அம்ரிதா தேவகியிடம், “ஆனா உங்க கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை அத்தை” என்றாள்.
“எதை?”
“ஆர்த்தி எடுக்கிறதை பத்தி சொல்றேன்”
மென்னகையுடன், “அறிவுக்கு அது மூட நம்பிக்கைனு புரிந்தாலும் மனசுக்குள் ஏதோ ஒரு சின்ன தயக்கம்.. ரெண்டு பேருமே கஷ்டங்களை கடந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க போறீங்க.. அதான், சின்ன சஞ்சலத்துடன் ஆரத்தி எடுக்க வேணாமேனு நினைத்தேன்.. பட் இப்ப ஓகே தான்.. எந்த தயக்கமும் இல்லாம மன நிறைவுடன் தான் ஆரத்தி எடுத்தேன்” என்றவர் கிண்டலான குரலில், “அதான் வீராதி வீரன்! சூராதி சூரனான உன் வீட்டுக்காரன் சட்டுன்னு மாத்திட்டானே!” என்றார்.
அவளும் கிண்டலான மென்கையுடன் அவ்யுதகண்ணனை ஓரப்பார்வை பார்த்தபடி, “அந்த கல் மனசை விட்டுட்டீங்களே!” என்றாள்.
சத்தமாக சிரித்த தேவகி குருநாதனைப் பார்த்து, “அண்ணா! எனக்கு டெப்பாசிட்டே கிடைக்காதுனு சொன்னீங்களே! பாருங்க அம்ரு என் பக்கம் தான்” என்றவர் அம்ரிதாவைப் பார்த்து, “ஐ காட்(caught) யுவர் பாயிண்ட்! குட்டிமா ஆட்டத்தில் இருந்தா மட்டும் நீ இந்த தடியன் டீம்.. இல்லனா என் டீம்! சரியா?” என்று கேட்டார்.
அவள் இரு புருவங்களையும் உயர்த்தி, உதட்டோர கீற்றுடன் இரண்டு கையின் ஆள்காட்டி மற்றும் பெருவிரலையும் ‘ட’ வடிவில் அவரை நோக்கி வைத்தபடி, “எஸ்! யூ காட்(got) இட்!” என்றாள்.
அவனோ தனது இடது முழங்கையில் லேசாக அடித்து, இடது கையை வாய் அருகே கொண்டு சென்று ஊதிவிட்டு குருநாதனிடம், “கொசு தொல்லை கொஞ்சம் அதிகமா இருக்குதுல மாமா!” என்று கூற, அவர் வாய்விட்டு சிரித்தார்.
அம்ரிதா சிரிக்கும் தந்தையை முறைக்க,
தேவகியோ அலட்சியப் பார்வை பார்த்தபடி, “கொசு சின்னதா இருந்தாலும் விளைவுகள் பெருசா இருக்கும் மகனே! சிங்கத்தை கூட வலை போட்டு பிடிப்பாங்க, ஆனா கொசு கிட்ட இருந்து தப்பிக்க மட்டும் தான் மனுஷன் தானே வலைக்குள்ள போய்கிறான்” என்றார்.
“கொசு கூட்டமா வரும் ஆனா சிங்கம் சிங்கிளா தான் வரும்.. அண்ட் சிங்கத்துக்கு கூட்டம் தானா சேரும்” என்று முடித்த போது அவனது பார்வை மனையாளின் மீது படிந்தது.
“போதும்! போதும்! உங்க கொசு ஆராய்ச்சியை நிறுத்திட்டு போய் படுங்க” என்று மீனலோஷினி கூறவும் அன்னை மற்றும் மகனின் சொற்போர் முடிவிற்கு வந்தது.
தேவகி, “பால் குடிக்கிறீங்களா அண்ணா?” என்று கேட்க,
அவர், “வேணாமா” என்று மறுத்தார். அடுத்து தோழியையும் உறவு பெண்மணியையும் கேட்க, அவர்களும் மறுத்துவிட்டனர்.
