ஆடாமல் அசையாமல் அவள் வந்து அமர்ந்திருந்த விதம் கண்டவனின் முகத்தில் ரசனை பொய்கையாய்.
திருமொழி சொல்லிய ‘குட் நிதர்ஷனா?’ என்ற கேள்வி எதற்கு என தோன்றினாலும் வாய்விட்டு அவனிடம் கேட்கவில்லை.
“நீ என்னை நிமிர்ந்து பார்த்ததுக்கு தான் இந்த குட் நிதர்ஷனா…” என திருமொழி அவளுக்கு விளக்கம் சொல்ல ‘என்ன மனசுல நினைக்கிறதை சொல்றார்?’ என இன்னும் பீதியில் உறைந்து போனாள் நிதர்ஷனா.
பதுமையாய் அவள் அப்படியே அமர்ந்திருக்க பார்த்துக்கொண்டே இருக்க ஆசை தான் அவனுக்கும். ஆனால் இன்னும் இருபதுநாளில் திருமணம்.
பார்க்கவேண்டிய வேலைகள் அநேகம். அதுவும் திருவிழாவும் சேர்ந்து வர அது முடிந்த ஒருமாதத்தில் கல்லூரியில் தேர்வு.
ஒருநிமிடம் அத்தனை கோபம் தான். கொஞ்சமேனும் நிதானமாய் முக்கிய நிகழ்வுகளை ரசித்து, அனுபவித்து கலந்துகொள்ள முடியாமல் போகிறதே என்று.
ஆனால் இந்த நொடி, நிதர்ஷனா அவன் முன் அமர்ந்திருந்த நொடி இவை எல்லாம் ஒன்றுமே இல்லை என தோன்றியது.
‘ஹ்ம்ம், நல்லது தான். நடக்கட்டும்.’ என்ற முடிவிற்கு வந்துவிட்டவன், தான் பேசாமல் அவள் வாயை திறக்க போவதில்லை என்றுணர்ந்தான்.
“ஹ்ம்ம் நெக்ஸ்ட்…” என்ற திருமொழி இன்னும் சட்டையின் கைகளை முழங்கை வரை உயர்த்தியபடி முன்னே வந்தமர்ந்தான்.
திருமொழி முன்னே நகர்ந்ததை பார்த்தவள் தானும் தன்னிச்சையாக பின்னால் சாய பார்க்க,
நிதர்ஷனா தான் பேச்சின்றி மூச்சு விடவும் மறந்து பின்னால் நகர முடியாமல் பார்த்திருக்க திருமொழி முகத்தில் குறுஞ்சிரிப்பு அவளின் பாவனையில்.
“எதுக்கு இவ்வளோ பயம்?…” என கேட்க,
“இல்ல ஸார்…” என்றாள் நிதர்ஷனா. அவன் கண்கள் சுருங்கி விரிந்தது.
“ஸாரா? ஹ்ம்ம்…” என தலையாட்டிக்கொண்டவன்,
“ஓகே, இந்த கல்யாணத்துல உனக்கு முழு சம்மதமா?…” என்றான் உடனே.
“ஹாங்…” என திகைத்து விழிக்க அவன் அதற்கு மேல் அழுத்தமாய் பார்த்தான்.
“ஹ்ம்ம், சம்மதம், சம்மதம்…” என்றவள் எச்சிலை கூட்டி விழுங்க, அதை பார்த்தபடி தன்னிரு கைகளின் விரல்களையும் கோர்த்து பிரித்த திருமொழி லேசாய் விழிகளை திருப்பி மீண்டும் அவள் மீது பதித்தான்.
“ஓகே, எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் பண்ணியாச்சா நிதர்ஷனா?…” அடுத்த கேள்வி.
‘இதென்னடா’ என்றானது நிதர்ஷனாவிற்கு. தன்னை போல அவள் பார்வை அறையின் கதவை பார்த்தது.
“யாரும் இருக்காங்களா அங்க?…” என்றான் திருமொழி.
