அவள் வண்டியை கிளப்பியதும், “அரசன் வீடு தெரியுமா?” என்று கேட்டார்.
[‘அரசன்’ – திருநெல்வேலியில் பல கிளைகள் இருக்கும் புகழ்பெற்ற பல்சுவை நிலையம். அது மட்டுமில்லை பனிப்பாகு கடை மற்றும் சிறப்பங்காடியும் இருக்கிறது.]“தெரியாதே”
“இங்க இருந்து போகும் போது சேவையில்லம் ஸ்டாப் கொஞ்சம் முன்னாடியே மெயின் ரோட்டில் லெப்ட் சைட் பெரிய ரெட் அண்ட் வைட் கலர் வீடு பார்த்து இருக்கிறியா?”
“ஹ்ம்ம்.. பார்த்து இருக்கிறேன்.. சேட்டிலைட்(satellite) மாதிரி ரொம்ப பெரிய டிஷ் கூட இருக்குமே! அந்த வீட்டை தானே சொல்றீங்க!”
“அதே தான்”
“அதான் அரசன் வீடா?”
“ஆமா” என்றவர், “அரசன் வீட்டுக்கு அடுத்த தெருவில் தான் நான் சொல்ற பிள்ளையார் கோவில் இருக்குது”
“ஓ.. ஓகே” என்றவள், “என்ன வேண்டுதல் அத்தமா? சொல்லலாம்னா சொல்லுங்க”
“இவன் கல்யாணமே வேணாம்னு சுத்தினப்ப வேண்டியது.. உங்க கல்யாணம் நல்லபடியா முடியவும் இப்போ நிறைவேற்ற போறேன்”
“என்ன வேண்டுதல்? உங்களை வருத்திக்கிற மாதிரி எதுவும் இல்லையே!”
“அதெல்லாம் இல்லைடா.. அங்கே இருக்கும் அரசமர பிள்ளையாரை நூத்தியெட்டு முறை சுத்துவேன்.. அவ்ளோ தான்”
தலையை மட்டும் லேசாக பக்கவாட்டில் திருப்பி அவரை முறைத்தவள், “இது வருத்திக்கிறது இல்லையா?” என்றாள்.
அவளது அக்கறையில் மென்னகைத்தவர், “இது வாக்கிங் போற மாதிரி தான்டா.. ஒன்னுமில்லை” என்றார்.
“அவர் கிட்ட சொல்லிட்டீங்களா?”
“முடிச்சிட்டு சொல்லிக்கிறேன்”
“ஸோ அவருக்கு இதில் விருப்பம் இல்லை”
“அப்படி இல்லை.. முன்னாடிலாம் எதுவும் சொல்ல மாட்டான்.. என் போக்கில் விட்டுடுவான்.. இந்த ப்ரெஷர் வந்த அப்புறம் தான்” என்று இழுத்து நிறுத்தினார்.
“இனி இப்படி உங்களை வருத்திக்கிற மாதிரி வேண்டாதீங்க?”
“அடிக்கடிலாம் வேண்ட மாட்டேன்டா”
“அடிக்கடியோ எப்பவாவதோ! இனி இப்படி வேண்டாம்”
“பார்த்துக்கலாம்”
“அத்தமா!”
“ஓகே.. குறைச்சுக்கிறேன்”
“ஸோ நிறுத்த மாட்டீங்க!”
“அதான் குறைச்சுக்கிறேன்னு சொல்லிட்டேனே! விடு”
“என்னவோ போங்க”
அவரை கோவிலில் இறக்கி விட்டவள் தந்தையை காணும் பேராவலுடன் தந்தை வீட்டிற்கு சென்றாள்.
அம்ரிதாவின் வாழ்வில் அந்த சம்பவம் நடந்த பிறகு அவளுக்கு கடவுள் நம்பிக்கை அற்று போகவில்லை என்றாலும் அதிகம் கோவிலுக்கு செல்வது இல்லை. அதனாலேயே தேவகியும் அவளை கோவிலினுள் அழைக்கவில்லை.
தேவகி முதலில் கடவுளை வணங்கிவிட்டு வெளி பிரகாரத்தில் இருந்த அரசமர பிள்ளையாரை சுற்ற ஆரம்பித்தார். சற்று வேகமாகவே சுற்றியவர் அரை மணி நேரத்தில் 108 சுற்றுகள் சுற்றி முடித்து வெளி பிரகாரத்தில் சிறு மண்டப அமைப்பில் இருந்த ஆஞ்சநேயர் சந்நிதியில் அமர்ந்தார். பின் கைபையில் வைத்து இருந்த சிறு பொத்தலை எடுத்து, அதில் இருந்த பழச்சாறை அருந்தினார்.
