“அப்பா” என்று அம்ரிதா அழைக்கவும்,
“அது உன் கையில் தான் இருக்குது” என்றார்.
சில நொடிகள் புருவம் சுருக்கியபடி தந்தையை பார்த்தவள் பின் கோபத்துடன், “ஸோ நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா தான் ஸ்டன்ட் வைக்க சம்மதிப்பீங்க.. ரைட்!” என்றாள்.
அவள் கூறியது சரியே என்பது போல் அவர் கைகளை கட்டியபடி அமைதியாக இருந்தார்.
மூச்சை இழுத்து விட்டு தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தவள், அது முடியாமல் கோபத்துடன் பொரிய ஆரம்பித்தாள்.
“ஏன் ப்பா இப்படி செய்றீங்க? ஆண்களில் நீங்க தான் விதிவிலக்குனு நினைத்தேன்.. ஆனா நீங்களும் என்னை கஷ்டப்படுத்த தான் செய்றீங்க” என்றவளின் பேச்சை இடையிட்டு,
“எனக்கு அப்புறம்..” என்று அவர் ஆரம்பிக்க, அதை அவள் இடையிட்டு,
“உங்களுக்கு எதுவும் இல்லை.. நூறு வயசுக்கு நல்லாவே இருப்பீங்க” என்றாள்.
“ஓகே.. ஆனா ஒருவேளை..” என்றவரின் பேச்சை மீண்டும் இடையிட்டவள்,
“அதான் ஒன்னும் ஆகாதுனு சொல்றேனே” என்றாள்.
“பி ப்ராக்டிகல் அம்மு.. எனக்கு அப்புறம் யோசி”
அவரை கோபமாக முறைத்தவள், “அப்படி ஒரு நிலைமை வந்தாலும் என் முடிவில் மாற்றம் இல்லை” என்றாள்.
“அப்போ என் முடிவிலும் மாற்றம் இல்லை”
“நிஜமாவே ஹார்ட் ப்ராப்ளம் இருக்குதா!” என்று அவள் சந்தேகமாக வினவ,
ஒரு நொடி புரியாமல் பார்த்தவர் பின் வாய்விட்டு சிரித்தபடி, “உன்னை கார்னர் செய்ய பொய் சொல்றேன்னு நினைக்கிறியா?” என்றவர், “நீயே வேணா டாக்டர் கிட்ட பேசு” என்றார்.
“அவரையும் பொய் சொல்ல சொல்லி இருந்தா?”
லேசாக மென்னகைத்தவர், “அப்போ வேற டாக்டர் கிட்ட போய் செக்கப் செய்யலாம்.. நீ சொல்ற டாக்டர் கிட்டயே போகலாம்” என்றபடி தோளை குலுக்கினார்.
சில நொடிகள் அவரை ஆழ்ந்து நோக்கியவள், “இப்படி சொன்னா விட்டுடுவேன்னு நினைப்பா! சௌமி கிட்ட டாக்டர் பத்தி கேட்டுட்டு வரேன்.. கிளம்பி ரெடியா இருங்க” என்றுவிட்டு எழுந்து தன் அறைக்கு சென்றாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள் அங்கே வெளியே செல்வது போல் தயாராகி அமர்ந்து இருந்த தந்தையை கண்டதும், “உங்க ரிப்போர்ட் எங்க?” என்று கேட்டாள்.
“அது எதுக்கு? புதுசா தானே டெஸ்ட்ஸ் எடுக்க போறோம்!”
“தாங்க”
அவர் மென்னகையுடன், “ஸோ நீ சௌம்யா கிட்ட பேசலை!” என்றார்.
அவர் உண்மையை கண்டு கொண்டதில் சிறிதும் அதிராமல் உதட்டை சுளித்தபடி, “ரிப்போர்ட்ஸ்” என்றாள்.
