“தன்க்யூ அண்ணா அண்ணி” என்று மலர்விழி கூற,
“எதுக்கு டாடி கிளப் செய்தீங்க?” என்றபடி ஆதினி வந்தாள்.
மகளை தூக்கிபோட்டு விளையாட்டு காட்டியபடி, “மலர் அத்தை சூப்பரா படிச்சு கிளாஸ் பஸ்ட் வந்திருக்காங்க.. அதான் க்ளாப் செய்தேன்” என்றான்.
“ஓ! சூப்பர் அத்தை.. கங்ராட்ஸ்” என்றபடி குழந்தையும் கை தட்டினாள்.
“தன்க்யூடா பாப்பு குட்டி”
“ஓகே.. டாலி போய் பால் குடிங்க.. டாடி குளிக்கப் போறேன்.. இன்னைக்கு டாடி சீக்கிரம் கிளம்பணும்.. டாலிக்கு முன்னாடியே கிளம்பிடுவேன்” என்றான்.
“அப்போ ஈவ்னிங் சீக்கிரம் வரணும்”
“முயற்சி செய்றேன் பாப்பு” என்றவன், “இப்போ பால் குடி” என்றான்.
“ஓகே டாடி” என்ற குழந்தை, “ஆச்சி பால்” என்றாள்.
அடுத்து அம்ரிதாவிற்கு மகளுடன் நேரம் சரியாக இருக்க, தேவகிக்கு சமையல் அறையில் வேலை சரியாக இருந்தது.
அவ்யுதகண்ணன் குளிக்க செல்லும் முன் கார்த்திக்கை கண்காணிக்க கூறிய காவலரை அழைத்து, “அவன் ரெக்கவரி சென்டர் போனாலும் மொபைல், லேப்டாப் ரெண்டையும் கொடுத்துட்டு சாயுங்காலம் வந்து வாங்கிக்கிறதா தான் சொல்வான்.. இசக்கியை அனுப்பி அது ரெண்டையும் நான் வாங்கிக்கிறேன்.. நீங்க அவனை உங்க கண்காணிப்பிலேயே வச்சுகோங்க..
அண்ட் அந்த ரெக்கவரி சென்டர் எப்படிப்பட்டதுனு சொல்லுங்க.. அனேகமா நேர்மையான கடையா இல்லாம இல்லிகல் அக்டிவிட்டீஸ் புழங்குற கடையா தான் இருக்கும்.. அப்படி இருந்தா சொல்லுங்க, மொத்த கடையை ரெய்டு(raid) செய்ய நிர்மலை(உதவி துணை ஆய்வாளர்) அனுப்புறேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் மலர்விழி கல்லூரிக்கு கிளம்பி வர, தானும் கிளம்பி தயாராக இருந்த அவ்யுதகண்ணன், “நானும் உன் காலேஜ்கு தான் வரேன்.. உனக்கு முன்னாடியே அங்கே இருப்பேன்.. நீ போனதுமே அவன் பிரச்சனை செய்ய வாய்ப்பு இல்லை.. அப்படியே அவன் ஏதும் பிரச்சனை செய்தா, உன்னால் சமாளிக்க முடியலைனா என்னை கூப்பிடு” என்றான்.
“ஓகே அண்ணா” என்றாள்.
“போற வழியில் சின்ன வேலை இருக்குது.. ஸோ நான் இப்பவே கிளம்புறேன்” என்றவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
மலர்விழி காலை உணவை முடித்த பிறகு, “வரேன் ஆன்ட்டி.. வரேன் அண்ணி.. பைடா பாப்பு” என்றுவிட்டு நிமிர்வுடனே கிளம்பினாள்.
அவ்யுதகண்ணன் கணித்தது போல் கார்த்திக் கைபேசி மற்றும் மடிக்கணினியை சில சட்ட விரோத செயல்களைச் செய்யும் கடையில் தான் கொடுத்துவிட்டு கல்லூரிக்குச் சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த கடையில் சோதனை நடத்தப்பட்டு அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை இழுத்து மூடப்பட்டது.
அங்கே கல்லூரியில் வகுப்பிற்கு சென்ற கார்த்திக், “துரோகி” என்றபடி முகிலை அடிக்கப் போக,
இவனை வெகு சுலபமாக தடுத்த முகில் அதீத நக்கலுடன், “அதை நீ சொல்றியா?” என்றான்.
“எதுக்குடா மொத்தமா எல்லா பைல்ஸ் அழிச்சு, லேப்டாப் கரப்ட் பண்ண!”
