சங்கவை சொல்லவும் இளங்கோவன் அவ்வப்போது கணேசனை பார்க்க அவர் இவர் பார்க்கிறாரே என அவர் புன்னகைக்க, பதிலுக்கு இளங்கோவன் புன்னகைக்க இப்படியே சென்றுகொண்டிருந்தது அவர்களின் பயணம்.
விமானத்தில் ஏறும் வரை பேசிக்கொண்டே தான் சென்றார்கள் கணேசனும் இளங்கோவனும்.
“தூரத்து சொந்தத்துல மதுரையில ஒரு கல்யாணம். அதான் அதை இருந்து முடிச்சுட்டு அப்படியே இங்க இருந்தே கிளம்பலாம்ன்னு வந்தோம். இங்க பார்த்தா நீங்க…” என்றார் கணேசன்.
“இன்னைக்கு திருவுக்கு பிறந்தநாள். சங்கவையும் மீனாட்சி அம்மன் கோவில்ல வேண்டுதல் வச்சிருந்ததால அப்படியே இன்னைக்கு நேர்த்திக்கடனை முடிச்சிட்டு இங்க இருந்து கிளம்பிடலாம்ன்னு நாங்களும் வந்தோம்…” என்றார் இளங்கோவன்.
இப்படியே பேசிக்கொண்டிருக்க மனைவியின் பார்வை மொழியில் விஷயத்தை கண்டுகொண்டவருக்கு எப்படி கணேசனிடம் துவங்க என யோசனையாக இருந்தது.
பெங்களூர் விமானநிலையம் வந்து இறங்கவும் கணேசனை அழைக்க ஸ்ரீதர் வந்திருந்தான்.
இளங்கோவன், சங்கவையை அழைக்க கோமகளின் கணவர் ராஜசேகர் வந்திருந்தார்.
வந்தவர் கணேசனை பார்த்து நலம் விசாரித்துவிட்டு ஸ்ரீதரையும் சேர்த்தே வரவேற்பு நிகழ்ச்சிக்கு வர சொல்லி அழைப்பு விடுத்தார்.
அவருக்கு அந்த எண்ணமே இல்லை. வரவேற்பு பெங்களூரில் என்பதனால் தான் கணேசனுடன் அவர் வந்ததுமே.
இல்லை என்றால் நிச்சயம் வந்திருக்க போவதில்லை. அதுவும் பேரனின் பிறந்தநாள். அதனை எப்படி தவிர்க்க முடியும்?
கோமகள் வீட்டு விசேஷத்திற்கு செல்ல அவருக்கு விருப்பமே இல்லை. இப்போது சங்கவை அழைக்க,
“நீங்களும் கண்டிப்பா வரனும் மேம். என் வொய்ப் ரொம்ப சந்தோஷப்படுவாங்க…” என்றார் ராஜசேகர்.
அதற்குள் கோமள அவருக்கு அழைத்துவிட மேலோட்டமாய் இதனை ராஜசேகர் சொல்லவும் போனை சரஸ்வதியிடம் தர சொல்லி தானே மீண்டும் அழைப்புவிடுத்தார்.
அவரால் மீற முடியவில்லை. சரி என்றதும் தான் அங்கிருந்து கிளம்பவே முடிந்தது.
ஸ்ரீதர் அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்ப ராஜசேகருடன் கிளம்பிய இளங்கோவன் தாங்கும் இடத்திற்கு சென்றதும் தான் மீண்டும் ஒருமுறை நிதானமாக கேட்டார் மனைவியிடம்.
“எனக்கே ஷாக் தான். பொண்ணு கேளுங்கன்னு நிக்கறான். என்ன செய்ய? நீங்களே உங்க மகன்கிட்ட விசாரிச்சுக்கோங்க…” என சொல்லிவிட்டார் சங்கவை.
“அந்த பொண்ணு நம்ம திருவுக்கு பொருத்தமான ஜாதகம். அதனால தான் நானே இதை தங்கச்சிக்கிட்ட குடுத்தேன். அப்ப அது தள்ளி போனாலும் இப்ப ப்ராப்தம் இதுதான்னு இருக்கு….” என்றார் ராஜசேகரும்.
“சரி நான் திருக்கிட்ட பேசிக்கறேன்…” என சொல்லி மகனுக்கு அழைத்தார் ராஜசேகர் கிளம்பவும்.
“நீ உறுதியா தான் சொல்றியாப்பா? கணேசன் பொண்ணை கேட்க சொல்லியிருக்கியே?…” என நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.
“ஆமா, சொன்னேன். எனக்கு உறுதி இல்லைன்னா சொல்லியிருக்கமாட்டேன்…” என்ற திருமொழி,
“இதுவுமே ஒரு ரெண்டுமாசம் கழிச்சு சொல்லியிருக்கனும். ஹ்ம்ம், ஆனா என்னவோ அந்தநேரம் இப்பவே கேட்டுடுங்கன்னு சொல்ல தோணிருச்சு…” என்றான் பளிச்சென்று.
“திரு, என்ன சொல்ற?…” என்றார் உரையாடலை மனைவியும் கேட்கும்படி வைத்து.
“இன்னும் ஒன்றரை மாசம் தான் இருக்கு அவங்களுக்கு பைனல் செமஸ்டர் முடிய. முடிஞ்சதும் பேச சொல்லலாம்னு இருந்தேன்…” என்றான் இன்னும் தெளிவாக.
