திருமணம் முடிந்து மூன்று நாட்கள் மட்டுமே முடிந்து இருக்க, அம்ரிதா இன்னும் விடுமுறையில் இருக்க, அவ்யுதகண்ணன் இன்று வேலையில் சேர்கிறான். ஆதினியும் இன்று பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக் கொண்டு இருக்கிறாள்.
வேலை சம்பந்தமான ஒரு முக்கியமான கைபேசி அழைப்பை எடுத்து பேசுவதற்காக அவ்யுதகண்ணன் வீட்டு தாழ்வாரத்திற்கு சென்று இருக்க, இங்கே அவனது அறையில்….
அம்ரிதா, “டாலி வா.. குளிக்கலாம்” என்று மகளை அழைக்க,
மகளோ கிளுக்கி சிரித்தபடி, “அம்மா நான் பிக் கேர்ள் ஆகிட்டே வரேன்.. ஸோ நானே குளிச்சிப்பேன்” என்றாள்.
“எனக்கு டாலி பேபி தானே!”
“பட் டாடி சொல்லி இருக்காங்க.. அம் க்ராயிங் அப்.. ஸோ இனி யார் முன்னாடியும்.. ஈவன் டாடி முன்னாடி கூட ட்ரெஸ் இல்லாம இருக்கக் கூடாது”
“அது டாடிக்கு ஓகே.. பட் நான் அம்மாடா பட்டு”
“நோ நோ.. நானே தான் குளிப்பேன்”
“ஓகே ஓகே” என்றவள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகளுக்கு முக்கியமான பாடம் எடுக்க நினைத்தவளாக மகளின் தோள்களை பற்றியபடி தரையில் மண்டியிட்டு அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.
“பட்டுக்குட்டி அம்மா இப்போ சொல்லப் போறதை ரொம்ப கவனமா கேட்கணும்.. ஓகே?” என்றதும் குழந்தை ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
“அம்மா இப்போ உங்களுக்கு பேட்(bad) டச் பத்தி சொல்லித் தர போறேன்.. த்ரீ ப்ளேசஸ் நமக்கு ப்ரைவேட் பார்ட்ஸ்..” என்றவளின் பேச்சிற்கு மறுப்பாக தலை அசைத்த குழந்தை,
“நோ.. டாடி இப்படி சொல்லித் தரலை” என்றவளின் பேச்சை இப்போது இடைமறித்த அம்ரிதா,
“டாடி சொல்லித் தரலைனா என்ன! அம்மா சொல்லித் தரேன்” என்றாள்.
“நோ ம்மா.. டாடி ஆல்வேஸ் ரைட்.. டாடி என்ன..” என்ற குழந்தையின் பேச்சை மீண்டும் இடையிட்ட அம்ரிதா சற்றே அழுத்தமான குரலில்,
“முதல்ல அம்மா சொல்றதை கேளு பட்டு” என்றாள்.
கைகளை கட்டியபடி ‘சொல்லு’ என்பது போல் குழந்தை நிற்க, அம்ரிதாவிற்கு அந்த பார்வை அவளது மணாளனைத் தான் நினைவு படுத்தியது.
அதை ரசித்து லேசாக மென்னகைத்தவள், பின் தீவிரமான முகபாவனையுடன், “நம்ம செஸ்ட், பம்ஸ் அண்ட் ரொம்ப முக்கியமா பிட்வீன் தி லெக்ஸ், அதாவது நம்ம கால்களுக்கு இடையே இருக்கும் பார்ட்..” என்று ஒவ்வொரு இடத்தையும் தனது உடம்பில் சுட்டிக் காட்டியபடி பேசியவள், “இதெல்லாம் தான் ப்ரைவெட் பார்ட்ஸ்.. இங்கே யாரையும் டச் பண்ண விடக் கூடாது.. நீ நோ சொல்லியும் யாரும் அங்கே டச் பண்ணா, அவங்களை தள்ளிவிட்டுட்டு ஓடி வந்து அம்மா கிட்ட உடனே சொல்லிடனும்” என்றாள்.
மறுப்பாக தலை அசைத்தபடி குழந்தை மீண்டும், “டாடி..” என்று ஆரம்பிக்க,
“டாலி! அம்மா சொல்றதை கேளு” என்று இம்முறை சற்றே கடின குரலில் பேசியவளுக்கு மகளின் தந்தை பாசத்தின் மீது ஆயாசமும், அவ்யுதகண்ணன் மீது சிறு கோபம் கூட வந்தது.
