முதலில் புரியாமல் விழித்த தேவகி பின் நக்கலுடன், “தொர இங்கிலிபீஸ் தான் பேசுமோ!” என்றார்.
“ஹா.. யா! வெல்! பேசிகளி..” என்று ‘வசீகரா’ திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசியது போல் கையை ஆட்டியபடி அவன் நீட்டி முழக்கி பேச,
அவரோ, “பேசிகளி.. பிசிகளி.. பயோலாஜிகளி.. அதான! சைகிள் ஓட்டினது போதும்.. போய் உட்காரு” என்று இடை புகுந்து முடித்து வைத்தார்.
இப்பொழுது அவன் முறைக்க, அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.
“டம்ளரில் தண்ணி ஊத்துடா குட்டிமா” என்று பேத்தியிடம் பேசியபடி அமர்ந்துவிட்டார்.
‘என்னடா சத்தத்தை காணும்!’ என்று நினைத்தபடி அவர் நிமிர்ந்து பார்க்க, ஆதினியும் அவரை முறைத்துக் கொண்டு நின்று இருந்தாள்.
அதை கண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி, “வொய் பேபிமா வொய்!” என்று கேட்டார்.
“நீங்க டாடி கிண்டல் செய்யக் கூடாது”
“உன் டாடியும் தானே என்னை கிண்டல் செய்தான்!”
“டாடி செய்யலாம்.. நீங்க தான் செய்யக் கூடாது”
‘அடிப்பாவி!’ என்பது போல் பேத்தியைப் பார்த்தவர், “இது அநியாயம்” என்றார்.
அவ்யுதகண்ணன், “இதான் எங்க நியாயம்.. சரியாடா டாலி!” என்று கண்சிமிட்டி கேட்க,
அவளும் சிரிப்புடன் கண்சிமிட்டியபடி, “எஸ் டாடி” என்று கூற, மகளுடன் கை தட்டிக் கொண்டான்.
“போதும்.. போதும்.. சாப்பிடலாம் வாங்க” என்றபடி தட்டில் உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்தார்.
அதன் பிறகு மகளிடம் பள்ளி கதைகளை கேட்டபடி உணவை ஊட்டிவிட்டு கொண்டே தானும் உண்டான்.
உணவை முடித்த பிறகு மகளை மடியில் அமர்த்தி, இரு கரங்களால் அணைவாக அணைத்து கொண்டு, முன்னும் பின்னும் ஊஞ்சல் ஆடுவது போல் ஆடியபடி, “டாலிக்கு அம்மா எப்படி இருப்பாங்கனு பார்க்கனுமா?” என்று கேட்டான்.
ஒரு நொடி குழந்தையின் கண்கள் எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்தில் ஒளிர்ந்தாலும், அடுத்த நொடியே, “டாடி சேட்(sad) ஆக வேணா.. ஸோ டாலிக்கு அம்மா பார்க்க வேணாம்” என்றாள்.
கண்கள் லேசாக கலங்க நெகிழ்ச்சியுடன் குழந்தையின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன், “இல்லடா டாடி சேட் ஆக மாட்டேன்.. அப்போ ஓகேயா?” என்று கேட்டான்.
“நிஜமா?” என்று கேட்டபடி தந்தை முகத்தை நோக்கியவள், “சேட் ஆக மாட்டேன்னு சொல்லிட்டு டாடி அழுவுறீங்க” என்ற போதே குழந்தையின் கண்களும் கலங்க ஆரம்பித்தது.
மறுப்பாக தலை அசைத்தவன், “இது ஹாப்பி டியர்ஸ்” என்றான் வர வழைத்த புன்னகையுடன்.
“ப்ராமிஸ்?” என்றபடி குழந்தை கையை நீட்ட,
அவளது கை மீது தன் கையை வைத்தபடி, “ப்ராமிஸ்” என்றான்.
அடுத்த நொடி குழந்தை விரிந்த புன்னகையுடன், “அம்மா வராங்களா? அதான் டாடி ஹாப்பியா?” என்று கேட்டாள்.
அவன் மறுப்பாக தலை அசைக்கவும், சட்டென்று வாடிய முகத்துடன், “அம்மா வரலையா?” என்று கேட்டாள்.
