“ரொம்ப வலிக்குதா டாடி?”
“எப்போ செரியாகும்?”
“நீங்க ஏன் கவனமா இல்லை?”
“அந்த பேட் பாய் என்ன செய்தீங்க?” என்ற மகளின் கேள்விகளுக்கு எல்லாம் அவ்யுதகண்ணனின் வாய் பதில்களை சொல்லிக் கொண்டு இருந்தாலும் கண்களோ தன்னை கண்டுகொள்ளாமல் உலாவிக் கொண்டிருந்த மனைவியையே சுற்றியது.
தேவகி, “குட்டிமா நாம பார்க் போகலாமா?” என்று கேட்க,
குழந்தையோ, “நோ.. டாடிக்கு அடி பட்டு இருக்குது” என்றாள்.
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
அவரை முறைத்த குழந்தை, “டாடி ஹெல்ப் வேணுமே!” என்றாள்.
“அம்மா பார்த்துப்பா.. நாம பார்க் போயிட்டு வரலாம்”
“நோ.. டாலி தான் டாடி பார்த்துப்பா” என்ற குழந்தை, “என்ன டாடி?” என்றாள்.
பார்வையை மகளிடம் திருப்பி, “ஆமாடா டாலி” என்றபடி மகளின் நெற்றியில் முத்தம் பதித்தவன், “ஆனா இது சின்ன காயம் தானே! ஸோ டாடியே மேனேஜ் செய்துப்பேன்.. நீங்க ஆச்சி கூட போய் விளையாடிட்டு வாங்க” என்றான்.
“நோ.. நோ.. சின்ன காயம் இல்லை.. அம்மா சொன்னாங்க.. டாடி அதிகமா கை அசைக்க கூடாது.. ஸோ டாலி டாடி மேல போய் விழக் கூடாது, டாடி கழுத்தை கட்டி விளையாடக் கூடாது, கையை பிடிச்சு தொங்கக் கூடாது அண்ட் டாடிய தூக்க விடக் கூடாது”
“அதெல்லாம் இல்லடா.. டாடி ஸ்ட்ராங் தான்.. இப்போ கூட டாடி டாலிய தூக்குவேன்” என்றபடி மகளை இடது கையில் தூக்கினான்.
“நோ.. நோ.. இறக்கி விடுங்க” என்று பதறிய குழந்தை, “அம்மா.. அம்மா” என்று கத்தி அழைத்தாள்.
“டாடிக்கு வலிக்கவே இல்லடா” என்றவன் வேகமாக சமையலறையில் இருந்து வெளியே வந்த மனைவியை பார்த்தபடி, “டாடி வேணா அம்மாவையும் தூக்கி காட்டவா?” என்று சீண்டலாக கூற, அம்ரிதா அவனை முறைத்தாள்.
குழந்தை, “அம்மா கீழ இறக்கி விட சொல்லுங்க” என்று கூற,
அவளோ அவனை முறைத்தபடியே, “நீ சொல்லியே கேட்கலை.. நான் சொல்லியா கேட்கப் போறாங்க? நான்லாம் உன் டாடிக்கு ஒரு பொருட்டே இல்லை” என்றாள்.
மனைவியின் இறுதி வாக்கியத்தில் புருவ முடிச்சுடன் அவளைப் பார்த்தான்.
அவ்யுதகண்ணன் காயத்திற்கு மருத்துவம் பார்த்த உடனே வீட்டிற்கு வரவில்லை. இரண்டு தையல்கள் போட்ட காயத்தை சிறியதாக காட்டும் வகையில் ஒரு புகைப்படத்தை எடுத்து மனைவி மற்றும் அன்னைக்கு புலனத்தில் அனுப்பிவிட்டு வேலையை தொடர்ந்து இருந்தான்.
