இரண்டு நிமிடங்கள் கழித்து அவன் கூறிய ‘இரண்டாவது பக்கம்’ என்ற வார்த்தைகள் நினைவிற்கு வரவும் அதை எடுக்க கையை நீட்டியவள் அதை தொடுமுன் மறுப்பாக தலையசைத்தபடி கையை மடக்கிக் கொண்டாள்.
ஆனால் அடுத்த சில நொடிகளில் தைரியத்தை ஒருவாறு வரவழைத்துக் கொண்டு அதை எடுத்து இரண்டாவது பக்கத்திற்கு சென்றாள்.
படிக்கப் படிக்க அவன் எழுதி இருந்த முதல் சந்திப்பு அவள் கண் முன் தெளிவில்லாத ஆணின் உருவத்துடன் காட்சியாக தோன்ற, அதிர்வுடனும் நம்ப முடியாமலும் வேகமாக எழுந்து சென்று அவன் முன் நின்றாள்.
கூடத்தில் மெத்திருக்கையில் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடியபடி அமர்ந்து இருந்தவன் தன்னவளின் வருகையை உணர்ந்த பிறகும் கண்களை திறக்கவில்லை.
அவனை அழைக்க நினைத்தாலும் அந்த எண்ணத்திற்கு குரல் வடிவம் கொடுக்க முடியாமல் தவிப்புடன் அவள் நின்றிருக்க,
அதை அவளவன் உணர்ந்தானோ என்னவோ! கண்களை மூடிய நிலையிலேயே, “எஸ்.. இந்த கண்ணனோட அமிர்தமான ராதா நீ மட்டும் தான்” என்றான்.
அவளது கன்னங்களில் கண்ணீர் கடகடவென்று இறங்க, மன்னிப்பு கேட்க நினைத்து, “என்..னை..” என்று ஆரம்பிக்க,
அவன் அதே நிலையில் இருந்தபடி, “இதில் உன் தவறு எதுவுமே இல்லை.. உன்னோட கண்ணனுக்காக ஒன்னே ஒன்னு மட்டும் செய்.. என்னோட பதினைந்து வருட காதலும் ஏக்கமும் தவிப்பும் கொட்டி கிடக்கிற அந்த நினைவு பெட்டகத்தை முழுசா படிச்சிட்டு வா” என்றான்.
சில நொடிகள் கண்ணீரும் தவிப்புமாக அவனை பார்த்தவள் பின் அறையினுள் சென்று படிக்க ஆரம்பித்தாள்.
சில நிமிடங்களில் தன்னை ஒருவாறு தேற்றிக் கொண்டவன் அன்னையை கைபேசியில் அழைத்தான்.
அவர் அழைப்பை எடுத்து, “சொல்லுப்பா” என்றதும்,
“பர்ஸ் கையில் வச்சு இருக்கிறீங்களாமா?” என்று கேட்டான்.
“கால் மணி நேரம் கழிச்சு நாங்க அண்ணா வீட்டுக்கு போறோம்.. அண்ணா கிட்ட உனக்கு அடிபட்ட விஷயத்தை எடுத்து சொல்லி கூட்டிட்டு வரேன்” என்றவர், கேட்கவா வேண்டாமா என்ற சிறு தயக்கத்துடன் “அம்ரு எப்படி இருக்கா?” என்று கேட்டார்.
“நினைவு பெட்டகத்தை படிச்சிட்டு இருக்கா”
சற்றே ஆசுவாசம் அடைந்தவர், “இனி எல்லாமே சரி ஆகிடும்.. பார்த்துக்கோ.. நாங்க மெதுவாவே வரோம்.. இருந்த ஒரே ஒரு ஹோம்வொர்க்கை குட்டிமா நீ வரதுக்கு முன்னாடியே முடிச்சிட்டா.. ஸோ பிரச்சனை இல்லை.. அங்க இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி போன் செய்றேன்” என்றார்.
