காலை வழக்கமான நேரத்தில் திருமொழி கண் விழிக்க அருகில் நிதர்ஷனா நன்றாக உறக்கத்தில் இருக்க நேரத்தை பார்த்தான் அவன்.
கோவிலுக்கு கிளம்ப வேண்டும். வீட்டிலும் அடுத்த சம்பிரதாயங்கள் இருக்க அதற்குள் கோவிலுக்கு சென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு வரவேண்டும் என உடலை சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தமர்ந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் குளித்து கிளம்பி வந்துவிட இன்னும் அயர்ந்த உறக்கம் தான் அவளிடம்.
இதழ்களில் படர்ந்த மெல்லிய புன்னகையுடன் அருகில் வந்து அவளின் கன்னம் தட்டியவன்,
“தர்ஷி…” என்றழைக்க அரை தூக்கத்தில் ‘தர்ஷி’ என்ற அழைப்பில் கணேசனோ என நினைத்து,
“அப்பா…” என பதறி எழுந்தமர்ந்தாள் நிதர்ஷனா.
“ஹோய், என்ன, என்ன?…” என அவள் எழுந்த வேகத்தில் இருபக்க தோளையும் பற்றி மீண்டும் அமர வைத்தவன்,
“தர்ஷி, நான் தான்ம்மா….” என்றான் திருமொழி.
“ஓஹ்…” என இன்னும் நன்றாக அவனை கண் சிமிட்டி பார்க்க,
“ஓகே வா? பார்த்தாச்சா?…” என கேட்டவன்,
“நான் கோவில் வரை போய்ட்டு வரேன். நாளைக்கு தேரோட்டம் வேற இருக்கு. அங்க என்ன நடக்குதுன்னு தெரியலை. நேர்ல போகனும். உனக்கு தூக்கம் போதும்ன்னா எழுந்து குளிச்சிட்டு கீழே இரு. வந்திடறேன்…”
வரிசையாக அவன் சொல்லவும் கொஞ்சநஞ்சம் இருந்த உறக்கமும் அவளிடமிருந்து சென்றிருந்தது.
“நானும் டெய்லி எழுந்துக்கற நேரம் தான். போதும். தூங்கிட்டேன்…” என எழுந்து நிற்க முயல பாதமெல்லாம் வலித்தது.
நிற்க முடியாமல் காலை பிடித்தபடி மீண்டும் படுக்கையில் அமர்ந்துவிட்டாள் நிதர்ஷனா.
“என்னாச்சு? வேணும்னா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன். ஒன்னும் பிரச்சனை இல்லை. மணி அஞ்சு தான்…” என்றவன்,
“சரி, நான் வரேன்….” என சொல்லி அவளின் கன்னம் தட்டியவன் அதுவும் போதாமல் லேசாய் கிள்ளி செல்ல அதன் தொடுகையில் நெளிந்தாள் நிதர்ஷனா.
அவன் சென்றும் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவள் எழுந்து குளித்து புடவை மாற்றி கீழே வர அந்தநேரம் வீட்டில் சொந்தங்கள் எல்லாம் எழுந்திருந்தனர்.
“அப்போ நீ எப்படி கூப்பிடுவியாம்?…” என்றார் சங்கவை.
“அத்தைன்னு தான் அத்தை அத்தையை கூப்பிடுவேன். அத்தைன்னே உங்களை கூப்பிடறேன் அத்தை…” என சொல்லியதில் ஸ்வாதியும் அடக்கமாட்டாமல் சிரித்து,
“அநியாயம் பன்றீங்கம்மா. அதுவும் இன்னைக்கு காலையில. சாமி கும்பிட்டா எழுந்து போங்க. நாங்க கும்பிட்டு வரோம்…” என்றாள் ஸ்வாதி.
“சரி சரி…” என அவரும் கிளம்பி செல்ல இருவரும் கும்பிட்டு முடித்து வெளியே வந்து உறவுகளுடன் அமர்ந்துவிட்டனர்.
“டீயா, காபியா உனக்கு?…” என கோமகள் வர,
“டீ…” என்றவள் மனதிற்குள், ‘இந்தம்மா கொஞ்சம் அங்கிட்டும் இங்கிட்டும் வராம இருந்தா போதும். என்னமோ எனக்கு ஸ்டமக் கபகபன்னு இருக்கு’ என நிதர்ஷனா நினைத்துக்கொண்டிருக்க,
“ஆன்ட்டி மேல எதுவும் கோபமா உங்களுக்கு?…” என்றாள் ஸ்வாதி.
“என்ன?…” என நிதர்ஷனா திகைக்க,
“இல்லை அப்படி முறைச்சு பார்த்தீங்களே அதான் கேட்டேன்…”
“அச்சோ அதெல்லாமில்லை. சும்மா தான் பார்த்தேன்…”
“அட சும்மா சொல்லுங்க அண்ணி. நான் சொல்லவா, உங்களை இங்க பிடிச்சு குடுத்ததே அவங்க தான்னு தான பார்க்கறீங்க?…” என ஸ்வாதி கேட்கவும் நிதர்ஷனா அசடு வழிந்தாள்.
“நீங்களும் உங்கண்ணனும் ஒரே யுனிவர்சிட்டியா?…” என்றாள் நிதர்ஷனா ஸ்வாதியிடம்.
