ராதாவை அவள் அறியாமல் நான் தினமும் பார்த்தாலும், அவளுக்கு கெமிஸ்ட்ரி டுயுஷன் இருக்கும் நாட்களிலேயே அவளை தொடர்பு கொள்ள விரும்பினேன். அதற்கு இரண்டு காரணங்கள்.. முதல் காரணம் அவள் என்னை தேடியது அங்கே வைத்து தான். இரண்டாவது காரணம், ஒரு வேளை மற்ற இடங்களில் வைத்து தொடர்பு கொண்டால் அவளை நான் தொடர்வதை அவள் கண்டு பிடித்துவிடக் கூடாது என்ற எண்ணம்.
ராதா அடுத்த முறை கெமிஸ்ட்ரி டுயுஷன் வந்த போதும் அவளது விழிகள் என்னை தேடியது. அதில் அன்று போலவே என் அகமும் முகமும் மலர்ந்தது. அவளை தினு பிரெண்ட் வீட்டு மொட்டை மாடியில் இருந்து தான் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
டுயுஷன் வந்த எல்லோரும் உள்ளே சென்றதும், மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி அந்த டுயுஷன் நடக்கும் வீட்டை நோக்கி சென்றேன்.
அந்த மரத்தின் மறைவில் இருந்து உள்ளே எட்டிப் பார்த்தேன். டுயுஷன் தொடங்கி இருந்தது. மெல்ல சத்தம் எழுப்பாமல் அந்த வீட்டின் தெருவாசல் கதவை திறந்து உள்ளே சென்று நான்காக மடித்து இருந்த சின்ன பேப்பரை அவளோட கட்-ஷுவில் வைத்து அது மேல சின்ன கல்லையும் வச்சுட்டு, வந்த சுவடு தெரியாம வெளிய வந்து தினு பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டேன்.
அந்த பேப்பரில்,
‘முந்தாநேத்து நீ என்னை தேடினதைப் பார்த்தேன்.. உன்னோட அப்பா கிட்ட பேசி இருப்பனு நினைக்கிறேன்.. என் கிட்ட ஏதும் பேசணும்னு நினைச்சா என்னோட ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பு.
என்னோட ஈமெயில் ஐடி- *********@gmail.com’ என்று எழுதி இருந்தேன்.
டுயுஷன் விடுறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி அந்த மரத்துக்கிட்ட போய் நின்னேன்.
அன்னைக்கு சரியான நேரத்தில் தான் விட்டாங்க.. எட்டு மணிக்கு வெளிய வந்த ராதா அவளோட பிரெண்ட் கிட்ட பேசினபடி ஷூவை பார்க்காம போடப் போனா, ஆனா லாஸ்ட் மொமென்ட்டில் அந்த பேப்பரை பார்த்ததும் சட்டுன்னு நான் நின்னுட்டு இருந்த மரத்துப் பக்கம் தான் திரும்பி பார்த்தா.
அதை நான் எதிர்ப்பார்க்கலைனாலும் டக்குனு குனிஞ்சதாலும், வீட்டுக்குள்ள இருந்த செடி என்னை கொஞ்சம் மறைச்சுட்டு இருந்ததாலும் அவ என்னை பார்க்கலை.
அப்படியே நகர்ந்து, வெளிய வந்துட்டு இருந்த பசங்க கூட்டத்தில் கலந்து வேகமா தினுவோட பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டேன்.
நான் தினு பிரெண்ட் வீட்டு உள் பக்க காம்பவுண்ட் சுவர் மறைவில் இருந்து பார்த்தப்ப ராதா அந்த மரத்துகிட்ட நின்னபடி சுற்றி முற்றி பார்வையைச் சுழற்றி என்னை தேடிட்டு இருந்தாள்.
(குறிப்பு: கண்ணன் ஈமெயில் ஐடி-யில் தன்னோட பெயரை வைக்கவில்லை. பொதுவான வார்த்தைகளை தான் வைத்து இருந்தான். எடுத்துக்காட்டு – coolbuddy. இதையே எழுதி இருப்பேன், ஆனா நிஜத்தில் இப்படி ஒரு ஐடி அக்டிவ்வா இருந்தால்! அதான் * போட்டுட்டேன்)
“உன் மனசில் என்ன நினைச்சுட்டு இருக்க அம்மு! இது என்ன சின்ன பிள்ளைங்க விளையாட்டா? எஸ் நோ னு மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்க!” என்று குருநாதன் கோபத்துடன் பேச,
அவளும் குறையாத கோபத்துடன், “அவன் போலீஸ்னு என் கிட்ட ஏன் நீங்க சொல்லலை?” என்று கேட்டாள்.
