“முழிச்சு தான் இருக்கியா நீ?…” என்று உள்ளே வந்தவர் முதலில் தண்ணீரை அருந்த,
“என்னாச்சு கோமு? நேர்ல போய் விசாரிச்சுட்டு வரேன்னு சொன்னியே? என்ன சொன்னாங்க?…” என்றார் சங்கவை ஆர்வமாக.
“என்ன சொல்லுவாங்கன்னு நினைக்கிற நீ?…” என்று வந்து அவரின் எதிரே இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டார்.
“வீட்டுக்கு வந்து சொல்றேன்னு நீ சொல்லும் போதே ஓரளவு புரிஞ்சது…” சங்கவையும் கூற,
“அதே தான். நான் போனப்போ கணேசன் ஸார் வீட்டுல இல்லை. வெளில போயிருந்திருப்பார் போல. அங்க இருந்தே நான் அவருக்கு கால் பண்ணினேன். வெய்ட் பண்ண சொன்னார்…” என்றார் கோமகள்.
“என்ன சொல்லுவாங்க? நான் வேண்டாம்ன்னு சொன்னேன். நீ கேட்டியா? என் வீட்டு மனுஷன் கொஞ்சமும் விவஸ்தை இல்லாம சொன்னார்ன்னா நீயும் பேசலாம்ன்னு நின்னுட்ட. இப்ப சின்ன புள்ளை எல்லாம் பேசற அளவுக்கு வந்திருச்சு…” கோமகள் முகத்தில் அத்தனை கோபம்.
“ப்ச், அப்படி என்ன தான் சொல்லுச்சு அந்த பொண்ணு?…” சங்கவை முகத்தில் பரபரப்பு.
“என்ன சொல்லுச்சா? கணேசன் ஸார் வொய்ப் என்ன விஷயம்ன்னு கேட்டதும் நானும் பேச தானே வந்திருக்கோம்ன்னு இதை சொல்ல அவங்களுக்கு அவ்வளோ ஷாக். சரி இருங்கன்னு சொல்லிட்டு குடிக்க ஜூஸ் கொண்டுவரேன்னு போனாங்க…”
“ஹ்ம்ம், அப்பறம்…” என தாடையில் கையை ஊன்றியபடி கேட்க,
“உனக்கு எப்படி தெரியுது என்னை பார்த்தா? அந்த சில்வண்டு பேசினதை கேட்டு நானே கொதிச்சு போய் வந்திருக்கேன். அந்த வீட்டுல ஜூஸ் கூட வேண்டாமேன்னு வந்துட்டேன். நீ என்னடான்னா…” என்ற கோமகள்,
“கிட்சன்ல இருந்து முணுமுணுன்னு என்னவோ சத்தம். சரி வெயில் வேற, தாகமா இருக்கே. முதல்ல தண்ணி கேட்போம்ன்னு அங்க போனா அந்த பொண்ணு பேசின பேச்சு இருக்கே…” என தலையை கோபத்துடன் பிடித்துக்கொண்டார்.
சங்கவை ஒன்றும் பேசாமல் மௌனமாய் இருந்தார். தோழி விஷயத்தை சொல்லி முடிக்கட்டும் என்று பொறுமை காக்க,
“அவ சொல்றா நாம காரணமில்லாம பொண்ணு கேட்டு வந்திருக்க மாட்டோமாம். நம்ம திரு பாரின்ல படிச்சுட்டு வந்திருக்கான். கூடவே இவ்வளோ பெரிய காலேஜ் வச்சு நடத்தற குடும்பம். அவங்க நம்ம வீட்டுல பொண்ணு கேட்கறாங்கன்னா என்னவோ பிரச்சனை இருக்கும், அதனால சத்தமில்லாம முடியாதுன்னு சொல்லி அனுப்பி வச்சிருங்கன்னு அவங்கம்மாவுக்கே ஆடர் போடறா…” என்றார் கோமகள்.