தனது அறைக்கு சென்று அதை எடுத்து வந்து கொடுத்துவிட்டு வீட்டில் அணியும் உடைக்கு மாறி வந்து அவள் எதிரில் அமர்ந்தார்.
அந்த மருத்துவ அறிக்கையை உன்னிப்பாக படித்து முடித்த பிறகே அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“எவ்ளோ ஆகும்னு சொன்னார்?”
குருநாதன் தொகையை கூறியதும், “வர வியாழக் கிழமை செய்யலாமா?” என்று கேட்டாள்.
“டாக்டர் ரொம்ப நாள் கடத்த வேணாம்னு சொன்னார் ஸோ உன் நிச்சயதார்த்தம் முடிந்ததும் செய்துக்கிறேன்”
அவள் அவரை முறைக்க,
அவரோ, “முதல்ல உன் கல்யாணத்துக்கு அப்புறம் செய்துக்கலாம்னு தான் யோசித்தேன்.. ஆனா மாப்பிள்ளை வீட்டில் ஒத்துக்கணுமே! அதான் நிச்சயம் செய்த பிறகுனு சொல்றேன்” என்றார்.
“அப்போ மாப்பிள்ளை ரெடி”
“ரெண்டு வரன் இருக்குது.. நீ தான் சொல்லணும்.. இந்த ரெண்டு வரனுமே உனக்கு பிடிக்கலைனா கட்டாயப்படுத்த மாட்டேன்.. வேற பார்க்கலாம்”
அவரை நக்கலாக பார்த்தவள் உதட்டோர வளைவுடன், “கல்யாணத்துக்கே நீங்க கட்டாயப்படுத்திட்டு தான் இருக்கிறீங்க!” என்றாள்.
“நான் கட்டாயப்படுத்தலையே!”
“இப்படி இமோஷனல் பிளக்மெயில் செய்றதுக்கு பெயர் என்னவோ!”
“நான் என் முடிவை சொன்னேன்” என்று அவர் தோளை குலுக்க,
“அப்போ என்னை பற்றி கவலைப் படாம தனியா விட்டுட்டு போக முடிவு செய்துட்டீங்க!”
“அப்போ என் உயிரைப் பற்றி கவலைப் படாம தனியா இருக்க நீ முடிவு செய்துட்ட!”
அவரை முறைத்தவள், “எத்தனை முறை சூடு கண்டாலும் திருந்த மாட்டீங்க இல்ல” என்றாள்.
“உன்னை பற்றி தெரிந்து தான் இந்த இரண்டு வரன்களும் சரி சொல்லி இருக்கிறாங்க”
“ஓஹோ!” என்று நக்கலாக இழுத்தவள், “எவ்வளவுக்கு விலை போனேன்?” என்று கேட்டாள்.
“அம்ரிதா!” என்று அவர் கடும் கோபத்துடன் அழைக்க, அவளோ சிறிதும் அலட்டிக் கொள்ள வில்லை.
‘உண்மையை தானே சொன்னேன்’ என்ற பார்வையை தான் பார்த்தாள்.
குருநாதன் தான் தன் கோபத்தை அடக்கி இறங்கி வர வேண்டியதாக இருந்தது.
மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவர், “அம்மு.. ஒருத்தன் தப்பானவனா இருந்தா ஆண்கள் எல்லோரும்..” என்றவரின் பேச்சை வேகமாக இடையிட்டவள்,
“ஒருத்தன் இல்லை.. பலர்”
“சரி.. ஆனா எல்லோரும் தப்பானவங்களா இருக்க மாட்டாங்க”
“இருக்கலாம்.. ஆனா எவனையும் நம்ப நான் தயாரா இல்லை”
“அம்மு!” என்று அவர் ஆயாசமாக அழைக்க,
அவள், “நடந்ததை எல்லாம் மறக்க முடியலை என்றாலும் கடந்த காலமா நினைத்து கடக்க முயற்சித்தபடி உங்களுக்காக தான் கல்யாணத்துக்கு ஒதுக்கிட்டேன், ஆனா என்ன நடந்தது!