ஊரில் இருந்து வந்திருந்த மலர்விழியின் தந்தையை அவரது அலுவலகத்திற்கு சென்று பார்த்து பக்குவமாக விஷயத்தை எடுத்துக் கூறி, மலர்விழி கார்த்திக் மீது புகார் கொடுக்க அனுமதி பெற்றதோடு அதை உடனே செயல் படுத்தியும் இருந்தான். கார்த்திக்கின் இழி செயலுக்கான புகாருடன் சேர்த்து கொலை முயற்சி மற்றும் காவலரான தன்னை தாக்கிய குற்றத்தையும் சேர்த்து இருந்தான்.
அதன் பிறகு வேறொரு வழக்கு விஷயமாக அலைந்தவன் மாலை 6 மணிக்குத் தான் வீடு திரும்பி இருந்தான். வீட்டிற்கு வருவதற்கு முன்பே மகளிடம் கைபேசியில் தன் காயத்தைப் பற்றி கூறி இருந்ததால் அவள் பயமின்றி தந்தையை எதிர்கொண்டாள்.
தேவகியும் காயத்தை ஆராய்ந்த பிறகு, “நல்லவேளை நீ கவனிச்சு மலரை காப்பாத்திட்ட.. வேலை பின்னாடி ஓடாம இப்பவாது கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடு” என்றதோடு முடித்துக் கொள்ள, அதில் நிம்மதியுற்றான்.
ஆனால் இப்போது வரை அவன் அருகே வராமல் அவ்வபோது முறைத்துக் கொண்டு இருக்கும் மனைவியை நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்.
ஆம், அவன் வந்த ஐந்து நிமிடத்திலேயே மலர்விழியும் அவளது பெற்றோரும் கீழே வந்து அவனது நலனை விசாரித்தும் நன்றி கூறியும் சென்ற பிறகு மகளின் விசாரணையில் சிக்கிக் கொண்டவனால் மனைவியை சிறிதும் நெருங்க முடியவில்லை. அவளும் நெருங்கவில்லை என்பது தான் உண்மை. அதனாலேயே தேவகி பேத்தியை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு செல்ல நினைத்தார்.
அவ்யுதகண்ணன் யோசனையுடன் மனைவியைப் பார்க்க,
அவனை பார்த்தபடியே, “பாரு.. அம்மா சொல்லியும் டாடி உன்னை கீழ இறக்கவே இல்ல” என்றவள் வினாடி இடைவெளியின் பின், “ஏன்னா உன் டாடிக்கு நான் யாரோ தான்” என்ற போது அவளது குரலுடன் சேர்த்து விழிகளும் கலங்கவும் அவசரமாக அறையினுள் சென்றுவிட்டாள்.
‘என்னாச்சு இவளுக்கு! எதுக்கு இப்படி தவிக்கிறா? நாம லேட்டா வந்த கோபத்துடன் வேற எதுவும் சேர்ந்து இருக்கும் போலவே!’ என்று நினைத்தவன் மகளை கீழே இறக்கியபடி, “டாலி ஆச்சி கூட பார்க் போயிட்டு வா” என்றான்.
தந்தையின் குரல் வேறுபாட்டில் மறுத்து பேசாமல், “ஷுர் டாடி?” என்று புருவம் சுருக்கியபடி கேட்ட குழந்தை,
அவன், “ஷுர்டா பாப்பு.. டாடி மேனேஜ் செய்துப்பேன்” என்றதும்,
“ஓகே ஆச்சி பார்க் போகலாம்” என்றாள்.
இருப்பினும், “ஹெல்ப் தேவைனா அம்மா கிட்ட கேளுங்க” என்ற குழந்தை தந்தையின் சம்மதத்தை பெற்றுக் கொண்டு அறையில் இருந்த அன்னையிடம் சென்று, “டாடிய பார்த்துக்கோங்க ம்மா” என்று கூறிவிட்டே கிளம்பிச் சென்றாள்.
