கணேசனை கையில் பிடிக்க முடியவில்லை. பாப்பா பாப்பா என மகளை பார்த்து மகிழ்ந்து போனார்.
தங்களோடு இருக்கும்வரை மகளிடம் அரட்டலும், உருட்டலுமாக இருந்தாலும் இன்னும் அவளை சிறுபிள்ளையென நினைத்திருக்க மாலையும், கழுத்துமாக இன்னொருவரின் மனைவியாய் மகளின் புதிய பரிமாணம்.
சரஸ்வதிக்கே அத்தனை ஆச்சர்யம் அவரை பார்த்து. எப்போதும் விதண்டாவாதமும், கோப பேச்சுக்களும் என்றிருந்தவரின் நெகிழ்ச்சியை அமைதியாய் நின்றார்.
திருமொழியும், நிதர்ஷனாவும் அனைவரின் ஆசிர்வாதங்களையும் பெற்று மேடையில் நின்றிருக்க விருந்தினர்கள் வந்தவண்ணமே இருந்தனர்.
நிதர்ஷாவிற்கு கால்கள் விண்டுவிடும் போலிருந்தது. அப்படி ஒரு அலுப்பும், கால் வலியும் அவளை சோர்வுற செய்ய மதிய உணவு வரை இப்படியே தான் நீடித்தது.
மணமக்களை சாப்பிட அழைத்து சென்றிருக்க ஸ்வாதியும் அவர்களுடன் இருக்க கையில் போனுடன் வேகமாய் வந்தார் சுசீலா.
“ஸ்வாதி நான் ஹாஸ்பிட்டல் வரை போய்ட்டு வரேன்…” என்று மருமகளிடம் சொல்ல,
“என்னாச்சுத்தை? உடம்புக்கு எதுவும் முடியலையா?…” என மாமியாரை பார்த்தாள் அவள்.
“எனக்கு எதுவுமில்லைம்மா. நம்ம மிருதுல, நைட்ல மயக்கம் போட்டுட்டா போல. ஹை ப்ரஷராகிருக்கு. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. அதான் போய் பார்த்துட்டு வரேன்…” என்றார்.
“இல்ல இப்ப எதுவும் சொல்லவேண்டாம். ஒருவேளை அண்ணா கல்யாணமானதுல மிருதுளா மைண்ட் சேஞ்சாகிருந்தா? நாமளே திரும்ப அவங்களை தூண்டிவிட்ட மாதிரியாகிரும். ஏதாவது பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம்…” என்ற ஸ்வாதி,
“கல்யாணமாகிடிச்சு. இனிமே அந்தமாதிரி ஒரு எண்ணம் மிருதுளாவுக்கு இருக்காதுன்னு நினைப்போம். நேத்து அவங்க பார்த்துட்டிருந்ததுல நானுமே கொஞ்சம் பயந்து தான் போனேன். இப்ப தான் எனக்கு ரிலீஃபா இருக்கு…” என்றாள்.
“ஸ்வாதி இங்க என்ன பன்ற? அடுத்து மறுவீடு கிளம்பற சம்பிரதாயம். நல்லநேரத்துல கிளம்ப வேண்டாமா?…” என வந்தார் கோமகள்.
“அம்மா எங்க ஆன்ட்டி?…” என கேட்க,
“சாப்பிட உக்கார வச்சுட்டேன். அவ சுகர் மாத்திரை போட வேண்டாமா? நீ ஆகவேண்டியதை பாரு. க்விக்…” என அவர் அடுத்த சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்ய மணமக்கள் முதலில் பெண் வீட்டிற்கு பால் பழம் சாப்பிட கிளம்பினர்.
கணேசன் வீடு முழுவதும் சொந்தங்களின் வருகை. மெர்லின் தான் சரஸ்வதியை அதிகம் சுழல விடாமல் தான் பொறுப்பேற்று செய்ய கணேசனுக்கு அத்தனை மெச்சுதல்.
இதனை கண்டு அவ்வப்போது மூத்தமகனை வேறு பெருமையாய் பார்த்துக்கொண்டார்.
பேரனை கையில் பிடித்தபடி அவர் சுற்றி வர மகளை புகுந்தவீடு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது.
அதுவரை தைரியமாய், மகிழ்வாய் சுற்றி வந்த மனிதர் கொஞ்சம் கொஞ்சமாக உடைவதை போலிருந்தார்.
“விட்டா அப்பா ஓன்னு அழ போறார் பாரேன்…” என பிரகாஷ் சொல்ல,
“பெட் ஆயிரம் ரூபாய். அழமாட்டார். கண்ணை துடைச்சுக்குவார். சரஸு கையில காசு…” என தாயை இழுத்து நிறுத்தி ஸ்ரீதர் ஆயிரம் ரூபாயை தர,
“நானும் தரேன். நிதுவை கட்டி புடிச்சு என் கண்ணையே ஒப்படைக்கிறேன்னு கன்பார்மா மூக்கை உறிஞ்சுவார். ரெண்டாயிரம் பெட். சரஸு ம்மீ, இந்தா புடி…” என மகன்கள் இருவரும் தாயிடம் தந்தையை முன்வைத்து பந்தையம் கட்ட,
“கொழுப்பாடா உங்களுக்கு? ராஸ்கல்…” என இருவரின் தோளிலும் அடித்தவரும் கலங்கி போய் தான் இருந்தார் மகளின் பரிதவிப்பான பார்வையில்.
