இன்னும் ஒரு மாசத்தில் அவளுக்கு டுவெல்த் பப்ளிக் எக்ஸாம் என்ற நிலையில் ஒரு நாள் டுயுஷன் சீக்கிரமே விட்டுவிட்டதால், பத்து நிமிடங்கள் அவள் குரலை மிக அருகில் இருந்து கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
அவளும், அவளுக்கு துணையாக அவளது நெருங்கிய தோழியும் மட்டுமே இருக்க, மற்றவர்கள் கிளம்பி இருந்தனர். அந்த டுயுஷன் வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி இருந்த சிமிண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, நான் அந்த பெஞ்சை ஒட்டி இருந்த பெரிய மரத்தின் மறைவில் நின்றபடி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தேன். நேரம் இரவு எட்டை நெருங்கி கொண்டு இருந்ததாலும், நாங்கள் அந்த பறந்து விரிந்து இருந்த மரத்தின் அடியில் இருந்ததாலும் அங்கே வெளிச்சம் குறைவாகத் தான் இருந்தது.
அடுத்து என்ன படிப்பது என்பதை பற்றி இருவரும் பேச ஆரம்பித்தனர்.
ராதாவின் தோழி, ‘நான் மைக்ரோ பயோலாஜி படிக்க முடிவு செய்துட்டேன்.. நீ என்ன முடிவு செய்து இருக்க?’ என்று கேட்டாள்.
அதற்கு ராதா, ‘ப்ச்.. அதான் ஒரே குழப்பமா இருக்குது’ என்றாள்.
‘என்னடி சொல்ற! நம்ம செட்லேயே நீ தான் எப்போதும் தெளிவா இருக்கிற ஆள்! உனக்கே குழப்பமா?’
‘ஹ்ம்ம்’
‘என்ன குழப்பம்?’
‘எனக்கு பி.எஸ்.சி மேக்ஸ் மேஜர் படிக்கணும், அடுத்து எம்.எஸ்.சி மேக்ஸ் அப்புறம் பிஎச்டி முடிச்சு டீச்சிங் லைனில் போகணும்னு ஆசை ஆனா அப்பாக்கு நான் இன்ஜினியரிங் படிக்கணும்னு ஆசை’
‘உன் விருப்பத்திற்கு அங்கிள் என்னைக்குமே தடையா இருக்க மாட்டாங்களே!’
‘அதனால் தான் என் குழப்பம்’
‘என்னடி சொல்ற?’
‘என் விருப்பத்தை சொன்னா, அப்பா நிச்சயம் என்னை என் விருப்பம் போல் தான் படிக்க வைப்பாங்க.. ஆனா எனக்கு தான் யோசனையா இருக்குது..
என் அப்பா மத்த அப்பாக்கள் மாதிரி கிடையாது..’ என்றவளின் கண்ணில் பெருமையும் அன்பும் நிறைந்து இருக்க, நெகிழ்ந்த குரலில், ‘ஹி இஸ் தி மோஸ்ட் பெஸ்ட் டேட்’ என்றாள்.
பின், ‘அம்மா இறந்த பிறகு, எனக்காக மட்டுமே வாழ்றவர்டி அவர்.. என் அப்பா மட்டும் இல்லைனா நான் என்ன ஆகி இருப்பேனோ! அதுவும் மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது தான் உனக்கே தெரியுமே!’ என்றாள்.
‘புரியுதுடி ஆனா இது உன் வாழ்க்கைக்கான பேஸ் இல்லையா!’
‘இந்த வாழ்க்கையே என் அப்பா இல்லைனா ஒன்னுமே இல்லாம போய் இருக்குமே! ஆனா என்னக்காகவே வாழும் என் அப்பாக்கு நான் இதுவரை எதுவுமே பெருசா செய்தது இல்லை’
‘ஒருமுறை அங்கிள் கிட்ட பேசிப் பாரு’
‘நான் கொஞ்சம் யோசிக்கணும்.. அதான் ரெண்டு மாசம் டைம் இருக்குதே! ரிசல்ட் வரதுக்குள்ள ஒரு முடிவுக்கு வந்திடுவேன்’
அதன் பிறகு அவர்கள் வேறு பேச ஆரம்பித்தனர்.