“எவ்வளோ வாய் தெரியுமா? இங்க பையனுக்கு பிரச்சனையோ? வேற என்னவோ, அவங்களுக்கு சமமாபொண்ணு பார்க்காம நம்மளை ஏன் கேட்கனும்? அதனால வாழ்க்கை ரிஸ்க்காகிடுமாம். முதல்ல வேணாம்ன்னு பேசி அனுப்புங்க. திரும்ப பேசினா பொண்ணுமில்லை, மண்ணுமில்லைன்னு சொல்லுங்கன்னு சொல்றா…” என சொல்ல,
“இவ்வளோ பேசுமா அந்த பொண்ணு?…” என்றார் சங்கவை.
“நான் என்ன சொல்லிட்டிருக்கேன். அந்த பொண்ணு நம்ம குடும்பத்தையும் திருவையும் எவ்வளோ சந்தேகமா பேசுச்சு. நீ இவ்வளோ பேசுமான்னு கேட்கற. நல்ல இடமேன்னு நாமளா இறங்கி போனா இதுதான். பார்த்துக்கோ…” கோமகள் எச்சரிக்க,
“சரி, சரி போட்டோல பொண்ணு பார்க்க லட்சணமா, சாதுவா இருந்துச்சே. அதான் கேட்டேன். இது எதுவும் திருவுக்கு தெரிஞ்சிடாம. ஒத்துவரலைன்னா இதை விட்டுடலாம். சின்ன பிள்ளை, தெரியாம பேசியிருக்கும். பெருசு படுத்தாத…” என்று சொல்ல,
“அப்படி சொல்லு. பொண்ணே இல்லைன்னு அங்க போய் கேட்க சொன்னியே?…” என எழுந்தவர்,
“வீட்டுக்கு போய் என் புருஷன் முதுகுல நாலு போட்டாத்தான் மனுஷன் இனி பார்க்கற பொண்ணை நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி பார்ப்பாரு. நான் கிளம்பறேன்…” என்று அவர் எழுந்து கிளம்ப திரும்ப அங்கே திருமொழி நின்றிருந்தான்.
சங்கவைக்கு திக்கென்றானது. கேட்டிருப்பானோ என மகனின் முகத்தை ஆராய எதுவும் பிடிபடவில்லை.
‘இவன் ஒருத்தன், ஒன்னும் கண்டுபிடிக்க முடியலை’ என நொந்துகொண்டவர் கோமகளை கிளம்பும் படி தலையசைக்க எங்கே அவரால் முடிந்தது?
திருமொழி வழியில் நின்றிருந்தான். அவன் நகர்ந்தால் மட்டுமே அங்கிருந்து அவரால் செல்ல முடியும்.
“உட்காருங்க…” என உள்ளே வந்து கோமகளுக்கு இருக்கையை காண்பித்தவன் தாயின் கட்டிலின் அருகே சாய்ந்து மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு நின்றான்.
சங்கவை மூச்சே விடவில்லை. தானாக எதுவும் சொல்லி என்ன பேசுவானோ என்றிருந்தது.
அதுவும் இப்போது கல்லூரி விஷயமான பணிகள் வேறு அவனை உறக்கமிழக்க செய்திருக்க தான் செய்துவைத்தது வேறு அவனுக்கு எப்படி இருக்குமோ என மௌனமாக பார்த்தார்.
“என்ன திடீர்ன்னு பொண்ணு தேடற படலம்? யார் ஆரம்பிச்சது? அதுவும் என்னை கேட்காம?…” என்றான் திருமொழி கோமகளிடம்.
“அது வந்து திரு…” என அவர் எச்சிலை விழுங்கியபடி சங்கவையை பார்க்க அவர் மகனை பார்த்துக்கொண்டிருந்தார்.
‘இவளுக்கு ஹெல்ப் பண்ண போய் இப்ப என்னை காய்ச்ச போறான் இவ மகன். தேவையா எனக்கு?’ என உள்ளுக்குள் புலம்பியபடி,
“இல்ல உங்கம்மா கீழ விழுந்துட்டா இல்லையா?…”
“நான் கேட்டதுக்கான பதில் இதுவா?…” என திரு அமைதியாய் கேட்க அது கோபமா, அமைதியா என எதையும் பிரித்து பார்க்க முடியவில்லை.
‘என் கூட பன்னெண்டு வயசுவரை ஓடியாடி விளையாடிட்டிருந்தவன். இப்ப என்னையே கேள்வி கேட்கறான்’ என முணுமுணுத்த கோமகள் அதற்கு மேல் மறைக்க முடியாமல் படபடவென்று பேச ஆரம்பித்துவிட்டார்.