“ம்ஹூம், இல்லையே. அண்ணா டோர் லாக் பண்ணிட்டு போய்ட்டாங்க…” படபடவென பதில் சொல்ல,
“குட்…” என்றவன் மீண்டும் அழுத்தமாய் பார்க்க,
“எக்ஸாம்க்கு நல்லா ப்ரிப்பேர் பண்ணியிருக்கேன்…” என்றாள் அவன் கேட்ட கேள்வியை ஞாபகப்படுத்தி.
“ஹ்ம்ம்…” என பின்னே சாய்ந்தமர்ந்தான் திருமொழி.
“மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க. இன்னும் ட்வென்டி டேய்ஸ்ல…”
“தெரியும்…” என தலையாட்டினாள் பொம்மையாக.
“உனக்கு ஓகேவா?…” என்றவன் அவள் பதில் சொல்லும் முன் தன் விழிகளை விரல்கொண்டு தேய்த்து தலையை கோதிக்கொண்டான்.
‘என்னவோ யோசிக்கிறான்’ என அவனின் செய்கையில் புரிய நிதர்ஷனாவும் அவனைவிட்டு பார்வையை திருப்பினாள்.
“நிதர்ஷனா…” என்றவன் அழைப்பில் திடுக்கிட்டு மீண்டும் பார்த்து,
“ஸார்…” என பிள்ளை கேட்டதும் திருமொழி முகத்தில் கூடுதலாய் புன்னகை.
“நான் ஸாரா?…” என்றான் அவளிடத்தில்.
“ஹ்ம்ம்…” என அதற்கும் தலையாட்டினாள்.
“ஓகே, லீவ் இட். உன்னோட எக்ஸாம்க்கு டைம் இருக்கு. நம்ம மேரேஜ் முடிஞ்சு ஒருமாசம் நீ காலேஜ் போகவேண்டி இருக்கும். ஒரு மாசம்ன்னா எக்ஸாம்க்கு மட்டும். முழுசா இல்லை…” என்று அவன் சொல்ல ‘நம்ம மேரேஜ்’ என்ற வார்த்தை அவளுள் என்னவோ செய்தது.
அந்த உணர்வின் அவஸ்தை நிதர்ஷனா முகத்தில் தெரிய அவளறியாமலே முகம் துளி குங்கும சிவப்பில் ஜொலித்தது.
“ஊஃப்…” என அதனை கண்கூடாக கண்டவன் மூச்செடுத்துக்கொள்ள அவள் விழிகள் தாழ்ந்தது.
“நான் பேசிட்டிருக்கேன் உன்கிட்ட. நீ என்னை தான் பார்க்கனும் நிதர்ஷனா. நிமிர்ந்து பார்…” என்று அவளின் நொடிநேர பார்வை திருப்புதலையும் அவன் அனுமதிக்காமல் விரல் நீட்டி சொல்ல தலையசைத்தாள் நிதர்ஷனா.
‘யாராவது உள்ளே வந்துவிடமாட்டார்களா, இல்லை தன்னை அழைத்துக்கொள்ள மாட்டார்களா?’ என ஒருபுறம் தேட வேறு செய்தது அவள் மனது.
திருமொழியுடன் இப்படி அமர்ந்து பேச முடியவில்லை. அவனை பார்க்கவும் படபடத்தது. அதிலும் அந்த அதட்டல் இன்னும் அவனை விட்டு விலக்கி நிறுத்தியது.
“சரி நான் சொல்றதை கேட்டுக்கோ, கல்யாண தேதி முடிவாகிருச்சு. கல்யாணம் ஷார்ட் பீரியட்லன்றதால மேரேஜ் முடியற வரை நீ காலேஜ் வரவேண்டாம்…” என்றதும் அதிர்ச்சியும், நிம்மதியும் அவளிடம் எழுந்தது.
கல்லூரியில் விஷயம் கேள்விப்பட்டு யார் கேட்டாலும் சங்கடத்துடன் பதில் சொல்லவேண்டாம் என நிம்மதியனாள்.
