அவனின் கேள்வியில் நிதர்ஷனாவின் முகம் சென்ற போக்கை பார்த்தவன் ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்த முயன்று நின்றான்.
“வா உட்கார்…” என சொல்ல இன்னும் அவ்விடம் விட்டு அசையவில்லை.
“நிதர்ஷனா…” என்ற அழைப்பில் அவன் காட்டிய இடத்தில் அவனருகில் வந்துவிட்டாள் உடனே.
இப்படி ஓரிடத்தில் அமரவும், பேசவும், பார்க்கவும் தான் கஷ்டப்பட்டு நிற்போம் என அவள் நினைத்ததே இல்லை.
இப்போது அவள் எதிர்பாராத ஒரு வாழ்வு. அவள் நினைத்தும் பார்க்காத ஒருவனுடன்.
அமைதியின்மையால் முகமே பொலிவிழந்து காணப்பட்டது. திருமணம் என்றால் எப்படி இருக்கும்?
நல்லா தெரிஞ்சவங்களை கல்யாணம் பண்றதும் கூட இவ்வளோ கஷ்டமா என யோசித்திருந்தாள்.
காலை கூட இப்படி எல்லாம் நினைக்கவில்லை. அதனை ஏற்க முயன்று ஓரளவு அதில் தன்னை பொருத்திக்கொண்டாள் தான்.
ஆனால் அவனுடனான இந்த தனிமை, இன்னும் கணவன் என்ற எண்ணம் வார்த்தையளவிலும், மனதில் மெல்லிய படலமாக இப்போது தான் உருவகமெடுக்க ஆரம்பித்திருந்தது.
‘இதுக்குத்தான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேன்’ என்றவனின் கோபக்குரல் வேறு அவளை இம்சிக்க திருமொழியின் கைகள் அவள் கழுத்தில் தவழ்ந்த திருமாங்கல்யத்தை தொட்டு தழுவியது.
“மிஸஸ். நிதர்ஷனா திருமொழிவர்ணன்….” என மென்மையாக ரசனையாக அவன் சொல்ல அலைப்புறுதலில் சிவந்திருந்த விழிகள் அவனை ஏறிட்டது.
“மோதிரம் அளவு சரியா இருக்கா?…” என்றான் அடுத்ததாய் அவளின் விரல் பற்றி.
எதுவும் பேசும் நிலையில் அவளில்லை. இத்தனை அமைதியாக, மெல்லிய குரலில் தன்னருகில் பேசிக்கொண்டிருந்தவன் முகத்தில் என்னவோ ஒரு தேடல்.
அதனை ஆராய்ச்சியே பார்த்துக்கொண்டிருந்தவள் தன் விரல்களில் மெல்லிய அழுத்தத்தை கண்டு,
“ஹாங், சரியா இருக்கு…” என்றாள் அவனுக்கு பதிலாய்.
“டிஸைன் பிடிச்சிருக்கா?…” என கேட்க அதை எங்கே அவள் கவனித்தாள்.
உடனே மோதிரத்தை பார்க்க முயல அதில் தன் விரல் கோர்த்து அதனை மறைத்தவன்,
“ஸோ இன்னும் நீ அதை கவனிக்கலை…” என்று சொல்லவும் திகைப்புடன் பார்த்தாள். அவளின் அச்சத்தில்,
“ப்ச், இது ஒன்னும் காலேஜ் இல்லை. நம்ம ரூம். முதல்ல இந்த சூழ்நிலைக்கு வா. உனக்கு எதுவும் அந்நியமா தோணாது…” என சொல்லியவன்,
“சரி இதுவரைக்கும் எதுவும் பேசனும், கேட்கனும்ன்னு தோணலை. இப்பவுமா?…” என அவளிடம் கேட்க கேட்டுவிடுவோமா என்றொரு எண்ணம் ஆட்டிப்படைத்தாலும் அவனிடம் வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்தது.
அவன் பார்க்க பார்க்க நிதர்ஷனா கண்ணில் நீர் நிறைய ஆரம்பிக்க திருமொழி முகம் காணமுடியாமல் லேசாய் விழிகளை தாழ்த்தினாள்.
“போய் தூங்கு…” என்றான் அவள் விழிநீரை கண்டவன்.
“நிஜமாவா?…” என நிதர்ஷனா கண் சிமிட்டி பார்க்க,
“உன் எக்ஸாம் முடியட்டும். போ…” என்று சொல்ல இன்னும் அவன் முகத்திலேயே தான் அவள் பார்வை.
