“இப்படி ஓபன் பண்ணனும்…” என அவளின் கைமேல் கை வைத்து கண்ணாடி கதவை திறந்து காண்பிக்க இருவரின் முகத்தில் வந்து மோதியது மாலை நேர குளிர்ந்த காற்று.
அவனின் இரு கைகளுக்குள்ளும் நின்றிருந்தவள் சட்டென விலகி நகர்ந்து திரும்ப,
“ரூம் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே தர்ஷி?…” என்றான் ஹஸ்கி வாய்ஸில்.
“ஹாங், நல்லாயிருக்கு…” என விழிகளை அறையை சுற்றிலும் சுழற்றினாள்.
“ஓஹ், எது நல்லா இருக்கு?…” என கேட்டுக்கொண்டே கட்டிலில் அமர்ந்தவன்,
“உட்கார். கொஞ்சநேரம் பேசிட்டிருக்கலாம்….” என்று தனக்கருகில் மெத்தையை தட்டி காண்பிக்க,
“இல்ல இருக்கட்டும்…” என்றவள் அதே ஒற்றை இருக்கையில் அமர்ந்துகொண்டாள் அவள்.
நிதர்ஷனா அமர்ந்ததிலிருந்து திருமொழியின் விழிகள் அவள் மேல் விழுந்தது விழுந்ததுதாம்.
இங்குமங்குமாய் கருவிழிகள் இமை மூடாது ஊசலாட்டத்தில் தடுமாற அதன் ஈர்ப்பில் விரல்களை இறுக்கமாய் கோர்த்து கட்டியபடி நிதர்ஷனா நிமிரவே இல்லை.
‘ஹஸ்பண்ட் தான். பழகிக்கோ, பழகிக்கோ’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் தொண்டைக்குழி ஏறி இறங்க வியர்த்து வழிந்தது.
அதை கண்டு ‘படுத்தாதடா திரு’ என தலையை கோதிக்கொண்டவன் எழுந்துவிட்டான் அவ்விடம் விட்டு.
“ஓகே நீ ரெஸ்ட் எடு. வந்திடறேன்…” என சொல்லிவிட்டு வெளியேறியவன் மீண்டும் மேலே வரவில்லை.
அவளின் அப்பட்டமான பயத்தையும் நடுக்கத்தையும் அருகிலிருந்து பார்க்க பார்க்க தன் கைகள் அணைக்கத்தான் பரபரத்தது.
திருமொழி கீழே சென்றதும் தான் நிதர்ஷனாவிற்கு சுவாசம் சீரானது. இன்னும் கொஞ்சநேரம் தனியாக இருந்தால் போதும் என படபடப்பை குறைக்க முயல அதற்குள் அவளை அழைத்துவிட்டனர்.
“முகத்தை கழுவிட்டு வாங்கண்ணி, கோவிலுக்கு போகனும்…” என ஸ்வாதி சொல்ல,
“சேரி மாத்திடவா?…” என்றாள் நிதர்ஷனா.
“இல்லை இன்னைக்கு நைட் தான் வேற சேரி மாத்தனும். கோவிலுக்கு கல்யாண புடவையில தான் போகனும். வாங்க…” என முகம் கழுவி லேசாய் ஒப்பனை செய்து கீழே அழைத்து சென்றாள்.
கோவிலுக்கு சென்றுவிட்டு அங்கே பூஜையை முடித்துவிட்டு மீண்டும் திருமொழி வீட்டிற்கு அனைவரும் வர இரவாகிவிட்டிருந்தது.
வந்திருந்தவர்களை உணவுண்ண அனுப்ப திருமொழியை காணவில்லை. சொந்தங்களில் பாதிபேர் சாப்பிட்டு கிளம்பியிருக்க இன்னும் நிதர்ஷனாவின் வீட்டினர் மட்டும் தான்.
திருமொழிக்காக சாப்பிடாமல் காத்திருந்தார்கள். கோவிலுக்கு அன்னதானத்திற்கு சொல்லியிருந்த பொருட்களில் சில தேங்கி இருக்க அதன் விஷயமாய் போனில் பேசியபடி அறைக்கு சென்றிருந்தான் திருமொழி.
“நானா?…” என கேட்ட நிதர்ஷனா ‘எப்படி கோர்த்துவிடறாங்க பாரேன்’ என உள்ளுக்குள் புலம்பியபடி நிற்க,
“நீங்களே தான். போய் கூட்டிட்டு வாங்க. உங்க வீட்டுல வேற கிளம்பனும்ன்னு சொல்றாங்க…” என்ற ஸ்வாதி,
“மெர்லின் க்கா உங்களுக்கு லேட்டாகுது தானே?…” என கண்ணடித்து கேட்க,
“ஆமாமா…” என அவளும் சிரித்தாள்.