அவர் சுற்றி முடித்த ஐந்து நிமிடத்தில் அவ்யுதகண்ணன் கோவிலுக்கு வந்தான்.
கோவிலுள் வந்தவன் அன்னையை தேடி தான் வந்து நின்றான்.
அவரது முகத்தில் தெரிந்த சிறு சோர்வில் முறைப்புடன், “108 சுத்து சுத்தினீங்களா?” என்று கேட்டான்.
அவரோ, “சாமி கும்டுட்டு வா” என்றார்.
அவன் அவரை முறைத்தபடியே நிற்க,
அவரோ, “பழைய வேண்டுதல்.. ஜூஸ் குடிச்சு இப்போ தெம்பா தான் இருக்கிறேன்.. டைம் வேஸ்ட் செய்யாம கும்டுட்டு வா” என்றார்.
தலையை லேசாக இருபுறமும் அசைத்தபடி அகன்றவன் அங்கிருந்த பிள்ளையார், சிவன், முருகன் மற்றும் அம்மன் சந்நிதிகளில் சாமியை சேவித்துவிட்டு தனியாக இருந்த அரசமர பிள்ளையாரையும் சேவித்துவிட்டு ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வந்தான். ஆஞ்சநேயரையும் வணங்கிவிட்டு அன்னை அருகில் அமர்ந்தான்.
எதுவும் பேசாமல் அவனையே அவர் கூர்விழிகளுடன் பார்த்துக் கொண்டு இருக்க, அவன் யோசனையுடன், “என்னமா?” என்று கேட்டான்.
அவரது பார்வையில் மாற்றம் இல்லை என்றதும், “அம்மா!” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தான்.
“என் கிட்ட பொய் சொல்லுவனு நான் நினைக்கவே இல்லை.. அதுவும் எவ்ளோ பெரிய பொய்!!”
சற்று துனுக்குற்றவன் அறியாதவன் போல், “என்னமா சொல்றீங்க? நான் ஏன் பொய் சொல்லப் போறேன்? அதுவும் உங்க கிட்ட?” என்றான்.
“நானும் இப்படி தானேடா நம்பிட்டு இருந்தேன்”
“இப்போ மட்டும் அந்த நம்பிக்கைக்கு என்னாச்சாம்?” என்று அவன் விளையாட்டாக வினவ,
அவரோ தீர்க்கமான பார்வையுடன், “நீ என் கிட்ட பொய்யே சொல்லலையா?” என்று கேட்டார்.
லேசாக மூச்சை இழுத்துவிட்டவன், “சொல்லி இருக்கிறேன்” என்றான்.
“மொட்டையா சொல்ற! ஸோ நிறைய பொய்கள் சொல்லி இருக்க!”
“அம்மா!”
“சொல்லுடா” என்று அவர் குரலை உயர்த்தாமல் கோபத்துடன் கூறினார்.
“எதை சொல்லச் சொல்றீங்க?”
“என்னலாம் பொய் சொல்லி இருக்கிறியோ! அதை எல்லாம் தான்?”
“நான் சொன்ன பொய்யால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை.. ஸோ அதை அப்படியே விடுங்கமா ப்ளீஸ்” என்று கெஞ்சும் குரலில் கூறினான்.
அவரோ லேசாக கலங்கிய விழிகளுடன், “என்னடா தீங்கு நேரலை!! என் மகனோட பெயர் கெட்டு போச்சே! அதுவும் என் கிட்டயே!” என்றவர் மேலே பேச முடியாமல் நிறுத்த,
“அம்மா!” என்றபடி அவரது கையை அவன் பற்ற, அவரோ கோபமும் ஆதங்கமுமாக அவனது கையை தட்டிவிட்டார்.
அன்னைக்கு எந்த விஷயம், எப்படி தெரிந்தது? எதுவரை தெரிந்தது? என்று எதுவும் தெரியாமல் என்ன பேசுவது என்று அறியாமல் தவிப்புடன் அவரை நோக்கினான்.
மகனின் தவிப்பை கண்டவர், “அம்ரு தானே உன் ராதா?” என்று கேட்டார்.
