நெஞ்சம் படபடக்க அம்ரிதா, “என்ன பொய் ப்பா சொன்னீங்க? உயிரை காப்பாற்றனா என்னோட குழந்தை உயிருடன் தான் இருக்குதா? தெளிவா சொல்லுங்கப்பா” என்றபடி தந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.
பதில் கூற முடியாமல் அவர் அழ, அவரது துயரை பார்க்க முடியாமல் அவ்யுதகண்ணன், “ஸோ அம்ரிக்கு நடந்தது அக்சிடென்ட் இல்லை.. கொலை முயற்சி சரியா?” என்று கேட்டான்.
அவர் ‘ஆம்’ என்பது போல் தலை அசைக்கவும், “அந்த பொறுக்கியோட அப்பா வேலையா?” என்று சரியாகவே கணித்து கேட்டான்.
அவர் அதற்கும் ‘ஆம்’ என்பது போலவே தலை அசைத்தார்.
அம்ரிதா நடப்பது புரியாமல் இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க, அவளைப் பார்த்து, “உன்னோட குழந்தை உயிருடன் தான் இருக்குது” என்றான்.
மண்டியிட்டபடியே வேகமாக அவன் அருகே வந்தவள், “என்ன சொல்றீங்க? எங்கே இருக்கான் என் பையன்? உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டவளின் கன்னங்களில் கண்ணீர் இறங்கியது.
அவளது தோள்களை பற்றி தூக்கி தன் அருகே அமர வைத்தவன், “உனக்கு பிறந்தது பையனே இல்லை.. பொண்ணு தான் பிறந்தது.. அது வேற யாரும் இல்லை நம்ம டாலி தான்” என்றான்.
அவள் நம்பயியலாத பெரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, குருநாதனும் அதிர்வுடன் அவனைப் பார்க்க, தேவகியோ ‘எதிர்பார்த்தேன்’ என்ற மென்னகையுடன் மகனை பெருமையும் நெகிழ்ச்சியுமாக பார்த்தார்.
குருநாதனைப் பார்த்து, “பதினைந்து வருஷமா நான் காதலிக்கும் என்னோட ராதா அம்ரிதா தான்” என்றவன் தன்னவளை கையணைப்பில் வைத்தபடி அன்னையைப் பார்த்து, “தண்ணி கொண்டு வாங்கமா” என்றான்.
தேவகி தண்ணீர் கொண்டு வந்து குருநாதன் மற்றும் அம்ரிதாவிற்கு கொடுத்தார். இருவருக்குமே தண்ணீர் தேவையாக இருக்க, மறுபேச்சின்றி வாங்கி அருந்தினர்.
அம்ரிதாவைப் பார்த்து, “நான் உன்னை ஹாஸ்பிடலில் வச்சு பார்க்கலை.. கேஸ் விஷயமா அந்த டாக்டரை பார்க்க போனப்ப உள்ளே மாமா பேசிட்டு இருந்தது எனக்கு கேட்டது.. முதல்ல அது மாமானு எனக்கு தெரியாது.. யாரோ பேசுறாங்கனு தான் நினைத்தேன்..
அவர் பேசியதில் இருந்து அவரோட பொண்ணு ஒரு ரேப் விக்டிம்னும், குழந்தை பிறந்த ஒரு மாசத்தில் மகளை அவரோட அக்கா பையன் கல்யாணம் செய்துக்க விரும்புறான் என்றும், ஆனா குழந்தையை அவன் ஏத்துக்க விரும்பலை என்றும், அவரோட பொண்ணுக்கு கல்யாணத்தில் விருப்பம் இருந்தாலும் குழந்தை விஷயம் தெரியாதுனும் புரிந்தது..
கூடவே அவரோட பொண்ணுக்கு அந்த பொறுக்கி மேல இருக்க வெறுப்பினால் குழந்தை மேல பெருசா நாட்டம் இல்லைனும் சொன்னார்.. அதனால் தன்னோட மகளின் நல்வாழ்விற்காக குழந்தை பிறந்ததும், எல்லோர் கிட்டயும் குழந்தை இறந்ததா சொல்லிட்டு ஏதாவது அனாதை ஆசிரமத்தில் சேர்த்திட சொன்னார்.. முதல்ல டாக்டர் சம்மதிக்கலை.. ஆனா மாமா ரொம்ப கெஞ்சவும் யோசிச்சு சொல்றதா சொல்லி அனுப்பிட்டாங்க..
அது யாருனு தெரியாதப்பவே கோபம் வந்த எனக்கு, மாமாவை பார்த்ததும் அதிர்ச்சியோட ரொம்பவே கோபம் வந்தது..
கேஸை மறந்துட்டு அவருக்கே தெரியாம அவரை பின் தொடர்ந்து உங்க வீட்டுக்கு வந்து உன்னை பார்த்தேன்.. நான் பார்த்தப்ப மாமாவைப் பார்த்து நீ சின்னதா சிரிச்சாலும் உன்னோட கண்ணில் ஒரு வெறுமையைத் தான் உணர்ந்தேன்..