“அம்மா வருவாங்க ஆனா டாடி ஹாப்பினெஸ் அதனால் இல்லை” என்றபடி குழந்தையின் நெற்றியில் முட்டியவன், “டாலிக்கு டாடியை ரொம்ப பிடிக்குமே! அதுல தான் டாடி ஸோ ஸோஓஓஓஓ ஹப்பி” என்றான்.
குழந்தை அழகாக சிரித்தாள்.
பின் அவன், “டாலி டாடியோட ஏஞ்சல்.. டாடியை சேவ் பண்ண வந்த ஏஞ்சல் அண்ட் டாடிக்கு லைஃப் கிவ்வர்.. அதனால் தான் டாடி டாலிக்கு ஆதினினு பெயர் வச்சேன்.. ஆதினி-னா தொடக்கமானவள், முதலானவள்னு அர்த்தம்.. அதாவது பிகின்னிங் அண்ட் ஃபஸ்ட்(first)னு மீனிங்..
டாலி இல்லனா டாடி இல்ல.. டாலி கூட தான் டாடிக்கு நியூ லைஃப் ஸ்டார்ட் ஆச்சு அண்ட் டாடிக்கு எப்போதும் டாலி தான் ஃபஸ்ட்.. டாடிக்குனு இல்லை, எப்பவும் எதுலையும் என் டாலி தான் ஃபஸ்ட் இருக்கணும்.. அதான் இந்த நேம்” என்று தன்னை மீறி உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.
குழந்தை புரிந்தும் புரியாமலும் அவனைப் பார்க்க, அவன் கூறியதின் உட்கருத்தை புரிந்து கொண்ட தேவகி மனம் பிசைய கண் கலங்கினார்.
அவன் பேசியது சரியாக புரியவில்லை என்றாலும் அவன் குரலில் இருந்தே அவன் மகிழ்ச்சியாக இல்லை என்பதை புரிந்து கொண்ட குழந்தை அழுதுவிடும் குரலில், “டாடி நோ சேட் சொன்னீங்க!” என்றாள்.
நொடிப் பொழுதில் சுதாரித்து மகளுக்காக தன்னை மீட்டவன் புன்னகையுடன், “டாடி ஹாப்பி தான் பாப்பு” என்றான்.
குழந்தை அவனை சந்தேகமாக பார்க்க, அதன் அழகில் சொக்கியவன் மனதார புன்னகைத்தபடி மீண்டும் குழந்தையின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன், “லவ் யூ ஸோ மச் டாலி” என்றான்.
குழந்தையும் மகிழ்ச்சியுடன் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “லவ் யூ ஸோ ஸோஓஓஓ மச் டாடி” என்றபடி அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்.
தேவகியும் மீண்டவராக கலங்கிய கண்களை இருவரும் அறியாமல் துடைத்துக் கொண்டார்.
தனது கழுத்தை கட்டிக் கொண்ட மகளை அப்படியே இடது கையால் வாரி அணைத்து, “அம்மா போட்டோ பார்க்கலாமா?” என்று கேட்டபடி வலது கரத்தில் கைபேசியை எடுத்தான்.
பின், “க்ளோஸ் யுவர் ஐஸ் பேபி” என்றதும் ஆதினி கண்களை மூடிக் கொண்டாள்.
தேவகி அனுப்பிய அம்ரிதாவின் புகைப்படத்தை எடுத்தவன் குழந்தையின் முகத்திற்கு நேராக கைபேசியை பிடித்தபடி, “த்ரீ.. டூ.. ஒன்.. ஓபன்” என்று உற்சாக குரலில் கூற,
உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் விழிகளை திறந்த குழந்தையின் கண்ணில் நட்சத்திரங்கள் மின்னியது. புகைப்படத்தை ஆசையாக வருடியபடி, “அம்மா ரொம்ப அழகுல டாடி” என்றாள்.
“அப்படியா?”
“ஆமா”
“என்னோட டாலி தான் மோஸ்ட் ப்ரிட்டியஸ்ட் இன் தி வேர்ல்ட்”
அதில் அவனைப் பார்த்து அழகாக சிரித்த குழந்தை மீண்டும் புகைப்படத்தில் பார்வையை பதித்தபடி, “நான் யாரை மாதிரி டாடி? அம்மா மாதிரியா? டாடி மாதிரியா?” என்று கேட்டாள்.
