‘இது காதல் கடிதம் இல்லை.. சின்ன அட்வைஸ்.. வேணும்னா எடுத்துக்கலாம்.. இல்லை ஜஸ்ட் இக்னோர்..
நீ யாரு எனக்கு அட்வைஸ் தர? னு நீ நினைக்கலாம்.. அது சரியும் கூட, ஆனா நான் உனக்கு அறிமுகம் ஆனவன் தான்.. இரண்டு முறை நாம சந்தித்து பேசி இருக்கிறோம்.. ஆனா, நாம மீட் செய்து கிட்ட திட்ட டூ அண்ட் ஹாஃப் இயர்ஸ் ஆகிருச்சு.. ஸோ உனக்கு என்னை ஞாபகம் இருக்காது..
தெரிந்த பொண்ணு என்ற முறையில் சின்ன அட்வைஸ்.. அவ்ளோ தான்..
டுயுஷன் முடிஞ்சு நீ உன் பிரெண்ட் கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன்.. அப்போ நான் உன் பக்கத்தில் தான் இருந்தேன்.. போன் பேச அந்த மரத்துகிட்ட வந்து நின்னப்ப தான் நீங்க உங்க எதிர்கால திட்டத்தைப் பத்தி பேசிட்டு இருந்தீங்க..
உன் அப்பாவுக்காக ஏதாவது செய்யணும்னும், அவர் விருப்பம் போல் படிக்கணும்னும் நீ நினைப்பது நல்ல விஷயம் தான்.. சொல்லப் போனா, பெரிய விஷயம்னு கூட சொல்லலாம்.. ஏன்னா இப்பலாம் இப்படி சுயநலம் இல்லாம யாரும் இருப்பது இல்லை.. அந்த வகையில் உன்னோட இந்த அப்பா மீதான அன்பிற்கு என்னோட சல்யூட்!
ஆனா ஒன்றை யோசித்துப்பார்.. என்ன தான் நீ நல்ல படிக்கிற பொண்ணா இருந்தாலும், உன்னோட முழு விருப்பம் இல்லாம அப்பாக்காகனு இன்ஜினியரிங் படிச்சேனா, உன் அப்பா எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ற அளவிற்கு நல்ல மார்க்ஸ் சுலபமா எடுக்க முடியுமா? அப்படியே நீ ஹார்ட்வொர்க் செஞ்சு டாப்பராவே வந்தாலும், நீ விரும்பிய படிப்பில் கிடைக்கும் ஆத்மதிருப்தி இதில் உனக்கு கிடைக்குமா என்ன?
இன்னொரு முக்கியமான விஷயம்.. நீ இதை யாருக்காக செய்ய நினைக்கிறியோ, அவருக்கு நீ உன்னோட கனவை அழித்து அவருக்காக, அவர் விருப்பத்தை நிறைவேற்றியது தெரிய வந்தா! உனக்காகவே வாழும் உன் அப்பாவால் அதை தாங்கிக்க முடியுமா? ‘நம்ம பொண்ணோட கனவு சிதைய நாமே காரணம் ஆகிட்டோமே!’ னு நினைத்து துடிச்சு போய்ட மாட்டாரா! யோசி!
என்னை கேட்டால், நீ உன் அப்பா கிட்ட இதை பத்தி பேசுறது தான் பெட்டர்.. பின்னாடி நீயோ, உன் அப்பாவோ வருந்தி தவிக்காம இருக்கணும்னா, இப்போ நீ அவர் கிட்ட பேசுறது தான் சரி..
உன் விருப்பத்தை அவர் கிட்ட சொல்லி, கூடவே உனக்கு அவர் விருப்பத்தையும் ஃபுல்பில் செய்யணும்னு இருக்கிறதையும் சேர்த்து சொல்லு.. அவரே உனக்கு நல்ல சல்யுஷன் சொல்வார்..
நன்றே செய்! அதையும் இன்றே செய்!
இப்படிக்கு உன் நலம் விரும்பி.’ என்று நான் ராதாவோட நோட்டில் எழுதிய கடிதத்தைப் பற்றி நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.
அடுத்த நாள் அவள் வேறு டுயுஷன் சென்ற போது அவளை சற்று தொலைவில் இருந்து பார்த்தேன். அவள் எப்போதும் போல் நார்மலாகத் தான் இருந்தாள். நான் எழுதியதை படித்தாளா இல்லையானு தெரியாமலும், தெரிந்துக் கொள்ள முடியாமலும் தவித்தேன். என் எண்ணம் முழுவதும் இதையே சுற்றி இருக்க, அன்னைக்கு நைட் என்னால் தூங்க கூட முடியலை.