தன்னை கேட்கும் முன் கையெடுத்து கும்பிட்டபடி, “என்னை விட்டுடுங்க.. நான் படுக்கப் போறேன்” என்ற அவ்யுதகண்ணன் நகரப் போக,
“தேவி உன்னை கேட்கவே இல்லையே!” என்ற மீனலோஷினியோ கிண்டல் குரலில், “அப்போ சொம்புல பீர் கொடுத்து விடவா?” என்று கேட்டார்.
“அனுபவம் பேசுது!” என்று அதே கிண்டல் குரலில் அவரைப் பார்த்து கூறியவன் பின் அன்னையிடம், “கத்துக்கமா” என்றான்.
“அடடா! இப்போ கடையை மூடி இருப்பானே! என்ன மீனு செய்றது!” என்று தேவகி போலியான வருத்த குரலில் வினவ,
“ஹான்! ஆன்ட்டி வீட்டில் ஸ்டாக் வச்சு இருப்பாங்க.. அஜுவை எடுத்துட்டு வர சொல்லுங்க” என்றான்.
பின், ‘அடப்பாவிகளா!’ என்பது போல் நின்றிருந்த மற்ற மூவரையும் பார்த்தவன், முதலில் உறவு பெண்மணியைப் பார்த்து, “ட்ரைலருக்கே அசந்தா எப்படி அத்தை!” என்றவன்,
அடுத்து மனையாளைப் பார்த்து, “என்ன! பீரில் உனக்கு பங்கு தருவேனா மாட்டேனானு யோசிக்கிறியா?” என்று கேட்டு கண்சிமிட்டியவன்,
இறுதியாக குருநாதனைப் பார்த்து, “என்ன மாமா!” என்று பருத்திவீரன் கார்த்தி போல் அழைத்து, “இதுங்களாம் குடும்ப பொண்ணுங்களானு தானே யோசிக்கிறீங்க!” என்றான்.
அந்த பெண்மணி இன்னமும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் நிற்க, அம்ரிதா அவனை முறைத்தாள்.
“பார்த்தியா! சைக்கிள் கேப்பில் நம்மளை தாக்குறான்!” என்று மீனலோஷினி தோழியின் காதில் கூற, அவரோ, “அவன் இப்போ ஏதாவது பேசினான்! எனக்கு கேட்கலையே!” என்றார்.
அதே நேரத்தில் குருநாதனோ, “நான் பாட்டுக்கு சிவனேனு தானே இருக்கிறேன்!” என்றார்.
“அது எப்புடி! விட்டுடுவோமா!” என்றான்.
பின், “சரி.. நான் படுக்கப் போறேன்” என்றுவிட்டு அறையை நோக்கி நடந்தவன், அறை வாயிலில் நின்றபடி, “அம்ரி பால் குடிப்பானா ஒரு டம்பளர் பால் கொடுத்து விடுங்க இல்லைனா அரை டம்பளர் போதும்” என்றான்.
அன்னையின் அப்பாவியான பார்வையில், “இப்போ எதுக்கு இந்த லுக்கு!” என்றான்.
தேவகி அதே அப்பாவியான பார்வையுடன், “பீர் தான் இல்லைனு ஆகிடுச்சு.. அட்லீஸ்ட் மோரு கொடுத்து விடலாம்னு” என்று இழுத்து நிறுத்த,
“சேர்க்கை சரி இல்லை.. சேட்டை கூடிப் போச்சு மீ!” என்றுவிட்டு அறையினுள் செல்ல திரும்பினான்.
“நீ தானே மகனே கத்துக்கச் சொன்ன!” என்ற அன்னையின் கூற்றை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டான்.
தேவகி அடுத்து அம்ரிதாவைப் பார்த்து, “மோரா பாலா?” என்று கேட்டார்.
வாய்விட்டு சிரித்தபடி, “நீங்க சான்சே இல்ல அத்தை!” என்றவள், “உங்க ஸ்பீடை பிக்-அப் செய்றவரை என்னை விட்டுடுங்க” என்றாள்.
“இன்னைக்கு ஒரு நாள் விடுறேன்”
“ஹ்ம்ம்” என்றபடி அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவள், “தேங்க்ஸ் அத்தமா” என்றாள்.