“உனக்கான நோட்ஸ் வீட்டுக்கே வரும். வீட்டுல இருந்தே ப்ரிப்பேர் பண்ணிக்கோ. இது உனக்கான ஸ்டடி ஹாலிடேன்னு கூட நினைச்சுக்கோ. ஓகே…” என்றான்.
“ஹ்ம்ம் ஓகே ஸார்…” என அதற்கும் நிதர்ஷனா.
“வேற எதாச்சும் கேட்கனுமா என்கிட்ட?…”
“ம்ஹூம் இல்லையே…”
“நிஜமாவா?…” என்றவன் கண்களில் மெல்லிய குறும்பு எட்டி பார்த்ததோ?
கண்டிப்பில் தான் அவனை கண்டிருக்கிறாள். இப்படி சிரித்து, இலகுவாய் தன்மையாய் பேசுபவன் முகத்தில் குறும்பா? ‘பிரம்மை’ என தள்ளிவிட்டவள்,
“இல்லை எதுவும் இல்லை…” என்றாள்.
வாய் ஓயாமல் பேசுபவளுக்கு அவனிடம் வார்த்தைகளே வரவில்லை. இதில் அவன் முகம் பார்த்தபடி இருக்க சொல்ல அது இன்னுமே கஷ்டமாக இருந்தது.
“ஓஹ், சந்தேகம் எதுவும் இல்லையா?…” என கேட்டவன் கால் மேல் காலிட்டு அமர நிதர்ஷனா முகத்தில் லேசாய் அச்சம்.
எதை கேட்கிறான் இவன் என்று பதட்டத்துடன் பதில் சொல்லாமல் அவள் அவனை பார்ப்பதும் கதவை பார்ப்பதுமாக இருந்தாள்.
“வெளில போகனுமா நிதர்ஷனா?…” என அவன் கேட்டதும் ‘ஆமாம்’ என தலையசைத்தவள் வேகமாய் எழுந்தேவிட்டவள் பேச்சு முடிந்தது என்பதை போல நகர,
‘இப்படியாடி உனக்கு கல்யாணம் அமையனும் நிது?’ என தன்னை தானே பாவப்பட்டுக்கொண்டாள்.
அவனின் இந்தவகையான அணுகுமுறையில் அவளின் உடல்மொழியே மாறிவிட்டது. இதற்கு மேலும் தாங்கமாட்டாள் என நினைத்து,
“ஓகே ரிலாக்ஸ். இப்ப நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். ஏதாவது பேசனும்ன்னா கேட்கனும்ன்னா என்னோட நம்பரை அம்மாக்கிட்ட வாங்கிக்கோ. பேசலாம். ஓகே…” என்று சொல்ல தலையை ஆட்டினாள்.
எந்த திருமணத்திலும் மாப்பிள்ளை, பெண் தனிப்பட்ட பேச்சுவார்த்தை இப்படி இருந்திருக்கவே செய்யாது என நொந்துபோனாள் நிதர்ஷனா.
கூப்பிட்டு வைத்து ‘வைத்து செய்வது’ என்பது இதுதான் போல என இன்னும் தெளியாமல் அவள் பார்த்தவள்,
“நான் போகட்டுமா?…” என்றாள் அவனிடம் அனுமதியாக.
“இப்ப வேண்டாம்…” பட்டென்று சொல்லியவன்,
“நேத்து என்னோட பர்த் டே…” என கூற,
“ஹ்ம்ம், ஓகே….” என்றாள் அவனிடத்தில்.
‘சுத்தம்’ என நெற்றியில் கையை வைத்துக்கொண்டவனுக்கு என்ன செய்ய நேற்று தெரியவில்லை.
பேசவேண்டும். ஆனால் இப்படி பயந்து நடுங்கி தன்னை பார்ப்பதற்கே யோசிப்பவளை எப்படி இலகுவாக்கி வாழ்வது எப்போது என்பது அவனின் தனி கவலையானது.