குழந்தையோ அன்னையை தீர்க்கமாக பார்த்தபடி, “நீங்க பேசினப்ப நான் லிஸ்ஸன் செய்தேன் தானே! அப்போ நீங்களும் நான் சொல்றதை லிஸ்ஸன் செய்யணும் தானே!” என்று அன்னைக்கே பாடம் எடுத்தாள்.
சட்டென்று தனது தவறை உணரந்தவளாக அம்ரிதா, “சாரிடா பட்டு.. நீ சொல்லு.. அம்மா கேட்கிறேன்” என்றாள்.
அப்பொழுதும் குழந்தை, “கேட்கிறேன் இல்லை.. லிஸ்ஸன் செய்யணும்” என்று கறாராக கூறினாள்.
அம்ரிதா மென்னகையுடன் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்ட, குழந்தை இடிப்பில் கைவைத்தபடி முறைத்தாள்.
அம்ரிதா உடனே சிரிப்பை அடக்கியபடி, “ஓகே ஓகே.. அம்மா சிரிக்கலை.. கவனிக்கிறேன்.. சொல்லுங்க” என்றாள்.
“குட்” என்ற குழந்தை, “டாடி என்ன சொன்னாங்கனா, நமக்கு ஃபோர்(four) பிரைவெட் பார்ட்ஸ்னு சொன்னாங்க.. நீங்க லிப்ஸ் விட்டுட்டீங்க..” என்றாள்.
‘அவரை பத்தி தெரிந்தும் இப்படி அவசரப்படலாமா நீ!’ என்று அம்ரிதாவின் மனசாட்சி அவளை சாடியது.
குழந்தை தொடர்ந்தாள்.
“இந்த பிரைவெட் பார்ட்ஸ்ஸில் யாரும்.. நமக்கு தெரிந்தவங்களா இருந்தாலுமே! யாரும் டச் செய்தா, அவங்க கையை தட்டிவிட்டு, அவங்க பிட்வீன் தி லெக் பிரைவெட் பார்ட்டை கால் முட்டியால் ஓங்கி இடிச்சிட்டு ஓடிடணும்.. முட்டியால் இடிக்க முடியலைனாலோ, இடிச்சும் அவங்க என்னை விடலைனா, அந்த பார்ட்டை சப்பாத்தி மாவை பிசைறது மாதிரி அழுத்தி பிசைஞ்சுட்டு ஓடி போய்டணும்..
ஸ்கூல்னா, மேம் கிட்ட போய் சொல்லணும்.. வீட்டு கிட்ட வெளியே நடந்தா, வீட்டுக்கு ஓடி வந்து டாடி கிட்ட சொல்லணும்.. டாடி வீட்டில் இல்லனா ஆச்சி கிட்ட சொல்லணும்..
வேற எங்கேயும் தெரியாத இடம் அண்ட் அவங்க துரத்தினா சேஃப்பா ஒளிஞ்சுட்டு டாடிக்கு காள் செய்யணும்.. உடனே வெளியே வராம அவங்க கிளம்புற வரை ஒளிஞ்சு இருந்து, அவங்க போனதுக்கு அப்புறம் தான் வெளியே வந்து எப்படியாவது டாடிக்கு காள் செய்யணும்” என்று நீண்ட விளக்கத்தை கொடுத்தாள்.
அவ்யுதகண்ணனின் இத்தகைய கற்பித்தலில் அசந்து போன அம்ரிதா பேச்சற்று தான் போனாள்.
குழந்தை, “அம்மா” என்று அழைத்தபடி அம்ரிதாவின் தோளைப் பற்றி லேசாக உலுக்கவும் சுயம் பெற்றவள்,
“என்னடா?” என்றாள்.
“டாடி சொன்னது தானே ரைட்?”
“ஆமாடா.. உன் டாடி எப்போதும் ரைட்” என்றவள், “உனக்கு டாடி போன் நம்பர் தெரியுமா?” என்று கேட்டாள்.
“ஓ தெரியுமே!” என்ற குழந்தை தந்தையின் எண்ணை சரியாக கூறி இருந்தாள்.
“சமத்து” என்றபடி மகளின் கன்னத்தில் முத்தமிட்ட அம்ரிதா, “சரி நீ குளிச்சிட்டு வா.. அம்மா ஆச்சிக்கு கிட்சனில் ஏதும் ஹெல்ப் வேணுமானு கேட்டுட்டு வரேன்” என்றபடி எழுந்தாள்.