நான் அவள் அறியாமல் அந்த பெஞ்சு ஓரத்தில் இருந்த அவளது புக் கீழே இருந்த டுயுஷன் நோட்டை எடுத்து அவசர அவசரமாக சில வரிகளை எழுதினேன். அவள் தோழியின் பக்கம் திரும்பி இருந்ததால் நான் நோட்டை எடுத்ததை கவனிக்கவில்லை. அவள் தோழியும் பேச்சு சுவாரசியத்தில் கவனிக்கவில்லை. நான் எழுதி முடித்து நோட்டை அவளது புக் மேல் வைக்கவும், மீசைக்கார் வரவும் சரியாக இருந்தது. நான் நின்றதுக்கு பின் பக்க திசையில் இருந்து வந்ததால், அந்த அலர்ட் ஆறுமுகத்துக்கு மரம் மட்டுமே தெரிய, நான் நின்றது தெரியவில்லை.
ராதா நோட்டையும் புத்தகத்தையும் எடுத்தபடி, ‘சரிடி நான் கிளம்புறேன்.. பை’ என்று கூறி எழுந்துக்கொள்ள, அவளது தோழியும், ‘சரிடி.. நாளைக்கு பார்க்கலாம்.. பை’ என்று கூறி எழுந்தாள்.
அவள் தோழி ஸ்கூட்டியில் கிளம்ப, ராதா மீசைக்கார் வண்டியில் ஏறி கிளம்பினாள்.
‘ஜஸ்ட் மிஸ்’ என்று மனதினுள் நினைத்தபடி என் கண்ணில் இருந்து அவள் மறையும் வரை பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன்.
இரண்டு நாட்கள் கடந்து இருக்க, மாலை 6.25 மணியளவில் வீரா நகரில் இருக்கும் அந்த பனிப்பாகு கடையில் அம்ரிதாவின் வரவிற்காக அதே மேசையில் அவ்யுதகண்ணன் அமர்ந்தபடி காத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனது கைபேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தான்.
‘மிர்ச்சி மிளகா’ என்ற பெயரை கண்டதும் யோசனையுடன் அழைப்பை ஏற்று, “சொல்லு அம்ரிதா” என்றான்.
“இந்த மீட் கண்டிப்பா அவசியமா?”
“ஏன்?”
“இன்னைக்கு நான் கிளம்ப லேட் ஆகும் போல தெரியுது” என்று அவளது குரல் சிறு எரிச்சலுடன் ஒலித்தது.
அதை கண்டு கொள்ளாதவன், “எவ்ளோ நேரம் ஆகும்?” என்று கேட்டான்.
“அதான் ஓகே சொல்லிட்டேனே! அப்புறம் எதுக்கு இந்த மீட்?” என்றபோது அவளது குரலில் எரிச்சலுடன் கடுப்பும் கலந்து இருந்தது.
“எவ்ளோ நேரம் ஆகும்னு கேட்டேன்” என்று அவனது குரல் அழுத்தத்துடன் வர,
முதல் முறையாக அவனிடம் இருந்து இந்த அழுத்தமான குரலை கேட்டவள் தன்னையும் அறியாமல், “செவென்” என்றிருந்தாள்.
“அரை மணி நேரம் தானே! நான் வெயிட் பண்றேன்”
‘அப்படி காத்திருந்து என்னத்தை சாதிக்க போறீங்களோ! வேஸ்ட் ஆஃப் டைம்’ என்று அவள் முணுமுணுக்க,
“வரேன்னு தானே சொன்ன! இப்ப என்ன தயக்கம்?”
“எனக்கு எந்த தயக்கமும் இல்ல” என்று சீறிக் கொண்டு வந்த அவளது பதிலில், அவனது உதட்டோரம் மென்னகை அரும்பியது.
“அப்புறம் என்ன?”
“எனக்கு வேலை இருக்குது.. செவென் ஓ’கிளாக் ஐஸ்-கிரீம் பார்லரில் இருப்பேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
குருநாதனின் வற்புறுத்தலில் தான் அவள் திருமணத்திற்கு சம்மதித்ததும், இந்த சந்திப்பிற்கும் கூட. அவனுக்கும் அது புரியாமல் இல்லை, ஆனால் அவளிடம் நேரில் பேசி சிலதை தெளிவு படுத்திக்கொள்ள நினைத்தவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை.
