அவன் அவரை முறைக்க,
அவரோ அலட்டிக் கொள்ளாமல், “பின்ன என்னடா! என்னோட பையனா இருந்துட்டு, ‘இதானா சார் உங்க டக்கு’னு பதினைந்து வருஷமா தேச்சிட்டு இருக்க! இதுல ஒரே பீலிங்ஸ் ஆஃப் இந்தியா வேற!” என்று நக்கல் செய்தார்.
“அப்போ உண்மையாவே கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தையோட வந்து நின்னு இருக்கணும்னு சொல்றீங்க!” என்று அவனும் நக்கல் செய்தான்.
அவரோ அதீத நக்கலுடன், “நீயெல்லாம் அதுக்கு சரிபட்டு வர மாட்ட!” என்றார்.
அவரை முறைத்தாலும், “அப்போ அது தப்பில்லைனு சொல்றீங்களா?” என்று நக்கலாகவே கேட்டான்.
அவரோ சற்று தொலைவில் துடைப்பத்தை வைத்து ஆலயத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தவரை பார்வையால் சுட்டிக் காட்டினார். அதாவது ‘துடைப்பக்கட்டை பிஞ்சிடும்’ என்று சொல்லாமல் சொல்லி இருந்தார்.
லேசாக சிரித்தவன், “இப்போ ஹப்பியா! உங்க வளர்ப்பு என்னைக்குமே தப்பா போகாதுமா” என்றான்.
வாஞ்சையுடன் மகனைப் பார்த்தவர் பின் முறைப்புடன், “ஆனா என் கிட்ட பொய் சொல்லி என்னை தவிக்க விட்டுட்ட தானே!” என்றார்.
“சாரிமா.. ஆனா, கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாளில் நானே சொல்லி இருப்பேன் ம்மா”
‘ஒருவேளை அம்ருவை நீ திரும்ப சந்திக்காமலோ, கல்யாணம் செய்யாமல் இருந்து இருந்தாலோ கடைசி வரை எனக்கு இந்த உண்மை தெரியாமலேயே தானே போய் இருக்கும்! நானும் என் மகனை தப்பா தானே நினைச்சுட்டு இருந்து இருப்பேன்!’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டவர் வெளியே மகனுக்காக, “சரி விடு” என்று சமாதானமாக கூறினார்.
“சாரிமா.. உங்க பயம் தெரிந்தாலும், ராதாவை எந்த வகையிலும் மிஸ் செய்திட கூடாதுனு தான் போலீஸ் ஆகுற முடிவை எடுத்தேன்.. என்னை மன்னிச்சிடுங்க” என்றான்.
மென்னகையுடன் அவனது கன்னத்தை பற்றியவர், “உன் கனவின் முதல் படியாக நீ எஸ்.ஐ ஆனதில் எனக்கு சந்தோசம் தான்” என்றவர், “என்னடா முதல் படின்னு சொல்றேன்னு பார்க்கிறியா! உன்னோட கனவான ஏசிபி பதவியை நீ அடையணும்.. அதில் தான் அம்மா இன்னும் சந்தோஷப்படுவேன்” என்றார்.
சிறு நெகிழ்ச்சியும் மிகுந்த மகிழ்ச்சியுமாக, “தன்க்யூ ம்மா” என்றான்.
“நீ எடுக்கும் பாதுக்காப்பு செயல்களை பார்க்கிறேன் தானே! உன் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்குது.. ஸோ எனக்கு இப்போ பயம் இல்லை” என்றவர், “ஒரு நாள் என் மடியில் படுத்து அழுதியே! அன்னைக்கு தான் அம்ருவை தொலைச்சியா?” என்று கேட்டார்.
