அவன் காவல் அதிகாரி என்பதால் அவளது பெற்றோர் அவனிடம் சிறு பணிவு கலந்த மரியாதையுடன் தான் பேசுவர். என்ன தான் அவளது அன்னையும் தேவகியும் நெருங்கிய தோழிகள் போல் பழகினாலும், ஒரு நாள் கை திருட்டு குற்றவாளி ஒருவனை சாலையில் வைத்து அவ்யுதகண்ணன் அடித்ததை பார்த்ததில் இருந்து அவளது அன்னைக்கு அவன் மீது சிறு பயம் என்று கூட சொல்லலாம். ஆனால் இவளிடம் எப்பொழுதும் இன்முகத்துடன் கேலியும் கிண்டலுமாக தான் பேசுவான். அதனாலேயே அவனது இந்த கடினத்தில் அதிர்ந்தாள்.
அவளது அதிர்வில் கடினத்தை விடுத்து அவளை தீர்க்கமாக பார்த்தவன், “ஓகே.. நேரிடையாவே கேட்கிறேன்.. உன் லவர் யாரு? கூட படிக்கிறவனா இல்ல காலேஜ் வெளியவா?” என்று நிறுத்தி நிதானமாக கேட்டான்.
“அண்ணா!” என்று அவள் எச்சிலை விழுங்கியபடி அழைக்க,
“வீட்டில் சொல்ல மாட்டேன்.. சொல்லு” என்று இப்பொழுது சற்றே கனிவுடன் கூறினான்.
அப்பொழுதும் அவள் தயக்கத்துடன் தான் அவனை நோக்கினாள்.
“காதல் தப்புனு நான் சொல்லலை.. எந்த வயசில், யாரை காதலிக்கிறோம் என்பதில் தான் இருக்குது.. இப்போலாம், தடுக்கி விழுந்தா காதல் வருது.. வந்த வேகத்தில் காணமலும் போய்டுது.. அதான் ஜஸ்ட் தெரிஞ்சுக்க கேட்கிறேன்” என்றவன், “நான் தான் அப்பா அம்மா கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்றேனே! என் மேல் நம்பிக்கை இல்லையா? சொல்லு” என்றான்.
“என் சீனியர் தான் அண்ணா” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
“பைனல் இயரா?”
“ஹ்ம்ம்.. ஆனா சி.எஸ்.இ இல்ல, இ.சி.இ டிப்பார்ட்மென்ட்”
“பேரென்ன? எப்போ இருந்து இந்த லவ்?”
“கார்த்திக்.. ஆறு மாசமா தான்ணா”
“யாரு முதல்ல ப்ரொபோஸ் செய்தது? எப்படி பழக்கம்?”
“நான் தான்ணா முதல்ல ப்ரொபோஸ் செய்தேன்.. ஒரு கல்சரல் ப்ரோக்ராம் அப்போ தான் பழக்கம் ஆரம்பிச்சுது.. அவங்க தான் முதல்ல வந்து பேசினாங்க”
“அவனோட பேரெண்ட்ஸ்?”
“அப்பா அம்மா ரெண்டு பேருமே டாக்டர்ஸ்.. அவங்களும் என்னை மாதிரி ஒரே பையன் தான்”
“பேரெண்ட்ஸ் டாக்டர் ஆனா இவன் இன்ஜினியர்.. எப்படி விட்டாங்க?”
“முதல்ல சம்மதிக்கவே இல்ல, கொஞ்சம் போராடி தான் சம்மதிக்க வச்சதா சொன்னாங்க.. அதுல கொஞ்ச நாள் அவங்க பேரெண்ட்ஸ் சரியா பேசவே இல்லனு கூட சொன்னாங்க.. இப்போ ஓகே”
“சரி.. அவன் நம்பரை எனக்கு வாட்ஸ்அப் செய்”
“அண்ணா!”
“அவன் கிட்டலாம் பேச மாட்டேன்.. ஜஸ்ட் அவன் அக்டிவிட்டீஸ் செக் பண்றேன்.. தங்கச்சியோட ஆள் எப்படி! என்ன!னு இந்த அண்ணனுக்கு தெரிய வேணாமா?”