“ஹோய் புரியலையா?…”
“ஹாங், ஓகே ஓகே…” என்றவள் கட்டிலை பார்க்க முழுவதும் மலரிதழில் நிரம்பி இருந்தது.
“அதை எடுக்க முடியாது. இருக்கட்டும்….” என சொல்லியவன் எழுந்து சட்டை பட்டன்களை கழற்ற தானுமே உடை மாற்ற வேண்டுமே என நிதர்ஷனா என அவஸ்தையுடன் பார்த்திருந்தாள்.
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிடு. ஸ்வாதி ரூம் காமிச்சிருப்பாளே?…” என கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” என்றவள் அந்த அறைக்கு சென்று புடவையை களைந்துவிட்டு சுடிதாரில் வர வந்தவள் விழிகள் அப்படியே விரிந்துகொள்ள முகத்தை மூடி திரும்பிக்கொண்டாள் நிதர்ஷனா.
கையில்லா பனியனும், ஷார்ட்ஸும் அணிந்திருந்தவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க முதன்முதலில் அவனை அந்த கோலத்தில் கண்ட அவளின் அதிர்ச்சியில் சத்தமின்றி புன்னகை சிந்தினான் திருமொழி.
“பழகிடும்….” என்று மட்டும் சொல்ல திரும்பியே பாராது வந்து ஓரத்தில் படுத்தும்விட்டாள்.
ஐந்து பத்து விநாடிகளை தாண்டவில்லை. சட்டென திரும்பி அவனின் முகம் பார்க்க அருகில் விழிகளை மூடி படுத்திருந்தவன் அசையவில்லை.
சீரான மூச்சுக்காற்றில் அவன் உறங்கிவிட்டான் என நினைத்தவள் பார்த்தபடியே தான் இருந்தாள்.
இன்னும் நம்பமுடியவில்லை. கிள்ளி பார்க்க அண்ணன்கள் இல்லை என்றதும் தலையணையில் கிள்ளி வைத்தவள் நிஜம் தான் என்று மீண்டும் அவன் முகத்தை இன்னும் நெருக்கத்தில் பார்த்தாள்.
காற்றில் அலையாடும் கேசமும் எப்போதையும் போன்ற அழுத்தமான முகமுமாய் அவன் அகப்பட அவள் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி தானாய் வார்த்தைகளில் வந்துவிட்டது.
“உங்களுக்கு ஏன் கல்யாணம் பிடிக்கலை?…” என பார்த்துக்கொண்டே இருந்தவள் வாய்தவறி சொல்லிவிட,
“யார் சொன்னா?…” என பட்டென்று கண்ணை திறந்தான் திருமொழி.
“ம்மீ…” என அந்த அதிர்வில் பயந்து எழுந்துவிட திருமொழியும் எழுந்துவிட்டான். அவளுக்கு தண்ணீரை எடுத்து தந்தவன்,
“பால் இருக்கே? குடிக்கிறியா?…” என கேட்க வேண்டாம் என தலையசைத்தவள் தண்ணீரை குடித்தாள். சில நிமிடங்கள் அவள் ஆசுவாசமடைய விட்டவன்,
“என்ன வருத்துது உன்னை?…” என்றான்.
“இல்ல அது சும்மா…”
“சும்மா இல்லை. எனக்கு பிடிக்கலைன்னு யார் சொன்னா?…” என கேட்டு பின் அன்று தான் போனில் பேசியதில் தான் கேட்கிறாள் என புரிந்து மென்னகை புரிந்தான்.
“இதை முன்னாடியே கேட்டிருக்கலாம். கல்யாணம் பிடிக்காம இல்லை. ரொம்ப பரபரன்னு நிறுத்தி நிதானமா நடக்காம வேகமா போன மாதிரி இருந்தது. வொர்க் டென்ஷன். அதான்…” என்று சொல்லவும் மெல்லிய நிதர்ஷனா மனதிற்குள் சிறு நிம்மதி.
அது அவளின் முகத்திலும் அப்பட்டமாய் வெளிப்பட மெல்லிய முறுவல் புரிந்தவள் தலையசைத்தாள்.
அவள் விழி மூடி இருக்கையில் அவன் பார்ப்பதும், அவன் பார்க்கிறான் என்றதும் கண்களை மூடிக்கொள்வதும் என நிதர்ஷனா கண்ணாம்பூச்சியாட்டம் ஒன்றை ஆட வலிய தன்னை அதற்குள் சேர்ப்பித்துக்கொண்டான் திருமொழி.
“தூக்கம் வரலையா உனக்கு?…” என்றான் திருமொழி.