“நீயே ஒரு கரப்டட் ஆள் தான்”
“பெரிய சீர் திருத்தவாதினு நினைப்பு! ****” என்று கெட்ட வார்த்தையில் திட்ட,
“நீ தான் அது” என்றபடி முகில் விட்ட ஒரு குத்தில் கார்த்திக் மூக்கு உடைந்து சிறிது இரத்தம் கசிந்தது.
கோபத்துடன் முகில் மேல் பாய்ந்த கார்த்திக் முகிலை அடிக்க முயற்சித்து இன்னும் சில அடிகளை பெற்றுக் கொண்டான்.
மற்ற மாணவர்கள் இருவரையும் பிரித்து நிறுத்திய போது, “இங்க என்னடா கலாட்டா?” என்றபடி உடற்பயிற்சி அளிக்கும் ஆசிரியர்(PT sir) வந்தார்.
கார்த்திக் முகிலனை முறைத்தபடி நிற்க,
அவனோ நக்கலுடன், “சார் கேட்கிறாரே! என்ன விஷயம்னு சொல்லிடவா?” என்று ஆசிரியருக்கு கேட்காத குரலில் கேட்டான்.
ஆசிரியர், “என்னங்கடா?” என்றார்.
முகில் வாய் திறக்கும் முன் கார்த்திக் அவசரமாக, “இவன் இடிச்சதில் நான் பெஞ்சில் இடிச்சுக்கிட்டேன் சார்.. அதான் என்னனு கேட்டுட்டு இருந்தேன்” என்றான்.
கார்த்திக்கை ஏளனமாக பார்த்த முகில், “தெரியாம தான் சார் இடிச்சேன்.. அதுக்கு போய் ரொம்ப துள்றான்” என்றான்.
“சின்ன பசங்களாடா நீங்க!” என்று அதட்டிய ஆசிரியர், “பிரின்சிபால் நைன் ஓ’கிளாக் எல்லோரையும் ஆடிட்டோரியத்தில் அஸ்செம்பில் ஆகச் சொல்லி இருக்கார்.. உங்க ஜூனியர்ஸ் கிட்டயும் சொல்லிடுங்க” என்றுவிட்டு சென்றார்.
அடுத்த சில நிமிடங்களில் கல்லூரியின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த அரங்கத்தில் கூடி இருந்தனர். கல்லூரி முதல்வர் ஒலிவாங்கியில் பேச ஆரம்பித்தார்.
(அவர் ஆங்கிலத்தில் பேசியது தமிழில்…)
“காலை வணக்கம் மாணவர்களே.. சின்ன விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக தான் இங்கே இப்போ நீங்க எல்லோரும் கூடி இருக்கிறீங்க.. அந்த விழிப்புணர்ச்சி உரையை நிகழ்த்த எஸ்.ஐ அவ்யுதகண்ணன் வந்து இருக்கார்” என்றவர் கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்த அவ்யுதகண்ணனைப் பார்த்து வரவேற்பாய் தலை அசைத்து, “உங்கள் வருகையில் இந்த கல்லூரி பெருமை கொள்கிறது” என்றார்.
பிறகு மாணவர்களைப் பார்த்து, “இனி அவர் பேசுவார்” என்றுவிட்டு கீழே இறங்கி சென்று முன் வரிசையில் அமர்ந்தார்.
தனது கம்பீர நடையுடன் மேடை ஏறிய அவ்யுதகண்ணன், “குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ்.. ரொம்பலாம் ரம்பம் போட்டு போர் அடிக்க மாட்டேன்” என்று ஆரம்பிக்க,
கூட்டத்தில் இருந்து, “அப்போ கொஞ்சமா ரம்பம் போடுவீங்களா சார்!” என்று ஒரு குரல் கேட்டது.
சத்தமாக சிரித்த அவ்யுதகண்ணன், “நான் பேசி முடித்ததும் நீங்களே அதை சொல்லுங்களேன்” என்றவன் அடுத்து தீர்க்கமான குரலில், “விஷயம் கொஞ்சம் சிரியஸ் ஸ்டுடென்ட்ஸ்.. ஸோ உங்க விளையாட்டுத் தனத்தை விட்டுட்டு நான் பேசுப்போறதை கவனீங்க ப்ளீஸ்.. என்ன கவனிக்கிறீங்களா?” என்று கேட்டான்.
“எஸ் சார்” என்று சத்தமாக மாணவர்கள் கத்தினர்.
கார்த்திக் மனதினுள் அபாய மணி அடிக்கவும் யாரும் அறியாமல் வெளியே செல்ல நினைத்து குனிந்தபடியே வரிசையில் இருந்து வெளியே வர, அவனையே கண்காணித்துக் கொண்டு இருந்த உடற்பயிற்சி ஆசிரியர், “எங்கப் போற?” என்று கேட்டார்,
“ரெஸ்ட்ரூம் சார்”
“பத்து நிமிஷம் கழிச்சு போய்க்கலாம்.. போய் உட்காரு” என்று அதட்டி அவனை உட்கார வைத்துவிட்டார்.
