அவள் ஒருவித திகைப்பில் அதிர்வில் இருக்கிறாள் என புரிந்துகொண்டவன் அதற்கு மேல் பேசவேண்டாம் என எழுந்துகொண்டான்.
“ஓகே, குட் டே. ஸீ யூ நிதர்ஷனா…” என்று சொல்ல,
“ஓகே ஸார்…” என்றாள் அதற்கு மட்டும் வேகமாக.
அவளின் அவசரத்தில் அப்பட்டமான முறைப்பு தான் திருமொழி முகத்தில். சில நொடிகள் அசையாது பார்த்தவன்,
“போ…” என சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டான்.
“ஹப்பாடா…” என நெஞ்சில் கை வைத்தவள் அப்படியே படுக்கையில் சரிய சிறிது நேரத்தில் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தாள் மெர்லின்.
“என்ன மீட்டிங் ஓவரா?…” என கேட்டுக்கொண்டே வர,
“இன்ஸ்ட்ரக்ஷன் ஓவர் ஓவர்…” என்றாள் நிதர்ஷனா.
“என்ன?…” என மெர்லின் திகைக்க,
“பின்ன, கல்யாணம் வரை காலேஜ்க்கு போகவேண்டாம். அதுக்கடுத்து போய்க்கலாம். அதுவும் எக்ஸாம் மட்டும் தானேன்னு சொல்லிட்டிருந்தார். இதை பேச நீங்க எல்லாரும் கூட இருந்திருக்கலாம்…” என்றாள் அவள் அலுத்துக்கொண்டு.
“நீ என்ன பேசின?…”
“நான் என்னண்ணி பேச? எஸ் ஸார், ஓகே ஸார் தான்…” என்றவள் பேசியதை சொல்ல அதனை கேட்டு நிதர்ஷனா தலையில் நறுக்கென்றே குட்டு வைத்தாள் மெர்லின்.
“உன்னை வச்சுக்கிட்டு?…” என மலைப்பாக அமர்ந்துவிட்டாள் மெர்லின்.
“நான் வேற என்ன பேச? இங்க பாருங்க. என் கை இப்பவும் நடுங்குது…” என சொல்லிக்கொண்டிருக்க சரஸ்வதி வந்துவிட்டார்.
“வா உன் மாமாவும் அத்தையும் கிளம்பறாங்கலாம். உன்கிட்ட சொல்லிட்டு போக வெய்ட் பன்றாங்க…” என மகளை அழைக்க,
“என் மாமா அத்தையா?…” என்ற நிதர்ஷனா தலைக்கு மேல் சட்டென பல்ப் எரிய,
“ஆமா, ஆமா. இன்னைல இருந்து அவங்க மாமா, அத்தை இல்ல. அப்ப இனி மேம் சொல்லவேண்டாமா?…” என சரஸ்வதியிடம் கேட்க தலையில் அடித்துக்கொண்டார் அவர்.
“சொல்லவேண்டாம் பாப்பா. அத்தைன்னே கூப்பிடு…” என சங்கவையே உள்ளே வந்துவிட ‘ஆத்தீ’ அடுத்த அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள்.
பிள்ளைகள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க சரஸ்வதி அமைதியாக கேட்டபடி மகளை பார்த்திருந்தார் கவலையுடன்.
“ம்மீ உனக்கு உன் கவலை. அங்க நான் போனதும் பிள்ளையை எப்படி வளர்த்திருக்காங்கன்னு உன்னை கேட்டுடுவாங்களோன்னு. அதானே?…” என நிதர்ஷனா கேட்க,
“அதே தான்…” என்றனர் ஸ்ரீதரும், பிரகாஷும்.
“நீ கவலையே படாத. அங்க உன் மக வாயே திறக்கமாட்டா ம்மீ. எனக்கு பேச்சே வரலை. இதுல எங்க சேட்டை எல்லாம்? அம்மாடியோ. நான் எப்படிடா அங்க இருப்பேன்? மூச்சு முட்டுது…” என புலம்பி படுத்தி எடுத்துவிட்டாள்.
அவள் மட்டுமே நினைத்திருந்த ஒரு விஷயம் தாயிடம் கூட பகிரவில்லை. மனதிற்குள் மட்டுமே அதை அடைத்துக்கொண்டாள்.
திருமொழி அவனின் பெற்றோரின் முடிவிற்கு சம்மதித்திருப்பதாக அவள் எண்ணம்.
தன்னை போலவே, அவனும் வீட்டில் சொல்லி சரி என்றிருக்கிறான் என நினைத்தவள் இப்படி இதற்கே அதட்டுகிறானே? வாழ்க்கை எப்படி போகுமோ? என்ற எதிர்கால பயம் அவளை ஆட்டுவித்துக்கொண்டிருந்தது.
சங்கவையிடம் அவனின் எண்ணை வாங்கவில்லை. தன்னுடையதை கொடுத்தனரா என்றும் தெரியவில்லை.
அந்த நினைவுகள் எதுவுமில்லை அவளிடம். எதிர்பாராத நிகழ்வுகள், தன் வீட்டினர் பரபரவென வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
முதல் பத்துநாட்கள் பெங்களூரில் தான் இருந்தாள் நிதர்ஷனா. முகூர்த்தக்கால் ஊன்றும் அன்று காலை தான் வந்திறங்கினாள்.