அன்னை மற்றும் மகள் கிளம்பியதும் அறைக்கு சென்றவனை அம்ரிதா நிமிர்ந்தும் பார்க்காமல், “என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க” என்றிருந்தாள்.
“என்னாச்சுடா?” என்றபடி அவன் நெருங்க,
“ப்ளீஸ்.. என்னை தனியா விடுங்க.. இல்ல உங்கள ஹர்ட் செய்ற மாதிரி ஏதாவது பேசிடுவேன்” என்றவள் அப்பொழுதும் அவன் முகத்தை பார்க்கவில்லை.
“முதல்ல என் முகத்தை பார்த்து பேசு”
அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.
அவளை தன்னை பார்க்க வைக்கும் முயற்சியாக, “ஏன் என் முகத்தை பார்க்க பிடிக்கலையா?” என்று வினவ,
கோபமும் வலியுமாக அவன் முகம் நோக்கியவளோ சற்றே குரலை உயர்த்தி, “ஆமா பிடிக்கலை.. இன்னமும் இன்னொருத்தியை மனசில் சுமந்துட்டு இருக்க உங்களை பார்க்க பிடிக்கலை.. உங்க மனசில் நான் இல்லைனு தெரிந்தும் உங்களை காதலிக்கிற என்னை எனக்கு சுத்தமா பிடிக்கலை” என்று வெடித்தாள்.
தன்னவளின் காதல் மொழியை ரசித்து மகிழ முடியாமல் அவளது முந்தின வாக்கியத்தில் சிறு அதிர்வுடன் அவளை நோக்கியவன் பேச வாய் திறக்கும் முன் கை உயர்த்தி அவனை தடுத்தவள், “ப்ளீஸ் போலியா எந்த சமாதானமும் வேணாம்” என்றாள்.
“நான் சொல்றதை..” என்றவனின் பேச்சை இடையிட்டு,
“நீங்க பேசியதை கேட்டுட்டு தான் சொல்றேன்.. உங்களுக்கு என்னாச்சோனு நான் துடிச்சிட்டு இருக்க, நீங்களோ…” என்றவள் மேலே பேச முடியாமலும் விரும்பாமலும் அமைதியானாள்.
அவனோ புரியாத பார்வையுடன், “நான் என்ன செய்தேன்?” என்று கேட்டான்.
அவள் அவனை முறைக்க, “நிஜமாவே புரியலை” என்றான்.
அவள் அமைதியாகவே இருக்க, “ப்ளீஸ் என்னனு சொல்லு” என்றான்.
“அந்த நொடியை நினைச்சு பார்க்கவே நான் விரும்பலை.. ஏன்னா.. அந்த நொடியில் தான் உங்க மேல் நான் கொண்ட காதலை உணர்ந்தேன், ஆனா அந்த நொடியை யோசித்து பார்த்தப்ப, உங்க மனசில் இன்னமும் உங்க ராதா தான் இருக்கிறாங்கிறதையும் உணர்ந்தேன்” என்று அவள் வலியுடன் கூற,
“இப்பவும் புரியலை.. ஓப்பனா சொல்லு” என்றான்.
“இதுக்கு மேல என்ன ஓப்பனா சொல்லணும்?”
“ப்ச்.. எதை வச்சு என் மனசில் நீ இல்லைங்கிற முடிவுக்கு வந்த?”
“….”
“உன் மேல் காதல் இல்லாம தான் முத்தம் கொடுத்தேனா!” என்றதும் சட்டென்று கோபத்துடன் ஏதோ பேச வந்தவள் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு,
“என்னை பேச வைக்காதீங்க?” என்றாள்.
ஆனால் அவள் கூற வந்ததை புரிந்து உடல் இறுகியவன் கோபத்தை அடக்கிய குரலில், “ஸோ உன் மனசு எனக்கு முக்கியம் இல்லைனு சொல்ற.. அதாவது என் முத்தத்தில் காதல் இல்லை காமம் மட்டுமே இருந்ததுனு சொல்ற!” என்றான்.
