அவள் திரும்பவில்லை என்றதும், “ஓய் மிமி! நீ தூங்கலைனு தெரியும்.. இந்த பக்கம் திரும்பு” என்றான்.
அவன் விடமாட்டான் என்றதில் திரும்பி படுத்தபடி, “என்ன மான்ஸ்டர்?” என்றாள்.
“நீ அடிக்கடி இப்படி சைட் அடிக்கிறதைப் பார்த்தா, மேடம் காதலில் விழுந்திடுவீங்க போல! இல்ல அல்ரெடி விழுந்துட்டீங்களோ!” என்றபடி கண் சிமிட்டினான்.
அந்த நொடியில் தான் தனது மனம் செல்லும் பாதையை ஆராயத் தொடங்கினாள்.
சில நிமிடங்கள் அவளை யோசிக்க விட்டவன், “என்ன மேடம்! சத்தத்தை காணும்!” என்றான்.
படுத்தவாக்கில் தலையை மட்டும் தூக்கி கையை முட்டு கொடுத்தவள் அவனை இமைக்காமல் பார்த்தாள்.
அவளை போலவே தானும் படுத்தவன் புன்னகையுடன் புருவம் உயர்த்த,
அவளோ விடிவிளக்கின் ஒளியில் தெரிந்த அவனது விழிகளை பார்த்தபடி, “வாய்ப்பு இருக்குதோ?” என்று கேட்டாள்.
“எதுக்கு?”
“நீங்க சொன்னதுக்கு தான்”
“ஏன் அதை உன் வாயால் சொல்ல மாட்டியா?”
அவனை ஆழ்ந்து நோக்கியவள், “நீங்க அழகா தான் இருக்கிறீங்க ஆனா என்னை கவருறது உங்க அகம்.. எஸ், உங்களோட அகம் டஷிங்(dashing) பியூட்டி..
உங்களோட செயல்களால் என்னை பிரம்மிக்க வைக்கிறீங்க, மகிழ வைக்கிறீங்க, நெகிழ வைக்கிறீங்க, பாதுகாப்பா நிம்மதியா உணர வைக்கிறீங்க.. கூடவே எனக்குள் புதுசா ஒரு இனம் புரியா பீல் தரீங்க..
மொத்தத்தில் உங்களை ரொம்ப பிடிச்சு இருக்குது.. ஆனா காதல்! எனக்கு தெரியலை.. மே பி இது காதலா மாறலாம் ஆனா இந்த குறுகிய காலத்தில் காதல் சாத்தியமானு எனக்கு தெரியலை” என்றாள்.
“நாம சந்திச்சு பழக ஆரம்பித்து கிட்டத்திட்ட மூணு வாரம் ஆக போகுது.. இது குறுகிய காலம் இல்லை” என்றவன், “காதல் வரதுக்கு நொடி பொழுது போதும்.. ஆனா அந்த நொடி எப்போ வரும்னு தான் நமக்கு தெரியாது.. பார்த்த முதல் நொடியாவும் இருக்கலாம், இல்ல சில நாட்கள் கழித்து அந்த நொடி வரலாம் இல்ல சில வருடங்கள் கழித்து கூட அந்த நொடி வரலாம்” என்றான்.
“உங்களுக்கு ராதா மேல எப்போ எப்படி காதல் வந்தது?”
“இப்போ எதுக்கு இந்த பேச்சு? நான் நம்மை பத்தி பேசிட்டு இருக்கிறேன்”
“ப்ளீஸ் சொல்லுங்க”
“அம்ரி!”
“உங்க காதலை பத்திலாம் கேட்கலை.. ஜஸ்ட் எப்போ எப்படி வந்ததுனு மட்டும் சொல்லுங்க”
“எப்போனு வேணா சொல்லலாம்.. எப்படினுலாம் சொல்ல முடியாது.. காதலுக்கு காரணம் கிடையாது.. அப்படி காரணம் இருந்தா, அது காதலே இல்லை..” என்றவன் கண்களை மூடியபடி, “அது ஒரு அழகான பீல்.. அதை உணரத் தான் முடியும்” என்றவன் சில நொடிகள் கண்களை மூடியபடியே தன்னை மறந்த நிலையில் இருந்தான்.
“ஸ்டில் யூ லவ் ஹெர்.. ரைட்!” என்று கேட்டபோது அவளது நெஞ்சினோரம் வலி பிறந்தது.
கண்களை திறந்தவன், “ஏன் இப்படி கேட்கிற?” என்று கேட்டான்.