“தேங்க்ஸ்மா”
“அடி தான் வாங்கப் போற” என்றவர், “குட்டிமா கூப்பிடுறா.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்து இருந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அம்ரிதா சத்தமாக கதறி அழும் சத்தம் கேட்கவும் அவசரமாக எழுந்து உள்ளே சென்றான்.
நினைவு பெட்டகத்தை நெஞ்சோடு அணைத்து பிடித்தபடி கதறிக் கொண்டு இருந்தவளை விரைந்து சென்று அணைத்து கொண்டான்.
நினைவு பெட்டகத்தை விடாமல் கதறி அழுதபடியே இடது கரத்தினால் அவனை தொடர்ந்து குத்தினாள்.
“ஒன்னுமில்லைடா.. ஒன்னுமில்லை” என்றபடி அவளை தனது நெஞ்சில் இறுக்கமாக பொத்திக் கொண்டான்.
அடுத்த சில நிமிடங்களில் அவனது சட்டையை இறுக்கமாக பற்றி இருந்தவளின் அழுகை தேம்பலாக மாறியது.
அப்பொழுதும் அவன் “ஒன்னுமில்லைடா” என்று மெல்லிய குரலில் கூறியபடியே அவளை வலது கையால் அணைத்து இடது கையால் அவளது முதுகை வருடிக் கொண்டிருந்தான்.
மெல்ல அழுகையை நிறுத்தி இருந்தவள் சடாரென அவனிடமிருந்து விலக, “என்னடா?” என்று கேட்டான்.
“உங்க கை” என்று அவள் கூற, “இதெல்லாம் ஒன்னுமே இல்ல” என்றவன் அவளை மீண்டும் அணைத்துக் கொள்ள போக,
மறுப்பாக தலை அசைத்தவள், “லெப்ட் ஹன்ட் யூஸ் பண்ணுங்க” என்றபடி அவனது நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அவன் மென்னகையுடன் இடது கையால் அவளை அணைத்து, வலது கையிற்கு அழுத்தம் கொடுக்காமல் அணை போல் சுற்றி வைத்துக் கொண்டான்.
“என் வாழ்க்கையில் எனக்கு தேவையான முக்கியமான நேரங்களில் எல்லாம் நீங்க வந்து இருக்கிறீங்க.. முதல் முறை எனக்கு உங்களை அடையாளம் தெரியலை.. ரெண்டாவது முறை நீங்க உங்களை அடையாளப்படுத்திக்க விரும்பலை.. கடைசியா இப்போ வந்து இருக்கிறீங்க.. முதல் ரெண்டு முறை மாதிரி இல்லாம இந்த முறை நிரந்திரமா என் கூடவே இருந்துருங்க” என்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
வார்த்தைகளின்றி தனது இறுகிய அணைப்பின் மூலம் பதிலளித்தவன் தனது கன்னத்தை அவளது உச்சந் தலையில் பதித்துக் கொண்டான்.
சில நொடிகள் கழித்து தலையை மட்டும் நிமிர்த்தி அவனை நோக்கியவள், “தெய்வநாயகம் அங்கிள் அண்ட் மீனா ஆன்ட்டி முயற்சிக்கலைனா கடைசி வரை என் நினைவிலேயே வாழ்ந்து இருப்பீங்கல!” என்றாள்.
அவன் புன்னகையை மட்டும் பதிலாக தர,
“ஆண்களை மொத்தமா வெறுத்த நிலையில் இருக்கப்பவே, பதினைந்தே நாளில் உங்களை காதலிக்க வைத்த உங்களால் அப்போ முடிந்திருக்காதா என்ன!” என்றாள்.
“அப்போ உன் படிப்பு எனக்கு முக்கியமா பட்டுது அண்ட் இன்னொரு விஷயம்.. என்னை நீ நண்பனா தான் பார்த்த.. உன் நம்பிக்கையை உடைத்து காதலனா வந்து சட்டுன்னு நிற்க முடியலை”
அவள் அவனிடமிருந்து விலக முயற்சிக்க, அணைப்பை வலுவாக்கியவன், “எதா இருந்தாலும் இப்படியே இருந்து சொல்லு.. இல்ல கேளு” என்றான்.
