எப்படி யோசித்தும் எவ்வளவு யோசித்தும் திருமொழிவர்ணனை தன் அருகில் நிறுத்த முடியவில்லை.
‘இதென்னடா சோதனை?’ என கன்னத்தில் கைவைத்து அமர்ந்தவள் தான். சரியாக உணவும் இறங்கவில்லை. சரஸ்வதி தான் சமாதானம் செய்தார்.
“ம்மீ நீயாச்சும் அப்பாவோட நேருக்கு நேரா மல்லுக்கு நிக்கிற. எனக்கு சேர்மன் முன்னாடி நின்னா பேச்சே வராது. ஒரே ஒருதடவை தான் அந்த ட்ரெஸ்க்காக பேச போனேன். அதுக்கே கை, கால் எல்லாம் ஆடி போச்சு…” என்றவள்,
“இப்பவும் பாருங்க எனக்கு என்னமோ?…” என்றவள் எங்கே வேறு யாருக்கும் கேட்டுவிடுமோ என வாயை பொத்திக்கொண்டு பாவமாய் பார்த்தாள்.
“பயமா இருக்கு ம்மீ…” என அவரின் மடியில் சாய்ந்துகொண்டாள்.
எல்லாம் முடிவாகிவிட்டது. கணேசன் ஒரு காரியத்தில் இறங்கமாட்டார். இப்போது அவர் திருமணம் முடித்து அதற்கு பின்னான சீர்வரிசைகள் வரை பட்டியலிட்டிருக்க என்ன செய்வதென தவித்து போனார்.
“இங்க பாருடா நிது, நடக்கறது நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ. பொண்ணு தானே பார்க்க வராங்க. முதல்ல இது முடியட்டும். அப்பறமா மத்ததை யோசிப்போம். கல்யாணம்ன்னா என்ன உடனேவா? நாளாகும்ல. அதுக்குள்ள பேசி, புரிஞ்சுக்க நேரமும் இருக்கும்…” என எடுத்து கூறி சமாதானம் செய்து இதோ அவர்களும் வந்துவிட்டனர்.
மற்றவர்கள் வெளியில் பேசிக்கொண்டிருக்க சங்கவை கோமகளுடன் அறையில் இருந்த நிதர்ஷனாவை பார்க்க வந்தார்.
“எப்படி பாப்பா இருக்க?…” என்று கேட்டதும் சரஸ்வதி மெர்லின் சிரித்துவிட,
“ஹாங், நல்லா இருக்கேன்…” என்ற நிதர்ஷனா தாயை பார்த்தாள்.
“நல்லாயிருக்கியாம்மா?…” என கோமகளும் கேட்க அவருக்கும் தலையசைத்தாள்.
“சரி நாங்க வெளில இருக்கோம். வாங்க…” என சொல்லி வெளியேற சரஸ்வதி அங்கே சென்றுவிட்டார்.
“நிறைய பேர் வந்திருக்காங்களா அண்ணி?…” என பதட்டத்துடன் நிதர்ஷனா கேட்க,
“அதெல்லாம் இல்லை. மாப்பிள்ளையோட அப்பாம்மா, இப்ப வந்தாங்களே கோமகள், அவங்க ஹஸ்பன்ட். நாலு பேர் தான். மாப்பிள்ளை தங்கச்சியால உடனே கிளம்பி வர முடியாதாம். அவங்க வீடியோ கால்ல வரேன்னு சொல்லியிருக்காங்க…” என்றாள் மெர்லின் புன்னகையுடன்.
“ஹப்பாடா…” என நிதர்ஷனா நெஞ்சில் கை வைக்க,
“எதுக்காம் இந்த ஹப்பா?…” என மெர்லின் சிரித்துவிட்டாள் நிதர்ஷனாவின் பாவனையில்.
“பார்ரா என் தங்கச்சியா இது? சொட்டு நீலம் கலந்த மாதிரி இன்ஸ்டண்டா ஒரு அமைதி….” என தங்கையின் காதை பிடித்து வம்பிழுக்க,
“அவளே பதட்டத்துல இருக்கா. சும்மா இருக்கமாட்டியா நீ…” என பிரகாஷின் தலையில் குட்டு வைத்தாள் மெர்லின்.