“அவன் இல்லை அவர்”
“இப்போ இதான் ரொம்ப முக்கியம்!” என்று எரிச்சலுடன் கூறியவள், “சரி.. உங்க அவர்ர்ர்ர் போலீஸ்னு ஏன் என் கிட்ட சொல்லலை?” என்று கேட்டாள்.
“நீ கேட்டியா?”
“இந்த கல்யாணத்தை பத்தி நான் கேட்டா சொன்னீங்க? அதை மாதிரியே இதையும் நீங்களா சொல்லி இருக்க வேண்டியது தானே! சொன்னா நான் நிச்சயம் சம்மதிக்கவே மாட்டேன்னு உங்களுக்கு தெரியும்.. அதான மறைச்சீங்க!
இது மட்டுமா! உங்க அவர்ர்ர்ர் கல்யாணம் செய்யாம பிள்ளை பெத்ததையும் சொல்லலை”
“இந்த விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?”
“ஹான்.. உங்க அவர்ர்ர்ர்ர் குட்டி சுவர்ர்ர்ர்ர் தான் சொன்னார்..”
‘ஓ!’ என்று மனதினுள் கூறியபடி அவளிடம், “நான் எதையும் மறைக்கலை” என்றவர் அவளின் தீர்க்கமான பார்வையில், “ஓகே.. ஒத்துக்கிறேன்.. மாப்பிள்ளை போலீஸ்னு இப்போ சொல்ற ஐடியா எனக்கு இல்லை தான்.. நீ என்ன வேலை செய்றார்னு கேட்டா சொல்லிக்கலாம்னு இருந்தேன்.. ஆனா நீ சொன்ன இன்னொரு விஷயத்தை நான் மறைக்க நினைக்கவே இல்லை.. நீ கேட்க தயாரா இல்லை” என்றார்.
“யாரும் உங்களுக்கு மாப்பிள்ளை இல்லை” என்று கோபத்துடன் கூறியவள் அவரை பேச விடாமல், “நீங்க என்ன சொன்னாலும் எனக்கு கல்யாணம் வேணாம்.. அவளோ தான்.. என் மேல் அக்கறை இருந்தா ஸ்டன்ட் வைங்க, இல்ல” என்று ஒரு நொடி நிறுத்தியவள், “உங்க இஷ்டம்” என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து, “அம்மு” என்று கனிவுடன் அழைத்தபடி அவளது அறையினுள் குருநாதன் சென்றார்.
“ப்ளீஸ் அப்பா.. எதுவும் சொல்லாதீங்க.. என்னை இப்படியே விட்டுருங்க” என்று அவள் சிறு வலியும் தவிப்பும் கலந்த குரலில் கூற,
மெத்தையில் அவள் அருகே அமர்ந்தவர் அமைதியாக சில நொடிகள் அவளது தலையை ஆதுரமாக வருட, அவள் அவரது மடியில் தலை வைத்து கால்களை மடக்கியபடி படுத்துக் கொண்டாள்.
அப்படியே இன்னும் சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.
பின் குருநாதன் அவளது தலையை வருடியபடி, “அப்பா உனக்கு சரியானதைத் தானே தருவேன்.. யோசிக்காமலோ, விசாரிக்காமலோ அவரை மாப்பிள்ளைனு மனசார நான் முடிவு செய்வேனா?” என்று கேட்டார்.
அவள் அமைதியாகவே இருக்க, அவரே தொடர்ந்தார்.
“கல்யாணம் இல்லாம குழந்தை! இந்த விஷயம் எனக்கும் உறுத்திச்சி தான்.. தெய்வா மேல நம்பிக்கை இருந்தாலும் முதல்ல சின்ன தயக்கத்தோட தான் இந்த சம்பந்தத்துக்கு சரி சொன்னேன்.. ஆனா இப்போ அந்த உறுத்தல் இல்லை..
