இருவரின் சம்பாஷனைகளையும் ரசித்துக் கொண்டிருந்த அவ்யுதகண்ணனின் அன்னை தேவகி, “எட்டு மணிக்கு கிளம்பணும்னு சொல்லிட்டு ஏழு மணிக்கு வந்து இருக்க!” என்றார்.
அவரது கூற்றைக் கேட்டதும் ஆதினியின் முகம் சுருங்கிவிட,
மகளின் முகத்தைப் பார்த்தபடி கையின் ஈரத்தை சிறு துவாலையில் துடைத்த அவ்யுதகண்ணன், “ப்ளான் சேஞ், ஸோ போகலை” என்றதும்,
குட்டி விழிகளின் மத்தாப்ப்பு மின்ன, இளஞ்சிவப்பு உதட்டில் புன்னைகை பூக்க, “டாடி” என்றபடி ஆதினி உற்சாகத்துடன் ஓடி வந்து அவனை அணைக்கப் போக,
மகளின் மகிழ்ச்சியை அணுஅணுவாக ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தவனோ, “நோ டாலி.. டாடி இன்னும் குளிக்கலை.. வெயிட்” என்றபடி அவளது கையில் சிக்காமல் ஓடினான்.
அவளோ கிளிக்கிச் சிரித்தபடி, “நோ ப்ராப்(prob->problem) டாடி.. டாலியும் குளிப்பா.. இப்போ ஹக்கி” என்றபடி தந்தை பின்னால் ஓடினாள்.
“நோ நோ” என்றவன் அவளது கையில் சிக்காமல் துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறையினுள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
காலை தரையில் உதைத்த ஆதினி, “ஆச்சி” என்று உதட்டைப் பிதுக்கியபடி தேவகியிடம் சென்றாள்.
மென்னகையுடன் பேத்தியை வாரி அணைத்துக் கொண்ட தேவகி, “அப்பா டர்ட்டியா இருப்பான் இல்லையா.. அதான் குட்டிமா.. இப்போ பாரு, பைவ் மினிட்ஸ்ல வந்து உன்னை தூக்கிப்பான்” என்று சமாதானம் செய்தார்.
ஆனால் அந்த சுட்டி குட்டி தேவதையோ சமாதானம் ஆகாமல், “டாலி குளிப்பேன் சொன்னா” என்றாள்.
“அப்பா எது செய்தாலும் குட்டிமா நல்லதுக்காகத் தானே செய்வான்?”
“ஹ்ம்ம்.. பட்..”
“அப்பா வரதுக்குள்ள அப்பாக்கு பிடிச்ச மின்ட் லெமன் ஜூஸ் தயாரிக்கலாமா?” என்றதும் மகிழ்ச்சியுடன் வேகமாக ‘சரி’ என்றது போல் தலையை ஆட்டி அவர் கையில் இருந்து இறங்கி குளிர்சாதனப் பெட்டியை நோக்கி ஓடினாள்.
எலுமிச்சம் பழம் மற்றும் புதினா இலைகள் இருக்கும் உணவு பெட்டியை எடுத்து தேவகியிடம் கொடுத்தவள் அவர் எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கியதும், “நானு.. நானு.. நான் தான் டாடிக்கு செய்வேன்” என்று குதித்தாள்.
“இருடா ஆச்சி லெமனை பிழிஞ்சு, புதினா இலையை அரைத்து தண்ணி ஊத்தி, சுகர் போட்டு தரேன்.. நீ மிக்ஸ் மட்டும்….” என்றவரின் பேச்சை இடையிட்டவள்,
“நோ.. நோ.. டாலி தான் எல்லா செய்வா” என்றாள்.
“மிக்சி எப்படி நீ போடுவ?”
“நீங்க ஜார் பிடிச்சுகோங்க.. பட்டன் நான் போடுவேன்”
“உனக்கு லெமன் பிழிய கஷ்டமா இருக்கும்டா குட்டிமா”
“டாடி சொல்லி இருக்கா.. ட்ரை செய்யாம நோ சொல்லக் கூடாது” என்று திடமான குரலில் கூறி அவரை தீர்க்கமாக பார்க்க,
‘அப்படியே அப்பனை மாதிரி’ என்று முணுமுணுத்த தேவகி, “சரிங்க பெரிய மனுஷி.. இந்தா.. நீயே செய்” என்று கூறினார்.
இடுப்பில் கையை வைத்தபடி முறைத்த குழந்தை, “கிண்டல் செய்யாதீங்க” என்றாள்.