“உங்க முகத்தில் தெரிந்த பாவம்!”
“அது உன்னை நினைத்து வந்த பாவமா கூட இருக்கலாமே!”
“என்ன!”
அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியபடி, “காதல் ஒரு முறை தான் வரணும்னு இல்லையே!” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல், “குட் நைட்” என்று கூறி நிமிர்ந்து படுத்து கண்களை மூடி கொண்டான்.
‘இப்போ இவர் என்ன சொல்ல வரார்?
இவரும் என்னை காதலிக்கிறாரா?
இவரும்னா! அப்போ எனக்கு இவர் மேல் காதல் வந்துருச்சா?
இந்த இனம் புரியாத உணர்வு தான் காதலா?
அதான் ராதா பற்றி பேசும் போது ஒரு மாதிரி வலிக்கிற மாதிரி பீல் ஆகுதா?’ என்றெல்லாம் யோசித்தபடி படுத்திருந்தவள் நள்ளிரவில் அவளையும் அறியாமல் உறங்கி இருந்தாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அறையினுள் சென்ற அவ்யுதகண்ணன் தன்னை நோக்கி ஓடி வந்த மகளை தூக்கியபடி, “டாலி தலை சீவி சூப்பரா கிளம்பியாச்சே!” என்றான்.
பின் தன்னை கண்டு கொள்ளாமல் கலைந்து இருந்த மெத்தையை சரி செய்து கொண்டிருந்த மனையாளை ஓரப்பார்வை பார்த்தபடி மகளிடம், “ஆச்சி கிட்ட போய் ப்ரேக்பாஸ்ட் ரெடியானு கேட்டு, டைனிங் சேரில் உட்காருங்க.. டாடி அம்மா கிட்ட பேசிட்டு வரேன்” என்றான்.
“ஓகே டாடி” என்றபடி குழந்தை இறங்கி ஓடினாள்.
மகளை தொடர்ந்து செல்ல நகர்ந்த மனையாளின் கையை அவன் பிடித்து நிறுத்த,
கையை விலக்க முயற்சித்தவள் அது முடியாமல், அவன் பக்கம் திரும்பி உக்கிரப் பார்வையுடன், “கையை விடுங்க” என்று சீறினாள்.
அவனோ இயல்பான குரலில், “நேத்து நைட்…” என்று ஆரம்பிக்க,
அவளோ அதிகரித்த உக்கிரத்துடன், “என்ன நேத்து நைட்!!! காதல் பற்றி பேசினா உடனே இப்படி தான் அட்வான்டேஜ் எடுப்பீங்களா?
காதல் பற்றி பேசினேன் அவ்ளோ தான்! உங்க மேல காதல்னு கூட சொல்லலை.. அதுக்குள்ள முத்தம் வரை போவீங்களா?
அப்படியே எனக்கு உங்க மேல் காதலே இருந்தாலும், உடனே முத்தம் கொடுப்பீங்களா?
அன்னைக்கு பெருசா ‘உன் உடல் மேல் எனக்கு ஆசை வரும்னு சொல்றியா’னு கோபப்பட்டீங்க! இப்போ எங்க போச்சு உங்க கண்ணியமும் கட்டுப்பாடும்!!!” என்று வேகமாக பொரிந்தவளின் மூச்சு சற்றே ஏறி இறங்கியது.
“ரிலாக்ஸ்..” என்று அவன் ஆரம்பிக்க,
கோப விழிகளுடனேயே அவனை நோக்கியவள், “என்ன ரிலாக்ஸ்! பை எனி சான்ஸ் உங்களுக்கு என் மேல் காதல் வந்தாலும் என்னை கணவனா நாட மாட்டேன்னு சொன்னீங்க தானே! இங்கே உங்களுக்கு என் மேல் காதல் இருக்கானே எனக்கு தெரியலை! அதுக்குள்ளே!” என்று அரை நொடி நிறுத்தியவள், “அப்படியே ரெண்டு பேருக்குமே காதல் இருந்தாலுமே, எப்படி முத்தம் கொடுப்பீங்க? முத்தத்துக்கு காதல் என்ன திறவுகோலா? என் மனநிலை என்ன? இதை என்னால் ஏத்துக்க முடியுமானுலாம் யோசிக்க மாட்டீங்களா?
