பின்தான் உயிரே வந்தது போல் இருந்தது.
ஜான்சியைப் பற்றிய நினைவுகளில் இருந்து மீண்ட கண்ணனுக்கு.. அப்போது தான் அவன் தோழர்கள் காத்திருப்பது நினைவு வர.. அவனது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்ந்தது. இருந்தும் அவன் மனது ஜான்சியையே சுற்றிக் கொண்டிருந்தது. அன்று இரவு பதினொரு மணிக்கு மேல் படுக்கையில் விழுந்தவன்..
“ஹாய் பொண்டாட்டி”.. என்று செய்தி அனுப்ப.. “ஹாய் புருஷா” என்று அவள் அனுப்ப.. உன்னைப் பாக்கனும் போல இருக்குடி.. என்று அவன் ஏக்கத்துடன் அனுப்ப.. அவ்வளவு தான.. என்று அவள் புகைப்படத்தை அனுப்ப.. நேரில் பார்க்க ஆசைப்பட்டா.. போட்டோவ அனுப்புறாளே என்று சலித்துக் கொண்ட போதிலும்.. அவள் அழகை அந்த புகைப்படத்தில் ரசித்துக் கொண்டே தூங்கிப் போனான்.
ஜான்சி கண்ணனின் அன்பில் திக்கு முக்காடினாள். திருமலை நாயக்கர் மஹால், சுந்தரம் பார்க், தியேட்டர்.. என்று ஒவ்வொரு இடமாக கண்ணன் அவளை அழைத்துச் செல்வான். இரண்டு வருடங்களாக தள்ளி இருந்து ரசித்தவன் கண்களுக்கு.. இன்று எந்த தடையும் இல்லாமல் அவளை ரசிக்க அனுமதி கிடைத்ததில் அவன் கண்கள் பேரின்பம் கொண்டன.
அன்று பார்க்கில்.. கண்ணன் ஜான்சியின் மடியில் உரிமையுடன் படுத்துக்கொள்ள.. அவனது தலையை வருடி விட்ட ஜான்சி.. “கண்ணா நீ இல்லாமல்.. இனி காலேஜே போர் அடிச்சிடும்டா..” என்று சோகமாக கூற.. “எனக்கும் தான் கஷ்டமா இருக்கும்..” என்றான் அவன்.
“கண்ணா நீ பேசாம.. இந்தியாவிலேயே இருக்க முடியாதா. உன்னை விட்டுட்டு நான் எப்படிடா இருப்பேன்” என்று ஜான்சி உருகி கூற.. அவன் மடியிலிருந்து விருட்டென்று எழுந்தவன்.. “ஜான்சி.. உனக்கு நான் எத்தனை தடவை சொல்றது.. என் புரொஃபஷனுக்குள் செண்டிமெண்ட்ஸ் கொண்டு வராதன்னு”.. என்று கோபத்துடன் அவன் அதட்ட..
அவன் கோபத்தில் லேசான அச்சம் அவளைத் தாக்கியபோதும்.. “சரி சரி ஒன்னும் சொல்லல” என்று அவளும் வேறு புறம் திரும்பிக் கொள்ள.. அவள் முகம் அவன் கோபத்தில் லேசாக வாடியதைப் பொறுக்காத கண்ணன்.. அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டவன் “சாரிடி”.. என்று அவன் அவள் காதருகில் நெருங்கிச் சொல்ல..
“ஒன்னும் வேண்டாம்”.. என்று அவள் அவனைத் தள்ளி விட.. “ஏ ராட்சசி.. உன் புருஷன் கண்ணன் எஃப்ஆர்சிஎஸ் னா எவ்வளவு பெருமையா இருக்கும்”.. என்று சொல்ல.. அவளுக்கும் அவன் ஆதங்கம் புரிந்தது. கண்ணன் அவளைத் திரும்ப அவன் புறமாக இழுக்க.. இந்த முறை ஜான்சி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“கண்ணா.. உன்னை மாதிரி ஒருத்தரோட அன்பு எனக்கு கிடைக்கிறது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.. அம்மா அப்பா யாரும் இல்லாமல் வளர்ந்த எனக்கு அது சொர்க்கமே கிடைத்ததுக்கு சமம். ஆனா இந்த சொர்க்கம் எனக்கு நிலையானதா இருக்கனும்.
உன்னைப் பிரியனுமே என்ற வேதனையில் தான் நான் அப்படி சொன்னேன்” என்று ஜான்சி தன் மனதில் இருப்பதைக் கூற..
“எனக்கு மட்டும் என்ன.. உன்னை விட்டுட்டு இருக்கிறது சுகமாகவா இருக்கும்?.. உன்னை விட எனக்கு தான் இந்த பிரிவின் வலி ஜாஸ்தியா இருக்கும். விடு.. இன்னும் ஒரு மாசம் இருக்குல.. அதுக்குள்ள ஏன் புலம்புற..” என்று அவளை சமாதானம் செய்தான்.
ஜான்சி அதன் பின் அவனது அயல்நாட்டு பயணம் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் அப்படியும் அவர்களைப் பிரிக்க விதி.. திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தது.
