அடுத்த நாள் காலையில் ஆதினி எழுந்ததும் நேரே கூடத்தில் இருந்த தந்தையிடம் சென்று, “குட் மார்னிங் டாடி.. கை இப்போ எப்படி இருக்குது?” என்று தான் கேட்டாள்.
“குட் மார்னிங் டாலி” என்றவன் மகளை இடது கையால் தூக்கியபடி, “பெட்டர்டா” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டான்.
குழந்தை, “அம்மா” என்று இம்முறையும் கத்தி அழைக்க,
சமையல் அறையில் இருந்து வெளியே வந்த அம்ரிதா அவனை முறைக்க, அவனோ மாய கண்ணனைப் போல் புன்னகைத்தபடி அவளை நெருங்கி வலது கையால் லேசாக அணைத்து, “லவ் யூ மிமி” என்று கூறி கன்னத்தில் சற்று அழுத்தமாகவே முத்தம் கொடுத்தான்.
முதலில் சிறு அதிர்வுடன் கண்கள் விரித்தவள் பின் மகள் முன் இப்படி நடந்து கொண்டதிற்காக கடுமையாக முறைத்தாள்.
“என்னை கேட்டால், குழந்தைங்க முன்னாடி இப்படி இருப்பது தவறு இல்லை.. சரினு தான் சொல்லுவேன்.. அணைப்பது, இப்படி கிஸ் பண்ணுவதுனு லிமிட்டில் இருந்தா ஓகே தான்.. அப்போ தான் ஆரோக்கியமான அன்யோனியமான காதல் எதுனு தெரிந்து வளருவாங்க” என்றவன் மகளைப் பார்த்து, “என்னடா டாலி” என்றான்.
குழந்தையும், “எஸ் மரேஜ் அப்புறம் டாடி மம்மி இப்படி செய்தா தப்பில்லை.. வேற யாரும் தான் செய்யக் கூடாது” என்றாள்.
“சமத்து பாப்பு” என்றவன், “லவ் யூ ஸோ மச் டாலி” என்றபடி மகளின் கன்னத்தில் முத்தமிட,
குழந்தை, “லவ் யூ ஸோ மச் டாடி” என்றபடி அவனது கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ ஸோ மச் மம்மி” என்றபடி அன்னையின் கன்னத்திலும் முத்தமிட்டாள்.
அம்ரிதாவும், “லவ் யூ ஸோ மச் தங்கம்” என்றபடி மகளின் கன்னத்தில் முத்தமிட,
குழந்தையோ, “டாடிக்கு?” என்றாள்.
தயங்கிய அம்ரிதா சிறு சங்கோசத்துடன் அவனைப் பார்க்க, அவனோ குறும்பு கண்ணனாக புருவம் உயர்த்தி சிரித்தான்.
அதற்குள் குழந்தை, “ஹ்ம்ம்.. லவ் யூ சொல்லி முத்தம் கொடுங்கமா” என்றாள்.
மகள் விட மாட்டாள் என்பதை உணர்ந்து சிறு சங்கோஜத்துடனே, “லவ் யூ மான்ஸ்டர்” என்று கூறி அவனது கன்னத்தில் பட்டும் படாமலும் லேசாக இதழ் ஒற்றி எடுத்தாள்.
இவர்களின் அன்யோனியத்தை ரசித்தபடி சமையலறை வாயிலில் நின்றிருந்த தேவகியை கண்ட ஆதினி தந்தை கையில் இருந்து இறங்கி ஓடியபடி, “லவ் யூ ஆச்சி” என்று கூறி, அவர் தூக்கியதும் கன்னத்தில் முத்தமிட்டாள்.
தேவகியை கண்டதும் அம்ரிதா வெட்கத்துடன் அவ்யுதகண்ணன் பின் மறைய, அதை புன்னகையுடன் ரசித்த தேவகி பேத்தியிடம், “லவ் யூ குட்டிமா” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டார்.
மனையாளை தோளோடு அணைத்தபடி சற்று நகர்ந்தவன், “லவ் யூ மா” என்று கூறி அன்னையின் கன்னத்தில் முத்தமிட,
தேவகி புன்னகையுடன், “டேய்!” என்றார்.
கிளுக்கி சிரித்த குழந்தை, “அம்மா நீங்க!” என்று கூற,
இம்முறை அம்ரிதா புன்னகையுடன், “லவ் யூ அத்தமா” என்றபடி அவரது கன்னத்தில் முத்தமிட்டாள்.
மன நிறைவுடன் சிரித்த தேவகி, “சரி.. சரி. அப்பாவும் பொண்ணும் போய் குளிச்சு கிளம்புங்க” என்றார்.
“நான் இன்னைக்கு ஒரு நாள் லீவ் போட்டு இருக்கிறேன்” என்ற அவ்யுதகண்ணன், “டாலி பிரஷ் செய்துட்டு வாங்க” என்று மகளை அனுப்பினான்.
தேவகி யோசனையுடன் மகனை பார்க்க, அம்ரிதா சிறு பதற்றத்துடன் அவனது இடது கை புஜத்தை லேசாக பற்றியபடி, “கை வலிக்குதாங்க?” என்று கேட்டாள்.
“இல்லைடா.. சின்ன பெர்சனல் வேலை ஒன்னு இருக்குது.. அதை முடிச்சிட்டு, ஜஸ்ட் ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க நினைத்தேன்” என்றான்.
