என்னோட கடிதத்துக்கு புதன் அன்று ராதா பதில் எழுதி கட்-ஷூவில் வைத்து இருந்தாள். ஆனால் இம்முறை சற்றே உள்ளே தள்ளி மற்றவர்களின் பார்வையில் விழாதவாறு வைத்து இருந்தாள்.
‘ஹாய்..
உங்களோட வாழ்த்துக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி 🙂
நீங்க நேரில் வராததுக்கு உங்களோட ரீசன் அக்செப்டட்.. அண்ட் தேங்க்ஸ் அ லாட் 🙂 🙂
ஓகே.. நேரில் சந்திக்கும் போதே உங்களை பத்தி தெரிஞ்சுக்கிறேன்..
அப்பா கிட்ட உங்களை பத்தி சொல்லலாம்னு சொல்லி இருந்தீங்க.. யூ ஆர் சச் அ ஜெம் ஆஃப் பெர்சன்.. இந்த காலத்தில் யாரும் இப்படி இருப்பது இல்லை. உங்களோட முதல் லெட்டரை பார்த்துட்டே அப்பா இதை சொல்லிட்டாங்க..
எஸ்.. உங்களோட முதல் லெட்டரையே நான் அப்பா கிட்ட காட்டிட்டேன்.. அப்பா கிட்ட பேசினத்துக்கு அப்புறம் உங்களை பத்தி சொல்லி, லெட்டரை காட்டினேன்.. அப்பா அனுமதியோட தான் உங்களுக்கு பதில் லெட்டர் எழுதினேன்.
உங்களோட லாஸ்ட் லெட்டரை அப்பா படிக்கலை பட் அதோட கண்டென்ட் தெரியும்.. உங்க மேல அப்பாக்கும் நல்ல அபிப்ராயம் தான்.. இப்படியே நம்ம நட்பை தொடர்வதில் அப்பாக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனா டுயுஷன் இன்னும் கொஞ்ச நாளில் முடிஞ்சுருமே! அப்போ எப்படி உங்களை நான் காண்டாக்ட் செய்ய?
இப்படிக்கு உங்கள் தோழி.’ என்று எழுதி இருந்தாள்.
அதற்கு பதிலாக..
‘ஹாய்..
நீங்க புகழ்ற அளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர்லாம் இல்லை.. இருந்தாலும் உன் அப்பாவோட பாராட்டுக்கு என் நன்றியை சொல்லிடு 🙂
உனக்கு டுயுஷன் முடிந்தால் என்ன! மெயில் மூலம் நாம டச்சில் இருக்கலாம்.. நீ ப்ரௌஸிங் சென்டர்லாம் போக வேண்டாம்.. காலேஜ் சேர்ந்ததுக்கு அப்புறம் காலேஜ்ஜில் இருந்து மெயில் அனுப்பு.. காலேஜ்ஜில் கண்டிப்பா டெய்லியே ஒன் ஹவர் இன்டர்நெட் அக்செஸ் செய்ய பெர்மிஷன் இருக்கும்..
ஆனா என்ன! கிட்ட திட்ட மூனு மாசம் நாம காண்டக்ட்டில் இல்லாம இருக்கணும்.. அதில் நீ என்னை மறக்காமல் இருந்தால் சரி..
ஆனா ஒன்னு.. எது எப்படியோ! நீ உன் படிப்பை முடிக்கும் நாள், நான் உன் முன் வந்து நிற்பேன் 🙂
இப்படிக்கு உன் நலம் விரும்பி.’ னு எழுதினேன்.
இப்படியே திங்கள், புதன், வெள்ளி என்று கடிதம் மூலம் நாங்கள் பேசிக் கொண்டோம். ராதாவிற்கு எனது பதில் அன்றே கிடைத்துவிடும் ஆனால் நான் தான் ஒரு நாள் காத்திருக்கணும், அதுவும் வெள்ளி எழுதும் கடிதத்துக்கு மூன்று நாட்கள் காத்திருந்து திங்கள் அன்று தான் பதில் கிடைக்கும்.
