அவள் அமைதியாக இருக்க,
“இந்த கல்யாணம் வேணாவே வேணாம்னு நீ முடிவு செய்து இருந்தா என்னை பார்க்கணும்னு சொல்லி இருக்க மாட்ட.. அதனால் தான் ‘என் மிர்ச்சி மிளகா’ னு சொன்னேன்..
இந்த கல்யாணம் உனக்கு ஓகே தான் ஆனாலும் என் வேலையை நினைத்து மனசுக்குள் ஒரு சஞ்சலம்.. அது உன்னை ஓகே சொல்ல விடாம தடுக்குது.. அதுக்கு காரணம் நீ சந்திச்ச மோசமான போலீஸ்ஸா இருக்கலாம்.. ஐ கேரண்டி யூ.. நான் கண்டிப்பா நீ சந்திச்ச போலீஸ் மாதிரி இருக்க மாட்டேன்” என்றான்.
அவள் அப்பொழுதும் அமைதியாக தான் இருந்தாள்.
அவன் கனிவான குரலில், “உன் அப்பாக்கு அடுத்து நீ நம்பும் ஆண் நான் மட்டும் தான்னு சொன்னதை நான் கடைசி வரை காப்பாத்துவேன்.. அண்ட் லைஃப் லாங் என் கூட நீ கம்ஃபர்டபிள்ளா ஹப்பியா ட்ரவெல் செய்யலாம்” என்றான்.
மூச்சை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டவள், “ஓகே உங்களை நான் நம்புறேன்.. ஆனா நான் இன்னும் சில விஷயங்கள் பேசத் தான் உங்களை நேரில் பார்க்கணும்னு சொன்னேன்.. இன்பாக்ட் நேத்தே சொல்லணும்னு நினைத்தேன்.. ஆனா, உங்க பேச்சில் என் பேச்சு டைவர்ட் ஆகிருச்சு.. அண்ட் ஆதினி பத்தி பேசியதும் என் மைண்டு அதுலேயே நின்னுடுச்சு” என்றாள்.
“இப்போ சொல்லு”
அவள் சிறிது தயங்கவும்,
“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு.. என்னை உன் பிரெண்ட்டா நினைச்சுக்கோ.. தயக்கம் வராது” என்றான்.
“அது.. முதல் நாள் சந்திச்சப்ப, என்னோட இந்த புற அழகால் உங்களுக்கு எந்த யூஸும் இல்லைனு சொன்னேன்.. ஞாபகம் இருக்கா?”
“சின்ன திருத்தம்.. என்னை கவருற உன்னோட புற அழகுனு சொன்ன”
அவள் முறைப்புடன், “ரொம்ப முக்கியம்! நான் என்ன பேசிட்டு இருக்கிறேன்! நீங்க!” என்று அவள் நிறுத்த,
அவனோ மென்னகையுடன், “எந்த ஒரு விஷயமும் நாம எடுத்துக்கிற விதத்தில் தான் இருக்குது.. லேசா எடுத்துக்கிட்டா லேசா தெரியும்” என்றான்.
“நீங்க அதை அனுபவிச்சா தான் அதோட தாக்கம் உங்களுக்கு புரியும்”
அவள் எதை சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன், “இதைத் தான் சொல்றேன்.. நடந்த விஷயத்தை மாத்த முடியாது ஆனா நாம எப்படி எடுத்துக்கிறோமோ, அந்த வகையில் அதோட தாக்கமும் கூட, குறையனு இருக்கும்.. உனக்கு நடந்தது பெரிய விஷயம் தான்.. நான் சொல்ல வரது அதை நீ எப்படி கடந்து வர.. அப்படிங்கிறது தான்” என்றான்.
அவள் வலியும் கோபமுமாக, “என்னோட வலியும் ரணமும் உங்களுக்கு புரியாது” என்றாள்.
“எனக்கு உன் கிட்ட பிடிச்ச விஷயமே உன்னோட மன திடம் தான்.. துவண்டு போய் அங்கேயே தேங்கி நிற்காம, அதை கடந்து இப்போ நல்ல ஒரு நிலைமையில் இருக்க.. அது அவ்ளோ ஈஸி இல்லைனு எனக்கும் புரியுது.. ரொம்ப பெரிய விஷயம் தான் ஆனா உன் இயல்பை தொலைச்சுட்டியே!”
“அதுக்கு யார் காரணம்! இந்த சமுதாயம்.. அதிலும் முக்கியமா உங்க ஆண் வர்க்கம்! என்னை லேசில் கடந்து வர விட்டாங்களா?” என்று சீற்றத்துடன் கேட்டாள்.
“என்ன செய்ய! இந்த சமுதாயம் அப்படி இருக்குதே!”
“பெரிய சமுதாயம்!” என்று கோபமும் விரக்தியுமாக சிரித்தவள், “தப்பு செய்தது அவன்.. ஆனா வலியும் எனக்குத் தான் தண்டனையும் எனக்குத் தான்.. அவனால் உடலளவில் ஒரு நாள் கற்பழிக்கப் பட்டேன் ஆனா இந்த ‘ஸோ கால்ட்’, சமுதாயத்தால் பல முறை பேச்சாலும், ஏளனப் பார்வையாலும், துகிலுரிக்கும் பார்வையாலும் மனதளவில் கற்பழிக்கப் பட்டேன்.. படுறேன்.. இன்னும் படுவேன்” என்றாள்.
அவனது வேலையில் இது போல் பார்த்து இருக்கிறான் தான் ஆனாலும் அவளது வேதனையும் வலியும் அவனது நெஞ்சை அறுத்து கூறு போட்டது. கண்கள் கலங்குவது போல் இருக்க, சிரமத்துடன் அதை தடுத்தான்.
