அதே நேரத்தில் தனது நண்பன் தெய்வநாயகத்தை கைபேசியில் அழைத்த குருநாதன் அவர் அழைப்பை எடுத்ததும், “தெய்வா பையன் வீட்டில் எல்லாத்தையும் சொல்லிட்ட தானே? அதுக்கு அப்புறம் தானே அவங்க சரி சொன்னாங்க? இன்னொரு முறை அடி வாங்கினா என் பொண்ணு மட்டுமில்லை நானுமே தாங்க மாட்டேன்” என்றார்.
“மிலிட்டரி மேன் குருநாதன் எங்க போனான்?”
“இப்போ இருக்கிறது அம்ரிதாவோட அப்பா மட்டும் தான்”
“நீயாடா இது!”
“இப்பவும் என் உயிருக்கு நான் பயப்படலை.. ஆனா எனக்கு அப்புறம் அம்மு தனியா இருப்பானு நினைக்கும் போது தான்..”
“அதெல்லாம் உனக்கு எதுவும் ஆகாது.. ஸ்டன்ட் வைக்கிறது எல்லாம் இப்போ சர்வ சாதாரணம்.. உன் பேரப்பிள்ளைக்கு கல்யாணம் நடத்துற அளவுக்கு நீ ஜம்முனு இருப்ப.. தேவை இல்லாததை யோசிக்காம அம்ரிதா கிட்ட சம்மதத்தை வாங்குற வேலையை மட்டும் பாரு.. மத்தது தானா நடக்கும்”
“அம்மு கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டா.. ஆனா பையன் கிட்ட பேசினதுக்கு அப்புறம் தான் முழு சம்மதம் சொல்லுவா”
“அப்போ கவலையை விடு.. ஒரு மாசத்தில் டும் டும் டும் தான்”
“பையன் வீட்டில் எல்லா விஷயமும் நிஜமா பேசிட்ட தானே?”
“என் மேல நம்பிக்கை இல்லையா?”
“அப்படி இல்லைடா.. என்னவோ அந்த பையன்.. சரி விடு”
“நீ ஏன் தயங்குறனு எனக்கு புரியுதுடா.. அம்ரிதாக்கு நடந்ததை குறையா நினைச்சு இந்த விஷயத்தை அட்ஜஸ்ட் செய்துக்கோனு நான் சொல்லலை.. அந்த ஒரு விஷயத்தில் சறுக்கினாலும் அவ்யுத் நல்ல பையன் தான்டா..
நம்ம அம்ரிதா மாதிரி தான் அவனும் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கிறான்.. ப்ரேக்-அப் அடுத்து உடனே அடுத்த பொண்ணுனு இருக்கிற இந்த காலத்தில் இப்பவரை தனியா தான் இருக்கிறான்.. அதுவும் கை குழந்தையை வச்சுட்டு கொஞ்சமும் சிரமம் பார்க்காம அவனே தான் வளர்த்தான்.. என்ன தான் அவன் அம்மா ஹெல்ப்-க்கு இருந்தாலும், அப்பவும் இப்பவும் குழந்தை அவன் வளர்ப்பு தான்.. தங்கமான குழந்தை”
“என்னவோ சொல்ற.. உன்னை நம்பி தான் இந்த வரன் பத்தி அம்மு கிட்ட பேசினேன் ஆனா இந்த விஷயத்தை பத்தி எதுவும் சொல்லலை”
“விடு பார்த்துக்கலாம்” என்றவர், “அவ்யுத் கிட்ட பேசிட்டு சொல்றதா தேவகி சொன்னதா மீனா சொன்னா.. நான் என்னனு விசாரிச்சுட்டு சொல்றேன்” என்றார்.
“அப்போ இன்னும் பையனுக்கு விஷயம் தெரியாதா?”
“பையனோட அம்மாவே ப்ராட் மைண்டடா இருக்கும் போது, அவங்க பையன் மட்டும் எப்படி இருப்பான்? நேர்மையானவன்.. கையும் சுத்தம்.. உனக்கு ஏத்த மருமகன் தான்”
“நேர்மையானவன் செய்ற வேலையா அது?”