“உங்கம்மா கீழ விழுந்ததுல கொஞ்சம் பயந்துட்டா திரு. நீயும் இன்னும் கல்யாணமாகாம இருக்க. நான் நல்லா இருக்கும் போதே என் பிள்ளைக்கு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டா போதும்ன்னு என்கிட்ட ஒரே புலம்பல். அதான்…” என்று அவர் நிறுத்த திரு தாயை பார்த்தான்.
“என் வீட்டுக்காரர்ட்ட சொல்லி உனக்கு பொண்ணு பார்க்க சொல்லியிருந்தா. பார்த்ததுல ஒன்னு ரெண்டு பொண்ணுங்க தான் சரின்னு அவளுக்கு பட்டுச்சு. அதுல ஒரு பொண்ணை ரொம்ப பிடிச்சு போய் இன்னைக்கு நான் போய் பேசிட்டு வந்தேன்…”
“என்ன சொன்னாங்க?…” என்ற கேள்வியே கோமகளுக்கு திண்டாட்டமாக போனது.
‘சொல்லாத, சொல்லாத’ என வேகமாய் சங்கவை கோமகளுக்கு கையசைத்து தலையை வேண்டாம் என மறுத்து கண்களை உருட்ட,
“நீங்க சொல்லுங்க….” என்றான் திருமொழி.
“அந்த இடம் சரிவராது திரு. பொண்ணும் படிச்சிட்டிருக்கு. அதனால இப்ப குடுக்க கூடிய சூழ்நிலையில அவங்க இல்லையாம்…” என கோமகள் வேறு வழியின்றி சமாளிக்க,
“ஓஹோ?…” என்றான் அவன்.
அதுவே அவன் நம்பவில்லை என்றும் இன்னும் தன்னிடம் வார்த்தைகளை எதிர்பார்க்கிறான் என்றும் விளக்க,
“என்னப்பா நீ?…” என மல்லுக்கட்ட முடியாமல் சலித்து போனார் அவர்.
“நான் பேசிக்கறேன் கோமு. நீ கிளம்பு…” சங்கவை வாயை திறக்க,
“ப்ச், நான் முதல்லையே சொன்னேன் திரு. உங்கம்மா தான் கேட்கலை. பொண்ணு நல்லா இருக்கா, பார்த்ததும் பிடிச்சிருச்சு. பேங்க் மேனேஜர் பொண்ணு. அது இதுன்னு சொல்லி போய் கேட்க வச்சுட்டா…” என்றவர் அங்கே நடந்ததை எல்லாம் புட்டு புட்டு வைத்துவிட்டார்.
அந்த பெண் பேசிய ஒன்றையும் அவர் மறைக்கவில்லை. கேட்கும்பொழுதே திருவின் தாடைகள் இறுகுவதையும் அவர் கவனிக்கவே செய்தார். அதில் சங்கடப்பட்டு,
“சின்ன பொண்ணில்லையா? அதான் விவரம் பத்தலை. கல்யாணம்ன்னு போய் பேசினதும் பயந்திருச்சு போல…” என கோமகள் சமாளிக்க,
“யார் பொண்ணு?…” என்றான்.
“பேங்க் மேனேஜர் கணேசன் தெரியுமா?…” என்றதற்கு அவன் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
சில முறைகள் அங்கே வங்கிக்கு சென்றிருந்த பொழுது அவரை பார்த்து பேசியிருக்கிறான் தான். அதன் பொருட்டு அவரை தெரிந்திருந்தது.
“அவர் பொண்ணு தான் உனக்கு உங்கம்மா பார்த்தது….” என்ற கோமகள் சொல்ல,
“என்ன படிக்கிறா?…”
“எம்.காம், பர்ஸ்ட் இயர்….” என்றவர் கூடுதலாக,
“அந்த பொண்ணு கூட நம்ம காலேஜ்ல தான் படிக்குது….” என்றதும் திருமொழியின் விழிகள் இடுங்கின.
“பேர் என்ன?…” என்றவனுக்கு,
“நிதர்ஷனா…” என்ற பதிலை திருமொழிக்கு தந்துவிட்டு கிளம்பினார் கோமகள்.