அதன் கொள்ளை அழகை ரசித்த தேவகி விரிந்த புன்னகையுடன், “சமத்து குட்டிமா” என்றபடி இரு கையால் குழந்தையின் முகத்தை அளந்து எடுத்து தனது நெற்றியில் கை விரல்களுக்கு சொடக்கு எடுத்து திருஷ்டி கழித்தார்.
பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “தேங்க் யூ” என்ற குழந்தை பாதியாக வெட்டிய எலுமிச்சம் பழத்தை எடுத்து குட்டி கைகளை கொண்டு சிரமத்துடன் பிழிய ஆரம்பித்தது.
குழந்தையின் செயல்களிலும், முக பாவங்களிலும், மகனின் சாயலை கண்ட தேவகிக்கு பேத்தியை நினைத்து அத்தனை பெருமை.
ஆம்! எதிலும் தந்தையை பின்பற்றும் ஆதினியின் சின்ன சின்ன அசைவுகளில் கூட அவ்யுதகண்ணனின் சாயல் தான் தெரியும். அதுவும் பிறந்ததில் இருந்து அன்னையின் வாசத்தைக் கூட உணர்ந்திராத அந்த சின்ன மொட்டிற்கு தாய், தந்தை, குரு, நண்பன், கதாநாயகன் அனைத்தும் அவளது தந்தையே!
சிரமத்துடன் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்ததும், “போதுமா ஆச்சி?” என்று கேட்டாள்.
“போதும்” என்றதும், கலவைக்கருவி ஜாடியில்(Mixie jar) ஆறு பெரிய புதினா இலைகள் மற்றும் இரண்டு தேக்கரண்டி சக்கரையை சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி முடி தேவகியிடம் நீட்டினாள்.
அவர் அதை கலவைக்கருவியில் பொருத்தியதும், அதை ஒரு சுற்று சுற்றி அரைத்துக் கொண்டவள், “இதை எடுங்க ஆச்சி” என்றபடி வடிகட்டியை எடுத்தாள்.
தேவகி கலவைக்கருவி ஜாடியை எடுத்து திறந்து கொடுக்கவும் வடிகட்டியின் வாயிலாக சக்கரை கலந்த புதினா சாறை எலுமிச்சம் சாறுடன் ஊற்றி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலக்கினாள். சிறிதும் சிந்தாமல் நேர்த்தியாக கலக்கும் பேத்தியை பெருமையாக பார்த்தார்.
“டாலி” என்றபடி அவ்யுதகண்ணன் சமையல் அறை நோக்கி வரவும், கலக்குவதை நிறுத்திவிட்டு “டாடி” என்றபடி ஓடினாள்.
தன்னை நோக்கி ஓடி வந்த மகளை தூக்கியவன் மகளின் சிரிப்பை ரசித்தபடி கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ பேபி” என்றான்.
“லவ் யூ டாடி” என்றபடி குழந்தையும் அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
பின், “டாலி மின்ட் லமன் ஜூஷ் செஞ்சா” என்று கண்கள் மின்ன கூறினாள்.
“வாவ்! சூப்பர் பாப்பு” என்றவன், “ஜூஷ் இல்லை ஜூஸ்.. சொல்லுங்க” என்று திருத்தினான்.
இரண்டு முறை தவறாக கூறிய குழந்தை பின் சரியாக கூறி குதூகலித்தாள்.
“வெரி குட்” என்றபடி மீண்டும் மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “இப்போ ஜூஸ் குடிக்கலாமா?” என்று கேட்டான்.
“ஓ” என்று அழகாக அபிநயம் பிடித்த குழந்தை அவன் கையில் இருந்து வேகமாக இறங்கி ஓடி பழச்சாறு இருந்த கண்ணாடி குவளையை மிக நிதானத்துடன் எடுத்து வந்து கொடுத்தாள்.
ஒரு வாய் அருந்தியதும் குவளையை அருகில் இருந்த மேசையில் வைத்தவன் எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கிக் கொண்டிருந்த மகளை பார்த்து கைகளை தட்டியபடி, “வாவ்.. வாவ்.. செம செம டாலி.. தி பெஸ்ட் மின்ட் லெமன் ஜூஸ் இன் தி வேர்ல்ட்” என்று பாராட்டினான்.
பின் மகளை தூக்கி தட்டாமாலை சுற்றியவன் கிளுக்கி சிரித்த மகளின் கன்னத்தில் முத்தமிட்டு, “தன்க்யூ ஸோ மச் டாலி” என்றான்.
“வெல்கம் டாடி” என்றபடி தானும் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்ட குழந்தை, “ஜூஸ் குடிங்க” என்றாள்.