அந்த கல்யாண மண்டபத்தின் தெரு வாசலில் வண்ண கோலமிட்டிருக்க, இருபுறமும் வரவேற்பாய் வாழை கமுகு தோரணங்கள் இருக்க, உள் வாசலில் வலதுபுறம் ‘அவ்யுதகண்ணன் வெட்ஸ் அம்ரிதா’ என்று ஆங்கிலத்தில் பூக்களால் எழுதிய பெயர் பலகை இருக்க, இடதுபுறம் குபேர பொம்மையின் கையில் இருந்து பன்னீர் தானாக தெளித்துக் கொண்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே ஆங்காங்கே மலர் தோரணங்கள் தொங்க, திருமண மேடை வண்ண மலர்களால் நேர்த்தியாக மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்த மண்டபம் முழுவதும் மங்கள இசை முழங்க, அதற்கு போட்டியாக உற்றார் உறவினர்களின் பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிடுருந்தது.
ஆம்! இன்று அவ்யுதகண்ணன் அம்ரிதா திருமணம். சின்னவர்களின் சம்மதம் கிடைத்ததும் பெரியவர்கள் அதிவேகமாக செயலில் இறங்கினர். அடுத்த நாளே தேவகியும் குருநாதனும் திருமண நாளை குறிக்க ஜோதிடரிடம் சென்றனர். அடுத்து வந்த முதல் முகூர்த்தமே இருவரின் நட்சத்திரத்திற்கு பொருந்தி வர, அந்நாளையே தேர்ந்தெடுத்தனர்.
“பத்து நாள் தானேமா இருக்குது!” என்று குருநாதன் முதலில் தயங்க,
தேவகியோ, “அதனால் என்ன அண்ணா! மண்டபம் கிடைக்கிறது மட்டும் தான் கொஞ்சம் கஷ்டம்.. பார்க்கலாம்.. அப்படியே கிடைக்கலைனா கோவிலில் கல்யாணத்தை வச்சிட்டு ஈவ்னிங் ரிசெப்ஷனை மண்டபம் இல்ல ஏதாவது ஹோட்டல் பார்ட்டி ஹாலில் வச்சிடலாம்” என்றார்.
அதன் பிறகு குருநாதனும் தயக்கம் நீங்கி மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
‘பத்து நாளிலா?’ என்று முதலில் மலைத்த சிறியவர்கள் பிறகு சம்மதித்தனர் ஆனால் ஒரு நிபந்தனையுடன்.
அது வேறு ஒன்றுமில்லை கல்யாணத்திற்கு முன் குருநாதனுக்கு இதய சிகிச்சை முடித்து இருக்க வேண்டும் என்பது தான். இந்த விஷயத்தில் தேவகியும் இவர்களுடன் சேர்ந்துக்கொள்ள, குருநாதனால் மறுக்க முடியவில்லை. ஆனால் சிகிச்சைக்கு முன் ஒரு நாள் வீட்டில் வைத்து திருமணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
குருநாதன் விருப்பப்படி மிக சிறிய அளவில் அவரின் வீட்டிலேயே அவ்விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு தெய்வநாயகத்தின் குடும்பமும், அவரின் தம்பி குடும்பமும் மட்டும் அழைக்கப்பட்டு இருந்தனர். தெய்வநாயகத்தை குருநாதன் அழைத்து இருக்க, அவரின் தம்பி குடும்பத்தை தேவகி அழைத்து இருந்தார்.
தெய்வநாயகத்தின் மகன்களின் குடும்பம் சென்னையில் இருப்பதால், அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து இருந்தார். மீனலோஷினியின் மூத்த மகனும் அவ்யுதகண்ணனும் நண்பர்கள் என்பதால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோருடன் அவனும் அவன் மனைவியும் வந்து இருந்தனர்.