“ரெண்டு பேர் மாதிரியும்”
குழந்தை தந்தை முகத்தையும் அம்ரிதா முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.
பின், “அம்மா எப்போ வராங்க?” என்று ஏக்கம் கலந்த ஆசையுடன் கேட்டாள்.
“ஆச்சி ஒரு நல்ல நாள் பார்த்து சொன்னதும் நம்ம கூடவே வந்து இருப்பாங்க.. அப்புறம் போகவே மாட்டாங்க”
“எப்போ ஆச்சி அம்மா வருவாங்க?”
“சீக்கிரமே குட்டிமா”
“அதான் எப்போ?”
“ஆச்சி நாளைக்கு சொல்றேன்”
“ஏன்! இப்போவே சொல்லுங்க”
“நல்ல நாள் எப்போனு பார்க்கணுமே!”
“நான் கீழ போய் கலெண்டர் எடுத்துட்டு வரவா?” என்றபடி எழ பார்க்க,
அவளை எழ விடாமல் அணைத்தவன், “ஆச்சி நாளைக்கு சொல்லுவாங்க” என்றான்.
தந்தை சொன்னதும் சமத்தாக, “ஓகே டாடி” என்றபடி அமைதியாக அமர்ந்தவளின் பார்வை அப்பொழுதும் அம்ரிதாவின் புகைப்படத்தில் தான்.
அவன் மெல்ல, “அம்மா நேம் அம்ரிதா.. பேங்க்கில் மேனேஜரா வேலை பார்க்கிறாங்க.. இதுக்கு முன்னாடி வேற ஊரில் இருந்தாங்க.. அவங்களால் அதான் வர முடியலை.. இனி நம்ம கூட தான் இருப்பாங்க.. அண்ட் இன்னொரு ஹாப்பி நியூஸ்.. புதுசா ஒரு மிலிட்டரி தாத்தாவும் டாலிக்கு கிடைக்க போறாங்க” என்றான்.
“அம்மா நேம் ராதா தானே!” என்ற கேள்விக்கு நொடியும் தாமதிக்காமல், “வீட்டில் ராதா வெளியே அம்ரிதா.. ரெண்டுமே அம்மா நேம் தான்” என்று யோசித்து வைத்திருந்த பதிலை கூறினான்.
“ஓ! அப்போ.. அம்மா போட்டோக்கு நான் கிஸ் கொடுக்கலாமா?” என்று குழந்தை சாதாரணமாகக் கேட்க, அதில் அவனுக்கு தான் நெஞ்சடைத்தது.
கலங்க தயாராய் இருந்த கண்களுக்கு தடை விதித்தவன் தொண்டையை செருமிக் கொண்டு, “ஷூர் பேபி.. இனி நேரில் கூட இஷ்டம் போல எவ்ளோ வேணா கொடுக்கலாம்” என்றான்.
மகிழ்ச்சியுடன் அம்ரிதாவின் புகைப்படத்திற்கு முத்தமிட்டபடி, “லவ் யூ அம்மா” என்றாள்.
பின், “அம்மாவும் எனக்கு கிஸ் கொடுப்பாங்களா? ஹக் பண்ணுவாங்களா? ஊட்டி விடுவாங்களா? ஸ்கூலுக்கு வருவாங்களா?” என்று சிறு ஏக்கத்துடன் கேட்க,
தாள முடியாமல் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி கரகரத்த குரலில், “எல்லாமே செய்வாங்கடா.. கணக்கில்லாமல் மெனி மெனி கிஸ்ஸஸ் கொடுப்பாங்க.. ஹக் பண்ணுவாங்க.. ஊட்டி விடுறது.. டாலியை கிளப்பி விடுறது.. ஸ்கூலுக்கு வரதுனு எல்லாமே செய்வாங்க” என்றான்.
பேத்தி மற்றும் மகனின் நிலையை கண்டு தேவகியின் கன்னத்தில் சத்தமின்றி கண்ணீர் கோடாக இறங்கியது.