“சரி…” என்றபடி மாடிக்கு ஏறிய நிதர்ஷனா அறையின் கதவை தள்ள பூட்டப்படாமல் தான் இருந்தது.
உள்ளே வந்தாகிற்று. வாயில் வந்ததுவோ ‘ஸார்’ என்னும் வார்த்தை தான். அதுவும் காற்றாய்.
“அச்சோ…” என பின்னந்தலையில் லேசாய் அடித்துக்கொண்டவள் அவனை என்ன சொல்லி அழைக்க என யோசித்துக்கொண்டே நிற்க திருமொழி திரும்பினான் இல்லை.
அவள் வந்ததை உணர்ந்தவன் ‘என்னதான் செய்கிறாள் பார்ப்போம்?’ என போனை காதில் வைத்தபடி தான் நின்றான்.
‘இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. என்ன சொல்லி கூப்பிட?’ என யோசித்தபடி ஒவ்வொன்றாய் நினைக்க பயத்தை பின்தள்ளி சட்டென சிரிப்பு வந்தது நிதர்ஷனாவிற்கு.
‘மாமாவாம், அத்தானாம், என்னங்கவாம்?’ எந்த வட்டத்திற்குள்ளும் அவனை நிறுத்த முடியவில்லை அவளால்.
“ப்ச் திரும்பறாங்களா பாரு…” என சத்தமில்லாமல் முணுமுணுத்து அவனருகில் சென்றுவிட்டாள்.
பால்கனியின் கண்ணாடி கதவில் ஒற்றை கையை வைத்தபடி திருமொழி நின்றிருக்க அவன் பேசிக்கொண்டிருக்கையில் சத்தமாய் அழைத்து தொந்தரவு செய்ய கூடாது என நல்லபிள்ளையாய் முடிவுக்கு வந்தாள்.
வீட்டில் கணேசன் யாரிடமாவது போனில் பேசிக்கொண்டிருந்தால் ஒருவரும் வாயை திறக்க கூடாது. கோபமான கோபம் வரும்.
அதில் பழகியவள் திருமொழி பேசுகையிலும் அமைதியை பிடித்துக்கொண்டு ஒற்றை விரலால் அவனின் தோளை சுரண்டினாள்.
“உங்களை…” என சொல்லும் முன் நிதர்ஷனா அவனின் முன் நின்றிருந்தாள்.
“பின்னாடி நின்னு என்ன பண்ணிட்டிருக்க?…” என்றபடி கையிலிருந்த போனை அருகிலிருந்த அலங்கார விளக்கின் மேடையில் வைத்துவிட்டு திருமொழி கேட்க அவள் எங்கே கவனித்தாள்?
கண்ணை மூடி திறக்கும் முன் சட்டென தன்னை இழுத்து அவனின் முன்னிறுத்தியவனின் செயலில் ஸ்தம்பித்து போயிருக்க ‘எப்புட்ரா’ என்றது மனது.
“ஹோய் தர்ஷி, உன்னை தான் கேட்டேன்…” என அவளின் கன்னம் தட்டவும்,
“அவசரமில்லை. யோசிச்சு மெதுவாவே சொல்லு…” என சொல்லி அவனும் அசையாது நின்றுவிட ஒருநிமிடம் மலங்க மலங்க விழித்தவள்,
“ஞாபகம் வந்திருச்சு. கீழ உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க. அண்ணா,அண்ணி எல்லாம் கிளம்பறாங்க. உங்ககிட்ட சொல்லிட்டு போகனுமாம். நீங்க வரனுமாம்…” என மடமடவென சொல்லி முடிக்க,
“மெதுவா திரும்ப சொல்லு. கேட்கலை…” என்றவன் அவள் முகத்தருகே குனிந்து கேட்க,
“அது,,,, அதான்,,, அதான்…”
“அத்தானா?…” குறும்பாய் அவன் குரல்.
“ம்ஹூம்…” என்றவளின் நாசியை தீண்டிவிடும் தூரத்தில் அவன் இதழ்கள்.
மூச்சை இழுத்து பிடித்தபடி நின்றிருந்தவளை சில நொடிகள் பார்த்தவன் விலகி நின்று,
“ஓகே, வரேன்னு சொல்லு….” என சொல்ல,
“சரி…” என்றவள் அவனிடமிருந்து நகர்ந்தாள்.
நகரத்தான் முடிந்ததே தவிர அவனை தாண்டிக்கொண்டு செல்லமுடியாமல் மீண்டும் அவனின் ஒற்றை இழுப்பில் பழையபடி முன் வந்து நின்றாள் நிதர்ஷனா.
