அம்பிகா கோபத்துடன், “பார்த்து பேசு அவ்யுத்! அவர் உன்னோட பெரியப்பா” என்றார்.
அவனோ உதட்டோர நக்கல் சிரிப்புடன், “பெரிரி..யப்பாபா! ரொம்ப தான் பாசம்! அதான் அப்பா இறந்த வீட்டில், துண்டை காணும் துணியை காணும்னு சுடுகாட்டில் இருந்து சொல்லாம கொள்ளாம ஓடினார்” என்றான்.
“அவ்யுத்!”
“சும்மா சவுண்ட் விடாதீங்க” என்றவன் அந்த விஷகிருமையைப் பார்த்து, “இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் யாரை கல்யாணம் செய்தா உங்களுக்கு என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் குத்துது குடையுதுனு உங்க கிட்ட வந்து நான் நிற்க போறது இல்லை.. ஸோ” என்று நிறுத்தியவன் வாயை மூடி கையை வெளியே நீட்டி கிளம்புமாறு கூறினான்.
அவரோ ஆங்காரத்துடன், “கெட்டுப்போனவளுக்காக அம்மாவும் பையனும் ரொம்பத் தான் சிலுப்பிக்கிறீங்க!” என்று சத்தமாக அனைவரும் கேட்கும்படி கூறினார்.
“ஏய்!” என்று விரலை நீட்டியபடி மண்டபமே அதிர கத்தியவன் நொடி பொழுதில் சுதாரித்து மகளைப் பார்த்தான், பின் அம்ரிதாவைப் பார்த்தான்.
இருவரின் கண்களும் கலங்கி இருந்தது. மகளின் கண்கள் பயத்தில் கலங்கி இருக்க, அம்ரிதாவின் கண்களோ கோபத்திலும், வலியிலும், வருத்தத்திலும் கலங்கி இருந்தது.
குருநாதன் மனதளவில் முற்றிலும் உடைந்து தளர்ந்தவராக தள்ளாட, சட்டென்று சென்று அவரை பிடித்துக் கொண்டான். பிரச்சனை ஆரம்பித்ததும் தெய்வநாயகம் மேடைக்கு வந்து இருக்க, அவரிடம் குருநாதனை ஒப்படைத்தவன் அன்னையைப் பார்த்தான்.
அவர் கண்களை மூடி திறந்து தைரியம் கூறினார். தேவகியின் மனதினுள் ‘இந்தம்மாக்கு எப்படி அம்ரு பத்தி தெரியும்!’ என்ற யோசனை ஓடிக் கொண்டு இருந்தது.
தனது நண்பன் தினேஷின் மனைவியைப் பார்த்த அவ்யுதகண்ணன், “சிஸ்டர் டாலிய என்னோட ரூமுக்கு கூட்டிட்டு போங்களேன் ப்ளீஸ்” என்றான்.
ஆதினி மறுப்பாக தலை அசைத்தபடி ஓடி வந்து அவனது காலை கட்டிக் கொண்டாள்.
மகளின் தோள்களை பற்றியபடி மண்டியிட்டு அமர்ந்தவன், “இவங்க எல்லாம் பேட்(bad) பீப்பிள் பாப்பு” என்று ஆரம்பிக்க,
அந்த பெண்மணி அடங்காமல், “ஏய்..” என்று ஆரம்பிக்க,
சாந்தசொருபியாக இருந்தவன் சட்டென்று அவர் பக்கம் திரும்பிய நொடி ருத்ரமூர்த்தியாக மாறி இருந்தான்.
அவனது ரௌதிரத்திலேயே அந்த பெண்மணி கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார்.
மீண்டும் முகத்தை சாந்தமாக வைத்தபடி மகளிடம் திரும்பியவன், “பேட் பீப்பிள் அம்மாவை ஹர்ட் செய்ற மாதிரி தப்பா பேசுறாங்கடா பாப்பு.. டாடி என்ன செய்யட்டும்?” என்று கேட்டான்.
“லத்தி வச்சி அடிச்சிடுங்க டாடி” என்ற பதிலில் லேசாக சிரித்தவன்,
“ஒன் டைம் மன்னிக்கலாம்.. நெக்ஸ்ட் டைமும் இப்படி பேசினா, லத்தி வேணாம், கன் வச்சு சூட் பண்ணிடலாம்” என்று முடித்தபோது ஒரு நொடி அந்த பெண்மணியை பார்த்தவனின் விழிகள் அவரை சுட்டெரித்தது.