அவள் பதில் கூறாமல் முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் கன்னத்தை பற்றி தன்னை நோக்க செய்தவன், “என் கண்ணுல காதலை நீ பார்க்கவே இல்லையாடி” என்று சிறு கோபமும் அதிக வலியும் நிறைந்த குரலில் அவன் வினவ,
அவனது கோபத்தை தாங்கியவளால் அவனது வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் வலியுடன் கூடிய தவிப்புடன் அவனை நோக்கியபடி, “ஆனா உங்க ராதாவை நீங்க இன்னும் மறக்கலையே! மறக்கலைங்கிறதை விட அந்த காதல் உங்க மனசில் இன்னும் உயிர்ப்புடன் இருக்குதுங்கிறதில் தான் எனக்கு இங்கே வலிக்குது.. ரொம்பவே வலிக்குது” என்றபடி தனது நெஞ்சை சுட்டிக் காட்டினாள்.
“அப்படி எல்லாம்..” என்றவனின் பேச்சை வேகமாக இடையிட்டவள்,
“என்ன! இல்லைனு சொல்லப்போறீங்களா? அவ மேல் காதல் இல்லாம தான் என்னை அந்த பெயர் சொல்லி கூப்பிட்டீங்களா?” என்றவள், “இதோ உங்களோட இந்த புரியாத பார்வையே சொல்லுதே! உங்க மனசில் அவ தான் நீக்கமற கலந்து இருக்கானு.. அதான் என்னை ராதுனு கூப்பிட்டதைக் கூட நீங்க உணரவே இல்லை.. அந்த குரலில் தான் என்ன ஒரு உருகல்!” என்றவள் அவனது கையை தட்டிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.
அதிர்ந்தாலும் அப்பொழுதும் தெளியாத பாவனையில், “நான் உன்னை ராதுனு கூப்பிட்டேனா? எப்போ?” என்று கேட்டவன் மனதினுள், ‘ஒருவேளை தூக்கத்தில் ஏதும் உளறி இருப்பேனோ!’ என்று தான் நினைத்தான்.
அவளது அமைதியில் பொறுமை இழந்து சற்றே குரலை உயர்த்தி, “அம்ரி” என்று அழைத்தான்.
அவள் அப்பொழுதும் அசைந்து கொடுக்கவில்லை என்றதும் அவளது முகத்தை பற்ற போக, சட்டென்று வேகமாக பின்னால் நகர்ந்தவள் அவனது கைக்கு எட்டாதவாறு அமர்ந்துக் கொண்டாள்.
அவளது செயலில் காயப்பட்டாலும் அவளுக்கு உண்மை தெரியாதே என்ற எண்ணத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று தனது நினைவு பெட்டகத்தை எடுத்து வந்து எண் பூட்டை திறந்து அவளிடம் நீட்டியபடி, “இதை படிச்சுப்பாரு” என்றான்.
அவள் அதை வாங்காததோடு அவன் முகத்தை கூட பார்க்கவில்லை.
நினைவு பெட்டகத்தை அவள் அருகே மெத்தை மீது வைத்தவன், “இதில் இரண்டாவது பக்கத்தை படிச்சாலே உன்னோட இந்த வலியும் தவிப்பும் தேவையே இல்லைனும், கோபம் அர்த்தமற்றதுனும் புரியும்” என்றுவிட்டு வெளியேறினான்.
அவன் சென்ற பிறகும் அப்படியே அமர்ந்து இருந்தவள் சில நிமிடங்கள் கழிந்த பிறகே மெல்ல அந்த நினைவு பெட்டகத்தை கையில் எடுத்தாள்.
முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் “என் ராதை” என்று இதய வடிவத்தினுள் எழுதி இருக்க, அதை வேகமாக மூடி மெத்தை மீது போட்டுவிட்டாள்.