“அதான் சொல்லிட்டேனே? என்னாச்சு?…” என பதறி கேட்க,
“ஆமா சொல்லிட்ட…” என்றவன்,
“உன் நெத்தி முழுக்க எவ்வளோ சந்தனம், விபூதி, குங்குமம்?…” என கேட்டபடி டிஷ்யூ பேப்பரை எடுத்து நெற்றிசுட்டியை விரல்கொண்டு நகர்த்தி அதனை மெல்ல அளவாய் துடைத்துவிட்டான் திருமொழி.
அவனின் இடது கைவிரல்கள் நிதர்ஷனாவின் கன்னங்களை பற்றி இருக்க இன்னொரு கை விரல்கள் அவளின் நெற்றியை துடைத்தது.
“சாப்பிடனும் அண்ணா. நேரமாகுதே?…” என்றதும் அவர்களை அழைத்துக்கொண்டு உண்ண செல்ல நிதர்ஷனாவின் தொண்டைக்குள் எதுவும் இறங்கவில்லை.
அடுத்த சடங்கை பற்றி ரத்னாவிடம் கோமகளும், சங்கவையும் பேசிக்கொண்டிருக்க கேட்டவளுக்கு இன்னும் பதட்டம் கூடியது.
கன்னத்தை பிடித்ததற்கே மயங்கி விழும் நிலைக்கே சென்றிருக்க அதை நினைக்கையில் ஹைய்யோ என்றிருந்தது.
அதற்குள் உணவு நேரமும் முடிந்து நிதர்ஷனாவை புது புடவை கொடுத்து மாற்றி வர சொல்லி அளவாய் அலங்காரம் செய்து அமரவைத்தனர்.
“ம்மா வர சொன்னீங்க…” என திருமொழி வரவும் அவள் தலை மண்ணில் தான் புதையவில்லை, அந்தளவிற்கு அவனை பார்க்காமல் திரும்பி குனிந்தபடி இருக்க பார்த்தவனுக்கு அப்படி ஒரு புன்னகை.
“சாமி கும்பிடனும் ப்பா. கும்பிட்டு நீ உள்ள போ. பாப்பா வாம்மா…” என்று சங்கவை அழைக்க, ‘பாப்பா’ என பல்லை கடித்தாள் நிதர்ஷனா.
திருமொழியின் சன்னமான சிரிப்பு அவளருகில் கேட்க இன்னுமே வெட்கமாகி போனது.
“ஆமாமா, பாப்பா தான்…” என ஸ்வாதியும் கிண்டல் பேச அவர்களுக்கு பதில் சொல்லமுடியாத சூழ்நிலை நிதர்ஷனாவிற்கு.
‘சோதிக்காதீங்க மிஸ்டர் காட். அழுதுடுவேன். என்னிய எப்புடியாச்சும் இன்னைக்கு காப்பாத்திவிட்டுடுங்க காட்’ என உள்ளுக்குள் புகைந்தபடி சாமியை கும்பிட்டுவிட்டு வர திருமொழி சிரித்துக்கொண்டே அவனின் அறைக்கு சென்றுவிட்டான்.
“நல்லநேரத்துக்கு நேரமிருக்கு. நீ அண்ணியோட பேசிட்டிரு…” என ஸ்வாதியை விட்டுவிட்டு செல்ல ‘இவங்களோடவா?’ என அவளை கிலி பொங்க பார்த்தாள் நிதர்ஷனா.
“ரொம்ப அட்வைஸ் சொல்லி பயமெல்லாம் காட்டமாட்டேன். சும்மா பேசிட்டிருக்கலாம்…” என்றவள் நிதர்ஷனாவின் பிடித்தங்கள், விருப்பங்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
சின்னதாய் ஆரம்பித்த பேச்சுவார்த்தை சுவாரஸியமாய் போக கோமகள் வந்துவிட்டார்.
“ஸ்வாதி நீ போய் நிதுவை திரு ரூம்ல விட்டுட்டு வா…” என சொல்ல,
“பால் எங்க?…” என்றாள் ஸ்வாதி.
“ரூம்ல அலங்காரம் பன்றப்பவே வச்சாச்சு. நீ கூட்டிட்டு போ…” என்றவர்,
“சந்தோஷமா இருக்கனும். சரியா?…” என நிதர்ஷனாவிற்கு சொல்லி அனுப்ப, ‘அம்புட்டுக்கும் காரணம் இந்தம்மா தான்’ என பார்த்துக்கொண்டே நின்றாள் நிதர்ஷனா.
“வாங்க…” என ஸ்வாதி எழுந்துகொள்ள,
“இப்பவேயா?…” என கேட்டதும் ஸ்வாதி சிரித்துவிட்டாள்.
கீழே திருமொழி உறவினர்கள் உணவை முடித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.