“இதுக்கெல்லாம் எப்பவாச்சும் தான் சான்ஸ் கிடைக்கும். கிடைக்கும் போது யூஸ் பண்ணிக்கனும்…” என பிரகாஷ் சொல்ல இது எதுவுமே நிதர்ஷனாவின் காதில் விழவில்லை.
கதவு திறந்திருக்க ஹாலில் உள்ள பெரிய டிவியில் புதிதாய் சில குரல்கள் கேட்டது.
“என்ன சத்தம் ண்ணா?…” என பிரகாஷிடம் நிதர்ஷனா கேட்க,
“மாப்பிள்ளையோட தங்கச்சி, தங்கச்சி வீட்டுக்காரர் எல்லாம் வீடியோ கால்ல கனெக்ட்டாகிருக்காங்க. அதான் டிவில கனெக்ட் பண்ணியிருக்கோம். அவங்களும் அப்படித்தான் பண்ணியிருக்காங்க…” என்றான்.
“என்னம்மா பன்றீங்க?…” என சரஸ்வதி வந்துவிட,
“கூட்டிட்டு வரேன் த்தை…” என்றதும் சரஸ்வதி பிரகாஷை அழைத்துக்கொண்டு சென்றார்.
இரு குடும்பங்களும் பொதுவான விஷயங்கள், திருமணம் சம்பந்தமான சில சம்பிரதாய பேச்சுக்களை முதலிலேயே முடித்திருந்தனர்.
அதன் பின்னரே நிதர்ஷனாவை பார்க்க அழைக்க மெர்லினுடன் அமைதியாய் நடந்து வந்தாள் நிதர்ஷனா.
“எல்லாருக்கும் வணக்கம் சொல்லி கொஞ்சமாவது சிரிச்ச முகமா இரு நிதுக்குட்டி…” என்றார் சரஸ்வதி மகளிடம் வந்து.
சொல்லியதை போலவே நிதர்ஷனா அனைவருக்கும் வணக்கம் வைக்க சங்கவை பூரித்து பார்த்தார் மருமகளை.
“இங்க வாம்மா, வந்து உட்கார்…” என சொல்ல,
“ம்மா எனக்கு இங்க பொண்ணை தெரியலையே?…” என்றாள் திரையில் ஸ்வாதி.
“இரும்மா…” என்றவர் நிதர்ஷனாவை தன்னருகில் அமர வைக்க இப்போது அங்கேயும் நடுநாயகமாக நிதர்ஷனா தெரிந்தாள்.
நிமிரவே இல்லை அவள். ‘பொத்துன்னு விழுந்து மானத்தை வாங்கிடாத நிது’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் கை விரல்கள் பின்னிக்கொண்டது.
“ஹாய் நிதர்ஷனா…” என்ற ஸ்வாதி,
“ஓஹ், நான் அண்ணின்னு சொல்லனுமோ?…” என கேட்டு,
“நிமிர்ந்து எங்களை பாருங்க அண்ணி…” என கலாட்டா செய்ய கூச்சம் பிடுங்கியது நிதர்ஷனாவை.
“உங்களை பார்க்க பெங்களூர் வர முடியலை. இங்க இருந்தாவது பார்க்க வேண்டாமா? ஆக்சுவலி நாத்தனாரா நான் தான் வந்திருக்கனும். எங்களை பாருங்க முதல்ல…” என ஸ்வாதி பேச ‘பாரும்மா’ என்றனர் அருகிலும்.
மனதை திடப்படுத்திக்கொண்டு மெல்ல நிமிர்ந்து நிதர்ஷனா பார்க்க அங்கே சோபாவில் ஸ்வாதியும் பாலாஜியும் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
அவர்களை பார்த்ததும் அவர்களின் புன்னகைக்கு பதிலாக தானும் புன்னகைக்க பக்கவாட்டிலிருந்து மெதுவாய் நடந்து திரையில் நடுவில் வந்து நின்றான் திருமொழிவர்ணன்.
ஸ்வாதியின் குழந்தையை தோளில் போட்டு தட்டிக்கொடுத்தபடி வந்தவனை பார்த்ததும் பதறி விழிகள் பெரிதாய் அகன்று கொடுக்க சட்டென குனிந்துகொண்டாள் நிதர்ஷனா.
“வந்து உட்காரு திரு…” என்று சங்கவை அழைக்கவும் பாலாஜி எழுந்து குழந்தையை தான் வாங்கிக்கொள்ள வந்தமர்ந்தான் திருமொழி.