என்ன தான் தெய்வா அவர் மேல தப்பு இருக்காதுனு உறுதியா சொன்னாலும் அந்த விஷயம் நெறிஞ்சி முள்ளா குத்திட்டு தான் இருந்துது.. ஆனா எப்போ நீயே ஓகே சொன்ன பிறகும் அவரே இதை பத்தி சொல்லி உன்னை யோசிச்சு சொல்ல சொன்னாரோ அப்பவே மனசார அவர் தான் என் மாப்பிள்ளைனு நான் முடிவு செய்துட்டேன்”
தலையை மட்டும் நிமிர்த்தி அவரை பார்த்தபடி, “அவராவே முன் வந்து உண்மையை சொல்லிட்டா, அது தப்பு இல்லைனு ஆகிடுமா ப்பா?” என்று அமைதியான குரலில் கேட்டாள்.
சிறு மென்னகை புரிந்தவர், “இல்லை தான்.. ஆனா தப்பு செய்தவங்களை மன்னிச்சு, அவங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமே!” என்றார்.
உதட்டை சுளித்தவள், “அதுக்கு முதல்ல உங்க குட்டி சுவர்ர்ர்ர் அதை தப்புனு ஒத்துக்கனுமே! அண்ட் அவருக்கு நம்ம மன்னிப்பெல்லாம் தேவை இல்லாத ஆணியாம்.. அவரு அம்மா அண்ட் ராதா அப்பாவோட மன்னிப்பு மட்டும் தான் தேவையான ஆணியாம்” என்றாள்.
அவள் சொன்ன விதத்தில் குருநாதன் சிரிக்கவும், அவள் முறைப்புடன், “என்ன சிரிப்பு?” என்றாள்.
“நான் இருநூறு பெர்சென்ட் முடிவு செய்துட்டேன்.. அவர் தான் என் மாப்பிள்ளை”
சட்டென்று எழுந்து அமர்ந்தபடி தந்தையை அவள் முறைக்க,
அவரோ மென்னகையுடன், “அவர்ர்ர்ர்ர், குட்டி சுவர்ர்ர்ர்ர், தேவையான தேவையில்லாத ஆணி” என்றார்.
அவள் புரியாமல் பார்க்க,
உதட்டில் புன்னகையும், இடது கண்ணோரம் சிறு கண்ணீர் துளியுமாக அவளை பார்த்தவர், “என்னோட பழைய அம்மு திரும்புறாளே! இத்தனை வருஷம் என்னால் முடியாததை ரெண்டே சந்திப்பில் சாதிச்சுட்டாரே!” என்றார் சற்றே நெகிழ்ந்த குரலில்.
அப்பொழுது தான், பல ஆண்டுகள் கழித்து தனது இறுக்கமான இயல்பை மீறி தான் இவ்வாறு கிண்டலாக பேசியதையே உணர்ந்தாள்.
இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மனம் இன்றி முகத்தை சுருக்கியபடி, “அதெல்லாம் ஒன்னுமில்ல.. இன்னைக்கு பேசும் போது தேவையான தேவையில்லாத ஆணினு அவர் சொன்னார்.. அதான் அது என் வாயில் வந்திடுச்சு” என்றாள்.
குருநாதன் சத்தமாக சிரிக்க, அவரது சிரிப்பே ‘நான் உன்னை நம்பவில்லை’ என்று சொல்லாமல் சொல்ல,
அவள், “அப்பா!” என்று சிணுங்கினாள்.
குருநாதனின் இடது கன்னத்தில் அந்த கண்ணீர் துளி ஆனந்த கண்ணீராக இறங்க, அவர் அதை துடைக்கும் எண்ணம் சிறிதும் இன்றி மகளின் இடது கன்னத்தில் மென்மையாக தனது கரத்தை வைத்தபடி விரிந்த புன்னகையுடன், “என் கிட்ட மட்டும் வெளிப்படும் இந்த சிணுங்கலை பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சு! அப்பா சொல்றேன்டா.. இனி உன் வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் தான்.. அவ்யுத் தான் உன் சந்தோசம்.. விட்டுடாதடா” என்றார்.
தந்தையின் மகிழ்ச்சியில் பேச்சற்று போனவள் அவரது இடது கரத்தை வளைத்து இறுக்கமாக பிடித்தபடி அவர் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“என்னடா?”
“சாரி ப்பா.. உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்ல!”
“அப்படிலாம் இல்லைடா”
“நீங்க இல்லைனு சொன்னாலும் அதான்னு எனக்கு தெரியும்”
அவர் பேச்சை மாற்ற, “அப்போ கல்யாணத்துக்கு நாள் குறிக்கட்டுமா?” என்று கேட்டார்.
சட்டென்று தலையை மட்டும் விலக்கி அவரை சின்ன முறைப்புடன் பார்த்தவள், “அதுலேயே இருங்க!” என்றாள்.