புன்னகையுடன், “அவங்க ரொம்ப ஸ்வீட் அண்ட் சாப்ட் நேசர் அண்ணா” என்றாள்.
மென்னகையுடன், “எவ்ளோ ஸ்வீட்னு நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிறேனே!” என்று விளையாட்டாக கூறுவது போல் கூறினாலும் உண்மையில் தீவிரமாக தான் கூறி இருந்தான்.
ஆனாலும் இவன் விசாரிக்கும் முன் சில விபரிதங்கள் நடந்தேறும் என்பதை அவன் இப்போது அறியவில்லை. ஆம்! கல்யாண வேலைகளில் அந்த கார்த்திக்கை பற்றிய நினைப்பு சற்றே பின் தங்கிவிட, அதற்குள் மலர்விழி பெரும் பிரச்சனையில் சிக்கி, தப்பிக்கும் மார்க்கம் அறியாமல் தவறான முடிவை எடுத்து விடுவாள்.
அவனது புன்னகையில் இயல்பிற்கு திரும்பியவளாக, “இதை விடுங்கணா.. உங்க ஆளைப் பத்தி சொல்லுங்க” என்று புன்னகையுடன் கண்ணை சிமிட்டினாள்.
“முதல்ல என் ஆளப் பற்றி உனக்கு என்ன தெரியும்னு சொல்லு” என்றபடி இடத்தை சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்தான்.
“வாவ்! இன்னைக்கு நிலாச்சோறா!”
“ஹ்ம்ம்”
“ஜஸ்ட் மிஸ்.. அம்மா நான் கேட்டேன்னு அடதோசையும்(அடை தோசை) காரச் சட்னியும் செஞ்சு இருக்காங்க.. இல்லைனா உங்க கூட ஜாயின்ட் அடிச்சு இருப்பேன்” என்றபோதே அவளது அன்னை அவளை அழைக்கும் சத்தம் கேட்டது.
படி அருகே சென்று, “இதோ வரேன்மா” என்று குரல் கொடுத்தவள், “சீக்கிரம் உங்க ஆளைப் பத்தி சொல்லுங்க” என்றாள்.
“உனக்கு என்ன தெரியும்னு கேட்டேன்”
“அவங்க பேர் அம்ரிதா.. வயசு 29.. ஐ.ஓ.பி மகாராஜநகர் பிரான்ச்சில் மேனேஜர்.. அம்மா இல்லை.. அப்பா எக்ஸ்-மிலிட்டரி மேன்.. அவ்ளோ தான் தெரியும்”
“எனக்கும் அவ்ளோ தான் தெரியும்”
“அண்ணா!” என்று அவள் சிணுங்க,
அவனோ மென்னகையுடன், “நிஜமாவே அவ்ளோ தான் தெரியும்” என்றான்.
“அமுல் ஐஸ்-கிரீம் பார்லர், அவங்க வீடுனு சந்திச்சு ரொம்ப நேரம் கடலை வறுத்ததா உளவுத் துறை ரிப்போர்ட் வந்ததே!”
“கடலையா! அடிங்க!” என்று அவன் கம்பால் அடிப்பது போல் பாவனை செய்ய,
அவளோ சின்ன சிரிப்புடன், “சரி.. அப்போ ஸ்வீட் நத்திங்ஸ்!” என்றாள்.
“இன்னும் அந்த லெவலுக்குலாம் போகலைமா!”
“நீங்க 90’ஸ் கிட் கூட இல்ல.. 80’ஸ் கிட்”
“இருந்துட்டு போறேன்!” என்றவன், “ஆனா நாங்கலாம் ஸ்லொ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்.. அண்ட் இந்த காலத்தைப் போல் இல்லாம, எங்க அன்பு ரொம்ப ஆழமா என்றும் நீடித்து இருக்கும்” என்றான்.
“நாங்களும் அப்படி தான்” என்று அவள் சிலிர்த்துக் கொண்டு வர,
“ஏய் கழுதை! எத்தனவாட்டி தான் கூப்பிடுறது!” என்று திட்டியபடி மேலே வந்த அவளது அன்னை இவனை பார்த்ததும் சட்டென்று சிறு பதற்றத்துடன் மெல்லிய குரலில், “உங்க கூட தான் பேசிட்டு இருக்காளா தம்பி” என்றார்.