கணேசனுக்கு மகளை அப்படி பார்க்கவே முடியவில்லை. பாவமாய் ‘என்னை அனுப்பாதயேன்’ என்பதை போல ஒவ்வொருவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் நிதர்ஷனா.
தன் வீட்டையும் வீட்டு மனிதர்களையும் கண்களில் நிரப்பியபடி இருந்தவள் திருமொழியை விட்டு எழுந்து வரமுடியவில்லை.
அத்தனைபேரும் அவர்களை சூழ்ந்திருக்க தாயை அணைத்து நிற்க வேண்டும், தன் வீட்டிற்கு வந்திருப்பவர்களை கவனிக்கவேண்டும், பம்பரமாய் சுழன்று குதூகலிக்க வேண்டும் என என்னென்னவோ ஆசைகள்.
இப்படி வீடு நிறைய உறவுகள் இருந்தால் நிதர்ஷனாவை கையில் பிடிக்க முடியாது.
ஓரிடத்தில் இருக்கமாட்டாள். ஆனால் இப்போது இருக்கும் இடத்தை விட்டு அசைய முடியவில்லை.
“சரஸு, இப்பவே அனுப்பனுமா? அடுத்து எப்ப வருவா பாப்பா?…” என கேட்டுவிட்டு சென்ற கணேசன் மீண்டும் வந்து,
“சரஸு பாப்பாவுக்கு எல்லாமே எடுத்து ரெடியா வச்சாச்சுல?…”
“சரஸு, சீர்வரிசையோட பலகாரப்பெட்டி, அரிசிப்பெட்டி எல்லாம் எப்ப போகுது? பாப்பா கிளம்பறப்பவே அனுப்பனுமா? தனியாவா? நாம கொண்டு போகனுமா?…”
“சரஸு விருந்துக்கு இன்னும் நாலு நாள் ஆகுமா? பாப்பா அப்ப தான் வருமா?…”
“ஏன் சரஸு, இந்த சடங்கு நம்ம பக்கம் நடக்காதோ? பாப்பா இன்னைக்கு இங்க இருக்கமாட்டாளோ?…”
“இப்பவே கிளம்பறாங்களா? அடுத்து நல்லநேரம் எப்பன்னு கேட்டு அனுப்புவோமா சரஸு? கொஞ்சநேரம் பாப்பா இருக்கட்டுமே…”
இப்படியாக மகளை சென்று பார்ப்பதும் உள்ளே வந்து மனைவியிடம் கேட்பதும் என ஓரிடத்தில் நிற்கவில்லை கணேசன்.
மற்ற சொந்தங்களும் அவர்களுடன் செல்ல திருமொழியின் வீடு வந்தாகிற்று மணமக்கள். ஸ்வாதி தயாராக இருந்தாள்.
ஆலம் சுற்றப்பட்டு அங்கும் சடங்கு, சம்பிரதாயங்கள் பின்பற்றி பால் பழம் கொடுத்து முடித்து நிதர்ஷனாவை ஸ்வாதியுடன் அனுப்பி வைத்தார் சங்கவை.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். நீ கூட இரு. நான் இங்க கவனிச்சுக்கறேன். அவங்க ரூமுக்கு கூட்டிட்டு போ…” என சொல்லியனுப்பினார் சங்கவை.
சரி என சொல்லி நிதர்ஷனாவை அழைத்து செல்ல உடன் மெர்லினும் வந்தாள்.
“இன்னைக்கு வீடு முழுக்க ரிலேட்டிவ்ஸ் இருப்பாங்க. நாளைக்கு எல்லாரும் கோவிலுக்கு போகவும் வீட்டை சுத்தி பார்க்கலாம். இப்ப நீங்க ரெஸ்ட் எடுங்க அண்ணி…” என்றாள் ஸ்வாதி.
பேசிக்கொண்டே திருமொழியின் அறைக்கு வந்திருந்தார்கள் அவர்கள். உள்ளே நுழைய நகரவேமாட்டேன் என்னும் காலை இழுத்து பிடித்து வந்து சேர்ந்தாள் நிதர்ஷனா.
“இதான் சேர்மன் ரூமா?…” என தன்னை போல சொல்லியும் விட,
“சேர்மனா? ஹலோ அண்ணி, இது இனி உங்க ரூம். இந்த சேர்மன் போஸ்ட்டிங் எல்லாம் இந்த ரூம்க்குள்ள கொண்டுவராதீங்க….” என ஸ்வாதி சொல்ல நிதர்ஷனா நாக்கை கடித்தாள்.
“இப்படி சொன்னா அண்ணனே டென்ஷனாகிடுவாங்க. அப்பறம்…” என சொல்லிக்கொண்டே வந்தவள் நிதர்ஷனாவின் பீதியடைந்த முகம் பார்த்து,
“நான் தான் உங்களை டென்ஷன் பன்றேனோ?…” என்றாள் சிரிப்புடன்.