லேசாக சிரித்தவர், “பதிலை சொல்லு” என்றார்.
மீண்டும் அவளை தயக்கம் வந்து ஆட்கொள்ள, சிறு கலக்கத்துடன் அவரை பார்த்தாள்.
“வேலை தவிர அவரை வேணாம்னு சொல்ல காரணம் ஏதும் இருக்குதா?”
“ப்ச்”
“என்ன அம்மு?”
“குழந்தை விஷயத்தை நானும் ஏத்துக்கிட்டு ஓகே சொன்னேன் தான்.. ஆனா அவர் வேலை! நோ ப்பா.. என்னால் முடியாது”
“அம்மு நீ சின்ன குழந்தை இல்லை.. ஒரு பேங்க் மேனேஜரான உன்னால் ஒருத்தரோட குணத்தை சரியா கணிக்க முடியும்னு நினைக்கிறேன்” என்று நிறுத்தி அவளைப் பார்த்தார்.
தந்தை சுத்தி வளைத்து எங்கே வருகிறார் என்பதை புரிந்து கொண்டவள் அவரை பார்க்காமல் அமைதியாக இருந்தாள்.
மகளை அறிந்தவராக குருநாதன் தொடர்ந்து பேசினார்.
“ஒரு சிலர் நேர்மையா இல்லைங்கிறதை வச்சு, எல்லோரும் அப்படித் தான் இருப்பாங்கனு கண்மூடித்தனமா சொல்றது தப்பு அம்மு..
அவரை ரெண்டு முறை நேரில் பார்த்து பேசி இருக்க! அவர் நியாயமானவர்னு உனக்கு புரியலையா?”
“இது பெர்சனல்”
“நான் விசாரித்தவரை வேலையிலும் அவர் நேர்மையானவர் தான்.. இன்னைக்கு நடந்த இன்சிடென்ட்டையே எடுத்துக்கோ.. குற்றம் நடக்கும் வரையோ, கம்ப்ளைண்ட் வரும் வரையோ அவர் காத்திருக்கலையே! உடனே செயலில் இறங்கி இருக்கார்.. அதுவும் குற்றம் நடக்கும் முன் சரியா கணிச்சு தடுத்ததில் இருந்தே அவரோட இன்டலிஜென்ஸ் தெரியுதே! அவரிடம் வேகமும் விவேகமும் சேர்ந்து இருக்குது”
“இதெல்லாம் சரி தான்” என்றவள் உதட்டோர அலட்சியத்துடன், “இதே இது, பணபலமோ அரசியல் பலமோ இருப்பவனை எதிர்க்கும் சூழ்நிலை வந்தா தானே தெரியும்! அப்போ இந்த வேகமும் விவேகமும் வேகமா ஒளிஞ்சுக்கலாம்!” என்றாள்.
“எனக்கு என்னவோ அப்படி தோணலை”
அவள் நம்பிக்கை இன்றி உதட்டை பிதுக்க,
“அவர் பணத்துக்கு விலை போவார்னு சொல்றியா?” என்று கேட்டார்.
“அப்படி சொல்லலை”
“பின்ன?”
“ப்ச்.. என்னவோ மனசு ஏத்துக்க மறுக்குது ப்பா”
“அதுக்கு காரணம் அவ்யுத் இல்லை.. உனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்.. அவர் மேல ஒரு துளி கூட உனக்கு நம்பிக்கை வரலைனு சொல்லு, அப்பா இந்த கல்யாணம் வேண்டாம்னு விட்டுடுறேன்”
சில நொடிகள் மெளனமாக இருந்தவள், “நான் கொஞ்சம் யோசிக்கணும் ப்பா ப்ளீஸ்” என்றாள்.
“சரி.. நாளைக்கு காலையில் உன் பதிலை சொல்லு.. இப்போ சாப்பிடவா” என்று அழைத்துச் சென்றார்.
அங்கே அவ்யுதகண்ணன் வீட்டில் மகளுடன் சேர்ந்து உணவை பற்றிய பாடத்தை படித்துக் கொண்டு இருந்தான்.
கண்களை சுருக்கி, இதழை பிதுக்கியபடி ஆதினி, “அப்போ சிப்ஸ், பிரெஞ்சு ஃப்ரைஸ், பிஸ்ஸாலாம் அன்ஹெல்தி ஃபூட்டா(food)?” என்று கேட்டாள்.