தந்தையின் விளக்கத்திலும் சிரிப்பிலும் இயல்பிற்கு திரும்பிய குழந்தை புன்னகையுடன் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
“இப்போ பிக் பீப்பிள் டாக் பேசப் போறோம்.. ஸோ..” என்று அவன் ஆரம்பிக்க,
“டாலி வினு ஆன்ட்டி கூட உங்க ரூமுக்கு போறேன்” என்று முடித்தாள்.
“சமத்து” என்றபடி மகளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன் நண்பனின் மனைவியைப் பார்த்தான்.
தினேஷின் மனைவி சிறு தலை அசைப்புடன் ஆதினி மற்றும் தனது மகனுடன் மணமகன் அறைக்குச் சென்றாள். அவர்கள் அறை உள்ளே சென்று கதவை மூடும் வரை பொறுமையாக இருந்தவன் அடுத்த நொடியே நெற்றிக்கண் திறந்த ருத்ரமூர்த்தியாக எழுந்து நின்றான்.
அம்பிகாவும் அந்த விஷகிருமியும் பயத்துடன் இரண்டடி பின்னால் நகர்ந்தனர்.
அந்த பெண்மணியை பார்த்தவன், “உங்க தங்கச்சி பொண்ணு கல்யாணம் ஆன ஆறு மாசத்திலேயே பிரிந்து, டைவர்ஸும் வாங்கிட்டு இப்போ செகண்ட் மேரேஜ் செய்து இருக்கா தானே!” என்று கேட்டான்.
அவரோ அப்பொழுதும் சிறு நடுக்கத்துடன், “அதுவும் இதுவும் ஒன்னா! எங்க வீட்டு பொண்ணு ஒன்னும் எவன் கிட்டயோ கெட்டு போகலை” என்றார்.
அவரை அடிக்க துடித்த கையை கஷ்டப்பட்டு அடக்கியவன் சபையோரைப் பார்த்து, “நீங்கலாம் திருந்தவே மாட்டீங்களா? எவனோ ஒரு பொறுக்கி நாய் செய்த தப்புக்கு இவ ஏன் சிலுவை சுமக்கனும்? இதை ஏன் சாதாரண செகண்ட் மேரேஜ் மாதிரி பார்க்க மாட்டிக்கிறீங்க?
எனக்கு இது செகண்ட் மேரேஜ் தான்.. நான் ஒருத்தி கூட விரும்பி வாழ்ந்தேன்.. இவ விஷயத்தில் அது விருப்பம் இல்லாம நடந்துருச்சு.. அவ்ளோ தான்..
இன்னும் சொல்லப்போனா, எனக்கு இவ அதிகபடி தான்.. ஏன்னா நான் மனசார ஒருத்தி கூட வாழ்ந்தேன்.. ஸோ நான் தான் இவளுக்கு செகண்ட் ஹன்ட்.. ஆனா இவளோட மனசு பரிசுத்தமானது.. அதில் நுழையும் முதல் ஆண் நான் தான்.. இவளோட விருப்பம் இன்றி தான் அந்த சம்பவம் நடந்தது.. ஸோ என்னை பொறுத்தவரை இவள் உடல் அளவிலும் களங்கப்படலை.. இவ பவித்திரமானவள் தான்..
அக்சுவளி, இவளைப் பொறுத்தவரை மனசளவிலும் உடலளவிலும் நான் தான் மாசுபட்டவன்.. அப்போ இவ எனக்கு அதிகம் தானே!” என்றான்.
கைகளை தட்டிய தினேஷ், “ரொம்ப சரியா சொன்ன மச்சி.. கண்டிப்பா சிஸ்டர் பவித்திரமானவங்க தான்” என்றான்.
கூட்டத்தில் இருந்த சில நல்ல உள்ளங்களும் இவனுக்கு ஆதரவு தர, ஒருசிலரோ,
“கல்யாணம்னா கலகம் செய்யனே சிலர் வரத் தான் செய்வாங்க.. அதை எல்லாம் கண்டுக்க கூடாது”
“அதானே! கண்டவங்க பேச்சை விட்டு தள்ளுப்பா”
“தர்மர் நகர்வலம் போயிட்டு வந்து நாட்டில் யாருமே கெட்டவங்க இல்லைனாராம்.. அதே துரியோதனன் போயிட்டு வந்து நாட்டில் யாருமே நல்லவங்க இல்லைனானாம்.. சிலர் துரியோதனன் மாதிரி.. அவங்க மனசெல்லாம் கசடும் சாக்கடையுமா தான் இருக்கும்.. அவங்க கண்ணோட்டமும் அவங்க மனசை போல தான் கேவலமா இருக்கும்.. அவங்களை எல்லாம் திருத்தவே முடியாது”
“நல்ல நேரத்தில் சந்தோஷமா தாலியை கட்டி உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க.. சேமமா இருப்பீங்க” என்றனர்.