“பதினைந்து வருஷம்! அப்படியும் சொல்ல முடியாது.. கடைசி வரை கூட இப்படியே இருந்து இருப்பீங்க.. எப்படி இப்படி!”
மென்னகை புரிந்தவன் அவளது நெற்றியில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்தான்.
கண்களை மூடி அதை ரசித்தவள் பின் அவனைப் பார்த்தபடி, “உங்க காதல் என்னை பிரம்மிக்க வைக்குது.. நெஞ்சம் வெம்பி தவிக்குது” என்றவள் அதீத தவிப்புடன் நோக்கியபடி, “ஆனா உங்க காதலுக்கு நான் தகுதியானவளா?” என்று நிறுத்தினாள்.
அவளது கேள்வியின் உட்கருத்தை புரிந்துக் கொண்டவன் ஆழ்ந்த பார்வையுடன், “தகுதினு எதை சொல்ற நீ? அழியக் கூடிய உடலையா அழியாத மனசையா?” என்று கேட்டான்.
லேசாக கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கியவள், “லவ் யூ கண்ணா” என்றபடி அவனது இதழில் இதழ் பதித்தாள்.
அவள் மென்மையாக ஆரம்பித்ததை சற்றே வன்மையாக மாற்றியவன் தனது காதலின் ஆழத்தை முத்தத்தின் வாயிலாக கடத்த நினைத்தானோ!
சில நிமிடங்கள் நீடித்த அந்த முத்தத்தின் தாக்கத்தில் தன்னவளை மொத்தமாக எடுத்துக்கொள்ள அவனது ஒவ்வொரு அணுவும் துடித்தாலும், தன்னவளின் மனநிலையை கருத்தில் கொண்டு விலகவே செய்தான்.
அவள் கேள்வியாக நோக்க,
மென்னகையுடன், “காலம் நீண்டு கிடக்குது” என்றான்.
“நீண்ட காலம் நீங்க காத்திருக்கலாம் ஆனா இனியும் உங்களை காக்க வைக்க என்னால் முடியாது” என்றபடி அவள் அவனது இதழை நெருங்க,
அவளை இதழணைக்க விடாமல் அணைத்து பிடித்துக் கொண்டவன், “இப்போ நீ உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்க.. அண்ட் நாம பேச வேண்டியது..” என்றவனின் மீதி வார்த்தைகள் அவளது இதழணைப்பில் அடங்கி போயிற்று.
இம்முறை அவளது முத்தத்தை ரசித்து அனுபவிக்க மட்டும் செய்தவன் அவள் முத்தமிட்டு இதழ் பிரித்ததும் விலகி எழுந்தபடி, “ஹாலுக்கு போய் பேசலாம்” என்றான்.
தனக்காக பார்க்கும் அவனது மன கட்டுப்பாட்டில் பிரம்மித்தவள், “முத்த வகைகள் சொல்லித் தரேன்னு சொன்னீங்க!” என்று சீண்டினாள்.
சிரித்தபடி “கண்டிப்பா” என்றவன், “ஆனா அதுக்கு முன்னாடி பேச வேண்டியது நிறைய இருக்குது” என்றான்.
“போர்த்திட்டு படுத்தா என்ன! படுத்துட்டு போர்த்தினா என்ன!” என்றபடி புருவம் ஏற்றி இருக்கினாள்.
லேசாக கண்களை விரித்தவன், “நீ சரியே இல்ல” என்றான்.
“இப்போ தான் சரியா இருக்கிறேன்”
ஆசை கொண்ட மனம் தன்னவளை எடுத்துக்கொள்ள துடித்தாலும் கடைசி முயற்சியாக, “கை சரியாகட்டும்” என்றான்.
