“ஹ்ம்ம், அப்பா ஒரு நல்ல விஷயமா உன்கிட்ட பேச கூப்பிட்டேன். இங்க பார் பாப்பா, உன் வாழ்க்கையில எப்ப எது நடக்கனும்ன்னு பெரியவங்க நாங்க, உன் அப்பா நான் சரியா முடிவெடுப்பேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கு தானே?…” என்று கேட்டதற்கு மறுக்கவா முடியும்?
‘ஆமாம்’ என தலையசைத்தவளுக்கு படபடவென வந்தது. எதற்கு இந்த பீடிகை என அவள் பார்த்திருக்க,
“ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு பாப்பா. உன்னை பொண்ணு கேட்டிருக்காங்க…” என்றதும் உள்ளுக்குள் பட்டீரென ஒரு வெடிச்சத்தம்.
“பொண்ணா? கல்யாணமா?…” என அவள் முகம் மாற,
“எல்லாம் நல்ல இடம். நேத்தே நாங்க பார்த்து பேசி முடிவு பண்ணிட்டோம். எங்க எல்லாருக்கும் சம்மதம். உனக்கு ஓகேனா அவங்க வீட்டுல சொல்லிடலாம். மேற்கொண்டு பேசலாம். நீ என்ன சொல்ற?…” என்றார் அவர்.
“இல்லப்பா இன்னும் படிப்பு முடியலை. பேங்க் எக்ஸாம்…” என அவள் இழுக்க,
“இதெல்லாம் தெரியாமலா பாப்பா நான் உன்கிட்ட பேசறேன். அதெல்லாம் எவ்வளோ முக்கியமோ உன் வாழ்க்கையும் எதிர்காலமும் எங்களுக்கு முக்கியம் தானே? எதெது எந்தெந்த நேரம் நடக்கனுமோ அதது அந்தந்த நேரம் நடக்கனும்…” என்ற கணேசன்,
“கண்டிப்பா நீ எக்ஸாம் எழுதி பேங்க் மேனேஜராவ. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நேத்தே அவங்ககிட்ட சொல்லிட்டேன். அவங்களுக்கும் சம்மதம் தான்…” என்றார்.
“இது நேத்து நான் சொன்ன டயலாக்ல?…” என ஸ்ரீதர் பிரகாஷின் காதை கடிக்க,
“இப்ப என்ன? அவர்கிட்டயே கேட்டுடுவோமா? எவ்வளோ சீரியஸா பேசிட்டிருக்கார். அங்க பாரு நிதுவை. பதில் சொல்ல முடியாம உக்கார்ந்திருக்கறதை. பாவம்டா….” என்றான் பிரகாஷ்.
“எப்படியும் இன்னும் ஒன்னு, ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணி வச்சிருவோம். அதுக்கு இப்பவே நடக்குது. அவ்வளோ தான்…” என்றான் ஸ்ரீதர் பிரகாஷின் தோளில் கை போட்டு அணைத்தபடி.
கணேசனின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிப்பதா இல்லையா என்ன முடிவிற்கு வருவதென்றே நிதர்ஷனாவிற்கு தெரியவில்லை.
ஒருவிதமாய் தடுமாறி போய் பார்த்தாள் அவள். திருமணம் என்று அவள் யோசிக்கவே இல்லை.
திடீரென இப்படி சொல்ல தான் என்ன செய்ய முடியும்? தாயை பார்த்தாள் நிதர்ஷனா.
“என்னம்மா? சம்மதம் இல்லையா? வேண்டாம்ன்னா அதையும் சொல்லிடு பாப்பா. உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம்…” என்றார் கணேசன்.
“அப்படி இல்லைப்பா…” என்றவள் தவித்து பார்க்க,
“அப்பா உனக்கு நல்லது தான் செய்வேன்னு நம்பிக்கை இல்லையா பாப்பா? அதுவும் உன் அண்ணனுங்க, அண்ணி, அம்மா எல்லாருக்குமே சம்மதம். மாப்பிள்ளையை, அவங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சிருக்கு. வேணும்னா கேளேன்…” என்றார்.
அவர்களும் ஆமோதிக்க சரஸ்வதி தான் யார் மாப்பிள்ளை என சொல்ல ஆர்ப்பரித்தார். அதற்குள்,
“சம்மதம் ப்பா. உங்க விருப்பப்படி செய்ங்க…” என்று நிதர்ஷனா சொல்லிவிட்டாள்.
“மாப்பிள்ளை வீடு பத்தி இன்னும் சொல்லலையே…” என சரஸ்வதி கேட்க,
“முதல்ல பொண்ணுக்கு இனிப்பை குடு. நான் அவங்களுக்கு கூப்பிட்டு விஷயத்தை சொல்றேன்…” என்ற கணேசன்,
“ஸ்ரீதர் நீயும் உன் சம்சாரமும் அவங்கக்கிட்ட பேசுங்க. வீட்டுக்கு கூப்பிடுங்க…” என்றார் கணேசன்.
அவர்களும் சரி என்க போனை எடுத்துக்கொண்டு கணேசன் பரபரக்க மெர்லின் தான் அவரை நிதானப்படுத்தினாள்.
“அவ சம்மதம் சொல்லிட்டாளே, யார் என்னன்னு எல்லாம் சொல்லவேண்டாமா மாமா?…” என்றவள்,
“நிது வா…” என தனியே அழைத்து சென்றாள் நிதர்ஷனாவை.