நீங்களும் என் கிட்ட உண்மையை மறைத்து.. என்ன! அந்த பொறுக்கி என் கடந்த காலத்தை பத்தி தெரிந்ததும், என்னை ஏத்துக்க வரதட்சணை அதிகமா கேட்டதை என் கிட்ட இருந்து மறைச்சீங்க தானே! மறைத்து கல்யாணம் வரை கொண்டு போய் என்ன பிரயோஜனம்!” என்றவளின் கண்களின் அத்தனை ரௌத்திரம்.
“என்னை பார்த்து எகத்தாளமாவும் ஏளனமாவும் சிரிச்சவன் கபாலத்தை பிளந்து மண்டை ஓட்டை சிரிக்க வச்சு இருக்கணும்! கூடவே, ‘எதோ பையன் ஆசை பட்டுட்டான்.. உன் மேல இருக்க ஆசையில், அப்படி நடந்துக்கிட்டான்.. அதை போய் பெருசு படுத்துறியே!’னு அந்த பொறுக்கிக்கு ஒத்து ஊதிய அவனை பெத்தவளையும் எமலோகம் அனுப்பி இருக்கணும்.. உங்களால ரெண்டும் தப்பிச்சிருச்சு” என்றவளின் கண்ணில் அத்தனை வெறி.
“நான் முடியாதுனு சொன்னதும் எவ்ளோ கூலா, அதான் நிச்சயம் முடிஞ்சுருச்சே! என் கூட படுத்தா என்னடினு சொன்னான்! அது மட்டுமா! என்னலாம் பேசினான்! ‘இது என்ன உனக்கு…” என்று பேசிக் கொண்டிருந்தவள் தந்தையை கருதி பேச்சை நிறுத்த, அவரோ அவள் கூறாமல் விட்ட வார்த்தைகளை புரிந்து உயிருடன் மரித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
தன் துயரை மறைத்து மகளை அரவணைத்து, “ஒன்றுமில்லைடா.. அதை பத்தி யோசிக்காத” என்று தேற்றியவர் நெஞ்சில் சிறு வலியை உணர்ந்தார்.
மூச்சை நன்றாக இழுத்துவிட்டு கொண்டு மனதை சமன் செய்தார். மெல்ல அந்த வலி நீங்கினாலும் தனது உடல் நிலை பற்றி அந்த நொடி துல்லியமாக உணர்ந்து கொண்டார்.
தந்தையிடம் உணர்ந்த மாற்றத்தில், “என்னாச்சுப்பா? என்ன செய்யுது?” என்று பதறினாள்.
அதற்குள் சுதாரித்து இருந்தவர், “பதறாத அம்மு.. ஒன்னுமில்லை” என்று திடமான குரலில் சொன்னார்.
“இல்ல.. உண்மையை சொல்லுங்க”
“ஒன்னுமில்லைடா”
“அப்பா!”
“லைட்டா நெஞ்சு வலிச்ச மாதிரி இருந்தது.. இப்போ உண்மையாவே சரி ஆகிருச்சு”
“வாங்க டாக்டர் கிட்ட போகலாம்” என்றபடி அவரை அவள் எழுப்ப,
“நிஜமா இப்போ ஒன்னுமில்லைடா.. ரெண்டு வாரத்துக்கு மாத்திரை வாங்கிட்டு தான் வந்து இருக்கிறேன்.. இப்போ சாப்டுட்டு மாத்திரை போட்டுக்கிறேன்”
“வாங்க சாப்பிடலாம்” என்றபடி வேகமாக சென்று இரவு உணவிற்கு செய்து வைத்து இருந்த இட்லியையும் சௌ-சௌ கிச்சடியையும் எடுத்து வந்து உணவு மேசையில் வைத்தாள்.