“யாரோ இதெல்லாம் ஒன்னுமே இல்லனும் என்னை தூக்கி காட்டுறதாவும் சொன்னாங்க!” என்றவள் உதட்டோர சிரிப்புடன், “மோர்ஓவர் நான் தானே உங்களை தாங்கப் போறேன்.. உங்க கைக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கலாம்” என்று கூறி கண் சிமிட்டினாள்.
சத்தமாக சிரித்தவன், “இப்போ என் முன்னாடி இருக்கது அம்ரிதா இல்ல.. முழுசா இந்த கண்ணனோட ராதையா மாறி இருக்க அம்ரி” என்றான்.
“அதே தான்.. உங்க விளக்கம் எதுவும் எனக்கு இப்போ தேவையே இல்லை.. அது எதுவும் இல்லாமயே நான் முழுசா உங்க ராதாவா மாறனும்னு நினைக்கிறேன்” என்றாள்.
அதன் பிறகு தடை ஏது! தன்னவளை மொத்தமாக கொள்ளையிடும் வேலையில் இறங்கினான் அந்த காவலன்.
“ராதி!” என்று காதலும் தாபமுமாக அழைத்தவன் இதழணைத்தபடியே அவளுடன் மஞ்சத்தில் சரிந்தான்.
முத்த தேடலை ஆரம்பித்தவனின் கரம் அவளது வெற்றிடையை அழுத்தி பற்றியது. என்ன தான் தேடலை தொடங்கி இருந்தாலும், தாபத்தில் தன்னை தொலைக்காமல் தன்னவளின் உணர்வுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே தான் இருந்தான்.
சில நொடிகள் கழித்தே அதை உணர்ந்தவள் அவன் கண்களை காதலுடன் நோக்கியபடி, “அம் ஓகே கண்ணா” என்றாள்.
அதன் பின் அவனது இதழ்கள் தன்னவளின் முகத்தில் முத்த ஊர்வலம் நடத்த, கரமோ அவளது மேனியில் வலம் வர தொடங்கியது.
இதுவரை அல்லாத வகையில் அவனது ஆழ்ந்த இதழ் முத்தத்திலும், கரத்தின் தீண்டலிலும் அவளது மொத்த அணுக்களும் புத்துயிர் பெற்றதை போல் உணர்ந்தாள்.
அந்த சம்பவத்தின் தாக்கம் சிறிதுமின்றி அவளது நெஞ்சம் முழுவதும் அவளவனும் அவனின் காதலும் மட்டுமே நிறைந்து இருக்க, அதை அவளது உடல் மொழியில் இருந்து உணர்ந்து கொண்டவன் நிம்மதியுடன் தேடலை ரசனையுடன் அனுபவித்து தொடர்ந்தான்.
என்ன தான் மனதினுள் தாபம் கொட்டிக் கிடந்தாலும் அவனது ஓவ்வொரு செயலிலும் அவ்வளவு நிதானம் இருந்தது. தன்னவளை ஒரு பூவின் இதழை கையாளுவதுப் போல் மென்மையாகவே கையாண்டான்.
கரங்கள் பயணித்த வழியே இதழ் கொண்டு பயணிக்க ஆரம்பித்தவன் தனது ஒவ்வொரு தீண்டலையும் தானும் ரசித்து தன்னவளையும் ரசிக்கச் செய்தான்.
ஒரு கட்டத்தில் உணர்வுகளின் பிடியில் தத்தளித்தவள் மொத்தமாக அவனுள் கரைந்திட விரும்பி, “கண்ணா” என்று காதலும் தவிப்புமாக முனங்கியவள் அவனது சிகைக்குள் கரத்தை நுழைத்து இறுக்கிப் பிடித்தபடி அவனது முகத்தை நெஞ்சோடு சேர்த்து அழுத்தினாள்.
அதன் பிறகு இதழ் அணைப்புகளின் மெல்லிய சத்தமும், “கண்ணா” என்ற அவளது திணறலான அழைப்பின் சத்தமும், “ராது.. ராதி” என்ற அவனது கிறங்கிய அழைப்பின் சத்தமுமே அந்த அறையை நிறைத்தது.