‘எப்படியும் நாளைக்கு டுயுஷனில் வைத்து எழுத நோட் எடுப்பா தானே! அப்போ கண்டிப்பா நாம எழுதியதை பார்ப்பா’ என்று எனக்கு நானே சாமாதானம் சொல்லிக் கொண்டு ஒருவாறு மூன்று மணி மேல தூங்கி இருப்பேன்..
அடுத்த நாள் சாயுங்காலம் ஆறேமுக்கால் மணிக்கெல்லாம் அந்த டுயுஷன் வீட்டிற்கு நாலு வீடு தள்ளி இருக்கும் தினுவோட ஸ்கூல் பிரெண்ட் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தேன். தினுவை நச்சரித்து ஒரே நாளில் அவனோட ஸ்கூல் பிரெண்டை எனக்கு இன்ட்ரோ கொடுக்க வைத்து, அவனுக்கு பிரெண்ட் ஆகி, அவன் வீட்டிற்கே போய் நின்று இருந்தேன்.
எப்போதும் சரியாக ஏழு மணிக்கு வரும் அவள், அன்று 6.55 மணிக்கே வந்து விட்டாள். தேர்வு முடிவிற்கு காத்திருக்கும் மாணவனை போல் நான் சிறு பதற்றம் கலந்த எதிர்பார்ப்புடன் அவளை பார்த்துக் கொண்டு இருக்க, எனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், மீசைகார் கிளம்பியதும் வீட்டின் உள்ளே செல்லும் முன் அவளது கண்கள் என்னைத் தேடின.
ராதாவின் கண்கள் என்னைத் தேடிய நொடி, நான் சிறகில்லாமல் வானில் பறந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். என்னை மீறி, ‘எஸ்! எஸ்!’ என்று கத்தி இருந்தேன்.
அப்போது மட்டுமில்லை, டுயுஷன் முடிந்து வெளியே வந்த போதும் அவளது கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து என்னை தேடியது.
அப்போ நான் அடைந்த மகிழ்ச்சியின் அளவை எப்படி சொல்ல! உலகை வென்றால் கிடைக்கும் உவகையை விட பெரியது என்று தான் சொல்ல வேண்டும்.
‘ராதா! என் ராதா! இந்த கண்ணனின் ராதா!’ என்று என் மனம் ஜெபிக்க, என் இதயம்! அய்யோ! அந்த உணர்வை எப்படி சொல்ல!
எனக்கான அவளது தேடலில் பிறவி பயனை அடைந்தது போல் உணர்ந்தேன்.
அவன் கூறி முடித்து அவளை நோக்க, அவளோ கோபத்துடன், “ஓ! இப்படி ஓப்பனா சொல்லிட்டா நீ செய்தது சரினு ஆகிடுதா?” என்றாள்.
“நான் அப்படி சொல்லலையே!”
“ஓ! நீங்க தான், நீங்க செய்தது தவறே இல்லைனு சொல்றீங்களே!”
“ஏன் இப்படி?”
“வேற என்ன சொல்லணும்னு நினைக்கிற?”
லேசாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவன், “ஆமா, எங்களுக்குள் நடந்த நிகழ்வு எனக்கு தவறா தெரியலை தான்.. அதுவும் அதன் விளைவா, என் டாலி எனக்கு கிடைத்து இருக்கா” என்றவன், “அப்படியே அதை தவறுனு நீங்க எல்லோரும் சொன்னாலும் நான் மன்னிப்பு கேட்க வேண்டியது என் அம்மாவிடமும் ராதாவோட அப்பா கிட்ட மட்டும் தான்.. அவங்களிடம் நான் மன்னிப்பும் கேட்டுட்டேன்” என்றான்.
“ஓஹ்ஹோ!” என்று அதீத நக்கலும் கோபமுமாக ராகம் இழுத்தவள், “அவங்களும் உன்னை மன்னிச்சுட்டாங்க!” என்றாள்.
“இல்லை.. ரெண்டு பேருமே என்னை மன்னிக்கலை.. அம்மா மன்னிக்கலைனாலும் மறக்க முயற்சிக்கிறாங்க”
“வாட்எவர்.. இப்போ என்ன எழவுக்கு இதை எல்லாம் என் கிட்ட சொன்ன?”
“நீ தெரிஞ்..” என்றவனின் பேச்சை பொறுமையின்றி இடை மறித்து,
“தெரிந்து! என்ன செய்யணும்? இந்த விஷயத்தில் என் மன்னிப்பு உனக்கு தேவையே இல்லைனு சொல்லிட்ட! அப்புறம் என்னத்துக்கு இதை சொன்ன!