“ஹ்ம்ம்”
“அந்த சம்பவத்துக்கு அப்புறம் அண்ணாவும் அம்ருவும் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு போனதா மீனா சொன்னா” என்றவர் யோசனையுடன், “ஆனா.. நீ அவளை கடைசியா பார்த்தப்ப, வேறு ஒருவனுக்கு சொந்தமனவளா இருந்தானு சொல்ற! ஆனா அம்ருக்கு கல்யாணம் ஆகலை அண்ட் அவ யாரையும் காதலிச்சதாவும் தெரியலையே! எங்க வச்சு அவளைப் பார்த்த?” என்று கேட்டார்.
“சேரன்மாதேவியில் ஒரு கேஸ் விஷயமா ஒருத்தரை சந்திக்க போன இடத்தில், எதிர்பாராத விதமா நான் அவளைப் பார்த்தேன்.. அப்போ மாமா இன்னொருத்தர் கிட்ட அவளுக்கும் அவரோட ஒன்னு விட்ட அக்கா பையனுக்கும் அடுத்த மாசம் கல்யாணம்னு பேசிட்டு இருந்தார்..
அதான் அவளோட விருப்பபடி அவ கல்யாணம் செய்து நல்லா இருக்கட்டும்னு நான் என்னை கடைசி வரை வெளிப்படுத்திக்காம விலகிட்டேன்..
அதுக்கு அப்புறம் நான் அவளைப் பற்றி விசாரிக்க கூட இல்லை.. என் வாழ்க்கை டாலி தான்னு இருந்துட்டேன்.. அதான் நீங்க சொல்ற வரை அவளுக்கு கல்யாணம் ஆகாத விஷயம் எனக்கு தெரியவே இல்லை”
“அப்போ ரெண்டு முறை அவளோட கல்யாணம் நின்னு இருக்குதா?”
“ஹ்ம்ம்” என்றவன், “உங்களுக்கு எப்படி அம்ரி தான் ராதானு தெரிந்தது?” என்று கேட்டான்.
“மொச பிடிக்கிற நாய் முகம் பார்த்தா தெரியாதா!” என்று அவர் கிண்டலும் நக்கலுமாக கூற,
லேசாக சிரித்தவன், “அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது!” என்றான்.
“அப்படின்னு சொல்ல முடியாது.. ஆனா நான் உன் அம்மாடா!” என்றவர்,
“ராதா தவிர வேற எந்த பெண்ணையும் கல்யாணமே செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தவன் நீ! ஆனா அம்ருவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்ததே நீ தான்.. அதுவும் போராடி!
அப்போ கூட எனக்கு சந்தேகம் வரலை.. கல்யாணத்தில் உன்னோட ஈடுபாடு! கல்யாணத்துக்கு அப்புறம், அம்ருவை பார்க்கும் போது உன்னையும் மீறி உன் கண்ணில் தெரியுற காதல்! இதில் தான் சந்தேகம் வந்தது ஆனாலும் ரொம்பவே குழப்பமா இருந்தது..
நான் கல்யாணப் பேச்சை எடுக்க கூடாதுனு குட்டிமாவை தத்தெடுத்து உன்னோட பொண்ணுனு சொல்லி இருப்பனு புரிஞ்சுக்கிட்டேன்..” என்றவர் மகனின் பார்வையில், “இனி சொல்லலை.. குட்டிமா உன் மக தான்.. என் பேத்தி தான்” என்றார்.
அவன், ‘அது!’ என்பது போல் பார்க்கவும் விட்ட பேச்சை தொடர்ந்தார்.
“அம்ருக்கு உன்னை யாருனே தெரியாதது தான் குழப்பமாவே இருந்தது! ஒருவேளை அவளுக்கு அம்னிஷியா மாதிரி எதுவும் இருக்குமோனு கூட யோசித்தேன்” என்றார்.
“அப்போ இப்போ சும்மா போட்டு தான் வாங்கினீங்களா!” என்று அவன் போலியான அதிர்ச்சியுடன் வினவ,
அவரும் மென்னகையுடன், “ஆமாடா மகனே!” என்றிருந்தார்.
பின், “அம்ரு கிட்ட எப்போ உண்மையை சொல்லப் போற?” என்று கேட்டார்.