“இல்லையே, ஏன்?…”
“இல்ல, மைண்ட் ரீடிங் அப்படின்னு சொல்லுவாங்களே. அதை இங்க தான் பார்க்கறேன். அதுவும் எனக்குன்னும் போது மைன்ட்ஸ் வாய்ஸ் கூட பேச பயமா இருக்கு. ரொம்ப கஷ்டம் தான்…” என நிதர்ஷனா அப்பாவியாய் சொல்லிவிட ஸ்வாதியின் வெடி சிரிப்பில் அனைவரின் பார்வையும் அவர்களிடம் தான்.
“ஆத்தீ, தெய்வமே, தயவு செஞ்சு சிரிக்காதீங்க. சொல்லமாட்டேன். விடுங்க…” என கையெடுத்து கும்பிட்டு அவளின் வாயை மூட பார்க்க ஸ்வாதி சிரிப்பு மட்டுப்படவே இல்லை.
“போச்சு, போச்சு…” என அவஸ்தையுடன் நிதர்ஷனா ஸ்வாதியின் கையை பிடித்துக்கொள்ள,
“நீங்க ரொம்ப ஸ்வீட் தான்…” என்றாள் ஸ்வாதி.
இருவரையும் பார்த்த உறவுகளும், சங்கவையும் புன்னகையுடன் அதனை கவனித்தனர்.
“நல்ல பொண்ணு தான் சங்கவை, பாரு உன் பொண்ணும், மருமகளும் எவ்வளோ ஒத்துமையா பழகறாங்கன்னு. சுத்தி போடு இவங்களுக்கு…” என்றனர்.
அதற்குள் வீட்டை சுற்றி பார்க்க ஸ்வாதி நிதர்ஷனாவை அழைத்து செல்ல நேரம் சென்றதே தெரியவில்லை.
கீழேயும், மேல் இரண்டு தளங்களையும் என எல்லாம் பார்த்துவிட்டு மொட்டைமாடிக்கு வந்திருந்தனர்.
அத்தனை விசாலமான இடத்தில் மாடியில் ஒரு அறையும் உடற்பயிற்சி கூடமும் இருந்தது.
“அண்ணா இங்க தான் டெய்லி எக்சர்ஸைஸ் பண்ணுவாங்க. இன்னைக்கு சூர்யநமஸ்காரம் கூட பண்ணலை. கோவிலுக்கு போயாச்சு…” என்றாள் ஸ்வாதி.
அதற்குள் அவளுக்கு அழைப்பு வர எடுத்து பேசியவள் சலிப்புடன் போனை வைத்தாள். திருமொழியோ என நிதர்ஷனா நினைத்திருக்க,
“கோமகள் ஆன்ட்டி தான். உங்ககிட்ட கேட்க சொன்னதை இன்னும் கேட்கலையான்னு கேள்வி…” என்றாள்.
“என்னவாம்? கேளுங்களேன்…”
“நிஜமாவே கேட்டுடவா? அப்போ கேட்டதும் சங்கடப்படக்கூடாது…” என்று பீடிகை போட்ட ஸ்வாதி,
“நேத்து எல்லாம் ஓகே வா. நல்லபடியா நடந்ததான்னு கேட்கறாங்க…” என சொல்லவும் நிதர்ஷனாவின் முகம் குப்பென்று சிவந்துவிட்டது.
“அதுக்காக தான் உங்களை ரூம்ல இருந்து வந்ததும் சொல்லிட்டு வரவேண்டியது தானேன்னு கேட்டாங்க. பர்ஸ்ட் நைட் முடிச்சு வரவங்க பூரண பாக்கியவதிங்க முகத்துல முழிக்கனும்ன்னு…” என்றும் கூறினாள்.
நிதர்ஷனா வாயே திறக்கவில்லை. ஸ்வாதி மீண்டும் அழுத்தி கேட்டால் என்ன செய்வது என யோசிக்க,
“ஆனா நீங்க எதுவும் சொல்லவேண்டாம். அது உங்க பர்ஸனல். பெரியவங்க கேட்கத்தான் செய்வாங்க. அந்தநேரம் அப்படியான்னு போய்டனும். ஈஸி…” என்றாள்.
அவளின் தோளில் தட்டியபடி சொல்லிய ஸ்வாதி நிதர்ஷனா தலை அசைக்கவும் சுற்றிலும் உள்ளவற்றை காண்பித்து பேச யாரோ எங்கிருந்தோ வெறிப்பதை போல உணர்ந்தவளின் உள்ளுணர்வில் நிதர்ஷனா திரும்ப ஒருவரையும் பார்க்க முடியவில்லை.
“அந்த வீட்டுல தான் மிருதுளா இருக்காங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே. உங்க காலேஜ்ல தான் டீச்சிங் ஸ்டாஃப்…” என நிதர்ஷனாவின் பார்வை சென்ற வீட்டை பார்த்து அவள் சொல்ல,
“ஓஹ். பக்கத்துல இருக்காங்கன்னு தெரியும். இவ்வளோ பக்கம்ன்னு தெரியாது…” என்று சொல்லியவள் அங்கிருந்த தோட்டத்தில் கவனம் திரும்பினாள்.
மீண்டும் ஸ்வாதியின் எண்ணிற்கு அழைப்பு வர கோமகளாக இருக்கும் என நினைத்த நிதர்ஷனா எதுவும் கேட்கவில்லை.
மெல்லிய குரலில் ஸ்வாதி போனில் பேசிக்கொண்டிருக்க நிதர்ஷனாவின் முழு கவனமும் அங்கிருந்த பூக்களிடம் தான்.