“சரி சரி. இருந்தாலும் அவன் இருக்கனும்ல. மோதிரம் போடனும்னு சொன்னான்…” என்றவர் நிச்சயப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கவும் அமைதியானார்.
ஸ்வாதியின் விழிகள் அவ்வப்போது தூரத்தில் சிவந்த விழிகளுடன் வெறித்து பார்த்துக்கொண்டிருந்த மிருதுளாவின் மீது தான் அவ்வப்போது சென்று திரும்பியது.
“பெரிம்மா எனக்கென்னமோ அவ பார்வையே சரியா படலை…” என ரத்னாவை அழைத்து ஸ்வாதி சொல்ல,
“வீணா நீ பயப்படற ஸ்வாதி. அவங்கம்மா பார்த்துப்பாங்க. விடு. நாம இத்தனை பேர் இருக்கோம். என்ன செஞ்சிடுவா அவ?…” என்றார் ரத்னா.
“இல்லை அண்ணனுக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சதும் ஒரே ஆர்ப்பாட்டமாம். என் மாமியார்கிட்ட சொல்லி அழுதிருக்காங்க சாவித்திரி அத்தை…”
“அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?…” என்றவர் ஸ்வாதியை பேசியே சமாதானம் செய்தார்.
மணமகளுக்கான நிச்சயப்பட்டு கொடுக்கப்பட்டு மாற்றிவரும்படி அனுப்ப நாத்தனாராய் ஸ்வாதி உடனிருந்தாள்.
“எங்க ஸ்வாதி ப்ரோவை காணும்?…” என மெர்லின் கேட்க,
“கோவில்ல இருந்து வந்திட்டிருக்காங்க க்கா….” என்றாள் அவள்.
நிதர்ஷனா புடவை மாற்றி வரவும் ஸ்வாதி அவளுக்கு மாலை அணிவிக்க புன்னகையுடன் நிகழ்ந்தது ஒவ்வொன்றும்.
திருவிழா கொண்டாட்டமாய் திருமண சடங்குகள் நடந்துகொண்டிருக்க நிதர்ஷனாவின் மனதும் திருமொழி பற்றிய சிந்தனையை தள்ளி வைத்தது.
நடப்பது நடக்கட்டும் என்று அவளுமே திருமணத்தை முழுமனதுடன் ஏற்க ஆரம்பித்தாள்.
“கூப்பிடறாங்க…” என மேடைக்கு நிதர்ஷனாவை அழைத்து சென்றனர்.
இளநீர் பச்சை வர்ண பட்டுப்புடவையில் அழகோவியமாய் அவள் வந்து மேடையில் அமர,
“ம்மா அண்ணா வந்தாச்சு…” என்றாள் ஸ்வாதி சத்தமாய்.
சட்டையின் கைகளை முழங்கை வரை தள்ளிவிட்டபடி உள்ளே புன்னகையுடன் வேக நடையுடன் வந்துகொண்டிருந்தான் திருமொழிவர்ணன்.
‘எந்த ட்ரெஸ் போட்டாலும் எவ்வளோ பாஷா மேன்லியா இருக்கார் திரு’ என மிருதுளாவின் பார்வை அவனிடம் சரணடைய நிதர்ஷனாவின் விழிகள் அவனை கண்டதும் தாழ்ந்துகொண்டது.
“நிமிர்ந்து தான் பாரேன் நிது…” என மெர்லினும் சொல்ல அருகில் நின்றவர்களின் கேலியில் முகம் சிவந்து போனது நிதர்ஷனாவிற்கு.
“இங்க தான் வராங்க…” என ஸ்வாதி சொல்ல,
“வாப்பா, வந்து சந்தனம் வை…” என்ற சங்கவை,
“எங்க மோதிரத்தை?…” என்றார் மகளிடம்.
“என்கிட்ட தான் இருக்கு…” என்றவன் நிதர்ஷனாவை பார்க்க,
“எழுந்துக்கோ நிது…” என்றார் சரஸ்வதி.
அவ்வளவு உறவுகள் மேடையில் கூட்டமாய் நின்றிருக்க அருகில், மிக அருகில் திருமொழி.
நிதர்ஷனா எழுந்து நின்றதும் சந்தனத்தை கையில் கையில் எடுத்துக்கொண்டவன் புன்னகையுடன் நிதர்ஷனாவின் கன்னத்தில் பூச போக விழிகளை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் சட்டென உண்டான பதட்டத்தில்.
“பொண்ணு நிமிர்ந்தா தானே பூச முடியும்?…” என்றவனின் சன்னமான சிரிப்பில் மற்றவர்களும் சிரிக்க வெட்கத்தில் இன்னும் தலையை குனிந்தாள் நிதர்ஷனா.
