“டாடி சொல்லி இருக்காங்க.. எதுனாலும் டெரெக்ட்டா தான் கேட்கணும்.. ஒன்னு வேணும்னு இ..இ..” என்று யோசித்த குழந்தை ஞாபகம் வராமல் ஆச்சியைப் பார்த்து, “அது என்ன வொர்ட் ஆச்சி?” என்று கேட்டாள்.
தேவகி சின்ன மென்னகையுடன், “இனாம்” என்றதும், “ஆஹ்! அதான்” என்றபடி குருநாதனைப் பார்த்தவள், “ஒன்னு வேணும்னு இனாமா எதும் தர கூடாது.. அப்படி யாரும் கொடுத்தா வாங்க கூடாது.. தட்’ஸ் நாட் குட்” என்றபடி இன்னட்டை அவரிடம் நீட்டி, “இது வேணாம்” என்றாள்.
குழந்தையின் செயலிலும் அவ்யுதகண்ணனின் வளர்ப்பிலும் பிரமித்து பேச்சற்று போனார் அந்த முன்னாள் இராணுவ வீரர். அவர் மட்டுமில்லை தேவகியை தவிர மற்ற அனைவருமே அந்த நிலையில் தான் இருந்தனர். அறையின் உள்ளே இருந்து இந்த சம்பாஷனையை கேட்டுக் கொண்டு இருந்த அம்ரிதாவிற்கும் அதே நிலை தான்.
ஒரு குழந்தை இன்னட்டு வேண்டாம் என்பதே அதிசயம் என்றால், இங்கே ஆதினியோ பெற்று கொண்டதை, அதுவும் மிகவும் பிடித்ததை திருப்பி கொடுத்து இருந்தாள்.
குழந்தை குருநாதனின் சட்டை பையில் இன்னட்டை வைக்கவும் தான் அவர் சுயம் பெற்றார்.
“சூப்பர் குட்டிமா.. இன்னைக்கு தாத்தா உங்க கிட்ட இருந்து பெரிய லெசன் கத்துக்கிட்டேன்.. தன்க்யூ” என்றார்.
மறுப்பாக தலை அசைத்த குழந்தை, “டாடி தான் சொல்லி தந்தாங்க” என்றாள்.
“சமத்து ஆது குட்டி” என்ற குருநாதன், “எனக்கு நீங்க தானே சொல்லி தந்தீங்க.. ஸோ நான் உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்?” என்று கேட்டார்.
“ஓ” என்ற குழந்தை, “வெல்கம்” என்றாள்.
“இப்போ இந்த சாக்லெட் வாங்கிப்பீங்களா?”
மீண்டும் மறுப்பாக தலை அசைத்த குழந்தை, “கொடுத்ததை திரும்ப வாங்க கூடாது” என்றாள்.
“அப்போ நானும் கொடுத்ததை வாங்க கூடாது தானே!” என்று கேட்டு குழந்தையின் பதிலை அறிய ஆவலுடன் நோக்கினார்.
சிறிது யோசித்த குழந்தை, “நீங்க கொடுத்த ரீசன் குட் இல்லை.. ஸோ நீங்க வாங்கலாம்” என்றாள்.
“ஸோ ஸ்மார்ட்” என்றபடி நெகிழ்ச்சியுடன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டவர், “தாத்தா சும்மா தான் அப்படி கேட்டேன்.. கிஸ் கொடுத்தாலும் கொடுக்கலைனாலும் இந்த சாக்லெட் ஆது குட்டிக்கு தான்” என்றபடி நீட்டினார்.
அப்பொழுதும் உடனே வாங்காமல் குழந்தை அவரது முகத்தையே பார்த்தாள்.
அவர் மீண்டும், “என்னடா?” என்று கேட்டார்.
“டாடி சொல்லி இருக்காங்க.. ஒரு பெர்சன் ட்ரூத் சொல்றாங்களா இல்லையானு அவங்க ஐஸ் வச்சு பைண்டு பண்ணலாம்.. அதான் உங்க ஐஸ் பார்த்தேன்”
‘இதுக்கு மேல தாங்க மாட்டேன்டா!’ என்பது போல் குழந்தையை ஒரு நொடி பார்த்தவர் பின், “கண்டு பிடிச்சீங்களா?” என்று கேட்டார்.
குழந்தை ‘இல்லை’ என்ற அர்த்தத்தில் லேசாக தலையை ஆட்டி உதட்டை பிதுக்கினாள்.
அதன் அழகை ரசித்தவர் மென்னகையுடன், “ஆச்சி வாங்கலாம்னு தானே தலை ஆட்டினாங்க?” என்று கேட்டார்.
