மலர்விழி எதிரில் அமர்ந்தவன் தீர்க்கமான குரலில், “அழுகையை நிறுத்து.. அழுகை எதற்கும் தீர்வைத் தராது.. முதல்ல அதிர்ச்சியில் வேதனையில் அழலாம், அது மனித இயல்பு.. ஆனா அழுகையிலேயே உழன்று உன்னை நீ இழக்கக் கூடாது..
பொதுவா பெண்கள் வீக்கர் ஜெண்டர்னு சொல்லுவாங்க.. ஆனா எனக்கு அதில் உடன்பாடு கிடையாது.. மன திடத்தில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள்.. அதுக்கு உதாரணமா உன் பக்கத்திலேயே ஒருத்தி இருக்கா..
பெண்ணால் சாந்த சொரூபியாவும் இருக்க முடியும், அழிக்கும் சக்தியாவும் இருக்க முடியும்.. இப்போ நீ அழிக்கும் சக்தியா வீறுகொண்டு எழுவதற்கான நேரம்” என்றான்.
அவனது பேச்சில் சற்றே உத்வேகம் கொண்டாலும், “எனக்கு.. என்ன செய்யனு தெரியலைணா.. நீங்களே சொல்லுங்க” என்று இறங்கிய குரலில் தான் பேசினாள்.
அவளது கையை தட்டி கொடுத்தபடி, “என்ன வீடியோ அது? என்ன சொல்லி மிரட்டுறான்னு சொல்லு.. நான் தீர்வு சொல்றேன்.. முதல்ல உன்னை சேஃப் ஸ்ஸோன்(zone) கொண்டு வந்துட்டு அப்புறம் அவனை கவனிச்சுக்கிறேன்” என்றான்.
“நான் குளிக்கிறதை வீடியோ எடுத்து வச்சு இருக்கிறான்” என்று கலங்கிய குரலில் கூறியவள் அடுத்து பேச முடியாமல் தேம்பினாள்.
“இப்போதைக்குள்ள நீ டூர் கூட போகலையே! அப்புறம் எப்படி, எங்க வச்சு எடுத்தான்? உனக்கு ஏதும் பாத்ரூமில் வைக்கிற பெர்ஃபியும்(perfume) கிப்ட் கொடுத்தானா?”
மறுப்பாக தலை அசைத்தவள், “போன வாரத்தில் ஒரு நாள் என்னை வீட்டில் ட்ராப் செய்ய வந்தான்.. அப்போ வீட்டில் யாரும் இல்லை.. ஆன்ட்டியும் கல்யாண வேலையா வெளியே போய் இருந்தாங்க.. அன்னைக்கு அவனுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்தேன்.. முதல்ல என்னோட ரெஸ்ட்ரூம் எதுனு கேட்டு போயிட்டு வந்தவன், பேசிட்டே தற்செயலா கொட்டுற மாதிரி ஜூஸ் முழுவதையும் என் மேல் கொட்டிட்டான்.. சாரினு பதறியவன் என்னை ட்ரெஸ் சேஞ் செய்ய சொன்னவன் அப்புறம் குளிச்சுட்டு வந்துடேன்னு சொன்னான்.. நான் அப்போ கூட அவன் கிளம்பியதுக்கு அப்புறமா குளிச்சிக்கிறதா தான் சொன்னேன்.. ஆனா அவன் ஏதேதோ சொல்லி என்னை குளிக்க அனுப்பினான்.. நான் குளிச்சிட்டு வந்ததும், முகம் மட்டும் அலம்பிக்கிறதா சொல்லி திரும்ப ரெஸ்ட்ரூம் போனவன் முகம் அலம்பிட்டு வந்து, அஞ்சு நிமிசத்தில் கிளம்பிட்டான்” என்றாள்.
“ஸோ முதல்ல ரெஸ்ட்ரூம் போனப்ப மொபைலில் வீடியோ ஆன் செய்து வச்சிட்டு வந்தவன், அடுத்து போனப்ப மொபைலை எடுத்துட்டு வந்துட்டான்”
‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
“இதை நெட்டில் போடாம இருக்க என்ன டிமான்ட் செய்றான்?”
அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் கலங்கிய விழிகளுடன் பார்வையை தாழ்த்த,
இதை போல் நிறைய பார்த்து இருந்த அவ்யுதகண்ணன் அந்த நொடியில் அண்ணனாக இல்லாமல் காவல் அதிகாரியாக மாறி, “அவன் மட்டுமா இல்ல குரூப்பாவா?” என்று கேட்டான்.
அவள் புரியாமல் விழிக்க,
ஒருநொடி மனைவி மற்றும் அன்னையை பார்த்தவன் பின், “அவன் கூட மட்டும் படுக்க சொல்றானா இல்லை அவனுடன் இன்னும் சிலர் கூட சேர்த்தா?” என்று வெளிப்படையாக கேட்டான்.
அவனது இந்த நேரடி கேள்வி தேவகி மற்றும் அம்ரிதாவிற்கு சங்கடமாக இருந்தாலும் சூழ்நிலையை கருதி அமைதியாகவே இருந்தனர்.
மலர்விழியோ மனதளவில் மிகவும் கூனி குறுகியபடி உடலை குறுக்கிக் கொண்டு அமர,
அவளை இன்னும் நன்றாக அரவணைத்த தேவகி அப்பொழுது தான் வாய் திறந்து, “இதில் உன் தவறு எதுவும் இல்லை.. தைரியமா இரு.. அண்ணா பார்த்துப்பான்” என்றார்.
அம்ரிதாவும் தீர்க்கமான கோப குரலில், “இப்போ எதுக்கு உன்னை நீயே தாழ்வாவும் கேவலமாவும் நினைச்சுக்கிற! இப்படி உன்னை நிர்பந்தப்படுத்தி கூப்பிடுற அந்த பரதேசி தான் ஈனப்பிறவி.. எப்போ எங்கே வர சொன்னான்னு சொல்லு.. உன் அண்ணா போய் அவனை உண்டுயில்லைனு ஆக்கிட்டு வருவாங்க” என்றாள்.
தேவகி அவளை வருடிக் கொடுத்தபடி, “உனக்கு நாங்க எல்லோரும் இருக்கிறோம்டா.. தைரியமா இரு” என்றார்.
சற்றே தைரியம் பெற்ற மலர்விழி, “நேத்து தான் வீடியோ அனுப்பி மிரட்டினான்.. ரெண்டு நாள் டைம் கொடுத்து நாளானைக்கு அவனோட வீட்டுக்கு தான் வர சொல்லி இருக்கிறான்.. காலேஜ் போற மாதிரி கிளம்பி நேரா அவன் வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறான்” என்றாள்.
“ஒன்னரை நாள் டைம் இருக்குதே! இனி அவனை நான் பார்த்துக்கிறேன்.. நீ கவலைப்படாம இரு.. இப்போதைக்கு அப்பா அம்மா கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம், நானே பக்குவமா எடுத்து சொல்லிக்கிறேன்” என்றவன் அன்னையைப் பார்த்து, “அம்மா பார்த்துக்கோங்க.. நான் ஸ்டேஷன் கிளம்புறேன்.. வர லேட் ஆகும்” என்றுவிட்டு மனைவியிடம், “டாலி எழுந்துக்கிற நேரம்.. நீ கீழ போ” என்று கூறி கிளம்பினான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் காவல் நிலையத்தில் இருந்தவன் விநாயகத்தை கைபேசியில் அழைத்து அவரிடமும் அவரது மகனிடமும் பேசினான். [இரண்டு நாட்கள் இரவு பணியில் இருந்ததால் விநாயகம் தற்போது வீட்டில் இருக்கிறார்.]
இரவு ஒன்பது மணி போல் வீட்டிற்கு வந்தவன் நேராக மாடிக்கு செல்லப் போக, அம்ரிதா, “மலர் கீழ தான் இருக்கிறா” என்றாள்.