அவ்யுதகண்ணன் பெரிய தந்தையை நோக்கி, “உங்க மனைவியையும் அவங்களோட மரியாதைக்குரிய அண்ணியையும் கூட்டிட்டு கிளம்பிடுங்க” என்றான்.
அவர் வருந்திய குரலில், “சாரி அவ்யுத்” என்று கூற, அவனோ சிறு தலை அசைப்பை கூட அவருக்கு பதிலாக தரவில்லை.
அம்பிகா, “நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க! அப்பவும் மதிக்கிறானா! மதியாதோர் வாசல் மிதிக்க கூடாது.. வாங்க” என்றபடி கணவரின் கையை இழுத்தபடி கீழே இறங்கினார்.
செல்லும் வழியில் அம்பிகா, “நீங்களும் வாங்கடா” என்று மகன்களை அழைக்க, அவரது பெரிய மகன் குடும்பத்துடன் கிளம்பிவிட்டான். ஆனால் இரண்டாவது மகனோ, “அண்ணா கல்யாணத்தை பார்த்துட்டு வரோம்” என்றுவிட்டான்.
அம்பிகா இரண்டாவது மகனையும் மருமகளையும் முறைத்துவிட்டு மற்றவர்களுடன் கிளம்பினார்.
அதன் பிறகு சலசலப்புகள் அடங்கிவிட, திருமண வைபோகம் இனிதே தொடர்ந்தது.
குருநாதன் அவனது கைகளை பற்றியபடி கண்ணீருடன் பேச்சு வராமல் நிற்க,
அவரது கையை தட்டி கொடுத்தவன், “அதுங்க எல்லாம் விஷ ஜந்துக்கள் மாமா.. அதுங்க பேசியதை காதில் ஏத்திக்கவே கூடாது.. சந்தோஷமா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க.. நாங்க ரொம்பவே சந்தோஷமா வாழ்வோம்” என்றான்.
“விட்டு தள்ளுங்க அண்ணா.. அந்த கழிசடைகள் பேசியதை நினைச்சு நீங்க ஏன் உங்க உடம்பை கெடுத்துக்கிறீங்க!” என்று அன்புடன் மிரட்டிய தேவகி, “அம்ருவே திடமா இருக்கா.. நீங்க என்ன கண்ணை கசக்கிட்டு! முதல்ல கண்ணை துடைங்க” என்று அதட்டி கண்ணீரை துடைக்க வைத்தார்.
“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப உசந்துட்டீங்க.. ரொம்ப கிரேட்..” என்ற குருநாதனின் பேச்சை இடையிட்டவன்,
“கிரேட்டும் இல்ல வெயிட்டும் இல்ல.. பெரிய மனசுடன் எனக்கு வாழ்க்கை கொடுக்க சம்மதித்த அம்ரிய நீங்க வயோலின் வாசிச்சே ஓட வச்சிடுவீங்க போல!” என்று கிண்டலாக பேசி இறுக்கத்தை தளர்த்த, அங்கே லேசான சிரிப்பலை எழுந்தது.
அதன் பிறகு, மகளை அழைத்து வந்து தனது மடியில் அமர்த்தியபடி அம்ரிதா அருகே அமர்ந்தவன் பிறர் அறியாமல் அவளது கையை ஆறுதலாக பற்ற, அவளோ அவனது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அந்த பற்றுதலில் ஆசுவாசம் இருந்தது, நிம்மதி இருந்தது, சிறு இன்பம் இருந்தது, கூடவே நன்றியும் இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அய்யர், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்று குரல் கொடுக்க, மங்கள இசை முழங்கியது.
எந்த திருமணத்திலும் இல்லாத வகையில் மகளை தாலியை எடுத்து தர சொன்னவன் விரிந்த புன்னகையுடன், “ஓய் மிர்ச்சி மிளகா!” என்று அழைத்து அம்ரிதாவை தன்னை நோக்க செய்து, “வெல்கம் டு அவர் ஸ்வீட் வெர்ல்ட் மிமி” என்று கூறி கண்சிமிட்டியபடி அவள் கழுத்தில் மங்கள நாணை அணிவித்து மூன்று முடிச்சுப் போட, அவளும் அதை நிறைந்த மனதுடன் புன்னகையுடனே பெற்றுக் கொண்டாள்.