“நிமிர்ந்து பாரு நிது…” மெர்லின் சொல்ல,
“சும்மா வெட்கப்படாம பாருங்க அண்ணி…” என ஸ்வாதி சொல்ல திருமொழி எதுவும் சொல்லவில்லை.
தன் சுட்டுவிரல்கொண்டு அவளின் நாடியை தொட்டு நிமிர்த்தியவன் சந்தனத்தை அவளின் கன்னத்தில் குளிர்வாய் பூசினான்.
“என்னை பார்க்கனும் நிதர்ஷனா…” என கேட்க விழிகள் உயர்ந்தது உடனே. அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்தவன்,
“சொல்பேச்சு கேட்குமாம் கிளிப்பிள்ளை…” அவள் மட்டும் கேட்கும் விதமாய் மொழிந்தவனின் அதரங்களில் குருஞ்சிரிப்பு தேனாய் மொய்க்க மோதிரத்தை எடுத்தான்.
“கை இப்போ குடுக்கலாம்…” என நீட்டவும் ஒவ்வொன்றையும் ஸ்தம்பித்து போய் தான் பார்த்தாள் நிதர்ஷனா.
அவளின் விரலில் மோதிரமிட்டவன் நகர அவனையும் அமரவைத்து நலுங்கு வைத்தனர் உறவினர்கள்.
மிக இலகுவாய், இயல்பாய் நிச்சயதார்த்தம் நடந்தேறி இருக்க நிதர்ஷனாவால் அப்படி இருக்கமுடியவில்லை.
சொந்தங்கள் வேறு. ஆனால் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வேறு அல்லவா. அவர்களின் இந்த மரியாதை தன்மையில் அவளிடம் பதட்டமும், கூச்சமும்.
அனைவரும் வந்து வாழ்த்து தெரிவிக்க என நேரம் பத்துமணியை தாண்டியிருந்தது. இருவருக்கும் பேசிக்கொள்ள நேரம் வாய்க்கவில்லை.
அறைக்கு வந்தவளுக்கு உறக்கமே வரவில்லை. அடுத்தநாள் இந்தநேரம் தன்னுடைய வாழ்க்கை இன்னொரு வீட்டில்.
நிதர்ஷனாவின் பதட்டமும் படபடப்பும் இன்னும் அதிகமாகிக்கொண்டே செல்ல உறங்காமல் உழன்றாள்.
உறக்கம் வராமல் சத்தமின்றி பால்கனியை திறந்துகொண்டு வந்து நின்றவள் பார்வை கீழே பதிந்தது.
கண்களை கசக்கிக்கொண்டு அவள் பார்க்க திருமொழி தான் நின்றிருந்தான் பாலாஜியிடம் பேசியபடி.
நேரம் மணி ஒன்றிருக்கும். அவனின் கையில் டீ இருக்க அதனை குடித்துக்கொண்டிருந்தவன் பேச்சினூடே பார்வையை சுழற்றி நிமிர்ந்து பார்க்கவும் மெல்லிய விளக்கொளியில் நிதர்ஷனா.
தன்னை பார்த்துவிட்டான் என கவனித்தவள் செய்வதறியாமல் அப்படியே நின்றுவிட அவன் செய்த சைகையில் ஒன்றும் புரியவில்லை.
பாலாஜியும் இப்போது நிமிர்ந்து நிதர்ஷனாவை பார்க்க சங்கடத்துடன் அறைக்கு உள்ளே வந்துவிட்டாள் அவள்.
வந்தது தான் தாமதம் நிதர்ஷனாவின் கைபேசி இசைக்க புது எண்ணிலிருந்து அழைப்பு.
ட்ரூகாலரில் திருமொழியின் பெயரை தாங்கி வந்திருக்க இந்த நேரம் எதற்கு என நினைத்தபடி அழைப்பை ஏற்றாள்.
மேடையில் இருந்தவர்களும் அட்சதையை எடுத்துக்கொள்ள நிதர்ஷனா தலை உயர்த்தி கணேசனையும், சரஸ்வதியையும் பார்க்க நெகிழ்ந்த நெஞ்சத்துடன் கண் கலங்க பார்த்திருந்தார்கள்.
திருமொழியின் கையில் திருமாங்கல்யம் தரப்பட வாங்கிக்கொண்டவன் பார்வை நிதர்ஷனாவிடம்.
“என்னை பார்க்கனும் நிதர்ஷனா…” என்றதும் அவனை தான் பார்த்தால் நிதர்ஷனா.
அட்சதை பூக்கள் அவர்களை ஆசிர்வதித்து மழையென பொழிய மூன்று முடிச்சுக்களையும் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கும் மனதுடன் மனைவியின் கழுத்தில் கட்டி முடித்தான் திருமொழிவர்ணன்.