என்னோட ராதையின் குழந்தை அனாதையா வளர்வதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை.. அம்மா இல்லைனா என்ன! நான் தாயுமானவனா இருப்பேன் என்ற முடிவோடு தான் டாகடரை போய் பார்த்தேன்..
டாக்டர் கிட்ட முதல்ல கேஸ் விஷயமா பேசிட்டு, என்னோட காதலை பற்றி சொல்லி குழந்தை பிறந்ததும் யாருக்கும் தெரியாம குழந்தையை என் கிட்ட கொடுத்திட சொல்லி கேட்டேன்.. அவங்களுக்கு என்னை முன்பே தெரிந்ததாலும், என் மேல் நல்ல அபிப்பராயம் இருந்ததாலும், கூடவே என்னோட காதலும் அவங்க மனசை அசைத்ததாலும் சரினு ஒத்துக்கிட்டாங்க.. மாமா கிட்டயும் குழந்தை இறந்ததா பொய் சொல்லிட்டு அனாதை ஆசிரமத்தில் சேர்க்க சம்மதம்னு சொல்லிட்டாங்க..
அதுக்கு அப்புறம் ஒவ்வொரு மாசம் நீ செக்-அப் வரப்பலாம் நானும் வந்திடுவேன்.. குழந்தையை ஸ்கேன் செய்த சிடி என் கிட்ட இருக்குது..
ஆனா உன்னோட டெலிவரி அன்னைக்கு நான் ஊரில் இல்லை.. கேஸ் விஷயமா மதுரையில் இருந்தேன்.. டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்குதேனு தான் வெளியூருக்கு போனேன்.. இல்லைனா வேற யாரையும் போக சொல்லி இருப்பேன்..
அன்னைக்கு காலையில் இருந்தே என் மனசை என்னவோ செய்தது.. ஏதோ தப்பா நடக்க போறது போல் ஒரு படபடப்பு.. அது சரிங்கிற மாதிரி உனக்கு அக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி பொண்ணு பிறந்து இருக்கிறதாவும் நீ கிரிட்டிகல் ஸ்டேஜ்ஜில் இருப்பதாவும் டாக்டர் போன் செய்து சொன்னாங்க..
வேலையை அங்கிருந்த ஒரு போலீஸ் பிரெண்ட் கிட்ட சொல்லிட்டு காரில் வந்து சேர்ந்தேன். முதல்ல உன்னைத் தான் பார்க்க நினைத்தேன் ஆனா மாமா அங்கே இருந்ததால் முடியாம குழந்தையை பார்க்க போனேன்..
டாலியை என் கையில் ஏந்தியப்ப எனக்குள் அப்படி ஒரு பரவசம்! என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்தது போல் உணர்ந்தேன்.. அந்த நொடியில் என்னோட டாலி என்னோட மகளா மட்டும் தான் இருக்கணும்னு முடிவு செய்து முறைப்படி தத்தெடுத்துக்கிட்டேன்..
ஜஸ்ட் ஒரு வாரம் முன்னாடி தான் பிறந்ததாலும், அக்சிடென்ட் ஆனப்ப உன் வயிறில் அடிபடாததாலும் குழந்தை நல்லா தான் இருந்தா.. இருந்தாலும் அஞ்சு நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்து குழந்தையை பார்த்துட்டு தான் வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்..
லாம்ப் போஸ்ட்டில் இடிச்சி உன் தலையில் அடிப்பட்டதாலும், உனக்கு ப்ரெஷர் அதிகமாவே இருந்ததாலும் தான் நீ முதல் நாள் கிரிட்டிகல் ஸ்டேஜ்ஜில் இருந்த.. என்ன தான் டாலி எனக்கு புது வாழ்க்கையை கொடுத்து இருந்தாலும், நீ நார்மல் ஆன அப்புறம் தான் என்னால் நிம்மதியா மூச்சு விடவே முடிந்தது.
நீ விருப்பப்பட்டு கல்யாணம் செய்துக்க போறதா நினைத்து தான் உன் நலனை கருதி உன்னை விட்டு விலகிப் போனேன்.. அதுக்கு அப்புறம் உன்னை பத்தி விசாரிக்கிற தெம்பு என் இதயத்துக்கு இல்லாததால் அப்படியே விட்டுட்டேன்.. அப்புறம் டாலி தான் என் வாழ்க்கைனு வாழ ஆரம்பிச்சுட்டேன்” என்று நீண்ட விளக்கத்தை கொடுத்து முடித்தான்.
‘தன் மகள் உயிருடன் இருக்கிறாள்! அதுவும் தற்போது தன் மகளாகவே இருக்கிறாள்!’ என்ற மகிழ்ச்சியை மீறி அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்தாள். ஆம்! அவனது காதலின் ஆழத்தில் பேச்சற்று போய் தான் அமர்ந்து இருந்தாள்.
குருநாதனும், ‘ஒருவனால் இப்படி, இந்தளவிற்கு காதலிக்க முடியுமா!’ என்ற பிரம்மிப்பில் அசைவற்று அமர்ந்து இருந்தார்.