என்னோட திட்டங்கள் எதுவுமே ராதாவுக்கு தெரியாது. நான் என்ன படிச்சு இருக்கிறேன்னு கூட அவளுக்கு தெரியாது. அவள் படிப்பை முடிக்கும் நாளில் ஒரு எஸ்.ஐ-ஆ அவள் முன் சென்று நிற்கனும்னு நினைத்தேன் ஆனா……
முதல் முதலில் நேரில் என்னை பற்றி சொல்றேன்னு சொன்னதுக்கு அப்புறம் என்னை பற்றி அவள் கேட்டதே இல்லை. இந்த நம்பிக்கை ஏன் கடைசி வரை இல்லாம போச்சுனு நான் தவிக்காத நாள் இல்லை. என்ன பிரச்சனை வந்து இருந்தாலும், குறைந்த பட்சம் அவளோட கஷ்டத்தையாவது என் கிட்ட பகிர்ந்து இருக்கலாமே! தோள் கொடுத்து தாங்கி இருப்பேனே!
ஏன்டி என்னை விட்டு போன? ஊரை விட்டு போகும் போது, ஒரு நிமிஷம் கூட என் நினைவு உனக்கு வரலையா? நண்பனா கூட என்னை தேடலையா! அஞ்சு வருஷ தொடர்பை அம்போன்னு விட்டுட்டு போயிட்டியேடி! (இந்த இடத்தில் அவன் கோபப்பட்டு இருக்கணும்! பேனாவை வைத்து புள்ளியாக அழுத்திய தடம் இருந்தது. சிறு இடைவெளி விட்டு தொடர்ந்து எழுதி இருந்தான்.)
ஹ்ம்ம்.. அவளோட சூழ்நிலை என்னவோ! மனநிலை எப்படி இருந்ததோ! என் மேல் தான் தவறு. அவள் பி.எஸ்.ஸி முடிச்சதும் என்னை நேரில் வர சொன்னதை கேட்டு இருந்தா அவளை தொலைத்து இருக்க மாட்டேனோ என்னவோ!
தினமும் இல்லை என்றாலும் வாரத்துக்கு இரண்டு மெயில்னு ராதாவுடன் தொடர்பில் இருந்து கொண்டே என் திட்டபடி மூன்று வருடங்களில் கடன்களை எல்லாம் கட்டி முடிந்து, அம்மாவையும் சமாளித்து எஸ்.ஐ எக்ஸாம் எழுதி முடித்து ட்ரெயினிங் கிளம்பினேன்.
முதல் ரெண்டு வருஷங்கள் வேலை பார்த்துட்டே எக்ஸாம்க்கு பிரிப்பர் செஞ்சேன். அடுத்த வருஷம் எஸ்.ஐ எக்ஸாம் முடித்து, பிஸிகல் டெஸ்ட், மெடிக்கல் டெஸ்ட், இண்டர்வியூ, சர்டிபிகேட் வெரிபிகேஷன்னு எல்லாத்தையும் முடிச்சு, ஒன் இயர் போலீஸ் ட்ரெயினிங்கு போய் சேர்ந்தேன். அப்போ ராதா எம்.எஸ்.ஸி செகண்ட் இயர் படிச்சிட்டு இருந்தாள்.
ட்ரெயினிங் பிரியடில் ஃவெஸ்டிவெல் டைம் அண்ட் சண்டே(Sunday) மட்டும் தான் வீட்டுக்கு வர முடியும்.. அதுவும் சில சண்டே வர முடியாது. அம்மாவையும் ராதாவையும் பார்க்காத தனிமையான அந்த நாட்கள் கஷ்டமா இருந்தாலும், ராதாவோட வாழ போற வாழ்க்கையை மனசில் நினைச்சு என்னை நானே பூஸ்ட் செய்து ட்ரெனிங்கில் கஷ்டப்பட்டு நல்லாவே பெர்ஃபார்ம் செய்தேன். நல்ல பெயரும் கிடைத்தது.
எல்லாமே நல்லா தான் போய்கிட்டு இருந்தது. ட்ரெனிங் முடிய மூன்று மாதங்கள் இருந்த நேரத்தில் தான் பிரச்சனை ஆரம்பித்தது. என்னோட மெயில்களுக்கு ராதா கிட்ட இருந்து எந்த பதிலும் வரலை. அந்த டைம், என்னாலும் தொடர்ந்து மூன்று வாரங்கள் வீட்டுக்கு போக முடியலை.
முதல் வாரம் கூட அவளுக்கு உடம்பு சரி இல்லையோனு நினைத்து அவளோட உடம்பு சீக்கிரம் சரி ஆகணும்னு பிரார்த்தனை செஞ்சேன்.. ஆனா மூன்று வாரங்கள் ஆகியும் அவளிடம் இருந்து மெயிலே வரலைனதும் குழம்பி தவித்தேன்.
என்ன நடக்குது? என்னாச்சு? ஏன் ராதா கிட்ட இருந்து மெயில் வரலைனு என்னால் தெரிஞ்சுக்கவே முடியலை. யாரிடமும் உதவி கூட கேட்க முடியாமல், அவளை பற்றி தெரியாமல் ரொம்ப தவிப்பாவும், ரொம்ப ரொம்ப கஷ்டமாவும் இருந்துது. அம்மா கூட போனில் ஏன் என்னோட வாய்ஸ் டல்லா இருக்குதுனு கேட்டாங்க. ஏதோ சொல்லி சமாளித்தேன்.
என் நேரம்! அப்போ தினு யு.எஸ்-ஸில் இருந்தான். இல்லைனா அவனை நேரில் போய் பார்க்க சொல்லி இருப்பேன்.