தேவகி புருவம் உயர்த்தி பார்க்க,
அவள் மென்னகையுடன், “உங்க பையன் கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னார்.. ‘உன்னை நீயே ஸ்ட்ரெஸ் ஆகிக்காம என் கூடயும், நம்ம பொண்ணு கூடயும், அத்தை என்ற உறவில் கிடைக்கும் அம்மாவுடனும் வாழப் போகும் அழகான அன்பான வாழ்க்கையைப் பற்றி மட்டும் யோசி’னு சொன்னார்.. எஸ்.. நீங்க எனக்கு இன்னொரு அம்மா தான்! அதான் இந்த அத்தமா” என்று நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
அவளது கூற்றில் தானும் நெகிழ்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அய்ய! உனக்கு நிறைய ட்ரெயினிங் கொடுக்கணும் போலவே! ஜாலியான ஸீனை இப்படி மஞ்சப்பை ஸீனா மாத்திட்டியே!” என்றார்.
சட்டென்று சிர்த்தவள், “அது என்ன மஞ்சப்பை?” என்று கேட்டாள்.
“ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படம் பார்த்தது இல்லை! செகண்ட் ஹாஃப் நெஞ்சை நக்குற அளவுக்கு சென்டிமென்ட்”
“நீங்க ராஜ்கிரண் ஃபேனா?”
“ஏன் இருக்கக் கூடாதா?” என்றவர், “ஆனா அந்த படத்தை நானும் பார்க்கலை.. ஜஸ்ட் கேள்வி ஞானம் மட்டும் தான்” என்று கண்சிமிட்டினார்.
“உங்க பையனோட குறும்பு உங்க கிட்ட இருந்து தான் வந்து இருக்குது போல”
“அதான் வளர்த்த கடா மார்பிலேயே பாயுது” என்று நடிகர் சிவாஜி கணேசன் போல் கூறியவர், “சரி நான் போய் பால் எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு நகர்ந்தார்.
அவர் நகர்ந்ததும் தந்தையை நோக்கினாள்.
மகள் அருகே வந்த குருநாதன் அவளது தலையை வருடியபடி லேசாக கண் கலங்கியபடி மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக, “இனி உன்னை பத்தி எனக்கு கவலை இல்லைடா.. நீ ரொம்ப சந்தோஷமா வாழுவ” என்றார்.
அதற்குள், “போதும்! போதும்! ஓவரா பாசப்பயிரை வளர்த்தீங்க! மிலிட்டரிங்கிற உங்க பட்டப் பெயரை மிஸ்டர் மஞ்சப்பைனு மாத்திடுவேன்” என்று அன்புடன் மிரட்டியபடி தேவகி வந்துவிட்டார்.
தந்தையும் மகளும் சிரிக்கவும், “இது நல்லப் பிள்ளைக்கு அழகு” என்றவர் ஒரு குவளையால் மூடிய பால் சொம்பை அவளிடம் கொடுத்தபடி, “ஒரு டம்பளர் பால் தான் இருக்குது.. ஒழுங்கா ரெண்டு பேரும் குடிச்சிடுங்க” என்றார்.
அதை வாங்கிக் கொண்ட அம்ரிதா உதட்டில் உறைந்த மென்னகையுடனே தங்கள் அறையினுள் சென்றாள்.
அதன் பிறகு குருநாதன் படுக்க கூடத்தில் விரிப்பை விரித்து தலையணை மற்றும் போர்வையை அதன் மேல் வைத்த தேவகி, “தண்ணி டேபிளில் தான் இருக்குது அண்ணா.. நைட் எதுவும் வேணும்னா ஒரு குரல் கொடுங்க” என்றார்.
“சரிமா.. நீங்க போய் படுங்க” என்று அவர் கூறியதும், தோழி மற்றும் உறவு பெண்மணியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றார்.
அங்கே அறையின் உள்ளே அம்ரிதா சென்ற போது, அவ்யுதகண்ணன் கட்டிலில் அமர்ந்து மகளின் பிஞ்சு கால்களை மென்மையாக பிடித்துவிட்டுக் கொண்டு இருந்தான்.