“ஹ்ம்ம்” என்று இழுத்த குழந்தை, “மே பி.. ஆச்சிக்கு பஸ்ட் உங்க இன்டென்ஷன் தெரியாம இருக்கலாம்” என்றாள்.
தனக்கு ஈடு கொடுத்து பேசும் குழந்தையின் அறிவில் மலைத்துத் தான் போனார்.
“சரி இப்போ திரும்ப கேளுங்க” என்றதும் குழந்தை தேவகியைப் பார்த்தாள்.
அவர் பெருமிதம் கலந்த புன்னகையுடன், “வாங்கிக்கோ” என்றார்.
குழந்தையும் புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.
குருநாதனுக்கு குழந்தையுடன் வாதம் செய்வது அவ்வளவு பிடித்து இருக்க, “வேற என்னலாம் டாடி சொல்லி கொடுத்து இருக்காங்க?” என்று கேட்டார்.
“நிறைய”
“என்னலாம்”
“யாரும் வீட்டுக்கு வந்தா, வெல்கம் செய்து முதல்ல தண்ணி கொடுக்கணும்” என்ற குழந்தை தலை சரித்து அவரைப் பார்க்க,
சத்தமாக சிரித்தவர், “இன்னைக்கு செகண்ட் லெசன்” என்றபடி எழுந்து, “தாத்தா தண்ணி கொண்டு வரேன்” என்று கூறி நகரப் போக,
தெய்வநாயகத்தின் பார்வையில் அவரது மகள், “நான் எடுத்துட்டு வரேன் அங்கிள்” என்றுவிட்டு சமையல் அறைக்குச் சென்றாள்.
குருநாதன் மற்றவர்களைப் பார்த்து, “ரொம்ப சாரி.. உங்களுக்கு எதுவும் கொடுக்காம குழந்தை கூட பேசிட்டே இருந்துட்டேன்” என்று மனதார மன்னிப்பு கேட்டார்.
“சாரிலாம் எதுக்கு அண்ணா!” என்று தேவகி கூற,
மீனலோஷினியோ, “நாங்களும் ஆதினி குட்டியோட பேச்சில் ஒன்றி போயிட்டோமே!” என்று கூற,
அவரது மகனோ, “செவிக்கு உணவு இல்லாத போது தானே வயிற்றுக்கு உணவு!” என்றான் மென்னகையுடன்.
அனைவரின் பேச்சும் முழுவதுமாக புரியவில்லை என்றாலும் தன்னை புகழ்வதை உணர்ந்துக் கொண்ட குழந்தை வெட்கத்துடன் தேவகியின் மீது சாய்ந்துக் கொண்டாள்.
அதற்குள் தெய்வநாயகத்தின் மகள் வந்து அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தாள்.
ஆதினிக்கு மட்டும் தானே எடுத்து கொடுத்த குருநாதன், “அம்மாவை பார்க்கனுமா?” என்று கேட்டார்.
விழிகளில் ஆர்வமும் எதிர்பார்ப்புமாக குழந்தை ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
ஒரு அறையை சுட்டிக் காட்டியவர், “அந்த ரூமில் அம்மா இருக்காங்க” என்றார்.
இம்முறை ஆச்சியை பார்க்காமல் வேகமாக அந்த அறையை நோக்கி ஓடிய குழந்தை அறை வாயிலுக்கு சென்றதும் ஓட்டத்தை நிறுத்தி நின்றாள். அனைவரின் பார்வையும் குழந்தை மீது தான் ஆனால் அதை உணரும் நிலையில் குழந்தை இல்லை.
என்ன தான் ஏக்கமும், ஆர்வமும், எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் மனதினுள் கொட்டிக் கிடந்தாலும் சிறு தயக்கமும் இருந்தது. அந்த நொடி தந்தையைத் தான் குழந்தையின் மனம் தேடியது.
மகளின் தேடலை உணர்ந்தது போல் சரியாக அந்த நொடி அவ்யுதகண்ணன் வீட்டினுள் நுழைந்தான். எதேர்ச்சையாக திரும்பி பார்த்த குழந்தை தந்தையை கண்டதும், “டாடி” என்று கத்தியபடி ஓடினாள்.
மகளை வாரி அணைத்துக் கொண்டவன் கனிவான குரலில், “என்னடா பாப்பு?” என்றான்.
அவனது கழுத்தை சுற்றி அணைத்தபடி தோளில் முகத்தை புதைத்த குழந்தையோ ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
குருநாதன், “வாங்க மாப்பிள்ளை” என்று இன்முகத்துடன் வரவேற்றார்.