கிட்ட திட்ட ராதாவிடம் இருந்து மெயில் வந்து ஒரு மாதம் கடந்து இருந்த நிலையில் தான் நான் வீட்டுக்கு போனேன். வீட்டுக்கு போன ஒரு மணி நேரத்திலேயே அம்மாவை சமாளித்து வெளியே கிளம்பி ராதா வீட்டுக்கு போய் நின்ற என்னை பூட்டிய வீடு தான் வரவேற்றது.
அக்கம் பக்கத்தில் விசாரித்தேன். ராதாவும் மீசையும் வீட்டை காலி செஞ்சிட்டு போய் இருந்தாங்க. எங்கே போனாங்க? எந்த ஊருக்கு போனாங்க?னு யாருக்குமே தெரியலை. ராதா பற்றி எதுவும் என்னால் தெரிந்துக்க முடியலை.
உடைந்து போய் வீட்டுக்கு வந்து அம்மா மடியில் படுத்துட்டேன். என்னையும் மீறி கண்ணீர் வழிய, அம்மா பதறி போய், ‘என்னாச்சு?’ னு கேட்கவும் தான் நான் அழுறதையே உணர்ந்தேன்.
அம்மா வயிற்றை கட்டிக் கொண்டு அப்படி அழுதேன். முதலில் பதறிய அம்மா அப்புறம் என் முதுகையும் தலையையும் வருடி கொடுத்தபடி நான் அழுகைய நிறுத்த காத்திருந்தாங்க.
ஒருவாறு என்னை நானே தேற்றி.. தேற்ற முடியவே இல்லை தான் ஆனா அம்மாக்காக கஷ்டப்பட்டு அழுகையை நிறுத்தினேன்.
அம்மா காரணம் கேட்டப்ப க்ளோஸ் பிரெண்ட் இறந்துட்டதா சொன்னேன். அவங்களுக்கு தெரியாத க்ளோஸ் பிரெண்ட் யாருனு கேட்டப்ப, ஃபேஸ்புக்-கில் கிடைத்த ஆன்லைன் பிரெண்ட்னு சொல்லி சமாளித்தேன்.
ட்ரெயினிங்கில் இருந்த கடைசி ரெண்டு மாசம் நரகம் தான்! அம்மா மட்டும் இல்லைனா என்ன ஆகி இருப்பேனோ!
என்ன தான் நான் மொத்தமா உடைந்து இருந்தாலும் தற்கொலை எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. தனி மனிஷியா எவ்வளவோ இன்னல்களை சமாளித்து என்னை கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மாவை எப்படி தனியா விட்டுட்டு போவேன்!
ஆனாலும் துவண்டு, மொத்தமா உடைந்து, கிட்ட திட்ட ஜடமா மாற தொடங்கி இருந்த எனக்கு அம்மா தான் மறுபிறப்பு கொடுத்தாங்க.
பிரெண்ட் இல்லை காதலினு அம்மா நிச்சயம் யூகித்து இருப்பாங்க. என்னிடம் நேரிடையா கேட்டுக்கலை, ஆனா எனக்கு உறுதுணையா இருந்தாங்க.. டெய்லி போனில் பேசும் போது பாசிடிவ்வா, ரொம்பவே மோட்டிவேடிவ்வா பேசுவாங்க.. எதையாவது பேசி என்னை சிரிக்க வைக்காம போனை வைக்க மாட்டாங்க.
எப்படியோ ட்ரெனிங் முடித்து எஸ்.ஐ-ஆ சேர்ந்தேன். கிடைக்கும் நேரத்தில் எல்லாம் ஊர் ஊரா போய் ராதாவை தேடினேன். தோல்வி தான் கிடைத்தது.
என் தேடல் முடிவிற்கு வந்த நாளும் வந்தது. எதிர்பாராத நேரத்தில் ராதாவை நான் பார்த்தப்ப அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமானவளா இருந்தாள். என்னை நான் அவளிடம் வெளிபடுத்தி கொள்ளவே இல்லை. அவள் நல்லா இருக்கட்டும் என்று மனதார நினைத்தபடி விலகிய நான் அவளோட நினைவுகளோட வாழ முடிவெடுத்தேன்.
‘என்
காதல் அலைகள்
உனை
தீண்டாது திரும்பியதேனோ!!
விதியின்
சதிராட்டம் தன்னில்
பொம்மையாகி
உனை தொலைத்தேனே!
ஊரை
காக்கும் காவலன்
காதல்
காக்க தவறினேனே!
தோழனாய்
கூட எனை
தேடாது
மறைந்தது ஏனோ!!
நீயின்றி
வாழும் வழி
சொல்லாது
ஏனடி சென்றாய்!
நெஞ்சுக்குழி
தவிப்பு அடங்க
மறுக்குதே!
வந்து விடேன்!
எதை
கொண்டு மீட்பேன்!
எப்படி
எனை மீட்பேன்!
ஆனால்…..
நீயில்லா
உலகிலும் வாழ்வேனடி..
உன்
நினைவே சுவாசக்காற்றாய்!’ என்ற கவிதையோடு கண்ணனின் நினைவு பெட்டகம் முடிவுற்று இருந்தது.
https://www.youtube.com/watch?v=J2FD7gEejbo
வெயிட்டீஸ்.. ராதா பற்றிய கேள்விகளையோ யூகங்களையோ கமெண்ட் செய்ய ஓடிடாதீங்க.. அடுத்து இரண்டு parts இருக்குது.. அதில் தான் நம்ம அவ்யுத்~அம்ரி கல்யாணம் வருது.. மொத்தமா படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க…….