தன்னவளின் நிலையை உணர்ந்தவன் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், “நேத்து மாதிரி இல்லைனாலும் இறுக்கி அணைச்சு ஒரு உம்மாவாது தருவனு நினைத்தேன்” என்று கூறி கண்சிமிட்டினான்.
அவள் அப்பொழுதும் பார்த்த விழி பார்த்தபடியே அமர்ந்து இருக்க, “ஓய் மிமி!” என்று உற்சாக குரலில் அழைத்தான்.
அவள் உணர்ச்சி பெருக்குடன், “இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போறேன்!” என்று கூற,
மாய கண்ணனின் புன்னகையுடன், “ஆயுள் முழுவதும் என்னை காதலி” என்று கூறி மீண்டும் கண்சிமிட்டியவன்,
“என் காதலி என்னை காதலி
ஓராயிரம் வெண் மல்லிகை
அதுதானடி உன் புன்னகை
என் காதல் தேவதை நீதானடி
என் காதலி என்னை காதலி” என்ற ‘கல்யாணம்’ திரைப்பட பாடலை பாடினான்.
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக சிரித்தவளின் விழியில் இருந்து ஒற்றை துளி ஆனந்த கண்ணீர் கன்னத்தில் விழ,
“சட்டென்று மாறுது வானிலை..
என் ஜீவன் ஜீவன் நீ தானே!” என்று பாடினாள்.
விரிந்த புன்னகையுடன், “கலக்குறியே ராது!” என்று அவன் கூற, அவள் “ஏய்!” என்று சிணுங்கினாள்.
“குட் இப்படியே சந்தோஷமா இருக்கணும்.. இனி மகிழ்ச்சி மட்டும் தான் நம்ம வாழ்க்கையில்.. என்ன!” என்றவனுக்கு சம்மதமாக அவள் தலை அசைக்கவும், “குட் கேர்ள்” என்றபடி அவளை தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
தேவகி கிண்டலான குரலில், “டேய் நாங்களும் இங்க தான் இருக்கிறோம்” என்று கூற,
அலட்டிக் கொள்ளாமல் அவரை பார்த்தவனோ, “அதனால் தான் நெற்றியில் கொடுத்தேன்” என்றான்.
“படவா” என்று அவர் கூற,
அவரைப் பார்த்து கண்சிமிட்டியவன் தங்களை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்த குருநாதனைப் பார்த்து, “இன்னையோட இதுக்கு முழுக்கு போட்டுடுவோம்.. என்ன நடந்ததுனு சொல்லுங்க” என்றான்.
அவர் தவிப்புடன் மகளை பார்க்க,
அவள் எழுந்து சென்று அவர் கையை பற்றியபடி, “உங்களை என்னால் புரிஞ்சுக்க முடியுதுப்பா.. என்னை விட நீங்க தான் இன்னும் துடிச்சு இருப்பீங்கனும் தெரியும்” என்றதும், நெகிழ்ச்சியுடன் தன் கரத்தை பற்றி இருந்த மகளின் கரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டார்.
பின் மகளை தன் அருகே இருந்த ஒற்றை மெத்திருக்கையில் அமர செய்து, “நாங்க சென்னையை விட்டு சேரன்மகாதேவி போன ஒரு வாரத்தில் அந்த பொறுக்கியோட அப்பன் எனக்கு போன் செய்து அப்படியே ஒதுங்கி போய்டனும்னு மிரட்டினான்.. நான் அதை கண்டுக்கவே இல்லை..
ஆனா அம்மு கன்சீவ் ஆன விஷயம் எங்களுக்கு தெரிந்த ஒரு வாரத்தில் திரும்ப போன் செய்து குழந்தையை கலைக்கச் சொன்னான்.. நான் முடியாதுனு சொன்னதும் குழந்தையை வச்சு டி.என்.ஏ டெஸ்ட் செய்ய நினைச்சா அம்மு இன்னும் கேவலப்பட்டு போய்டுவானு சொன்னான்..
நான் எங்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லைனு சொன்னதை நம்பாம அம்முவ கொல்ல முயற்சி செய்தான்.. அது அவளுக்கு தெரியாது.. நாங்க செக்-அப் போனப்ப எங்க காரை இடிக்க வந்த லாரியில் இருந்து நூலிலையில் தப்பிச்சோம்.. அன்னைக்கு திரும்ப அவன் போன் செய்து பேசினப்ப தான் அது அவனோட வேலைன்னு தெரிந்தது.. அவன் அத்தோடு நிறுத்த மாட்டான்னு நான் நம்பினேன்.. வேற முறையில் கொலை செய்தா கண்டிப்பா அவன் மேல சந்தேகம் வரும்னு அவன் அக்சிடென்ட் செய்ய தான் முயற்சிப்பான்னு நினைத்து அம்முவை கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டேன்.. அவளை அடுத்த வீட்டுக்கு போறதுக்கு கூட வெளியவே விடலை..
குழந்தையையும் அம்முவையும் காப்பாற்ற நான் எடுத்த முடிவு தான் டாக்டர் கிட்ட பேசியது.. அவங்க கிட்ட கூட குழந்தையோட உயிருக்கு ஆபத்துனு சொல்ல விரும்பாம வேற கதையை புனைந்தேன்.. அவங்களும் ஒத்துகிட்டு அவங்களுக்கு நம்பகமான ஒரே ஒரு நர்சை வச்சிக்கிட்டு டெலிவெரி பார்க்கிறதா சொன்னாங்க..