அவ்யுதகண்ணன், “இப்போ நான் பேசப்போற விஷயம் பெண்களுக்கு தான் ரொம்ப முக்கியமானது என்றாலும் பசங்களும் கேட்கலாம்.. ஏன்னா உங்க வீட்டிலும் பெண்கள் இருக்கிறாங்களே!
தொழில்நுட்ப முன்னேற்றம் எந்த அளவுக்கு நன்மையை தருதோ அந்தே அளவுக்கு தீமையையும் தருது.. இப்போ இருக்கிற உலகில் நிறைய சதை தின்னும் மிருகங்கள் பசு தோல் போர்த்தி உலாவிட்டு இருக்கிறது.. ஸோ நீங்க தான் கவனமா இருக்கணும்..
முக்கியமா பெண்கள்.. வெளி இடங்களில் தங்கும் போது ரொம்பவே கவனமா இருக்கணும்.. நீங்க ஆடை மாற்றும் முன்பும், குளிக்கும் முன்பும் ஹிடன் கேமரா இருக்குதானு பரிசோதிக்க தவறாதீங்க..
இன்னொரு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், நண்பன் தானே காதலன் தானே தெரிந்தவர் தானேனு யாரையும் நம்பி, வீட்டில் யாரும் இல்லாதப்ப வீட்டினுள் விடாதீங்க” என்றவன், “நீங்க எல்லோருமே வளர்ந்தவங்க தான்.. ஸோ கொஞ்சம் ஓப்பனா பேசலாமா!” என்றுவிட்டு தொடர்ந்தான்.
“நான் இப்போ ஹேண்டில் செய்ற கேஸ் பற்றி சொல்றேன்.. காலேஜ் படிக்கிற ஒருத்தன், மாணவிகளில் ஒருத்தியை தேர்ந்தெடுத்து காதலிக்கற மாதிரி நாடகம் ஆடி, அவ வீட்டில் ஆள் இல்லாதப்ப அவளுடன் வீட்டினுள் சென்று, அவளுக்கே தெரியாம அவ குளிக்கிறதையும் ஆடை மாற்றுவதையும் வீடியோ எடுக்கிறான்.. அப்புறம் அதை வைத்து மிரட்டி அந்த பெண்ணை தன்னோட இச்சைக்கு பலி ஆக்குறான்..
அந்த பெண் மீதான இச்சை தீர்ந்த பிறகு வேற ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திரும்ப அதையே செய்றான்.. இதுவரை மூன்று பெண்களை அப்படி செய்து இருக்கிறவன் நாலாவது பெண்ணை மிரட்டிய போது தான் என்னிடம் சிக்கினான்” என்றவன் பெண்கள் பக்கம் திரும்பி,
“இப்படி உங்களுக்கு நடந்தா, பயப்படவோ தப்பான முடிவையோ எடுக்காதீங்க.. துணிந்து நின்று அந்த ஈனப்பிறவியை எதிர்த்து போராடுங்க.. என்னைக் கேட்டால், நீங்க உங்க பேரென்ட்ஸ் கிட்ட இப்படி மிரட்டுறதை சொல்லலாம்.. முதல்ல திட்டினாலும் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க.. இல்லைனா என் உதவியை நீங்க எப்ப வேணாலும் கேட்கலாம்.. இதான் என்னோட நம்பர் **********
பெண்கள் வீக்கர் ஜெண்டர் கிடையாது.. உங்களால ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.. இவனை மாதிரியான விஷ ஜந்துக்களை நீங்க அழிக்கனுமே தவிர பணிஞ்சு போகக் கூடாது” என்றவன் மாணவர்கள் பக்கம் திரும்பி,
“இப்போ நான் சொன்னதை உங்க அக்கா, தங்கை, தோழி, காதலி, அம்மா, அத்தை, சித்தினு எல்லோர் கிட்டயும் சொல்லுங்க” என்றான்.
பின், “சொல்றது ஈஸி செயல்படுத்துறது தான் கஷ்டம்னு நினைக்காதீங்க.. நான் சொன்னதை செயல் படுத்திய பெண் உங்க காலேஜ் தான்.. எஸ், இப்போ நான் சொன்ன கேஸ் உங்க காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் சம்பந்தப்பட்டது தான்..
அந்த ஈனபிறவியும் உங்க காலேஜ் தான்.. பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் உங்க காலேஜ் தான்.. அண்ட் அவனை எதிர்த்து நிற்கிற நாலாவது பொண்ணும் உங்க காலேஜ் தான்” என்றதும் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.