அவன் மெத்திருக்கையில்(sofa) அமர்ந்தபடி பழச்சாறை ரசித்து ருசித்து அருந்த,
ஆதினி, “ஆச்சி.. டாடி என் ஜூஷ்.. ஜூஸ், தி பெஸ்ட் மின்ட் லெமன் ஜூஸ் இன் தி வேர்ல்ட்னு சொன்னா” என்று குதூகலித்தாள்.
“அப்படியா! சூப்பர் சூப்பர்.. ஆனா நீ ஆச்சிக்கு ஜூஸ் தரலை” என்று அவர் முகத்தை லேசாக சுருக்கவும்,
“வாங்க இன்னொரு ஜூஸ் செய்யலாம்” என்றாள்.
“வேணாம்டா குட்டிமா.. ஆச்சி சும்மா தான் கேட்டேன்”
“இல்ல.. இல்ல.. அச்சி சேட்(sad), குட்டிமா சேட்.. வாங்க.. வாங்க” என்றபடி அவரது கையை பிடித்து இழுத்தாள்.
“நாளைக்கு போட்டு தா.. இப்போ ஜூஸ் குடிச்சா ஆச்சியால டின்னர் சரியா சாப்பிட முடியாது” என்றதும்,
“ஓ! சரி” என்றபடி தந்தையை ஒட்டியபடி மெத்திருக்கையில் அமர்ந்துக் கொண்டு தான் பழச்சாறு தயாரித்த கதையை கூற ஆரம்பித்தாள். அடுத்து பள்ளியில் நடந்த கதைகள், வீட்டுப்பாடம் என்று அவர்களின் நேரம் இனிமையாக கழிந்தது.
உணவுண்ண அமர்கையில் பேத்தி அறியாமல், “குட்டிமா தூங்கினதும் உன் கிட்ட பேசணும்” என்று தேவகி கூற,
“என் மனதிலும் வாழ்க்கையிலும் ராதா தவிர வேற பெண்ணுக்கு இடம் இல்லைமா.. ஸோ அந்த பேச்சே வேண்டாம்” என்றவன் அடுத்து அன்னை கூற வருவதை கவனிக்காதவன் போல் மகளுடன் ஐக்கியமானான்.
அதே நேரத்தில் முன்னாள் இராணுவ வீரரான குருநாதன் தனது மகளிடம், “அம்மு.. அப்பா கொஞ்சம் பேசணும்” என்றார்.
“கல்யாணத்தை தவிர வேற எதை பத்தி வேணாலும் பேசுங்கப்பா” என்று அவள் கறார் குரலில் கூற,
அவரோ, “அப்பா ஹெல்த் பத்தி பேசணும்” என்றார்.
புருவம் சுருக்கியபடி அவள் பார்க்கவும்,
அவர், “அப்பாக்கு ஹார்ட்டில் கொஞ்சம் ப்ராப்ளம் இருக்குது.. கொஞ்ச நாளாவே படி ஏறும் போது ஸ்லைட்டா மூச்சு வாங்கிட்டு தான் இருக்குது.. அதுவும் இந்த ஒரு வாரமா சில நேரம் ரொம்ப டயர்ட் ஆகுற மாதிரி இருக்கவும் டாக்டர் அருணாச்சலத்தை போய் பார்த்தேன்.. இசிஜி எடுத்ததில் வேரியேஷன் இருக்கவும் எக்கோ டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு 70 டு 80 பெர்சென்ட் ப்ளாக்கேஜ் இருக்கலாம்னு சொன்னார்.. ஏஞ்சியோ செய்யணும்னு சொல்றார்.. அப்படியே ஸ்டன்ட் வச்சிடலாம்னு சொன்னார்” என்று கூறி நிறுத்தினார்.
சில நொடிகள் மௌனித்த அம்ரிதா தனது கலக்கத்தை மனதினுள் மறைத்துக் கொண்டு திடமாக தந்தையை பார்த்து, “என்னைக்கு ஏஞ்சியோ செய்யலாம்? எவ்ளோ ஆகும்னு கேட்டீங்களா?” என்று கேட்டாள்.
என்ன தான் அவள் கலக்கத்தை திறமையாக மறைத்துக் கொண்டாலும் அவளை அறியாதவரா குருநாதன்! ஒரு வினாடிக்கும் குறைவான நொடிகளில் அவளது கண்ணில் தோன்றி மறைந்த கலக்கத்தை கண்டிருந்தார்.
மகளின் திடத்தை குலைக்க விரும்பாமல் தான் அறிந்ததை காட்டிக் கொள்ளவில்லை.