வேலைகள் அதிகத்திற்கே இருந்ததனாலும், நாட்கள் குறைவு என்பதனாலும் இரு குடும்பங்களும் பிரித்து தான் வேலைகளை செய்தனர்.
இளங்கோவனும், திருமொழியும் கணேசனுக்கு எந்தவித அழுத்தத்தையும் தரவில்லை.
இரு குடும்பங்களும் இணைந்தே வேலைகளை செய்வது என பேசி பகிர்ந்துகொண்டாகிற்று.
இதில் திருமொழி வீட்டில் திருவிழா வேலைகள் வேறு நகட்டி எடுக்க பாலாஜி உதவிக்கு வந்துவிட்டான்.
கூடுதல் பொறுப்பாக ரத்னாவும், அவரின் குடும்பத்தினரும் சேர்ந்துகொள்ள ஊர்கூடி தேர் இழுப்பதை போல திருமணத்தை நடத்த இருந்தனர்.
———————————-
திருமொழிவர்ணன் வெட்ஸ் நிதர்ஷனா என தங்கத்தால் மின்னிய பொன்னெழுத்துக்கள் விளக்கொளியில் பளபளத்து தீயாய் தகிக்க செய்தது மிருதுளாவை.
இளங்கோவனும், சங்கவையும் சேர்ந்து வந்து வைத்துவிட்டு சென்றிருந்தனர் மிருதுளாவின் வீட்டிற்கு. உடன் வந்தது சுசீலா.
எப்படி? இது எப்படி? எப்படி சாத்தியம்? தன்னை வேண்டாம் என்றவன் நிதர்ஷனாவிற்கு மட்டும் எப்படி சரி என்றான்.
அனைவருக்குமே இது சங்கவை, இளங்கோவன் பார்த்து ஏற்பாடு செய்வது என்று தான் சொல்லப்பட்டிருந்தது.
திருமொழியின் விருப்பம் அங்கே முன்னின்று செயல்படுத்துவது யாரின் கண்களுக்குள் புலப்படவில்லை.
பைத்தியம் பிடித்ததை போல அமர்ந்துவிட்டாள் மிருதுளா. பார்க்க பார்க்க அதை சுக்கு நூறாய் கிழித்தெறியும் ஆத்திரம்.
விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து இப்படி ஒரு பித்து நிலை தான் அவளுக்கு. சாவித்திரி தான் வீட்டிற்கு பதில் சொல்ல முடியாமல், மகளையும் சமாளிக்க முடியாமல் அல்லாடி போனார்.
“விட்டு தொலை மிருது. இனிமே அங்க வேலை வேண்டாம். இதை விட பெரிய இடமா, நல்ல மாப்பிள்ளையா பார்ப்போம்டா. அப்பாவும் உனக்கும் வரன் பார்க்கனும்ன்னு சொல்லிட்டே இருக்காங்க…” என சொல்ல,
“வாயை மூடிட்டு இருக்கமாட்டீங்களா?…” என அவள் இரைந்ததில் வீடே அதிர்ந்தது.
“எனக்கு இன்னொரு மாப்பிள்ளையா? அப்போ திரு யாராம்?…” என பேச சாவித்திரி பயந்து போனார்.
மகளுக்கு எதுவுமாகி விட்டதோ என்று. திருவிற்கு பேசி முடித்தாகிற்று என்று அவர்களுக்கு தெரியவே ஒருவாரமாகிவிட்டது.
பெண் பார்த்துவிட்டு வந்துவிட்டோம் என சம்பந்தி வீட்டில் சொல்லும் முறைக்கு ஸ்வாதியின் புகுந்தவீட்டில் வந்து சங்கவை சொல்லிவிட்டிருந்தாலும் சுசீலா சொன்னது என்னவோ ஒருவாரம் கழித்து தான்.
கல்லூரியில் கூட அதன் பின்னரே கொஞ்சம் கொஞ்சமாக திருமண விஷயம் பரவியது.
சுசீலாவிற்கு மிருதுளாவை முடிக்கவில்லை என வருத்தம் இருந்தாலும் ‘நம்ம மிருதுவுக்கு இந்த இடம் இல்லை போல. இதைவிட நல்ல இடம் வரும்.’ என இலகுவாய் சொல்லிவிட்டார் அவர்.
வீட்டில் இந்த பேச்சுக்கள் கணவருக்கோ, மூத்த மகளுக்கோ இன்னும் தெரியவில்லை. அதுவேறு பதைபதைப்பை தந்திருந்தது.
விஷயம் கேள்விப்பட்டு அன்று அத்தனை கலவரம் வீட்டில். மகளை அடக்கும் முன் படாதபாடுபட்டு போனார் சாவித்திரி.
“இப்படியே பண்ணிட்டிருந்த நான் உன் அப்பாக்கிட்ட சொல்லிருவேன் பார்த்துக்கோ…” என்ற வார்த்தையில் தான் அடங்கி இருந்தாள்.
எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவதை போல இதோ பத்திரிக்கை வைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.
பார்த்ததில் இருந்து அதன் முன்னரே அமர்ந்திருந்தாள் மிருதுளா. இத்தனைக்கு பின்பும் அங்கே தான் வேலைக்கு செல்வேன் என்னும் பிடிவாதம் வேறு.