“அப்போ உங்கம்மாவை பொண்ணு பார்க்க சொன்னது. இதுதான் உன் மனசுல இருந்துச்சுன்னா முதல்லையே இந்த பொண்ணையே பேசியிருக்கலாமே?…” என இளங்கோவன் கேட்க,
“பொண்ணு பார்க்க சொல்லியிருக்க கூடாது தான்…” என்றவன்,
“ஆனா என் மனசுல இருக்குன்னு சொன்னா அம்மா வெய்ட் பண்ண மாட்டாங்களே? ப்ச், அதை விடுங்க. நீங்க அவங்கட்ட பேசுங்க. கட்டாயப்படுத்த வேண்டாம். அவங்களுக்கு மட்டுமில்லை, பொண்ணுக்கும் பிடிச்சு ஓகேனா மட்டும் மேற்கொண்டு பேசுங்க. இல்லைன்னா விட்டுடுங்க…” என்றான் அவன்.
இதில் தாய், தந்தை இருவருக்குமே அத்தனை அதிர்ச்சி. மகன் பேசியதிலிருந்தே அவர்களுக்கு புரிந்தது.
முன்பிருந்தே நிதர்ஷனா மேல் தான் அவனின் எண்ணமெல்லாம். அதனை வெளிப்படுத்த தக்க சமயம் அவன் பார்த்திருந்திருக்கிறான் என்று.
இப்போது அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் வேண்டாமா? வேறு ஒரு பெண்ணை பார்க்க கூட விரும்பாதவன் அடுத்து திருமணத்திற்கு என்ன சொல்வான்? என் மகனின் வாழ்க்கை? சங்கவைக்கு திடுக்கென்றானது.
“இன்னொரு விஷயம். ஒருவேளை அவங்க ஓகே சொல்லிட்டா எக்ஸாம் எல்லாம் முடிஞ்ச பின்னாடி கல்யாணம் வச்சுக்கலாம். எக்ஸாம் முடியட்டும். புரியுதா? படிக்கும் போது கல்யாணம், ஹ்ம்ம். அது வேண்டாம்…” என்றும் அவன் சொல்ல,
“சரிப்பா…” என்றார் இளங்கோவன்.
“ஸ்வாதிக்கு இப்பவே எதுவும் சொல்ல வேண்டாம். முதல்ல நீங்க பேரன்ட்ஸ் பேசுங்க…” என்றவன் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டான்.
“என்னம்மா? இவன் என்ன இப்படி சொல்றான்?…” என்றார் இளங்கோவன்.
“இந்த படவா அந்த பொண்ணை மனசுல வச்சிக்கிட்டு தான் நான் காமிக்கிற ஒருத்தரையும் பார்க்கலைங்க. எனக்கு இப்ப அதெல்லாம் ஒண்ணுமில்லை. பொண்ணு வேண்டாம்ன்னு சொன்னா விட்டுடுங்கன்னு சொல்றானே? அப்ப இவன் கல்யாணம்?…” என அவர் நெஞ்சில் கை வைக்க,
“அதுக்கு என்னம்மா பண்ண முடியும்? அடுத்து வேற பொண்ணு தான் பார்க்கனும்…” என்றார் இளங்கோவன்.
“வேற பொண்ணு? உங்க மகன் நல்லா பார்த்தானே? ம்ஹூம், இதை நான் பேசிக்கறேன்…” என்ற சங்கவை கோமகளுக்கு அழைத்துவிட்டார்.
ராஜசேகரையும் பேச்சில் இழுத்தவர்கள் விஷயத்தை சொல்ல அவர் இந்த திருமணம் நிச்சயம் நடக்கும் என்றார்.
“இந்த திருவிழா தேரோட்டத்துல திரு அவன் சம்சாரத்தோட தான் கோவிலுக்கு வருவான் பாருங்க…” என்றார் ராஜசேகர்.
———————————————-
ஸ்ரீதர் வீட்டில் அனைவரும் சேர்ந்திருக்க வீடே இரண்டுபட்டது. அதிலும் தாத்தா பாட்டி வரவும் ஷிவேஷை கையில் பிடிக்க முடியவில்லை.
கணேசன் தான் பெரிதாய் ஒட்டிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்தபடி பேரனுடனே நேரத்தை கடத்தினார்.
அன்று மெர்லின் அலுவலகம் சென்றிருக்க ஸ்ரீதர் மட்டுமே விடுமுறை எடுத்திருந்தான்.
பிரகாஷ் அன்று இரவு கிளம்புவதாய் இருந்தது. ஷிவேஷை தூண்டிவிட்டு அவனை காலையிலிருந்தே உயிரை வாங்க ஆரம்பித்திருந்தாள் நிதர்ஷனா.
“டேய் அண்ணா, இந்த ரெண்டு குட்டிச்சாத்தான்களும் என்னை வேலையே பார்க்க விடமாட்டேன்னு படுத்துதுங்கடா. புடிச்சு அப்பா ரூம்ல கொண்டுபோய் விடு. கம்முன்னு இருப்பா பெரிய பிசாசு…” என அண்ணனுக்கு அழைத்து தங்கையை அண்ணன் மகனை சேர்த்து புகார் வாசித்தான் அவன்.
“மத்ததுக்கு எல்லாம் லீவ் போடுவ. அப்பாவே எப்பவாச்சும் தான் இங்க வராங்க. இப்ப உன்னால வர முடியாதா? அனுபவி…” என்று இரக்கமின்றி தம்பியை கை விட்டான் ஸ்ரீதர்.
“சித்து எப்ப வர?…” என கால்மணிநேரத்திற்கு ஒருமுறை அண்ணன் மகன் அதட்டலும், கொஞ்சலும், குழைவுமாய் கேட்க அங்கே பிரகாஷிற்கு வேலையில் மனம் ஈடுபடவே இல்லை.