அம்முவோட மனநிலையை கருதி அவளோட உயிருக்கு இருந்த ஆபத்தை நான் சொல்லாதது தான் தப்பா போய்டுச்சு.. எனக்கு உடம்பு முடியாம நான் தூங்கிட்டு இருந்த நேரம் அவ பக்கத்தில் இருந்த கோவிலுக்கு நடந்து போயிட்டு வீட்டுக்கு ரிட்டர்ன் ஆகிட்டு இருந்த நேரத்தில் தான் அந்த விபத்து நடந்தது..
நான் மொத்தமா ஆடி போன நாள் அது தான்..” என்றவரின் கண்களில் அந்த நாளின் நினைவில் கண்ணீர் தேங்கியது.
அம்ரிதா அவரது கையை இறுக்கமாக பற்றிக் கொள்ள,
அவ்யுதகண்ணன், “இனி அப்படி ஒரு நிலை உங்களுக்கு வரவே வராது மாமா” என்று கூற,
தேவகி, “அதெல்லாம் முடிந்து போனது அண்ணா.. இனி எல்லாம் நல்லதே நடக்கும்” என்றார்.
“ஹ்ம்ம்” என்றபடி தன்னை தேற்றிக் கொண்டு சிறு மென்னகை புரிந்தவர், “குழந்தையோட உயிரை காப்பாற்றத் தான் பிறந்தது ஆண் குழந்தைனும், இறந்தே பிறந்ததுனும் சொல்லச் சொல்லி எல்லோரையும் நம்ப வைத்தேன்.. அதனால் என் திட்டம் வெற்றியும் அடைந்தது..
அன்னைக்கு என் பொண்ணோட உயிருக்காக நான் கடவுளை வேண்டிட்டு இருந்தப்ப, அவன் போன் செய்து குழந்தை இறந்ததை சொல்லி எகத்தாளமா சிரிச்சப்ப, குழந்தையை காப்பாற்றியதை நினைத்து ஒரு வகையில் நிம்மதியடைந்தேன்.. அதுக்கு அப்புறம் அவன் தொல்லை இல்லை..
அம்மு கண் முழித்த உடனே குழந்தை இறந்ததா சொன்னா, அவளோட உடல்நிலை பின்னடைய வாய்ப்பு இருக்குதுனு, டாக்டர் தான் இன்குபேட்டரில் இருந்த வேற ஒரு குழந்தையை காட்டினாங்க.. அதுவும் அந்த குழந்தையோட பேரென்ட்ஸ் சம்மதத்தோடு தான் அப்படி சொன்னாங்க.. ரெண்டாவது நாள் அம்மு ஓரளவுக்கு ஸ்டேபிள் ஆனதும் மூன்றாவது நாள் குழந்தை இறந்ததா சொன்னாங்க” என்றார்.
சில நொடிகள் நீடித்த மௌனத்தை கலைப்பது போல் தேவகி, “எல்லாம் நன்மைக்கேனு எடுத்துக்க வேண்டியது தான்.. குட்டிமா உயிர் காப்பாற்றப் பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், அம்ருவோட குழந்தையா வளர்ந்து இருந்தா குட்டிமா இந்த கேடுகெட்ட சமுதாயத்தின் வாயில் எத்தனை முறை விழுந்து துடிச்சு இருப்பா! இப்போ குட்டிமா அவ்யுத் அம்ரிதா மகளா, நம்ம பேத்தியா ரொம்ப சந்தோஷமா வளருவா..
குட்டிமா வளர்ந்த பிறகும் அவளோட பிறப்பைப் பற்றி அவளுக்கு சொல்ல வேண்டாம்.. அவளை பொறுத்தவரை அவ இவங்க பொண்ணு தான்.. ஊரை பொறுத்தவரை அம்ரு அவளுக்கு சித்தியா இருக்கலாம் ஆனா குட்டிமா கிட்ட ராதாவும் அம்ருவும் ஒன்னு தான்னு சொல்லிடுவோம்..
அவ்யுத் சொன்ன கதையை கொஞ்சம் மாத்தி சொல்லுவோம்.. இவங்களுக்குள் சண்டை வந்து பிரிஞ்சுட்டதாகவும், அண்ணாக்கு அவ்யுத்தை அப்போ பிடிக்காததால் அவங்களை சேர்த்து வைக்க முயற்சிக்காததோடு மகளோட நல்வாழ்வை கருதி அம்ரு கிட்ட குழந்தை இறந்ததா சொல்லி அவ்யுத் கிட்ட கொடுத்துட்டதா சொல்வோம்..
அப்புறம் இப்போ கொஞ்ச நாள் முன்னாடி ரெண்டு பேரும் எதிர்பாராத விதத்தில் சந்திச்சு, மனம் விட்டு பேசியதில் ரெண்டு பேர் மனசிலும் அதே காதல் இருப்பதை உணர்ந்து அண்ணா கிட்ட பேசி கல்யாணம் செய்துகிட்டதா சொல்லுவோம்” என்றவர், குருநாதனைப் பார்த்து, “சாரி அண்ணா.. குட்டிமாக்காக இப்படி தான் சொல்ல முடியும்” என்றார்.
குருநாதனோ மென்னகையுடன், “மாப்பிள்ளைக்கு கதை சொல்ற திறமை எங்கிருந்து வந்ததுனு இப்போ தான் புரியுது” என்று கூற, அவ்யுதகண்ணன் சத்தமாக சிரித்தான்.
அவனை தேவகி முறைக்க, அவனோ, “தொப்பி தொப்பி” என்றபடி இன்னும் அதிகமாக சிரித்தான்.
“பார்த்து பல் சுளிக்கிக்க போகுதுடா” என்றார்.
அனைவர் முகத்திலும் இறுக்கம் தளர்ந்து மென்னகை பூத்தது.
இனி இவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்து இருக்கும்.
(epilogue நினைவு~20.4யில் இருக்கிறது)