முதல் முறையாக பதில் சொல்ல முடியாமல் நின்றான். அவளை அரவணைத்து ‘நான் இருக்கிறேன் உனக்கு.. இனி அப்படி நடக்க விடமாட்டேன்’ என்று சொல்ல ஆசை தான் ஆனால் தற்போது அவள் இருக்கும் மனநிலையில் தனது தொடுகையை அவள் விரும்பமாட்டாள் என்று தள்ளியே நின்றான்.
“இப்போ சொல்ல வேண்டியது தானே! நான் இதை எல்லாம் லேசா எடுத்துக்கணும்னு” என்று அவள் குறையாத சீற்றத்துடன் கூற,
மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன் பேச்சை மாற்றும் முயற்சியில், “நேத்து உன்னோட அப்பா என் கிட்ட போனில் பேசினாங்க.. எதுக்கு தெரியுமா?” என்று கேட்டு அவளைப் பார்த்தான்.
அவள் யோசனையுடன் பார்க்க,
“நன்றி சொல்ல தான் போன் செய்து இருந்தாங்க.. ரெண்டே சந்திப்பில் உனக்குள் புதைந்த உன்னோட இயல்பை நான் வெளி கொண்டு வரேனாம்.. அதுக்குத் தான் அந்த நன்றி.. அப்போ அவர் குரலில் அப்படி ஒரு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தெரியுமா!
உன்னை அவரோட பழைய அம்முவா பார்த்திட மாட்டோமா!னு மனுஷன் அவ்ளோ பரிதவிச்சு போய் இருக்கார்” என்றான்.
கண்களை சிமிட்டி கலங்கும் கண்களை தடுத்தவள் தொண்டையை செருமிக் கொண்டு, “வேற என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.
அவளை திசை மாற்றியதில் நிம்மதி அடைந்தவன், “சீக்கிரமே சந்திரமுகியா இருக்க உன்னை கங்காவா ஐ மீன் அவரோட அம்முவா மாத்திடுவேனாம்” என்றான்.
“நான் சந்திரமுகியா! ஹான்!” என்று கண்களை உருட்டியபடி அவள் மிரட்ட,
பயந்தவன் போல் பாவனை செய்தபடி, “அய்யோ மீ! காப்பாத்துங்க!” என்று போலியாக அலறினான்.
அவள் இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைக்க,
அவனோ மென்னகையுடன், “பீலிங் பெட்டர்?” என்று கேட்டான்.
அப்பொழுது தான் அவனது முயற்சியும், என்றும் இல்லாத வகையில் தான் சட்டென்று அந்த தாக்கத்தில் இருந்து வெளி வந்ததையும் ஆச்சரியத்துடன் உணர்ந்தாள்.
“என்ன?” என்று அவன் புருவம் உயர்த்த,
சுதாரித்தவள் அவனது கேள்விக்கு பதில் கூறாமல், “அது என்ன மீ?” என்று கேட்டாள்.
“அம்மாவ அப்படி கூப்பிடுவேன்” என்றவன் விரிந்த புன்னகையுடன், “அவங்க மீ.. நீ மிமி” என்றான்.
ஒரு நொடி யோசித்தவள் அடுத்த நொடியே புரிந்ததும் அவனை முறைத்தாள்.
அவனோ அலட்டிக் கொள்ளாமல், “வேணும்னா நீயும் எனக்கு ஒரு பட்டப்பெயர் வச்சுக்கோ” என்றான்.
“ரொம்பத் தான் பெருந்தன்மை!” என்று அவள் கிண்டலாக கூற,
மீண்டும் அவன் அலட்டிக் கொள்ளாமல், “யா! டெபினெட்லி” என்று நகைசுவை நடிகர் வடிவேலு போல் கூறி தோளை குலுக்கினான்.
அவனது அழிச்சாட்டியத்தில் அவள் தன்னை மீறி மென்னகைக்க, அதை அவன் கனிவுடன் பார்த்தான்.
பின், “நான் கிளம்பட்டுமா?” என்று கேட்க,
அவள், “நான் பேச வந்ததை பேசவே இல்லை! எப்ப பார்த்தாலும் இதையே வேலையா வச்சு இருக்கிறீங்க!” என்று பல நாட்கள் பழகியது போல் முகம் சுருக்கி குற்றம் சாட்டினாள்.
அவளது பாவனையில் தன் மகளை கண்டவன் கனிவான புன்னகையுடன் நோக்கினாலும், “தேவை இல்லைனு தான் கிளம்புறேன்னு சொன்னேன்” என்று அழுத்தமான குரலில் கூறி இருந்தான்.
“நான் என்ன பேச வந்தேன்னு தெரியுமோ?” என்று அவள் சிலிர்த்துக் கொண்டு வர,
அவனோ அவளை தீர்க்கமாக பார்த்து, “தெரியும்” என்றான்.
“எங்க சொல்லுங்க பார்ப்போம்” என்று சவால் விட, அவன் அவளை அமைதியாக பார்த்தான்.
“ஸோ உங்களுக்கு தெரியாது”
“நீ ஏன் பழசிலேயே வந்து நிற்கிற!”
சட்டென்று உடலும் முகமும் இறுகியவள், “ஏன்னா என்னையும் அதையும் பிரிக்க முடியாது என்பது தான் நிஜம்.. என்னை உங்க வாழ்க்கையில்..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“இணைச்சுகிட்டா அதன் பின் விளைவா நிறைய சந்திக்க வேண்டியது இருக்கும்.. உன்னைப் பற்றி தெரிந்தால் சுற்றமும் உறவும் பேசுறதை கடந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது ஸோ நான் யோசிச்சு முடிவெடுக்கனும்! ரைட்!” என்று முடித்தவனின் குரலில் அழுத்தமும் இறுக்கமும் நிறைந்து இருந்தது.