“வணக்கம்…” என்று அவனிருக்கும் பொதுவாய் சொல்லி புன்னகைத்தவன் நிதர்ஷனாவை பார்க்க நிமிரவே இல்லை அவள்.
அதில் இன்னுமே அடக்கப்பட்ட புன்னகை திருமொழியின் முகத்தில். அதுவே அவன் முகத்தை விகசிக்க செய்தது.
“ப்பா என்ன இது? நான் என்ன சொல்லியிருந்தேன்…” என கண்டனத்துடன் திருமொழி கேட்க,
“ராஜசேகர் தான் சொல்லிட்டாப்ள. கணேசனுக்குமே சம்மதம் தான். இன்னும் ஒருமாசம் தானே திரு?…” என்றார் இளங்கோவன்.
“நான் முதல்லையே சொன்னேன்ல எக்ஸாம் முடியட்டும்ன்னு. இன்னும் இருபது நாள்ல கல்யாணம். அதுவும் தேரோட்டத்துக்கு ரெண்டுநாள் முன்னாடி. என்ன இது? எதுக்கு இந்த அவசரம்?…” என கண்டித்தான்.
“எல்லாம் பேசியாச்சுப்பா…” என்றவர் அமைதியாகிவிட சில நொடி அமைதியானவன்,
“டேட் பைனல் பண்ணியாச்சா?…” என யோசனையுடன் கேட்டவன் அவர் சொல்லிய பதிலில்,
“சரி நான் பொண்ணுக்கிட்ட தனியா பேசனும்…” என்றான்.
“இப்பவா?…” என இளங்கோவன் கேட்க,
“ஏன்? இப்ப தான். பார்த்து பேசனும். லேப்டாப்பை அங்க குடுக்க சொல்லுங்க…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
பிரகாஷிடம் வந்து இளங்கோவன் சொல்லவும் அவன் ஸ்ரீதரை பார்க்க ஸ்ரீதர் டிவியில் இருந்த தொடர்பை துண்டித்து லேப்டாப்பை தூக்கி அவன் கையில் கொடுத்தான்.
“என்னண்ணி இது? இருபது நாள்ல கல்யாணமாம் அதுவும் திருவிழால. எக்ஸாம் வேற இருக்கு. நான் எப்படி கல்யாணம் முடிச்சிட்டு காலேஜ் போக? நான் மாட்டேன்….” என நிதர்ஷனா ஒருபாடு பேசி தீர்க்க,
“நிது…” என அதட்டலுடன் வந்தான் பிரகாஷ்.
“ண்ணா…” என்றவளை ‘பேச வேண்டாம்’ என தலையசைத்து சைகையில் சொல்லி,
“மாப்பிள்ளை உன்கிட்ட பேசனுமாம். லைன்ல இருக்கார்…” என்றதும் கிட்டத்தட்ட மயக்கமே வந்துவிடும் நிலை தான் நிதர்ஷனாவினது.
“ப்ளீஸ் ண்ணா, வேணாம் வேணாம்…” என இதழசைத்து கை கூப்பி, அவனின் காலில் விழுவதை போல பாவனை செய்து, கெஞ்சி சில நொடிகளில் அத்தனை குட்டிக்கரணங்ளும் செய்துவிட்டாள் அவள்.
டீப்பாயை கட்டில் அருகில் இழுத்து போட்டு லேப்டாப்பை வைத்த பிரகாஷ் நிதர்ஷனாவை அதன் முன்பு அமர வைத்துவிட்டு பேசு என சொல்லி கதவை சாற்றிவிட்டு சென்றான்.
திருமொழி இணைப்பில் இருக்கிறான், தன்னை பார்க்கிறான் என்ற உணர்வில் அவள் நிமிரவே இல்லை. விரல்கள் பத்தும் கிடுகிடுவென நடுங்க விழிகள் உயரவே இல்லை.
சிலநொடிகள் அவள் நிமிர்வதற்காகவே திருமொழி மௌனமாய் இருக்க அந்த நிசப்தத்தில் அவன் சென்றுவிட்டானோ என நிமிர்ந்து பார்த்தாள் நிதர்ஷனா.
“குட் நிதர்ஷனா…” என்றான் திருமொழிவர்ணன் இதழ்விரியா மெல்லிய புன்னகையுடன்.