சிறு அதிர்வுடன் அவரை நோக்கியவனின் மனதினுள் ‘எப்படி தெரிந்தது?’ என்ற கேள்வி தான் ஓடிக் கொண்டு இருந்தது.
“அப்போ கு..ட்டிமா!” என்றவரின் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
அவர் கேட்டு முடிக்கும் முன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பினை போல், “டாலி என்னோட பொண்ணு தான்மா” என்றிருந்தான்.
கசந்த புன்னகையை உதிர்த்தவர் சிறு வலியுடன், “உன்னோட பொண்ணு இல்லைனா என் பாசம் பொய்த்து போய்டும்னு நினைக்கிறியா? நீ அம்மாவை புரிஞ்சுக்கிட்டது அவ்ளோ தானா?” என்று கேட்டார்.
அவரது கையை இறுக்கமாக பற்றியவன், “நிச்சயம் இல்லைமா.. டாலி என் பொண்ணு இல்லனு என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியாது.. அதனால அப்படி சொல்லாதீங்க ம்மா ப்ளீஸ்..
அவளுக்கு உயிர் கொடுத்தது வேணா நானாக இல்லாம இருக்கலாம், ஆனா அவ என்னோட உயிர் ம்மா! என் வாழ்க்கைக்கு பிடிப்பு கொடுத்த தேவதைமா..
எப்பவும் டாலி என்னோட மக தான்.. இதை உங்க ஆழ் மனசில் நல்ல பதிய வச்சுக்கோங்க” என்று முடித்தப்போது அவனது குரலில் அப்படி ஒரு அசைக்க முடியாத உறுதி இருந்தது.
கண்ணீரை துடைத்தவர் இயல்பிற்கு திரும்பி, “சரி, என்ன நடந்ததுனு சொல்லு.. அம்ரு தான் ராதானு சொல்ற! ஆனா அம்ரு! என்ன தான்டா நடந்தது?” என்று கேட்டார்.
விரக்த்தியாக சிரித்தவன், “நான் காதலிச்சதே அவளுக்கு தெரியாது! ஏன், நான் யாருனு கூட அவளுக்கு தெரியாதே!” என்றான்.
இப்பொழுது மகனின் கையை ஆதரவாக இறுக்க பற்றிய தேவகி, “உன் காதல் தான் அம்ருவை உன் கிட்ட சேர்த்து இருக்குது.. ஸோ, பழசை நினைத்து உன்னை நீயே வருத்திக்காத.. அம்மாக்காக நடந்ததை ஒருமுறை சொல்லு” என்றார்.
தனது காதல் கதையை சுருக்கமாக கூறி முடித்தான்.
தேவகி, “நீ முதல் முறை சந்திச்சப்ப அம்ரு அவ பெயரை ராதானா சொன்னா!” என்று கேட்க,
அவரை முறைத்தபடி, “எவ்ளோ சொன்னேன்! உங்க டவுட் எதில் இருக்குது!” என்றான்.
“பின்ன! அந்த பெயரை வச்சு தானே என்னை நீ குழப்பி விட்ட!”
“அன்னைக்கு இருந்த அதிர்ச்சியில் அவ ரொம்ப மெதுவா தான் பேசினா.. அவ பெயரை சொன்னதில் பாதி தான் எனக்கு கேட்டுச்சு.. மே பி.. பின்பாதி ரிதா என் காதில் ராதானு விழுந்து இருக்கலாம்.. இல்ல என் மைண்டு அப்படி நினைத்து இருக்கலாம்..
அவளோட முழு பெயர் தெரிந்த பிறகுமே எனக்கு இந்த பெயரை மாத்திக்க தோனலை.. கண்ணனுக்கு ராதா பொருத்தமா இருக்குதுனு அப்படியே என் மனசில் பதிஞ்சிடுச்சு” என்றவன்,
“புராணத்தில் கண்ணனுக்காக ராதா ஏங்கினா.. ஆனா என் விஷயத்தில், ராதைக்காக இந்த கண்ணன் பதினைந்து வருஷமா ஏங்கிக்கிட்டு இருக்கிறேன்” என்றான்.
அன்னையின் யோசனையான முகத்தைப் பார்த்தவன், “என்ன மா?” என்று கேட்டான்.
அவரோ தீவிர யோசனையான பாவனையுடன், “நீ பிறந்தப்ப, ஹாஸ்பிடலில் இருந்து குழந்தையை மாத்தி எடுத்துட்டு வந்து இருக்க வாய்ப்பு இருக்குதானு யோசிக்கிறேன்” என்றார்.