அன்று அம்ரிதா வங்கிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து இருக்க, அவ்யுதகண்ணனோ ஒன்னரை மணி நேரம் மட்டும் அனுமதி கேட்டு இருந்தான்.
அவ்யுதகண்ணன் காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டு வருவதாக கூறி கிளம்பி இருக்க, மீனலோஷினி குடும்பம் தேவகி மற்றும் ஆதினியை அழைத்து வந்தனர்.
“வாங்க.. வாங்க” என்று குருநாதன் அனைவரையும் புன்னகையுடன் வரவேற்க, பெரியவர்கள் அனைவரும் புன்னகையுடன் தலை அசைத்தபடி உள்ளே நுழைய, குட்டி தேவதை ஆதினியின் விழிகளோ பெரும் ஆவலுடன் அம்ரிதாவை தான் தேடியது.
“உட்காருங்க” என்று அனைவரையும் அமர வைத்தவர் குழந்தையின் தேடலை கவனித்து புன்னகையுடன் குழந்தை முன் மண்டியிட்டு அமர்ந்தபடி, “ஹாய் ஆது குட்டி.. அம்மாவை தேடுறீங்களா?” என்று கேட்டார்.
‘ஆமாம்’ என்பது போல் புன்னகையுடன் தலையை ஆட்டிய குழந்தை, “ஹாய் தாத்தா” என்றாள்.
“நான் யாருனு தெரியுமா?”
“ஹ்ம்ம்” என்றபடி தலையை ‘ஆம்’ என்பது போல் ஆட்டினாள்.
“யாரு?”
“அம்மாவோட டாடி.. எனக்கு குரு தாத்தா”
சற்றே நெகிழ்ச்சியுடன் பார்த்தவர், “இந்த தாத்தா கிட்ட பேச மாட்டீங்களா?” என்று கேட்டார்.
“இப்போ பேசிட்டு தானே இருக்கிறேன்”
குழந்தையின் உடனடி பதிலில் சிறு ஆச்சரியம் கலந்த மெச்சும் பார்வையுடன், “ஆனா உங்க கவனம் இங்கே இல்லையே!” என்றார்.
அவரை நேர் பார்வை பார்த்த குழந்தை, “அப்போ எப்படி உங்களுக்கு கரெக்ட்டா பதில் சொல்றேன்?” என்று எதிர்கேள்வி கேட்கவும்,
அவர் சத்தமாக சிரித்தபடி குழந்தையை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, “ஸ்மார்ட் கேர்ள்” என்றார்.
அழகாக சிரித்த குழந்தை, “தன்க்யூ தாத்தா” என்றாள்.
சட்டை பையில் இருந்து ஒரு இன்னட்டை(chocolate) எடுத்து குழந்தையிடம் நீட்டினார்.
உடனே ஆச்சியைப் பார்த்த குழந்தை அவரின் தலை அசைப்பில் பெரும் மகிழ்ச்சியுடன் இன்னட்டை வாங்கியபடி, “தன்க்யூ தாத்தா.. எனக்கு ஃபைவ் ஸ்டார் ரொம்ப பிடிக்கும்” என்றாள்.
“தாத்தா சாக்லெட் குடுத்தேன் தானே!”
“ஹ்ம்ம்”
“அப்போ கிஸ் கிடையாதா?” என்று முகத்தை குழந்தை போல் பாவமாக வைத்தபடி கேட்டார்.
ஆனால் குழந்தையோ அவரை புருவம் சுருக்கியபடி பார்த்தாள்.
அந்த பாவனையை ரசித்தாலும் அதன் அர்த்தம் புரியாமல், “என்னடா?” என்று கேட்டார்.
“உங்களுக்கு கிஸ் வேணும்னா டெரெக்ட்டா கேளுங்க.. இது தப்பு”
“ஏன் தப்பு?” என்று அவர் சிரிப்புடன் சாதாரணமாக வினவ, குழந்தையோ தீவிர முக பாவத்துடன் பதில் கூறினாள்.