இதை கேட்டுட்டு, ஆஹா! இவன் எல்லாத்தையும் பிரான்க்கா(frank) சொல்லிட்டான், இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவன்னு நினைத்து மனப்பூர்வமா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கனுமா?” என்றவள்,
“நான் தெரியாமத் தான் கேட்கிறேன்.. இதே இதை ஒரு பொண்ணு சொல்ல முடியுமா? அதை உங்க ஆண் வர்க்கம் ஏத்துக்குவீங்களா என்ன? பொண்ணுங்க மட்டும் தியாகச் செம்மலா, மறப்போம் மன்னிப்போம்!னு உங்களை ஏத்துக்கிட்டு வாழணுமோ!” என்று சுடு எண்ணெய்யில் விழுந்த கடுகாகப் பொரிந்தாள்.
மேலும் அவனை பதில் கூற விடாமல், “நீ என்ன ஒழுங்கா! என்னை மன்னிக்க உனக்கு என்ன தகுதி இருக்குதுனு என்னைப் பார்த்து நீ கேட்கலாம்.. ஆனா..” என்றவளின் பேச்சை கோபத்துடன் இடை மறித்தவன்,
“இப்போ பேச்சு என் கடந்த காலத்தை பற்றி மட்டும் தான்.. உனக்கு நடந்ததில் உன் தவறு சிறிதும் இல்லை.. உன் கடந்த காலத்தை வைத்து அதுக்கும் இதுக்கும் சரியா போச்சுனு சொல்லி நீ என்னை ஏத்துக்கோனு நான் சொல்லவே இல்லையே.. ஏன்னா, என்னை பொறுத்தவரை நீ பவித்திரமானவள் தான்.. ஸோ அதையும் இதையும் கம்பேர் செய்யாத..
நான் சொல்ல வருவது.. என்ன தான் தப்பு சரினு ஆர்கியு செய்தாலும், நடந்ததை மாற்ற முடியாது.. ஸோ உனக்கு விருப்பம் இருந்தால் ப்ரோசீட் செய்யலாம்.. அவ்ளோ தான்” என்று மிக அழுத்தமான குரலில் முடித்தான்.
அவனது இந்த அழுத்தமும் கோபமும் தனக்கானது என்பதை புரிந்துக் கொண்டவள் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். இப்படி பேசி தன் தவறை மழுங்க செய்கிறானா என்று அவனை தவறாக நினைக்க அவளால் முடியவில்லை. அவனது கோபமும் அழுத்தமும் உண்மை என்றே அவளுக்கு தோன்றியது.
தனது கடந்த காலத்தை பற்றி தெரிந்த பிறகும் அவன் தன்னுடன் வெகு இயல்பாகவும் இலகுவாகவும் பேசுவதும், மற்ற ஆண்களைப் போல் தன்னை தவறாகவோ இகழ்ச்சியாகவோ பார்க்கவில்லை என்பதை அறிந்து இருந்தவளுக்கு இப்பொழுது அவன் பேசியதில் இருந்து, அவனது எண்ணத்தில் கூட தான் சிறிதும் தரம் இறங்கவில்லை என்பதில் பெரும் ஆச்சரியம் தான். கூடவே அவளது ரணமான மனதிற்கு இதமாகவும் இருந்தது.
ஏளனம், இரக்கம், துகிலுரிக்கும் பார்வை என்று எதுவும் இல்லாமல் தந்தைக்கு பின் தன்னை இயல்பாக பார்க்கும் முதல் ஆண் மகன் என்று தோன்றிய நொடியில் அவளுள் அவன் மீது நம்பிக்கை துளிர் விட, கோபம் நீங்கி அவன் கண்ணோட்டத்தில் அவனது கடந்த காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
அவன் விறைப்புடனே, “என்ன!” என்று வினவ,
“நீங்களும் ராதாவும் ஏன் பிரிந்தீங்க?” என்று அமைதியான குரலில் வினவினாள்.
அவளது பன்மை விழிப்பிலேயே அவளது மனநிலையை புரிந்து கொண்டவன் இப்பொழுது ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.
“எதுக்கு இந்த ஆச்சரியம்?” என்று கேட்டாள்.
அவன் மென்னகையுடன்,
“சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே!
நீ ஒரு ஆச்சரியகுறி!” என்று மெல்லிய குரலில் பாடினான்.
ஆச்சரியம் கலந்த சிறு அதிர்வுடன் அவளது விழிகள் விரிந்துக் கொண்டது. முதல் முறையாக எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே அவளுக்குத் தெரியவில்லை. கல்லூரி காலத்தில் இதைப் போன்ற சூழ்நிலையை சந்தித்து இருக்கிறாள் தான் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவளிடம் யாரும் இப்படி நடந்து கொண்டது இல்லை. ஆம்! அவளது ‘எட்டி நில்.. எச்சரிக்கிறேன்!’ என்ற தோரணையில் ஆண்கள் விலகித் தான் இருப்பர்.