‘என்ன வேலை!’ என்ற கேள்வி தேவகி மனதினுள் தோன்றினாலும் மகன் காரணமின்றி மொட்டையாக கூற மாட்டான் என்பதை புரிந்து எதுவும் கேள்வி கேட்காமல், “சரி நான் குட்டிமாக்கு பால் சேர்க்கிறேன்” என்றுவிட்டு அகன்றார்.
மனைவி கேள்வி கேட்கும் முன் அவளை லேசாக அணைத்து நெற்றியில் முட்டியவன் விஷம புன்னகையுடன், “நேத்து நடந்ததில் கை வலி வந்திடுச்சோனு பயந்துட்டியா? உன் கண்ணா ஸ்ட்ராங் மேன்! இன்னும் ரெண்டு ரவுண்டு போய் இருந்தாலும் கை தாங்கும் தான்” என்றான்.
“ஏய்!” என்று வெட்கத்துடன் சிணுங்கியபடி அவனது இடது கை புஜத்தில் அடித்தவள், “அத்தமாக்கு ஹெல்ப் செய்ய போறேன்” என்றுவிட்டு ஓடினாள்.
அடுத்து மகளை கிளப்பி பள்ளிக்கு அனுப்பியவன் கூடத்தில் இருக்கும் மெத்திருக்கையில் அமர்ந்தான்.
அம்ரிதா, “சாப்பிட வாங்க” என்று அழைக்க, “கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றான்.
தேவகி, “யாரையும் வர சொல்லி இருக்கிறியா?” என்று வினவ,
“மாமாவை வர சொல்லி இருக்கிறேன்” என்றவனின் குரலே ஏதோ சரி இல்லை என்பதை உணர்த்த, கேள்வியாக மகனைப் பார்த்தார்.
“ப்ரேக்பாஸ்ட் முடிச்சுட்டு பேசலாம்மா” என்றான்.
அப்பொழுது தான் அவனை சரியாக கவனித்த அம்ரிதா, “என்னாச்சுங்க?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்து மென்னகைத்தவன், “ஒன்னுமில்லைடா.. சிலது மாமா இருக்கும் போது பேசணும்னு நினைத்தேன்.. அதான் வர சொன்னேன்” என்ற போது குருநாதன் வந்துவிட்டார்.
புன்னகையுடன், “வாங்க மாமா” என்று அவன் வரவேற்க,
“வாங்க அண்ணா” என்று தேவகியும், “வாங்கப்பா” என்று அம்ரிதாவும் புன்னகையுடன் வரவேற்றனர்.
“ஆது குட்டி ஸ்கூல் போயாச்சா” என்றபடி உள்ளே வந்தார்.
“ஹ்ம்ம்.. கால் மணி நேரம் முன்னாடி தான் கிளம்பினா” என்று அம்ரிதா கூற,
தேவகி, “வாங்கணா சாப்டுட்டே பேசலாம்” என்றார்.
காலை உணவை நால்வரும் முடித்த பிறகு அவ்யுதகண்ணன், “கொஞ்சம் பேசணும் மாமா” என்றான்.
“சொல்லுங்க மாப்பிள்ளை”
“உண்மையை சொல்லணும்” என்று பீடிகையுடன் அவன் ஆரம்பிக்க,
அம்ரிதா மென்னகையுடன், “என்னங்க!! அப்பா எப்போதும் உண்மையை தான் சொல்லுவாங்க” என்றாள்.
ஆனால், “அப்படியா!” என்று அவளை பார்த்து கேட்டவன் தனக்கு எதிரே அமர்ந்து இருந்த குருநாதனை கூர்விழிகளுடன் தீர்க்கமாக பார்த்தபடி, “உன் அப்பாவை உன் கிட்ட பொய்யே சொன்னது இல்லைனு சொல்லச் சொல்லு பார்ப்போம்” என்றான்.
குருநாதன் அவன் கண்களை சந்திக்க முடியாமல் சற்றே திணற, அம்ரிதவோ சிரிப்புடன், “எனக்கு என் அப்பாவை தெரியாதா?” என்றாள்.
கோபம் கலந்த தீர்க்க பார்வையுடன், “பார்த்தீங்களா!” என்றவன், “எப்படி மனசு வந்தது உங்களுக்கு?” என்று கேட்டான்.
அம்ரிதா ஏதோ பேச வர, “பொறு அம்ரு” என்ற தேவகி மகனைப் பார்த்து, “உடைச்சு பேசு” என்றார்.
குருநாதனை முறைத்தவன், “சொல்லுங்க மாமா.. அம்ரி குழந்தைக்கு என்னாச்சு?” என்று கேட்டான்.
அவர் பேச முடியாமல் திணற, அவன் விடாமல், “முதல்ல அவளுக்கு என்ன குழந்தை பிறந்ததுனு சொல்லுங்க” என்றான்.
அம்ரிதா புரியாமல் பார்க்க, தேவகி தன்னுள் எழுந்த சந்தேகத்துடன் சற்றே பரபரப்புடன் மகனை நோக்க, அவனது பார்வையோ குருநாதனை விட்டு இம்மியும் நகரவில்லை.
கலங்கிய கண்களுடன் மகளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட குருநாதன், “என்ன மன்னிச்சிடுடா.. என் மனசை கல்லாக்கிட்டு தான் அப்படி செய்தேன்.. குழந்தையோட உயிரை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியலை.. அதான் பொய் சொல்லிட்டேன்.. ஆனா அதை செய்யும் போது நான் எவ்ளோ துடிச்சேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” என்றவர் தற்போது தன்னை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அவ்யுதகண்ணனைப் பார்த்து, “உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டார்.