அவரைப் பார்த்து மென்னகையுடன் தலை அசைத்தவனின் ஒருங்கொளி(laser) பார்வை நொடி பொழுதில் கூடத்தில் இருந்தவர்களை பதிவு செய்திருந்தது.
அம்ரிதா கூடத்தில் இல்லாததையும், மகள் அந்த அறை வாயிலில் நின்றிருந்த கோலத்தையும் கண்டிருந்தவன் மகளின் முதுகை வருடியபடி, “அம்மா அந்த ரூமில் இருக்கிறாங்களா? டாலிக்கு அம்மாவை பார்க்கணுமா?” என்று கேட்டான்.
பதில் ஏதும் சொல்லாத குழந்தை தந்தையின் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
மகளின் முதுகை வருடியபடியே, “ஒன்னும்மில்லடா” என்றவன், “டாடியும் டாலியும் அம்மாவை போய் பார்க்கலாமா?” என்று கேட்டான்.
இன்னும் இறுக்கமாக தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டாள் குழந்தை.
கூடத்தில் இருந்தவர்களை சிறு மென்னகையுடன் சிநேக பார்வை பார்த்தவன், மகளின் முதுகை வருடியபடியே அம்ரிதா இருக்கும் அறையை நோக்கி நடந்தான்.
கவித்துவமான தந்தை மகளின் சம்பாஷனையும் பிணைப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதிலும், குழந்தை ஏதும் பேசாத போதும், மகளின் ‘டாடி’ என்ற ஒற்றை அழைப்பிலேயே மகளின் மனதை படித்து செயல்பட்ட அவ்யுதகண்ணனின் செயலை பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
குருநாதன் நண்பரிடம், “அன்னைக்கு நீ சொல்லும் போது கூட நான் பெருசா எடுத்துக்கலை.. ஆனா இன்னைக்கு! சான்சே இல்லைடா” என்று சிலாகித்தார். அவரது கூற்று நண்பரிடம் என்றாலும் பார்வையோ அந்த தந்தை மகள் மீது தான்.
அவரது பார்வை மட்டுமில்லை அனைவரின் பார்வையும் அவர்கள் மீது தான் இருந்தது.
“அவங்க பேசிட்டு வரட்டும்.. அதுக்குள்ள நாம முகூர்த்த புடவை எடுக்கிறதைப் பற்றி பேசி முடிச்சிடுவோம்” என்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய தேவகி, அதைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
அங்கே அம்ரிதாவோ எகிறி குதிப்பது போல் வேகமாக துடித்துக் கொண்டு இருந்த இதயத்துடன் ஆதினியின் வரவை நோக்கி அமர்ந்து இருந்தாள்.
குருநாதனின் கூற்றை அடுத்து குழந்தை ஓடி வரும் சத்தத்தை கேட்டு மிகவும் ஆர்வமாகவும் எதிர்பார்ப்புடனும் அமர்ந்து இருந்த அம்ரிதாவிற்கு, வாசல் வரை வந்த குழந்தை தன்னை பார்க்காமல் தந்தையிடம் ஓடியதிலும், தந்தையின் கேள்விகளுக்கு அமைதியையே பதிலாக தந்ததிலும் எதிர்பார்ப்பை மீறி பதற்றமே மேலோங்கியது. ‘எங்கே குழந்தை தன்னை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து விடுவாளோ!’ என்ற சிந்தனை தந்த பதற்றமே அது.
வாசலில் நின்ற அவ்யுதகண்ணன், “அம்ரிதா” என்று அழைத்தான்.
தொண்டையை செருமிக் கொண்டவள், “உள்ள வாங்க” என்றாள்.
உள்ளே சென்றவன் அம்ரிதாவைப் பார்த்து புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்தவளின் முகத்தில் இருந்தே அவளது பதற்றத்தை புரிந்து கொண்டவன் மனதினுள், ‘சரியா போச்சு!’ என்று நினைத்துக் கொண்டான்.
பின் மகளின் காதில் மெல்லிய குரலில், “டாலி அம்மாவை பாருங்க” என்றான்.
மறுப்பாக தலை அசைத்த குழந்தையோ இன்னும் இன்னும் இறுக்கமாக தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
குழந்தையின் மறுப்பில் அம்ரிதாவிற்கு கண்கள் கலங்குவது போல் இருக்க,
“அம்ரி” என்று அழைத்த அவ்யுதகண்ணன் அவள் தன்னை நோக்கியதும் மறுப்பாக தலை அசைத்தான்.
‘முடியலையே!’ என்பது போல் பார்த்தவளின் கண்கள் அவளையும் மீறி கலங்கியது.