இப்படி மகள் நடந்துகொள்கிறாள் என கணவருக்கு தெரிந்தால் அதைவிட பெரிய பிரச்சனையாகி போகும்.
நெஞ்சுவலியே வந்துவிடும் போலிருந்தது அவருக்கு. இன்னும் ஒருவாரத்தில் திருமணம்.
மிருதுளா எதையாவது செய்துவைத்துவிடுவாளோ என்று வேறு பதறிக்கொண்டிருந்தார் அவர்.
மிருதுளாவால் கல்லூரியில் கூட திருமொழியை பார்க்க முடிவதில்லை. அதிகமாய் வந்தது இளங்கோவன் தான்.
அவன் வரும்நேரம் இவளின் கண்ணிலேயே படவில்லை. பாராமல், பேசாமல் என்ன செய்வது என தெரியாமல் எண்ணமெல்லாம் தறிகெட்டு பாய்ந்தது.
“உன்னை மிஸ் பண்ணிடுவேனா திரு?…” என்றவளுக்கு முதன் முதலில் அவனை பார்த்ததும், தான் விருப்பப்பட்டதும் இன்னும் பசுமையாய் மனதினுள்.
“செம்ம பாஷா இருக்கார். லுக் வேற அசரடிக்குது. படிப்புக்கு படிப்பு, அந்தஸ்து, தி பெஸ்ட் காலேஜோட சேர்மன். இது போதாதா? இப்படி ஒருத்தனை மிஸ் பண்ணிட்டு பாரின் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு நான் தூர தேசம் போய் என்ன பண்ண போறேன்?…”
“இங்க இந்த ஊர்லையே, இந்த சரவுண்டிங்க்ல திருவை கல்யாணம் பண்ணிட்டு அந்த இமேஜோட நம்ம சர்க்கிள்ல சும்மா கெத்தா இருக்கற கிக்கே வேற. எனக்கு அதான் வேணும். எல்லாரையும் விட பெஸ்ட்டா ஒரு லைஃப்…” என திருமொழியை பார்த்த அன்றே தன் தோழியிடம் பகிர்ந்திருந்தாள் மிருதுளா.
எல்லாம் கானல் நீரா? எவ்வளவு கனவுகள். எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க போகிறதென எத்தனை ஆசைகள். அத்தனைக்கும் முற்று புள்ளியா? அதனை ஜீரணிக்கவே முடியவில்லை.
———————————————-
நிதர்ஷனாவின் வீட்டு தெருவில் காரை நிறுத்தியவன் மீண்டும் போனை எடுத்து நேரத்தை பார்த்தான்.
முக்கியமான ஒருவரை சந்திக்க வருவதாய் சொல்லியிருக்க நேரம் சென்றுகொண்டிருக்க சங்கவை மேல் தான் கோபம் வந்ததும் திருமொழிக்கு.
“நான் இன்வைட் பண்ண போகனும் ம்மா…” என சொல்லியும்,
“அளவு மோதிரம் வாங்காம விட்டுட்டேன். போய் வாங்கிட்டு அப்படியே இன்விடேஷன் வச்சுட்டு நகைக்கடைக்கு வந்திரு. நாங்க முன்னாடி போறோம்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் சங்கவை.
இதோ அவனின் வருங்கால மாமனார் வீட்டு வாசலுக்கு வந்தாகிற்று. அவன் வந்து நின்றதுமே வாசலை பார்க்க கதவு ஒரு சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.
நிதர்ஷனா ஈரோட்டிற்கு வந்துவிட்டாள் என தெரிந்திருந்தும் இன்று வரை பேசவும் இல்லை. அதற்கு அவனுக்கு நேரமும் வாய்க்கவில்லை.
இதுவும் சரிதான். திருமணம் முடியட்டும் என கழுத்தை பிடிக்கும் வேலைகளை கவனிக்க ஆரம்பித்திருந்தான்.
இப்போது வாசலுக்கு வந்தவன் இருமுறை கதவை தட்டியும் யாரும் வெளியில் வருவதை போல தெரியவில்லை.
எரிச்சலுடன் தனக்கும் நேரமாக உடனே சங்கவைக்கு அழைத்துவிட்டான் திருமொழி.
“என்னப்பா, வாங்கியாச்சா?…” என அவர் மறுமுனையில் கேட்க,
“எவ்வளோ ஹெக்டிக்கா போய்ட்டிருக்கு. இதுக்கு தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேன். கேட்டீங்களா?…” என ஒருவேகத்தில் சொல்லிவிட,
“திரு என்னப்பா?…” என சங்கவை கலங்கி போனார்.