அன்று ஜான்சி வகுப்பு முடிந்து ஹாஸ்டலுக்கு செல்ல ஆயத்தமாக.. அவள் வகுப்பு மாணவன் சுந்தர் அவளை சந்திக்க அழைத்தான். சுந்தர் சராசரிக்கு சற்று உயரமானவன்.. ஓரளவு படிப்பான்.. நல்ல களையான முகம்.. நட்புடன் பிரியமாக பேசுவான்.. அவன் வீட்டில் நல்ல வசதி.. என்றும் கேள்விப்பட்டிருக்கிறாள்.
ஜான்சியை அவன் வேறு கண்ணோட்டத்துடன் சில நாட்களாக பார்க்கிறானோ.. என்ற சந்தேகம் சில நாட்களாக அவளுக்கு தோன்றி இருந்தது. அவன் யதார்த்தமாக பார்த்திருப்பான் என்று தன்னை சமாதானம் செய்து கொள்வாள்.
சுந்தரிடம்.. அவளுடன் படிக்கும் சக மாணவன் என்ற முறையில் நிறைய முறை அவனுடன் பேசி இருப்பாள். ஆனால் இன்று அவன் ஹாஸ்டல் போகும் வழியில் தனியாக அவளுக்காக காத்திருக்க.. ஜான்சி அவனைச் சந்திக்க வேண்டாம் என்று தான் முதலில் நினைத்தாள். இருந்தாலும் அவன் பார்வையில் சில நாட்களாக ஏற்பட்ட மாற்றம் அவளை உறுத்த அவனைச் சந்தித்து.. அவளுக்கு அவனிடம் அப்படிப்பட்ட ஒரு அபிப்ராயம் இல்லை என்று தெளிவாகச் சொல்லி விட எண்ணி இருந்தாள்.
ஜான்சி அருகில் வந்திருந்த சுந்தர் “ஹாய் ஜான்சி”.. என்று பேசத் தொடங்கி இருந்தான். பின் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து அவளிடம் நீட்டினான். ஜான்சியால் புரிந்து கொள்ள முடிந்தது.. அதில் என்ன இருக்கும் என்று. அவள் தயங்கி ஒரு அடி பின்னால் சென்று “சாரி சுந்தர்”.. என்று அவள் சொல்ல..
அதேநேரம் பளார் என்று ஒரு சத்தம் கேட்க.. கண்ணன் சுந்தரை அறைந்திருந்தான். “கண்ணா” என்று சுந்தர் அவனைப் பார்த்து அதட்ட….
“யாருகிட்ட வந்து லெட்டர் கொடுக்கிற”.. என்று கண்ணன் தீராத கோபத்துடன் சுந்தரை மேலும் தாக்கப் போக..
“நான் ஜான்சி கிட்ட லெட்டர் கொடுத்தா உனக்கு என்ன.. அவளை என்ன உனக்கு பட்டா போட்டா கொடுத்திருக்கு”.. என்று சுந்தர் கண்ணனுக்கு பதிலடி கொடுத்தான்.
“ஆமாண்டா.. அப்படித்தான்னு வச்சுக்கோ.. இனி அவ கிட்ட நெருங்கின தொலைச்சு விடுவேன்” என்று ஆக்ரோஷமாக கண்ணன் மிரட்ட.. ஜான்சி செய்வதறியாமல் சில நொடிகள் நின்றவள்.. பின் தாக்கி கொண்டு நின்ற இருவரையும் பிரிக்க முயற்சித்தாள்.
“கண்ணா.. விட்ருங்க.. ப்ளீஸ்”.. என்று கெஞ்சினாள். “நீ ஒரு மாசம் தான இருப்ப.. நீ போனப்புறம் நான் அவளை மடக்கல.. என் பெயர் சுந்தர் இல்லை..” என்று அவன் சபதம் போட்டான்.
அவன் வார்த்தைகளில் கண்ணன் தன் நிலை மறந்து வெறி கொண்டவனாக அவனை அடிக்கப் போக.. ஜான்சி தன் முழு பலத்தைக் கொண்டு கண்ணனை நிறுத்தி வைக்க.. சுந்தர் உதட்டோரம் ஒரு ஏளனப் புன்னகையுடன் அவர்களைக் கடந்து சென்றான்.
கண்ணனின் கண்ணில் இருந்த கோபம் ஜான்சியை பயமுறுத்தியது. அவர்களைச் சுற்றி நல்லவேளை அதிகக் கூட்டம் இல்லை. இருந்தும் அந்த இடத்தைக் கடப்பவர்கள் அவர்களுக்குள் நடக்கும் சண்டையை வெறித்துக் கொண்டு சென்றார்கள். அவர்களின் அந்த பார்வையில் ஜான்சி தான் குறுகிப் போனாள்.
இந்த கண்ணனுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதோ.. என்று தனக்குள் சொன்னவள் கண்ணனை சமாதானம் செய்ய முயற்சித்தாள்.
ஆனால் அவன் “அறிவு இருக்காடீ உனக்கு.. அவன் லெட்டர் கொடுத்தா அப்படியே பார்த்திட்டு நிக்கிற.. ஓங்கி கன்னத்துல ஒன்னு கொடுக்க வேண்டியது தான.. என்னை மட்டும் அன்னைக்கு அடிக்கல”.. என்று மொத்த கோபத்தையும் அவளி
டம் காட்ட.. ஜான்சி செய்வதறியாமல் விழித்தாள்.