“டாடி” என்றபடி ஓடி வந்த மகளைப் பார்த்து புன்னகையுடன், “ஹாய் டாலி” என்றபடி கை அலம்ப சென்றான்.
செல்லும் வழியில் அவனது பார்வை அங்கு அமர்ந்து இருந்த மலர்விழி மேல் படிந்து மீண்டது. அவளது முகத்தில் சிறு பதற்றம் இருந்தாலும் சிறு தெளிவும் திடமும் கலந்து இருப்பதை குறித்துக் கொண்டவன் நிம்மதி அடைந்தான்.
அவன் பின்னாடியே சென்ற குழந்தை, “டாடி அம்மா லென்ஸ் பார்க்காம கதவை திறந்துட்டாங்க” என்று புகார் கூறினாள்.
அம்ரிதா, “டாடியோட வண்டி சத்தத்தை கேட்டு தான் திறந்தேன்டா” என்று கூற,
குழந்தையோ, “டாடி வண்டி சத்தம் மாதிரியே ஒரு வண்டியில் வேற யாரும் வந்து இருந்தா?” என்று கேள்வி கேட்டு மடக்கினாள்.
“அதான! பதில் சொல்லுங்க மம்மி” என்று மகளை ஏற்றி விட்டான்.
அவள் அவனை முறைக்க, ஆதினியோ, “டாடியை முறைக்காம, அன்செர் மீ மம்மி” என்றாள்.
மகள் உயரத்திற்கு சற்றே குனிந்தவள், “எஸ்.. டாலி இஸ் ரைட்.. இனி லென்ஸ் பார்க்காம கதவை திறக்க மாட்டேன்.. ஓகே!” என்றாள்.
குழந்தை புன்னகையுடன் கட்டைவிரலை காட்டியபடி, “ஓகே” என்றாள்.
“இன்னைக்கு என்ன டின்னர்னு ஆச்சி கிட்ட கேட்டுட்டு வாங்க” என்று மகளை அனுப்பியவன் மலர்விழியிடம், “அவனுக்கு ட்ரப்(trap) வைத்து சிக்க வச்சாச்சு.. நீ பயப்படாம கவலைப்படாம இரு.. நாளைக்கு காலையில் விவரமா பேசிக்கலாம்” என்று அவசரமாக கூறினான்.
அடுத்து குளித்து வந்து மகளிடம் பள்ளி கதைகளை கேட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு மகளை தூங்க வைத்தவன் அம்ரிதாவிடம், “நீ தூங்கு.. எனக்கு வேலை இருக்குது” என்றபடி எழுந்தான்.
அவள், “இன்னும் முடியலையா?” என்று வினவ,
“சின்ன வேலை பாக்கி இருக்குது.. முடிந்ததும் வரேன்.. நீ தூங்கு”
“எனக்கு தூக்கம் வராது.. நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க”
“நான் இல்லாம தூக்கம் வராதோ!” என்று அவன் விஷமத்துடன் வினவ,
“எந்த நேரத்தில் என்ன பேச்சு பேசுறீங்க!” என்றாள்.
“இந்த நேரத்திலும் இப்படி பேசுறேன்னா, நிலைமை நம்ம கட்டுக்குள் வந்து சீராகிட்டு வருதுனு அர்த்தம்” என்றவன், “அப்போ உனக்கு இந்த நேரத்தில் பேசியது மட்டும் தான் நாட் ஓகேவா?” என்று கேட்டு கண்ணடிக்க,
ஒரு நொடி விழித்தவள் பின், “பிச்சு.. பிச்சு” என்று ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.
“எதை பிச்சு பிச்சு?” என்று அவன் அப்பொழுதும் விஷம புன்னகையுடன் வினவ, அவள் தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தாள்.
அதை எடுத்து மெத்தை மீது வைத்தவன் புன்னகையுடன் கூடத்திற்கு சென்றான்.