என்னவோ உண்மையான காதல் தன் இணையை காயப்படுத்த நினைக்காது.. அது இதுனு பெருசா வசனம் பேசினீங்க! இப்போ நீங்க நடந்துகிட்டது என்ன? எல்லாம் சும்மா வாய் வார்த்தையா பேச்சுக்கு தான்.. இதுல ரிலாக்ஸ்ஸாம்.. ரிலாக்ஸ்” என்று மீண்டும் பொரியவே செய்தாள்.
அவனோ அமைதியான குரலில், “என்னோட முத்தம் உனக்கு அருவெறுப்பா இருந்ததானு சொல்லு.. இப்போ நீ சொன்னது எல்லாத்துக்கும் விளக்கம் தரேன்” என்றான்.
அவள் சட்டென்று கோபம் வடிந்தவளாக அதிர்வுடன் மெத்தையில் அமர,
அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், “இப்போ நான் கொடுத்த முத்தம் அன்பின் வெளிப்பாடு” என்றான்.
அவள் முறைப்புடன், “அது என்ன அன்பின் வெளிப்பாடு? மருத்துவ முத்தம் மாதிரி இது அன்பு முத்தமா!” என்றாள். ஆனால் முன்பு இருந்த கோபம் இந்த முறைப்பில் இல்லை.
அதை உணர்ந்தவன் லேசாக சிரித்தபடி, “அப்படியும் சொல்லலாமே!” என்றான்.
அவள் மீண்டும் முறைப்புடனே பார்க்க,
“அன்பின் வெளிப்பாடுனா, அந்த அன்பு நட்பா இருக்கலாம், தந்தை மகள் பாசமாவும் இருக்கலாம், அரவணைப்பாவும் இருக்கலாம், உரிமையாவும் இருக்கலாம், ஈர்ப்பாவும் இருக்கலாம், காதலாவும் இருக்கலாம்” என்றவன் மென்னகையுடன், “நீ சொன்ன மருத்துவ முத்தமாவும் இருக்கலாம்” என்று கூறி கண் சிமிட்டினான்.
சில நொடிகள் அவனை இமைக்காமல் பார்த்தாள்.
“என்ன?”
அவள், “சட்டென்று மாறுது மனநிலை” என்றதும் வசீகரமாக சிரித்தான்.
அமைதியான குரலில், “நீங்க கொடுத்த முத்தம் எந்த வகையை சேர்ந்தது?” என்று கேட்டாள்.
“உரிமையும் ஈர்ப்பும் கலந்த முத்தம்” என்றவன், “அதில் துளி காதலும் சேர்ந்து இருக்கலாம்” என்றான்.
“மான்ஸ்டர்!” என்றதும் அவன் விரிந்த புன்னகையை உதிர்க்க,
அவளது உதடுகள், “மாயக்கண்ணன்” என்று முணுமுணுத்தது.
“நீ யோசிக்காத ரெண்டு விஷயங்கள் சொல்றேன்.. இப்போ கோபத்தில் பேசும் போது என்னை நீ ஒருமையில் பேசலை.. ஏன்?
இன்னொரு முக்கியமான விஷயம், என் முத்தம் உனக்கு அருவெறுப்பா இல்லை.. ஏன்?
ரெண்டுக்குமே ஒரே பதில் தான்.. யோசிச்சா உனக்கே தெரியும்”
“ப்ச்” என்றபடி அவள் உதட்டை சுளிக்க,
“நேத்து சொன்னது தான்.. காதல் ஒரு அழகான உணர்வு.. அதை நீ பீல் செய்ற தானே!” என்றான்.
“நீங்க பீல் செய்றீங்களா?”
“இல்லைனு நினைக்கிறியா?”
“ஆனா லவ் யூ மம்மினு தானே சொன்னீங்க?”
மீண்டும் சிரித்தவன், “அப்போ லவ் யூ அம்ரினு சொல்லி முத்தம் கொடுத்து இருந்தா கோபம் வந்து இருக்காதோ!” என்றான்.
அவள் அவனை முறைக்க,
சத்தமாக சிரித்தவன், “என்னை மான்ஸ்டர்னு சொல்லிட்டு நீ தான் இப்போ, இருக்கு ஆனா இல்லைனு சொல்ற” என்றபடி எழுந்தான்.
“நீங்க இப்பவும் மான்ஸ்டர் தான்.. இன்னும் நேரடியா பதில் சொல்லலை”
“நீ முதல்ல உன் மனசை புரிந்து தெளிவாகு.. நான் அப்புறம் நேரடியா சொல்றேன்” என்றுவிட்டு வெளியேறினான்.