“அது புது இடம். அதான்…” என்று சொல்லி,
“நீங்க தூங்கலையா?…” என,
“தூங்கனும். தூங்க முடியலை…” என சொல்லியவன் மீண்டும் படுத்துக்கொள்ள அதற்குமேல் தான் வேறு என்ன பேசினாலும் முடியும் இடம் அவள் இதழாக இருக்கும் என மௌனமானான்.
நேரம் செல்ல செல்ல நிதர்ஷனாவிற்கு உறங்க முடியாமல் ஒருவித அவஸ்தை ஆட்டிப்படைக்க தலை விண்ணென்று தெறிக்க ஆரம்பித்தது.
தூங்கியே தீரவேண்டும். இல்லை என்றால் தலைவலி உயிரை வாங்கிவிடும் என புரண்டு புரண்டு அவள் படுக்க,
“என்னாச்சு? இன்னும் என்ன?…” என திருமொழி கேட்க,
“இல்ல, சுத்தமா தூக்கம் வரலை…” என்றவள்,
“எப்பவும் அம்மா கூடவே தூங்கி பழகிட்டேனா…” என்றும் மெல்லிய குரலில் சொல்ல,
“இந்தா பிடிச்சுக்கோ…” என தன் கையை நீட்டினான் திருமொழி.
“சில பழக்கங்கள் சில பழக்கங்களால மாறலாம். என் கையை பிடிச்சுக்கோ…” என்று சொல்ல,
“இல்ல இருக்கட்டும்…” என மறுத்தவள் அவன் இன்னும் கை நீட்டியபடியே ‘இருக்க விடமாட்டான்’ என்று தெரிந்து தன் வலதுகை விரல்களை அவன் விரிந்த கரத்தினுள் பட்டும் படாமலும் வைக்க மெல்ல பற்றிக்கொண்டான் திருமொழி.
“குட்நைட். ஸ்லீப்வெல்…” என சொல்லி அவள் விரல்களுக்குள் விரல் கோர்த்துக்கொள்ள அதில் மெல்லிய நடுக்கம்.
அதை உணர்ந்தவன் இதழ்கள் குறிஞ்சிரிப்புடன் மனைவியை காண கண்களை திறப்பேனா என்பதை போல மூடிகொண்டாள்.
முதலில் கை பிடித்ததும் அவன் பார்க்கிறான் என்ற உள்ளுணர்வில் விழி திறவாமல் படுத்திருந்தவள் ஒருகட்டத்தில் உறங்கியும் போனாள்.
நேரம் செல்ல செல்ல ஆழ்ந்த சயனத்திற்கு சென்றவள் கைகள் அவனின் விரல்களை இறுக்கி பிடித்து தன் கழுத்திற்குள் வைத்துவிட திருமொழியின் உணர்வுகள் விருட்சம் பெற்றது.
“மை காட்…” என இன்னொரு கையால் தலையை கோதிக்கொண்டவன் இன்னும் அவள் முகம் நெருங்கினான் தன் கையை வாகாய் கொடுத்து.
விரல்களின் அழுத்தம் அவனை வெகுவாய் சோதிக்க கைகளை உருவிக்கொள்ளவும் முடியவில்லை.
“இன்னும் கொஞ்சநாள் என்னை விட்டுவைடி…” என்றான் மயக்கத்துடன் திருமொழி.
அவளுக்கான கால அவகாசம் கல்லூரி தேர்விற்கு மட்டுமா? தன்னை முழுமையாய் அவள் ஏற்று கொள்வதற்கும் தானே?
மனைவியின் அருகாமை வெகுவாய் அவனை சோதிக்க ஒருபுறம் விலகியும் செல்ல முடியாமல் அவள் முகம் பார்த்தே படுத்திருந்தான் திருமொழி.
இத்தனை நாட்கள் காத்திருந்தவனுக்கு இந்த முப்பது நாட்கள் ஒன்றும் பெரிய விஷயமாய் படவில்லை.
ஆனால் முப்பது நாட்கள் அவனின் காத்திருப்பில் முழுமை பெறுமா என்பது தான் கேள்வியாய் நின்றது அவன் முன்.
மந்தகாச சிரிப்புடன் மீண்டும் நிதர்ஷனாவின் புறம் திரும்ப அவள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றிருந்தாள் இப்போது.
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்துவிட்டான்
என்னை படைத்து முடித்ததுமே
அவன் உன்னை உங்கே அனுப்பி வைத்தான்
கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக் குயில் பாடாதோ
ஹே கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