மகனின் வேலை பளு அவருக்குமே தெரிந்தது தான். ஆனால் ஆசைப்பட்டு திருமணத்திற்கு கேட்டும் விரும்பிய பெண்ணிடம் பேச கூட முடியாமல் இருக்கிறானே என மகளிடம் மருக,
“இன்னும் மோதிரம் அளவு வாங்கலைல. நாம் போக வேண்டாம். அண்ணனை அனுப்புங்க. வாங்கிட்டு வரட்டும். அப்படியே அண்ணியை பார்த்த மாதிரியும் இருக்கும்…” என யோசனை சொல்லியதே ஸ்வாதி தான்.
இடையில் ஒருவாரமே இருந்தது. கோவில் திருவிழா வேலைகளும் இருக்க இன்னும் பத்திரிகை கொடுக்க வேண்டியவர்கள் நிறையவே இருந்தனர்.
அதுவும் நேரில் அழைக்க வேண்டியவர்களுக்கு நேரில் தான் வைக்கவேண்டும். அதுவேறு தலைவலியாக இருந்தது.
“வீட்டுல தான் இருப்பாங்கன்னு நானும் கால் பண்ணாம விட்டுட்டேன். இரு பேசறேன்…” என சங்கவை சொல்ல,
“இதை முதல்லையே செஞ்சிருக்கனும்…” என கழுத்தை தேய்த்தபடி திரும்பியவன் பார்வையில் கதவுக்கருகில் நடுக்கத்துடன் நின்றவளின் பாதி தரிசனம்.
“ம்மா வைங்க. நான் பார்த்துக்கறேன்…” என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவன் அவளின் முகம் பார்த்தே கண்டுகொண்டான் தான் பேசியதை கேட்டிருக்கிறாள் என்று.
‘என்ன வாய்டா திரு உனக்கு?’ தான் சொல்லியதை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவன் அவளருகில் வந்து நின்றான்.
“வீட்டுல அப்பாம்மா யாருமில்லையா?…” என கேட்க உள்ளே அழைக்கவா வேண்டாமா என்ற அலைப்புறுதலிலும், அவனின் கோபமான பேச்சில் காயப்பட்டவளாகவும் நிதர்ஷனா நின்றிருந்தாள்.
“உன்கிட்ட தான் கேட்டேன் நிதர்ஷனா…” என்று மீண்டும் திருமொழி பொறுமையாக கேட்க,
“இன்விடேஷன் வைக்க போயிருக்காங்க. நான் மட்டும் தான் இருக்கேன்…” என சொல்லியவள் அவனை பார்க்க நிமிரவே இல்லை.
உதடு நடுங்க முகம் சிவந்து கண்ணின் இமை இழைகளில் நீர் கோர்த்திருக்க நின்றவளை நெருங்கவும் முடியாமல் விலகி நின்றவன்,
“உன்னோட மோதிரம் அளவு வேணும். இன்னைக்கு நகை எடுக்க போறாங்க வீட்டுல…” என சொல்ல தன் இரு கைகளையும் பார்த்தாள்.
எந்த மோதிரத்தை தருவது என பார்த்தவள் வீட்டில் கேட்கவேண்டுமா இல்லையா என்றும் தெரியவில்லை.
அவளின் யோசனையான பார்வையில் உள்ளுக்குள் புன்னகைத்தவன் மேலும் ஒரு அடி முன்னே வந்து,
“குடிக்க தண்ணி கொண்டு வா…” என்று கேட்க,
“ஹ்ம்ம்…” என்று வேகமாய் உள்ளே ஓடியவள் சென்ற வேகத்தில் சரஸ்வதிக்கும் போனை போட்டு தண்ணீரை எடுத்து வைத்து நிற்க,
“மாப்பிள்ளையா? உள்ள கூப்பிட்டியா?…” என கேட்டவரிடம் மோதிரம் கேட்டதாக சொல்ல,
“இதை ஏன் கேட்கிற? குடுத்துவிடு நிது. என்ன நீ? அவரை உள்ள கூப்பிட்டு என்ன சாப்பிடறாங்கன்னு கேளு. அண்ணனை இப்பவே அனுப்பி வைக்கறேன்….” என சொல்லவும் தண்ணீருடன் வெளியே வர இன்னும் திருமொழி அங்கேயே தான் நின்றான்.
“உள்ள வாங்க ஸார்…” என்றவளின் அழைப்பில்,
“என்ன?…” என கேட்க,
“இல்ல அண்ணா இப்ப வந்திருவாங்க. அதான் நீங்க உள்ள…” என்றவளுக்கு அவனின் புருவம் உயர்த்தலில் வந்த பேச்சும் தடைபட்டது.