“கீழ தான் கிளம்பிட்டு இருந்தா.. நான் தான் படிப்பு பத்தி கேட்டுட்டு இருந்தேன்”
“சரிங்க தம்பி” என்றவர் மகளிடம், “பேசிட்டு வா” என்றுவிட்டு விட்டால் போதும் என்பது போல் சென்று விட்டார்.
அன்னை சென்றதும் சத்தமாக சிரித்தவள், “ஓகே அண்ணா பை.. குட் நைட் ஸ்வீட்ட்ட்ட் ட்ரீம்ஸ்” என்று கண்ணடித்துவிட்டு கீழே ஓடினாள்.
அதன் பிறகு வேகமாக இடத்தை சுத்தம் செய்து முடித்தவன் பாய் மற்றும் உணவு பதார்த்தங்கள் அடங்கிய கூடையை எடுக்க கீழே சென்றான். அவனுடன் தண்ணீர் பொத்தல்களை தூக்கியபடி ஆதினியும் வந்தாள்.
இவன் பாயை எடுக்க, அவளோ, “நானு நானு” என்றபடி அதை வாங்கி தனது பிஞ்சு கைகளால் கீழே விரித்தாள்.
அதன் பிறகு கொண்டு வந்த கூடையில் இருந்து ஒவ்வொரு பாத்திரமாக அவ்யுதகண்ணன் எடுக்க, அதை வாங்கி பாய் மீது அழகாக அடுக்கினாள்.
இவர்கள் இடத்தை தயார் செய்து முடிக்கவும், வீட்டை பூட்டிவிட்டு தட்டுக்களுடன் தேவகி மேலே வரவும் சரியாக இருந்தது.
“வாவ்.. டாலி அழகா செட் பண்ணீட்டாளே!” என்றபடி அவ்யுதகண்ணன் கைகளை தட்ட,
குதூகலத்துடன், “தேங்க்யூ டாடி” என்ற குழந்தை தேவகியிடம், “ஆச்சி இங்க பாருங்க.. நானே எல்லாத்தையும் அடுக்கினேன்” என்றாள்.
கையில் இருந்ததை கீழே வைத்துவிட்டு பேத்திக்கு திருஷ்டி கழிப்பது போல் செய்தவர், “சூப்பரா இருக்குதுடா குட்டிமா” என்றார்.
பின், “நீ எவ்ளோ சமத்து! உன் வயசில் டாடி அவ்ளோ சேட்டை செய்வான் தெரியுமா!” என்றார்.
“அதுக்கு நீங்க தான் ஆச்சி காரணம்”
“நானா?”
“ஆமா.. நீங்க டாடிக்கு கண்ணன்னு நேம் வச்சது தான் காரணம்” என்றதும் அவர் செல்லமாக முறைக்க, அவ்யுதகண்ணனோ வாய்விட்டு சிரித்தான்.
செல்ல முறைப்புடனே இடுப்பில் கை வைத்தபடி, “உனக்கே இது டூ மச்சா தெரியலை!” என்றார்.
குழந்தையோ, “இல்லையே! நீங்க சொன்ன கதைலலாம் மாயக் கண்ணன் நாட்டி தானே! அதான் டாடி அப்படி இருந்து இருப்பாங்க.. பிக்(big) ஆனதும் அந்த கண்ணன் மாதிரியே பொறுப்பா இருக்காங்க தானே!” என்று விளக்கம் கொடுத்தாள்.
அவ்யுதகண்ணன், “தொப்பி! தொப்பி!” என்று சிரிப்புடன் கூற, குழந்தையும் சிரிப்புடன் அவனிடம் கை தட்டிக் கொண்டாள்.
இருவரையும் பார்த்து உதட்டைச் சுழித்த தேவகி, “எனக்கு ஒரு டைம் வரும்.. அப்போ உங்களை கவனிச்சுக்கிறேன்” என்றார்.
அதற்கும் அவன் சிரிப்புடன், “யூ மீன்.. அன் எலிபன்ட் காட் டைம், கேட்(cat) வில் கெட் டைம்” என்றான்.