இருவரும் அமைதியாக உணவை முடித்துக் கொண்டதும் மருத்துவரின் குறிப்பின்படி மாத்திரைகளை எடுத்து கொடுத்து தந்தையை விழுங்க செய்தாள்.
அவர், “அம்மு” என்று அழைக்கவும்,
அவர் கூற வருவதை புரிந்தவளின் அகமும் முகமும் இறுகிவிட, அதே இறுக்கத்துடன், “கல்யாணத்துக்கு ஓகே.. ஆனா அவன் கூட பேசிட்டு தான் நான் முடிவு செய்வேன்.. அந்த அவன் எவன்னு நீங்களே முடிவு செய்யுங்க.. ரெண்டு பேர் கிட்டலாம் என்னால் பேச முடியாது” என்றுவிட்டு சென்றாள்.
சென்ற வேகத்தில் திரும்பி வந்தவள், “ஒரு வாரம் தான் உங்களுக்கு டைம்.. அதுக்குள்ள அவனை கண்டுபிடிச்சு சொல்லுங்க.. அவன் கிட்ட பேசி எனக்கு பிடிக்கலைனா என்னை கம்பெல் செய்யக் கூடாது.. நீங்க ஏஞ்சியோ செய்துக்கணும்” என்றாள்.
“ரெண்டு வாரம் டைம்.. இந்த ரெண்டு வரணுமே பிடிக்கலைனா வேற பார்க்கணுமே!”
“ப்ச்.. சும்மா சும்மா ஒவ்வொருத்தன் கிட்டயா என்னால் பேச முடியாது”
“எனக்கு எண்ணவோ தெய்வநாயகம் அங்கிள் சொன்ன வரன் சரி வரும்னு தோணுது.. பையன் பேரு அவ்யுதகண்ணன்.. 32 வயசு.. ஆறு வயசில் பொண்ணு இருக்குது” என்று நிறுத்தி மகளின் முகத்தைப் பார்த்தார்.
சில நொடிகள் அமைதியாக இருந்தவள் நிர்மலமான முகத்துடன், “நானும் செகண்ட் ஹன்ட் தானே!” என்றாள்.
“அம்மு!” என்று அவர் குரல் கண்டிப்புடன் வர,
“அதானே உண்மை” என்றவளின் குரலிலும் முகத்திலும் அத்தனை இறுக்கம்!
பேச்சை மாற்றும் எண்ணத்துடன் அவர் அவ்யுதகண்ணனை பற்றிய விவரங்களை சொல்ல வர, அதில் பெரிதாக ஆர்வம் காட்டாதவள், “உங்களுக்கு ஓகேனா அவன் கிட்ட நேரில் தனியா பேச ஏற்பாடு செய்யுங்க.. நாளைக்கு ஈவ்னிங் 6.30 மணிக்கு வீராநகர் அமுல் ஐஸ்-கிரீம் பார்லர் வர சொல்லுங்க” என்றுவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டாள்.
(குறிப்பு: வீராநகர் எனது கற்பனையே.)
முக்கிய குறிப்பு:
இந்த கதை ‘அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!’ கதையை போல் அதிக நகைசுவையுடன் இருக்காது, ஆனால் அதை விட ஆழமான அழகான காதல் இதில் இருக்கும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..
இன்னொரு விஷயம் தோழமைகளே.. பாதி கதையாவது எழுதிவிட்டு தான் இங்கே போடணும்னு நினைத்து இருந்தேன் ஆனால் சில health issues காரணமாக அது முடியவில்லை. கதையை இப்போது தான் எழுதவே ஆரம்பித்து இருக்கிறேன், அதனால் தான் வாரம் மூன்று அப்டேட்ஸ் போடுறேன்னு சொல்றேன்.. என்னால் முடிந்தவரை இதை கடைபிடிப்பேன், ஏதேனும் health issues காரணமாக தவறினால் மன்னிக்கவும்…
உங்கள் அன்பையும் ஆதரவையும் நம்பி..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.