குருநாதன் அழைப்பை எடுத்ததும், “ஹாய் அங்கிள்.. நான் அவ்யுதகண்ணன்” என்றான்.
“சொல்லுங்க தம்பி”
“நான் நேரா விஷயத்துக்கே வரேன்.. உங்களை அங்கிள்னு கூப்பிடாம உரிமையா மாமானு கூப்பிட எனக்கு விருப்பம் தான் ஆனா அது உங்க மகளோட முடிவில் தான் இருக்குது”
“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை”
“இல்ல.. அம்ரிதாவோட முழு சம்மதம் இருந்தா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும்.. நீங்க அவங்க கிட்ட பேசிட்டு சொல்லுங்க.. அப்பவும் நான் அவங்க கிட்ட நேரில் பேசிட்டு தான் கல்யாண ஏற்பாட்டிற்கு சரி சொல்வேன்”
“சரி மாப்பிள்ளை”
“முதல்ல அவங்க கிட்ட பேசுங்க அங்கிள்.. அதுவரை தம்பினே கூப்பிடுங்க”
“நான் சொன்னா..” என்றவரின் பேச்சை இடையிட்டவன்,
“இதைத் தான் சொல்றேன்.. நீங்க அவங்களை கம்பெல் செய்யக் கூடாது.. உங்க ஹெல்த் கண்டிஷன் வைத்தும் கார்னர் செய்யாதீங்க ப்ளீஸ்” என்றான்.
“குழந்தைக்கு கசப்பான மருந்தை கொடுத்தா தானே, காயம் சரி ஆகி சந்தோஷமா இருக்கும்! இதுவும் அப்படி தான்”
சத்தமின்றி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவன், “சரி பேசிட்டு சொல்லுங்க அங்கிள்” என்றான்.
“சரி” என்று மொட்டையாக கூறி அழைப்பைத் துண்டித்தார்.
அவன் தேவகியைப் பார்க்க,
அவரோ, “எந்த போதி மரத்தில் கிடைத்த ஞானோதயம்?” என்று தான் கேட்டார்.
கிண்டலாக அன்னையைப் பார்த்தவன், “உதாரணம் தப்பா இருக்குதே!” என்றான்.
அவர் புரியாமல் பார்க்க,
அவன் உதட்டோர கிண்டல் மென்னகையுடன், “சம்சாரியா மாற சொல்லிட்டு, புத்தர் கூட கம்பேர் செய்றீங்களே!” என்றான்.
அதே உதட்டோர கிண்டல் மென்னகையுடன், “நான் ஞானத்தை பத்தி மட்டும் தான் பேசுறேன்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஞானோதயம் தேவைப்படும்.. நீ பேச்சை மாத்தாம கேட்டதுக்கு பதிலை சொல்லுடா” என்றார்.
“நான் பேச்சை எல்லாம் மாத்தலை”
“அப்போ சொல்லு”
“என் மனசு மாற ரெண்டு ரீசன்ஸ்.. முதல் காரணம் டாலி.. ரெண்டாவது காரணம் அம்ரிதா..
எனக்காக தன் ஏக்கத்தை மறைக்கும் என் டாலிக்காக நான் என்ன செய்யப் போறேன்னு நீங்க கேட்டது என்னை உறுத்துச்சு.. ஆனாலும் கல்யாணம்! அதில் எனக்கு விருப்பம் இல்லை தான்..
ஆனா அம்ரிதா பற்றி தெரிந்ததும் அவ மேல ஒரு சாப்ட் கார்னர்.. என்னையும் மீறி என் மனதினுள் ஓகே சொல்லலாமோ என்ற எண்ணம்!
மே பி அதுக்கு காரணம், அவ என் ராதாவை எனக்கு நினைவு படுத்தியதா இருக்கலாம்.. எப்போதுமே என் நினைவில் இருக்கும் ராதாவை தனியா நினைவு படுத்த முடியாது தான்.. நான் என்ன சொல்ல வரேன்னா! ராதா அண்ட் அம்ரிதா கொஞ்சம் ஒத்து போறாங்க.. நான் ராதாவை முதல் முதலில் சந்தித்த நேரம் அவ ஒரு ஹரெஸ்மென்ட்டோட பாதிப்பில் தான் இருந்தாள்..” என்றவனின் பேச்சை அதிர்வுடன் இடையிட்டு,
“என்னடா சொல்ற?” என்றார்.
‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டி, “அம்ரிதா அளவுக்கு பாதிப்பு இல்லை.. அது ஹரெஸ்மென்ட் மட்டும் தான்.. அப்போ அவ டென்த் படிச்சுட்டு இருந்தா.. டுயுஷன் சார்.. அந்த நாதாரியை சாருனே சொல்லக் கூடாது” என்று இப்பொழுதும் அடங்காத கோபத்துடன் கூறியவன், “அந்த பன்னாடை அவ கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்தப்ப, தைரியமா அவனை தாக்கிட்டு தப்பிச்சு வந்துட்டா. ஆனாலும் அதிர்ச்சியிலும் ஒருவித பயத்திலும் கிட்டத் திட்ட தன்னிலை இழந்த நிலையில் தான் மணல் குவியலில் உட்கார்ந்து இருந்தா..
நான் தினு(அவனது கல்லூரி நண்பன் தினேஷ்) வீட்டுக்கு போயிட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டு இருந்தப்ப தான் அவளைப் பார்த்தேன்.. முதல்ல என்னை பார்த்து கூட பயப்படத் தான் செய்தா, அப்புறம் ஒரு மாதிரி பேசி சமாளிச்சு அவளை அவ வீட்டில் விட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்தேன்” என்று முடித்தான்.
தேவகி அமைதியாக இருக்க,
அவன், “என்னமா?” என்று வினவினான்.
அவனை அமைதியாக பார்த்தவர் உணர்ச்சிகளை பிரதிபலிக்காத அமைதியான குரலில், “அப்போ நீ என்ன படிச்சுட்டு இருந்த?” என்று கேட்டார்.
“பஸ்ட் இயர்”
மீண்டும் அவரிடம் மௌனம்.
அவன், “என்னமா?” என்று மீண்டும் கேட்டான்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. கிட்டத் திட்ட பதினைந்து வருஷமா ஒரு பெண்ணை காதலிச்சுட்டு இருக்க.. அதுவும் அவ விலகி போனதுக்கு அப்புறமும் அவ நினைவில் தான் வாழ்ந்துட்டு இருக்க!
உன் காதலை நினைத்து பிரம்மிப்பதா! இல்லை, என் பையனே வந்து சொல்லும் வரை அவனோட இந்த காதல் எனக்கு தெரியலையேனு வருந்தவா! இல்லை, உன் காதலை என் கிட்ட சொல்ற அளவுக்கு நான் உனக்கு நல்ல தோழியா நடந்துக்கலையானு வருந்தவா!” என்று ஆதங்கத்துடன் முடித்தார்.
அன்னையின் கையை பற்றிக் கொண்டவன், “அப்படி எல்லாம் இல்லைமா.. என்னோட தோழி, அம்மா, வெல்விஷர் எல்லாமே நீங்க தான்மா” என்றான்.
“ஒன்பது வருஷம் உன் காதலை மறைத்து இருக்க!”
“அம்மா!”
“ஆதினியை வளர்க்க என் துணை தேவை பட்டுச்சு.. அதனால் மட்டும் தானே சொன்ன!”
“என்னமா! இப்படி எல்லாம் சொல்றீங்க!” என்று அவன் வருந்தும் குரலில் கூற,
அவரோ அதை விட அதிக வருத்தத்துடன், “அதான் நிஜம்.. ஆதினி இல்லைனா கடைசி வரை உன் காதல் எனக்கு தெரியாமையே தானே போய் இருக்கும்! ப்ச் போடா!” என்று கையை உதறியபடி பார்வையை திருப்பிக் கொண்டார்.
“நிஜமா அப்படி இல்லைமா” என்று கலங்கும் குரலில் கூறியவன் அவரை தோளோடு இறுக்கமாக அணைத்து தலையை அவரது தோளில் சாய்த்துக் கொண்டான்.