அன்றைக்கு என்று அவள் எதிர்பார்த்ததை விட வேலை சற்று கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ள, அவள் 7.15 மணிக்கு தான் அங்கே வந்து சேர்ந்தாள்.
“சாரி” என்றபடி அவன் எதிரே அமர்ந்தாள்.
“இட்ஸ் ஓகே” என்றபடி அவள் முன் தண்ணீர் குவளையை நகர்த்தி, பார்வையால் அருந்த கூறினான்.
அந்நேரம் அவளுக்கும் தண்ணீர் தேவையாக இருக்க, “தேங்க்ஸ்” என்றபடி அருந்தி முடித்தவள், “சொல்லுங்க.. எதுக்கு என்னை நேரில் பார்த்தே ஆகணும்னு ஒத்தை காலில் நின்னீங்க?” என்று நேரே விஷயத்திற்கு வந்தாள்.
“ஒத்தை காலில் நிற்க நான் என்ன கொக்கா!” என்று கிண்டலாக கூற,
“நீங்க இப்படியே நக்கல் நையாண்டி செய்றதா இருந்தா, நான் இப்பவே எழுந்து போய்டுவேன்” என்று அமைதியான குரலில் மிரட்டல் விடுத்தாள்.
“ஓகே” என்றாலும் அவனையும் மீறி, “மரியாதை நர்த்தனமாடுதே! அப்போ, நானும் மரியாதையா ‘ங்க’ போட்டு தான் பேசணுமோ!” என்று கிண்டலான உதட்டோர புன்னகையுடன் வினவினான்.
அவனை முறைத்தபடி, “நானே ஒழுங்கா பேச நினைத்தாலும், நீங்க விட மாட்டீங்க போல!” என்றாள்.
அப்பொழுதும், ‘அது என்ன! நானே!’ என்று மீண்டும் கிண்டலாக கேட்க அவன் நா துடித்தாலும், இருக்கும் கொஞ்ச இலகு தன்மையை கெடுத்துக் கொள்ள விரும்பாமல், “ஓகே.. ஓகே” என்றவன், “பிஸ்தா மில்க்சேக் சொல்லவா இல்லை வேற எதுவும் வேணுமா?” என்று கேட்டான்.
அன்று தான் கூறியதை அவன் மறக்காமல் இருப்பதை மனதினுள் குறித்துக் கொண்டவள், “அதே ஓகே” என்றாள்.
பணியாளரை அழைத்து அன்று போலவே பிஸ்தா மற்றும் ‘சாக்லெட்’ பால்கலவைகளை எடுத்து வர கூறினான்.
“உன்னை” என்று ஆரம்பித்தவன் பின் நிறுத்தி, “ஒருமையில் பேசலாம் தானே!” என்று கேட்டான்.
உதட்டை சுளித்து நக்கலாக பார்த்தவள், “அப்படி பேசக் கூடாதுனு சொன்னா மாத்திப்பீங்களா?” என்று வினவ,
அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “ஷுர்” என்றான்.
“நிஜமாவா?!”
“எஸ்.. ஆனா நானும் அதை எதிர்பார்ப்பேன்” என்றவன், “ரெண்டு பேருமே ஒருமையில் பேசிக்கிறதில் எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்லை.. அதே மாதிரி நீங்க என்னை பன்மையில் மரியாதையா பேசி, நானும் அப்படி பேசணும்னு எதிர்பார்த்தா.. அதுவும் எனக்கு ஓகே தான்” என்று அவன் வெகு சாதாரணமாக கூற, அவளுக்கு இரண்டாவது முறையாக அவன் மீது நல் எண்ணம் தோன்றியது.
“ஒருமையிலேயே பேசுங்க”
“அப்போ நீ?”
“எனக்கு தோணும் போது பேசுவேன்”
அவன் மெல்லிய புன்னகையுடன், “கோபம் வரும் போது தோணுமோ!” என்று புருவம் உயர்த்தியபடி கூற,
“மே பி” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினாள்.
மென்னகையுடன், “கோபம் தான் வரணும்னு இல்லை.. க்ளோஸ்நெஸ் வந்தா கூட உரிமையா ஒருமையில் பேச வரும்” என்றான்.