“ஓகே ம்மா” என்ற குழந்தை குளிக்க ஆயுத்தமாக, அறையை விட்டு வெளியே வந்த அம்ரிதாவோ முதலில் மணாளனை தான் தேடிச் சென்றாள்.
அங்கே, வீட்டின் தாழ்வாரத்தில் நின்றபடி அவ்யுதகண்ணன் கைபேசியில் பேசி முடிக்கவும், மாடியில் இருந்து மலர்விழி கல்லூரிப் பையுடன் இறங்கி வந்தாள்.
மணியைப் பார்த்தவன், “என்ன மேடம் அம்மா இல்லைனதும் நல்ல தூக்கமா?” என்றான் கிண்டலான குரலில்.
மலர்விழியோ அவன் முகத்தை பார்க்காமல் வரவழைத்த இயல்பு குரலில், “ஆமா ணா தூங்கிட்டேன்” என்றாள்.
அவள் தன்னை பார்க்காததோடு, குரலில் தெரிந்த சிறு பேதத்திலும், “என்னாச்சு மலர்?” என்று அக்கறையுடன் கேட்டான்.
அவளோ அவன் கண்களை பார்க்காமல், “என்னணா! ஒன்.னும்மில்லையே!” என்றாள்.
“மலர் என்னைப் பார்” என்று அவன் அழுத்தத்துடன் கூற,
“லேட் ஆச்சு.. நான் கிளம்புறேன் ணா” என்று கிளம்புவதிலேயே குறியாக இருந்தவள் அவனை கடந்து செல்லவே பார்த்தாள்.
சட்டென்று கையை அவள் முன் மறித்து நீட்டியவன், “என்னைப் பாருன்னு சொன்னேன்” என்றான் இன்னும் அழுத்தமான குரலில்.
அவள் அமைதியாக அவனை பார்க்கவும், நன்றாக சிவந்து இருந்த அவளது விழிகளை கண்டவன், “அழுதியா?” என்று கேட்டான்.
அவள் பதில் கூறாமல் அமைதியாக நிற்கவும்,
கனிவான குரலில், “என்னாச்சுடா? நைட்டெல்லாம் அழுற அளவுக்கு என்ன நடந்தது?” என்றான்.
அப்பொழுதும் மௌனமே பதிலாக கிடைக்கவும், அவளது கையை பற்றி தட்டிக் கொடுத்தபடி, “அண்ணா கிட்ட சொல்லுமா” என்றான்.
அழுகையை அடக்க முயற்சித்தபடி, “நேத்து.. கார்த்திக் ப்ரேக்-அப் செஞ்சுட்டாங்க” என்றாள்.
அவளது விழிகளை இரண்டு நொடிகள் ஆழ்ந்து நோக்கியவன் மென்னகையுடன், “பசங்க மட்டும் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரானு சொல்லனுமா என்ன! நீயும் விஜய் தேவர்கொண்டா இல்லனா அதர்வானு சொல்லிட்டு அவனை தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருக்க வேணாமா?” என்றபடி அவளது தோளை தட்டிக் கொடுத்தான்.
அவனது கிண்டலை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை என்றாலும், அவனுக்காக சிரமத்துடன் வரவழைத்த மென்னகையை உதிர்த்தபடி, “ஓகே ணா” என்றவள், “கிளம்புறேன்.. டைம் ஆச்சு” என்றாள்.
“ஓகே போயிட்டு வா” என்று கூறி அவளை அனுப்பிவிட்டு யோசனையுடன் திரும்பியவன் முன் வந்து நின்ற அம்ரிதா,
“என்ன யோசனை?” என்று கேட்டாள்.
“மலர் பேசியதை கேட்ட தானே!” என்றான்.
லேசாக கண்களை விரித்தவள், “என்னை நீங்க பார்க்கவே இல்லையே!” என்றாள்.
ஆம், அவன் மலரிடம் விசாரிக்க ஆரம்பித்த பொழுதே அங்கே வந்தவள் தனது வரவால் மலர்விழி பேச தயங்குவாளோ என்ற எண்ணத்தில் தனது வரவை காட்டிக் கொள்ளாமல் மறைந்து நின்று கொண்டாள். மலர்விழி கிளம்பிய பிறகே வெளியே வந்தாள்.
மென்னகையுடன், “நான் போலீஸ்காரன்மா! எப்பவும் நாலாபுறமும் ஒரு கவனம் இருக்கும்” என்றவன், “டூ மினிட்ஸ்” என்றுவிட்டு கைபேசியில் ஏட்டு விநாயகத்தை அழைத்தான்.