“சரி நீங்க சொல்லிட்டு வாங்க. நான் கோமகளுக்கு கூப்பிட்டு சொல்றேன்…” என நகர்ந்தார் கணேசன்.
மகள் சம்மதித்துவிட்டாள். இதற்கு மேல் மறுக்க என்ன இருக்கிறது என்றொரு எண்ணம் அவருக்கு.
“முதல் தடவையா?…” என்ற நிதர்ஷனாவிற்கு உள்ளுக்குள் தடதடவென ரயில் ஓடும் சத்தம்.
“ஆமா, அவங்களே தான். திரும்பவும் கேட்டிருக்காங்க. உங்க சேர்மன் ஃபேமிலி தான்…” என மெர்லின் சொல்லியது தான் தாமதம்.
நிதர்ஷனாவிற்கு தலை கிறுகிறுவென சுற்றிவிட்டது. அவளால் அதனை நம்ப முடியவில்லை என்பதை விட ஜீரணிக்கவே முடியவில்லை.
“என்ன?…” என்றவள் அடுத்து பேசும் முன்,
“மெர்லின் உன்னை மாமா கூப்பிடறாங்க…” என வந்தார் சரஸ்வதி.
“உன்னையும் தான் ஸ்ரீதர்…” என சொல்லியவர் அவர்கள் எழுந்து செல்லவும் மகளின் அருகில் அமர்ந்தார்.
அரண்டு போய் இன்னும் அதிர்ச்சியில் உறைந்திருந்தவளின் கன்னம் பற்றி தன் பக்கம் திருப்ப,
“ம்மீ, என்னால ஒரு அரைமணி நேரம் அவங்களோட கார்லயே ட்ராவல் பண்ணி வர முடியலை. ஏன் ம்மீ?…” என்றாள் பரிதாபமாய்.
அழும் நிலையில் கூட இல்லை. ஒருவித பதட்டம், சட்டென மனதிற்குள் தோன்றி மறைந்த திருமொழிவர்ணனின் முகமும் அவளை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.
“ஹைய்யய்யோ என்னால முடியாது, முடியாது. நான் மாட்டேன்…” என தாயை பாய்ந்து பயத்தில் கட்டிக்கொண்டாள் நிதர்ஷனா.
——————————————-
பிறந்தநாள் விழா நடக்க இருக்கும் வீட்டில் கல்யாண களை சூழ்ந்துகொண்டது. வீடெங்கும் பூ வாசம். நெய்யின் மணம்.
“இன்னும் கொஞ்சம் பூ வைக்கனுமா மெர்லின்?…” என சரஸ்வதி மருமகளிடம் கேக்க,
“போதும் த்தை. பொண்ணு பார்க்க அவங்க நாலு பேர் தானே வராங்க? லைட்டாவே இருக்கட்டும். இதுவே போதும்…” என்றவள் நிதர்ஷனாவின் முகத்தை கண்ணாடியில் நிமிர்த்தி பார்த்தாள்.
இன்னும் அதிர்ச்சி விலகாத மிரண்ட பார்வையுடன் நடப்பதை நம்ப முடியாமல் அவ்வப்போது பிரகாஷின் கையையும், ஸ்ரீதரின் கையையும் கிள்ளி நிஜமா என பார்த்துக்கொண்டிருந்தாள் நிதர்ஷனா.
அறைக்குள் தாயிடம் மாட்டேன் என சொல்லி உருண்டு புலம்பி தள்ளிக்கொண்டிருக்க வெளியில் கணேசனிடம் பேசிய சங்கவையும், இளங்கோவனும் மாலை வருகிறோம் என்று சொல்லிவிட்டனர்.
இடையில் ராஜசேகர் புகுந்து நாள் நன்றாக இருப்பதாக பெண் பார்க்கும் வைபவமாகவே மாற்றிவிட்டார்.
அதையும் சொல்ல மறுக்கமுடியவில்லை. அவர்கள் நால்வரும் நல்ல நேரம் பார்த்து வருவதாக சொல்லவும் வீடே தடபுடல்பட்டது.
பேந்த பேந்த விழித்தபடி இருந்தவளை கணேசன் புன்னகையுடன் பார்ப்பதும் மகளின் திருமண வேலைகள் குறித்து மகன்கள், மருமகளுடன் இணக்கமாக அமர்ந்து அப்போதே திட்டமிடுவதென முழுதாய் தயாராகிவிட்டார் அவர்.
“அவங்க வந்து பார்த்துட்டு போகட்டுமே, எதுக்கு இப்ப இவ்வளோ ஆர்ப்பாட்டம்?…” என சரஸ்வதி கேட்க,
“பொண்ணு பார்க்க வரதும் உனக்கு சாதரணமா?…” என கணேசன் கேட்க அங்கேயே இருவருக்கும் இடையில் தகராறு.
ஒருவழியாக இருவரையும் சமாதானம் செய்து வைத்து வீட்டை இன்னும் ஒழுங்குபடுத்தி அலங்காரங்கள் முடித்தனர்.
ஷிவேஷ் தனது பிறந்தநாளுக்கு தான் இத்தனை அலங்காரம் என ஒருபக்கம் குதூகலமாக சுற்றிக்கொண்டிருந்தவன்,
“அத்த வா பலூன் ஊதி தா…” என்று பலூனை கொண்டுவந்து அவளின் கையில் திணிக்க,
“இவன் வேற என்னை ரொம்ப டார்ச்சர் பன்றானே?…” என தலையில் கைவைத்து அமர்ந்துகொண்டாள்.