பின், “நான் ராதாவை காதலிக்க ஆரம்பிச்சப்ப அவ சின்ன பொண்ணுமா.. நானுமே பஸ்ட் இயர் தானே! என்ன தான் காதல்னு என் மனசு சொன்னாலும் இது காதலா ஈர்ப்பானு தெளிவுபடுத்திக்க நினைத்தேன்.. காதலாவே இருந்தாலும் ரெண்டு பேரும் படிப்பை முடிக்கணும்னு நினைத்தேன்..
அவ கிட்ட என் காதலை சொல்லி, அவளும் என்னை காதலிக்க ஆரம்பித்த பிறகு உங்க கிட்ட சொல்லலாம்னு முடிவு செய்து இருந்தேன்..
இப்படியே 7 வருஷம் கிட்ட போயிடுச்சு.. அப்புறம் அவளும் என்னை காதலிக்க ஆரம்பிச்ச பிறகு இத்தனை வருஷம் சொல்லாம இப்போ திடீர்னு உங்க கிட்ட சொல்றதுக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு, அப்புறம் என்னோட வேலை.. நான் சென்னை விட்டு வெளியூர் போயிட்டேன்.. ஸோ நேரில் வந்து சொல்லிக்கலாம் அப்படி இப்படினு உங்க கிட்ட சொல்றதை தள்ளி போட்டேன்..
ஆனா உங்க கிட்ட சொல்ல நினைச்சப்ப, எங்களுக்குள் பிரச்சனை வந்து, அப்புறம் நாங்க தெளிவா பேசி பிரிஞ்சுட்டோம்.. ஆதினி என் கிட்ட வந்து ஒரு வாரம் கழிச்சு உங்க கிட்ட சொன்னேன்” என்று நீளமாக பேசி முடித்தான்.
அவர் அப்பொழுதும் மெளனமாக இருக்கவும், எழுந்து நின்று இடிப்பில் கை வைத்தபடி, “இப்போ என்ன! என் காதலை சொல்லலைனாலும், என்னோட ப்ரேக்-அப்-அ உங்க கிட்ட தானே முதலில் சொன்னேன்!” என்றான்.
அவர் அவனை முறைக்கவும்,
“நீங்க சிரிச்சாலே சுமார் குமார்.. ச்ச.. சுமார் குமாரியா தான் மீ இருப்பீங்க! இதுல டெரர் லுக் விட்டா! என் நிலைமையை யோசிச்சு பாருங்க!” என்றபடி முகத்தை அஷ்டகோணலாக சுளித்தான்.
மனதினுள் வருத்தம் இருந்தாலும் மகனின் முயற்சியை முன்னிட்டு தனது வருத்தத்தை ஓரம் கட்டியவருக்கு, அவனது பாவனை மற்றும் பேச்சில் சிரிப்பு வந்தது.
“எஸ்.. எஸ்.. அப்படியே சிரிச்சு இந்த கண்ணனை காத்து அருள்வாயாக தாயே!”
சத்தமாக சிரித்தவரோ, “அப்போ அம்ரிதா நிலைமை அந்தோ பரிதாபம் தான்” என்றார்.
அவன் புருவம் சுருக்கி பார்க்க,
“நீ என்னை மாதிரி இருப்பதை மறந்துட்டு பேசுற மை சன்! இதான் ஸெல்ப் ஆப்பு!” என்றவர், “தொப்பி! தொப்பி!” என்றபடி நக்கலாக சிரித்தார்.
அவரை போலியாக முறைத்தவன், “வர வர ஓவர் நக்கலா போய்கிட்டு இருக்குது” என்றான்.
“போடா போடா! போய் குட்டிமாவை படிக்க வை” என்ற போது அவனது கைபேசியில் அழைப்பு வந்தது.
மெத்தை மீது இருந்த கைபேசியில் ‘மிர்ச்சி மிளகா’ என்ற பெயரை பார்த்தவர், “யாருடா இது?” என்று கேட்டார்.
“நீங்க மீ.. இது மிமி”
“அதான் யாரு?”
“பாரபட்சம் இல்லாம இப்போ என் காதில் இரத்தம் வரும் பாருங்க” என்று கண்ணடித்தபடி அழைப்பை ஏற்று ஒலி பெருக்கியை இயக்கினான்.