“ஹ்ம்ம்..” என அதற்கும் அவள் தலையசைக்க,
“நிது என்ன பன்ற?…” என்றாள் மெர்லின் ஸ்வாதியை சங்கடத்துடன் பார்த்து.
“விடுங்க க்கா. எல்லாருக்கும் இருக்கற ஃபீவர் தான் அண்ணிக்கும். நான் தான் கொஞ்சம் கலாட்டா பன்றேன் போல?…” என்ற ஸ்வாதி,
“இது உங்க வீடு. அண்ணன் உங்களோட ஹஸ்பன்ட். இந்த சேர்மன் போஸ்ட்டிங் ரெஸ்பெக்ட் எல்லாம் காலேஜ்ல தான். நான் சொல்லலைன்னாலும் அண்ணாவே இதான் சொல்லுவாங்க…” என்றவள் அறையை சுற்றி காண்பித்தாள்.
அறையின் ஒவ்வொன்றிலும் திருமொழியின் நேர்த்தி தான் தெரிந்தது. ஆங்காங்கே அவனின் நிழற்படங்கள் வேறு.
சிறிதும் பெரிதுமாய் அவனின் குழந்தை பருவத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்த படங்கள் சுவற்றை அலங்கரித்திருந்தது.
பால்கனி விசாலமாக சிறிய ஊஞ்சலுடன் மாடித்தோட்டம் சேர்த்தே இருக்க மனது சமன்பட்டதை போலிருந்தாலும் அது திருமொழியின் அறை என்பதே அவளை முழுதாய் அனுபவிக்கவிடவில்லை.
“உங்க திங்ஸ் எல்லாம் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்திருவாங்க. எங்க வைக்கனும் என்னன்னு அண்ணா சொல்லுவாங்க…” என்ற ஸ்வாதி மெர்லினுடன் பேசிக்கொண்டிருக்க நிதர்ஷனா அங்கிருந்த ஒற்றை இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
தன் வீட்டில் இருக்கையில் உறக்கம் கண்களை சுழற்றியிருக்க இங்கே வந்ததில் இருந்து சுத்தமாய் தூக்கமில்லை.
அனைவருக்கும் இரவு உணவு அங்கே தயாராக அதுவரை எல்லோரும் அங்கே தான் இருந்தனர்.
“அண்ணி நீங்க ரெஸ்ட் எடுங்க. இப்ப வந்திடறோம்…” என்று சொல்லி ஸ்வாதி கிளம்ப,
“நானும் வந்திடறேன். கொஞ்ச நேரம் வேணும்னா தூங்கி எழுந்துக்கோயேன் நிது…” என்றாள் மெர்லின்.
“அண்ணி நான் இங்க தனியாவா? கீழ வரேன்…” என நிதர்ஷனாவும் எழுந்து வர,
‘அம்மோவ்’ என அந்த அறைக்குள் தனித்திருக்க முடியாமல் வியர்த்த முகத்தை கையால் துடைத்தபடி மீண்டும் சுற்றி பார்க்க ஒவ்வொரு புகைப்படமும் அவளை நோக்கியே இருப்பதை போலிருந்தது.
“பார்க்கவே கூடாது…” என முகத்தை மூடியபடி மீண்டும் அந்த இருக்கையில் அமர்ந்துகொண்டவள் லேசாய் தலையை சாய்க்க மெல்ல கண்ணயர்ந்தாள்.
பத்து நிமிடத்தில் கதவு திறக்கும் சத்தத்தில் கண்களை மட்டும் திறந்து பார்த்தவள் உள்ளே வந்தவனை பார்த்ததும் அடித்து பிடித்து எழுந்து நிற்க பதட்டத்திலும் உறக்கத்திலும் தடுமாறி இருக்கையை பிடித்து சமாளித்தாள் நிதர்ஷனா.
எழுந்த வேகத்தில் பட்டுப்புடவையின் நெகிழ்வு திருமொழியின் விழிகளுக்கு விருந்தாய் விழுந்தது.
“தூங்கிட்டிருந்தியா நீ?…” என கண்டும் கவனித்தும் அவளிடம் கேட்டுக்கொண்டே இலகுவாய் வந்தான் திருமொழிவர்ணன்.
“இல்லையே…” என்றவள் கண்ணை கசக்க விழிகள் இரண்டும் செந்நிறமாய் சிவந்திருந்தது.
“ஓஹ், நான் வாஷ்ரூம் போக வந்தேன்…” என சொல்லியவன் பாத்ரூம் கதவை திறந்துகொண்டு சென்றான்.
‘நான் கேட்டேனா? இதை என்கிட்ட சொல்லனுமாக்கும்? ஹைய்யோ’ என மீண்டும் அமராமல் பால்கனி பக்கம் திரும்பி நின்றாள்.
ஸ்வாதி வந்திருந்த பொழுது அந்த பிரெஞ்ச் விண்டோவை திறந்து காண்பித்து மூடியிருக்க இப்போது மீண்டும் திறக்க முயல முடியவில்லை.