“உள்ள கூப்பிடனும்ன்னா கூட வீட்டுல கேட்டுட்டு தான் கூப்பிடுவியா நீ?…” என்றவன் தண்ணீரை வாங்கி குடிக்க,
“இல்ல, அப்படி இல்ல…” என்றவளுக்கு அவனின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் குத்திக்கொண்டிருந்தது.
“இன்னொருநாள் வரேன். உன் மோதிரம் குடு…” என கேட்க தன் விரல் மோதிரத்தை கழற்ற முயன்றாள்.
இரு விரலிலும் நன்றாக இறுகி இருக்க அதை இழுக்க முயன்றவள் முடியாமல் அவனை பார்க்க,
“வெய்ட்…” என வாசலை தாண்டி உள்ளே வந்து நின்றான் திருமொழி.
“கை நீட்டு…” என தன் கையை நீட்டவும்,
“இல்ல வேண்டாம். நான் எண்ணெய் வச்சி கழட்டிடறேன்…” என்று சொல்லி திரும்ப இன்னும் திருமொழி நீட்டியபடியே நிற்க அவனின் பிடிவாதத்தில் இன்னுமே பயந்து வந்தது.
‘டேய் அண்ணா சீக்கிரம் வாடா’ என மனதிற்குள் அழைத்தபடி நடுக்கத்துடன் கையை நீட்டினாள்.
அதை பார்த்தபடி தன் விரலில் போட்டிருந்த மோதிரத்தை கழற்றியவன் அவளிடம் தந்தான்.
“போட்டு பார். எவ்வளோ லூஸா இருக்குன்னு பார்ப்போம்…” என்று சொல்லவும் நிம்மதியுடன் வாங்கி அதை தன் விரலினுள் நுழைக்க அவள் விழியினுள் அவன் நுழைந்தான்.
“கொஞ்சம் தான் லூஸா இருக்கு போல…” என்று காண்பிக்கவும்,
“ஓகே, கழட்டி குடு. நான் சைஸ் பார்த்துக்கறேன்…” என சொல்லி அவளிடம் வாங்கி தன் விரலில் மாட்டிக்கொள்ள அதன் மெல்லிய வெம்மையில் அவன் விரல்கள் வெப்பம் கொண்டது.
வேறு எதுவும் பேசவில்லை அவளிடம். கண்ணீர் விழிகளில் இப்போது அதன் சுவடு இல்லை. ஆனால் முகம் வாட்டத்துடன் தான் இருந்தது.
“ஹ்ம்ம், நான் கிளம்பறேன். டேக் கேர்…” என சொல்லிவிட்டு நகர்ந்தான் திருமொழி.
வீட்டிற்கு வந்ததும் அத்தனை சத்தம் போட்டார் கணேசன். வந்தவரை அமர சொல்லவே இல்லை என்று மகளை பிடித்து வாங்கிவிட்டார்.
நிதர்ஷனா எதற்கும் பதில் சொல்லவில்லை. திருமொழிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்றொரு எண்ணம் வேரூன்றியது.
ஆனால் இதை எல்லாம் பேசும் சூழ்நிலையை தாண்டியாகிற்றே. ஊரில் திருவிழா களைகட்ட வீட்டில் கல்யாண களை கூடியது.
விஷயம் அறிந்தவர்கள் எல்லாம் மூக்கில் மேல் விரலை வைக்காத குறை தான். அதிலும் நிதர்ஷனாவின் தோழிகள் கிண்டல் செய்தே ஒருவழியாக்கினார்கள்.
“நிது முகத்துல ஒரு சுரத்தே இல்லையேம்மா?…” என்ற சரஸ்வதியை மெர்லின் தான் சமாதானம் செய்தாள்.
“கல்யாணம் பயம் தான். அதுவுமில்லாம அவ பயமே அவ பேசினதெல்லாம் அவ மாமியார் முன்னாடியே கேட்டிருக்காங்கன்னு தான். எப்படி சகஜமா இருக்கறதுன்னு சங்கடப்படறா…” என்றாள் அவள்.
அண்ணன்கள் இருவரும் தங்கையை கொண்டாடிவிட்டனர். வேண்டியதெல்லாம் அவளுக்கு என்னென்ன பிடிக்கும் என வாங்கி எவ்வித குறையுமில்லாது புகுந்தவீடு அனுப்ப நினைத்தனர்.
முதல்நாள் இரவு நிச்சயதார்த்தம். மறுநாள் காலை திருமணம் என்றிருக்க இதோ நிச்சயதார்த்தத்திற்கு ஊர் கூடிவிட்டது.