மகள் கேட்ட பாவனையில் மென்னகை புரிந்தவன், “இது மட்டும் இல்லை.. சாக்லெட், ஐஸ்-கிரீம், பர்கர், டோனட்னு ஜங்க் ஃபூட் எல்லாமே அன்ஹெல்த்தி தான்” என்றான்.
“அப்போ பிஸ்ஸா சாப்பிடவே கூடாதா?” என்று சோகமாக வினவ,
“சாப்பிட கூடாது தான்” என்றவன், “வருஷத்துக்கு டூ டைம்ஸ்னா ஓகே” என்று கூறி கண்சிமிட்ட,
குழந்தை குதூகலத்துடன், “ஹே!” என்று கத்தினாள்.
பின் மெதுவாக, “அப்போ இன்னைக்கு பிஸ்ஸா சாப்பிடலாமா?” என்று கேட்டு கண்சிமிட்டினாள்.
அவன் புருவம் சுருக்கி பார்க்க,
அவளோ தந்தையின் கன்னத்தை பிடித்து கொஞ்சியபடி, “என் செல்ல டாடில.. ப்ளீஸ் டாடி.. ரொம்ப நாள் ஆச்சு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்” என்று கொஞ்சினாள்.
மகள் கொஞ்சிய அழகில் மறுக்க மனமில்லை என்றாலும் உடனே சம்மதிக்காமல், “இப்போ கிளம்பி போனா ரொம்ப லேட் ஆகிடுமே!” என்றான்.
“அய்யோ டாடி! சுவிகில சொல்லுங்க.. இல்ல ஆன்லைன்ல டாமினோஸ்ல சொல்லுங்க”
மகளை மெச்சும் பார்வை பார்த்தவன், “ஓகே” என்று கூறி, “ஆனா..” என்று ஆரம்பிக்க,
குழந்தையோ அவனை இடையிட்டு, “அடுத்து, நெக்ஸ்ட் மன்த் வர என் பர்த்டேக்கு தான் கேட்பேன்” என்றாள்.
அவன் இடுப்பில் கை வைத்தபடி மீண்டும் கண்களை சுருக்கி பார்க்க,
குழந்தை அசடு வழிய சிரித்தபடி, “இன்னைக்கு தானே சொன்னீங்க.. ஸோ இந்த இயர் மட்டும் த்ரீ டைம்ஸ் வச்சுக்கலாம்” என்றாள்.
அதை ரசித்தவன் வெளியே காட்டிக் கொள்ளாமல் சற்றே கறாரான குரலில், “ஹ்ம்ம்.. இன்னைக்கு அப்புறம் டாலி பர்த்டேக்கு மட்டும் தான்.. ஓகே?” என்றான்.
குழந்தை வேகமாக தலையை ஆட்டியபடி, “ஓகே டாடி.. ஷுர்” என்றாள்.
“அப்போ நான் செய்ததை யார் சாப்பிடுறது?” என்று கேட்டபடி கையில் கரண்டியுடன் தேவகி வர,
“என்ன குக் பண்ணி இருக்கிறீங்க ஆச்சி?” என்று ஆதினி கேட்க,
“தக்காளி கிச்சடி ரெடி.. இட்லி ஊத்தப் போறேன்” என்றார்.
“நோ ப்ராப்ஸ் ஆச்சி.. இட்லி ஊத்த வேணாம்.. கிச்சடிய ஃப்ரிட்ஜ்ல வச்சிடுங்க.. சிம்பிள்!” என்றவள் தந்தையை கூட்டு சேர்க்கும் நோக்கத்துடன், “என்ன டாடி!” என்றாள்.
“சூப்பர் ஐடியா” என்று அவன் கூற, குழந்தை சிரிப்புடன் தந்தையின் கையை தட்டியபடி ஆச்சியைப் பார்த்தாள்.
தேவகி இருவரையும் முறைக்க,
அவ்யுதகண்ணனோ கைபேசியில் இருக்கும் ‘சுவிகி’ செயலியில்(app) உணவு வகையை தேடியபடி, “உங்களுக்கு என்ன மீ சொல்லட்டும்?” என்றான்.
“ரெண்டு பேருக்கும் கொழுப்பு கூடி போச்சு.. கரண்டியால ரெண்டு போட்டா சரி வரும்” என்றபடி அவனை நெருங்க,
ஆதினி, “டாடி வாங்க ஜூட்” என்றபடி தந்தையின் கையை பற்றி இழுத்தபடி ஓடினாள்.