“டேய்! நான் வேலையில் சொன்னேன்”
“வேலையில் நேர்மை முக்கியம் தான் ஆனா சொந்த வாழ்வில் ஒழுக்கம் ரொம்பவே முக்கியம்.. அம்மு விஷயத்தில் நடந்தது வேற, ஆனா அவ்யுத் விஷயத்தில் அப்படியா?”
“தப்பு செய்றவனும் ஒழுக்கமில்லாதவனும் தன் தப்பை மூடி மறைக்க தான் பார்ப்பான்.. ஆனா அவ்யுத் அப்படி இல்லையே! குழந்தையை கூட அவன் தானே வளர்க்கிறான்! அவன் சொல்லி தானே கல்யாணம் ஆகலை என்ற விஷயமே நமக்கு தெரியும்! இல்லைனா மத்தவங்க மாதிரி நாமளும் கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டதா தானே நினைப்போம்!”
“என்னவோ போடா!”
“நாதா.. யானைக்கும் அடி சறுக்கும்னு நினைச்சு இந்த விஷயத்தை விட்டுத்தள்றதா இருந்தா மட்டும் இந்த சம்பந்தத்தை ப்ரோசீட் செய்யலாம் இல்லை ட்ராப் செய்திடலாம்” என்றவர், “என்னை கேட்டா, இதை ட்ராப் செய்தா நிச்சயம் ஒரு நல்ல பையனை நீ வேணாம்னு சொல்றனு தான் சொல்வேன்.. சரி விடு.. உன் மனசுக்கு ஒப்பலைனா என்ன செய்ய! நம்ம அம்ரிதாக்கு வேற நல்ல பையன் கிடைக்காமலா போவான்! இன்னொரு வரன் கூட இருக்கிறதா சொன்னியே! வரன் சொன்னவர் நல்ல பழக்கம் தானே?” என்று கேட்டார்.
சில நொடிகள் மௌனத்தில் கழிய தெய்வநாயகம், “என்னடா?” என்றார்.
“இன்னொரு வரனை சொன்னவர் ஜிம் மூலமா தான் பழக்கம்.. நல்ல பழக்கம் அண்ட் நம்பகமான ஆள் தான் ஆனா உன் போல் இல்லை” என்றவர் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, “சரிடா.. நீ சொல்றபடி அதை விட்டுத்தள்ளிடுறேன்.. உன்னை நம்பி இந்த சம்பந்ததுக்கே சரி சொல்றேன்” என்றார்.
“ரொம்ப சந்தோசம்டா” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்த தெய்வநாயகம், “கவலைப்படாதடா.. இது நல்ல இடம்.. தேவகி மீனாவோட க்ளோஸ் பிரெண்ட்.. அந்த ஒரு விஷயம் இடிச்சாலும், அந்த பொண்ணு பிரிந்தது கூட அவ்யுத் பக்கம் தப்பு இருக்காதுனு மீனா உறுதியா சொல்றா..
ரொம்ப க்ளோஸ் இல்லைனாலும் எனக்குமே அந்த பேமிலி கூட நேரிடையான பழக்கம் உண்டு.. அந்த ஒரு விஷயத்தை தவிர்த்தா நிஜமாவே ரொம்ப நல்ல பையன் தான்டா.. குழந்தையை எப்படி பார்த்துப்பான் தெரியுமா! நீ அம்ரிதாவை பார்த்துக்கிறதை விட நல்லாவே பார்த்துக்கிறான்.. அந்த குழந்தைக்கு எல்லாமே அவன் தான்..” என்றார்.
“சரிடா.. அவங்களுக்கு ஓகேனா நாளைக்கு ஈவ்னிங் 6.30 மணிக்கு வீராநகர் அமுல் ஐஸ்-கிரீம் ஷாப்பில் அம்ரிதாவை பார்க்க அந்த பையனை வர சொல்லு.. தனியா பேசணும்னு தான் சொன்னா”
“சரி.. நாளைக்கு காலையில் பேசிட்டு சொல்றேன்” என்றவர், “எனக்கு என்னவோ இந்த வரன் நல்லபடியா அமையும்னு தான் தோணுது.. எதையும் பத்தி கவலைப்படாம நிம்மதியா தூங்கு” என்றார்.
“சரி.. குட் நைட்” என்று கூறி அவரது பதிலை பெற்றுக் கொண்டு அழைப்பை துண்டித்தார்.