“அம்ரிக்கு என் மேல் இயல்பா காதல் மலரணும் ம்மா.. இப்போவே அவளுக்கு என் மேல காதல் இருக்குது தான் ஆனா அதை அவ முழுசா உணரனும்.. அதுக்கு அப்புறம் என்னோட நினைவு பெட்டகத்தை படிக்க கொடுப்பேன்”
“உன்னோட டைரிலாம் எங்கடா வச்சு இருக்க? இத்தனை வருஷம் என் கண்ணில் படவே இல்லையே!”
“ஒன்னே ஒன்னு தான்மா.. அதுவும் டாலி என் கிட்ட வந்த பிறகு எழுதினது தான்” என்றவன், “ஸ்டீல் பீரோ சீக்ரட் லாக்கரில் வச்சு இருக்கிறேன்.. அது உங்க கிட்ட கிடைத்து இருந்தாலுமே நான் மனசு வைக்காம உங்களால் படித்து இருக்க முடியாது.. அது சாதாரண டைரி மாதிரி இருக்காது.. லெதர் ஃபிலிப்(flip) கவர் உள்ள இருக்க டைரி பார்மெட்டில் இருக்கும் அன்ரூல்டு நோட்னு வேணா சொல்லலாம்.. அந்த லெதர் ஃபிலிப் கவரில் நம்பர் லாக் இருக்குது” என்று கூறி கண்சிமிட்டினான்.
‘அடப்பாவி!’ என்பது போல் அவர் பார்க்க,
அவன் புன்னகையுடன், “போதும் போதும்.. ஷாக்கை குறைச்சுட்டு, அய்யர் வந்து துரத்தி விடுறதுக்கு முன்னாடி கிளம்புங்க” என்றபடி எழுந்து நின்றான்.
அவரும் எழுந்தபடி, “அம்ரு அண்ணாவை பார்க்க போய் இருக்கா.. நான் தான் போய் பார்த்துட்டு மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொன்னேன்” என்றார்.
அதன் பிறகு இருவரும் வெளியே வர, அன்னையை தானியில் ஏற்றிவிட்டவன், “போனதும் காள் செய்து சொல்லுங்க” என்றான்.
‘சரி’ என்பது போல் தலை அசைத்தார். தானி கிளம்பியதும், தானும் கிளம்பி காவல் நிலையத்திற்கு சென்றவன், அன்னையிடம் உண்மையை கூறிய பிறகு மனம் லேசாக இருப்பது போல் உணர்ந்தான்.
அம்ரிதா தந்தை வீட்டில் இருந்ததால் மதியம் ஒரு மணிக்கே வீட்டிற்கு திரும்பி இருந்த மலர்விழியின் வரவு அவளுக்கு தெரியாமலேயே போனது.
மலர்விழி பற்றி மகன் எச்சரித்ததை அறியாத தேவகியும், அவளது வரவை கவனித்து ‘என்னவென்று’ விசாரித்த போது, “தலைவலி ஆன்ட்டி.. அதான் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்” என்ற அவளது பதிலை சந்தேகிக்கவில்லை. அவள் அவரை நேருக்கு நேர் பார்க்காமல் பேசியதையும், பாதி தெரிந்த முகத்தில் கண்ட சோர்வையுமே உடல் உபாதையின் விளைவு என்றே நினைத்தார்.
ஆனால் ஆற்றுவார் தேற்றுவாறின்றி அழுது கொண்டே இருந்த மலர்விழியின் மனமோ நேரம் செல்லச் செல்ல, உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருந்தது.
நேரம் மாலை ஐந்தரை மணியை நெருங்கிக் கொண்டு இருக்க, மலர்விழி கூடத்தில் இருந்த மின்விசிறியில் அன்னையின் புடவையை தூக்கு கையிற்றை போல் போட்டு முடிச்சிட்டு பெரிய முக்காலியின் மீது ஏறி நின்று தனது முடிவின் பயணத்தை தொடங்கி இருந்தாள்.