“ஆமா, அப்பவே தான். கிளாஸ் ஆரம்பிக்கிற வரை என்னோட என் ஆபீஸ் ரூம்ல இரு. டைம்க்கு கிளாஸ் அட்டன் பண்ணு….” என்றவன் அவளின் திகைப்பை கண்டுகொள்ளாமல்,
“ஈவ்னிங் உன்னோட சேர்ந்து வர முடியாது. ஸோ உனக்கு கார் வெய்ட் பண்ணும். நீ கிளம்பி வீட்டுக்கு வந்திரு…” என்றவன் என்றென்றைக்கு பரீட்சை என்று சொல்லி நேரம் சொல்லி பேச தலையை மட்டுமே ஆட்டவேண்டிய சூழ்நிலை.
“ஹ்ம்ம், படிச்சிருக்கேன்…” என காற்றாய் பதில் சொல்ல நேரம் கரைவதில் அவளின் உடல் நடுங்கியது.
“நான் தூங்கட்டுமா? சீக்கிரம் எழுந்துக்கனுமே?…” என்று சொல்லவும் தனக்குள் சிரித்துக்கொண்டவன்,
“போ…” என்றான் கைகளை விலக்கிக்கொண்டு.
பின்னால் நகர்ந்து சாய்ந்து படுக்க திருமொழி இன்னும் அங்கேயே தான் அமர்ந்திருந்தான்.
சில நொடிகள் அவன் எழுந்துகொள்வான் என பார்க்க இல்லை. அவளை பார்த்துக்கொண்டு தான் அமர்ந்திருந்தான்.
மீண்டும் எழுந்து அதே இடத்தில் அமர்ந்த நிதர்ஷனா ஒருவாறாக தன்னை நிதானித்துக்கொண்டு,
“வேணும்னா வச்சுக்கோங்க…” என்றாள் அவனின் உள்ளங்கையை பார்த்துவிட்டு தன் கன்னத்தை சுட்டுவிரலால் காண்பித்து.
“ஹோய், என்ன சொன்ன?…” திருமொழி முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
“இல்லை நீங்க தூங்கலை. அதான்…” என திணறலுடன் சொல்ல,
“ஹ்ம்ம் தூங்கனும் தான். நான் தூங்கனும்ன்னா கன்னத்தை மட்டும் தொட்டா போதுமா?…” என்று கேட்க அவளின் முகமே பேயறைந்ததை போலானது.
புரிந்தது, அவன் சொல்ல வருவதன் அர்த்தம் நன்றாகவே புரிந்தது. அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என விழிபிதுங்கி பார்த்தவளின் பாவனையில் இப்போது சத்தமாய் ஆர்ப்பாட்டமாய் சிரித்துவிட்டான் திருமொழி.
அதில் ‘வாவ்’ என்று உள்ளம் கூச்சலிட அவன் தன்னிடம் கேட்டதை மறந்து அந்த புன்னகையை பார்த்தாள்.
ரசனை தான். அவளுக்கும் அதே புன்னகை தொற்றிக்கொள்ள நிதர்ஷனாவின் இதழ்கள் புன்சிரிப்பில் நெளிந்தது.
“அவசரப்பட்டு இப்படி பேசி என்கிட்ட மாட்டிக்காத. நீ தூங்கு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…” என்றவன் எழுந்து சென்று தன்னுடைய மறுநாள் பணிகளை பட்டியலிட்டு குறிக்க ஆரம்பித்தான் திருமொழி.
அதற்கு மேலும் அவனை கேட்டுவிட முடியுமா? இழுத்து போர்த்தி உறங்க முயன்றவளுக்கு முடியத்தான் இல்லை.
அவனின் பேச்சுக்களும், கேள்வியும், பார்வையும், தொடுகையும் உள்ளுக்குள் கணவன் மீதான பார்வையை பாதை வகுத்துகொடுத்தது.
காலை பரபரவென்று இருந்தது நிதர்ஷனாவிற்கு. எழுந்து குளித்து கிளம்பி அவனுடனே உண்டு முடித்து இதோ காரில் கிளம்பியாகிற்று.
மீண்டும் பஸ்ஸில் வருவதாய் சொல்லி அவனின் கோபத்தை வாங்கிக்கொள்ள நினைக்கவே இல்லை.
ஆனாலும் இந்த சிலநாட்கள் மட்டும் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை அனுபவித்துக்கொள்ள மனது பேராவல் கொண்டது.
அவளின் ஆசையை திருமொழியும் அறிந்திருக்க அவனால் அதற்கு இடம் கொடுக்க முடியவில்லை.
இப்போது நிதர்ஷனா திருமொழிவர்ணனின் மனைவி மட்டுமல்ல. அந்த கல்லூரியின் எதிர்கால உரிமையாளரும்.
இன்னும் சிறுபிள்ளை குணங்கள் இருந்தாலும் அதனை அப்படியே தொடர வைக்க அவனுக்கு விருப்பமில்லை.
சிலவற்றை தன் மனைவியாக அவள் மாற்றிக்கொண்டுதான் ஆகவேண்டும் என நினைத்தவன் அதன்படியே வழி நடத்தினான்.
கல்லூரியினுள் கார் நுழைய இப்படி அரவமின்றிய தன்னுடைய கல்லூரியை அன்று தான் பார்த்தாள் நிதர்ஷனா.
இன்னும் ஒரு கல்லூரி பேருந்து கூட வரவில்லை. பணியாளர்கள் எல்லாம் துப்புரவு வேலையை செய்துகொண்டிருக்க அந்தநேரமே வந்தது என்னவோ போலிருந்தது அவளுக்கு.
“வா…” என்றவன் அவனின் அலுவலகத்தின் முன்னிருந்த பிள்ளையாரை வணங்கிவிட்டு மனைவியுடன் உள்ளே நடந்தான்.
இன்றுதான் அந்த கல்லூரியின் அறக்கட்டளையும், சேர்மனின் அறையுமான திருமொழிவர்ணனின் அலுவலக அறைக்குள்ளே அவள் நுழைகிறாள்.
ஒவ்வொன்றையும் புருவம் உயர்த்தி வேடிக்கை பார்க்கும் மனப்பான்மையில் தான் பார்த்துக்கொண்டு வர அவனின் அறையே மிக பிரமாண்டமாக இருந்தது.
முதல் அறையில் சுவற்றை ஒட்டி சுற்றிலும் சோபா போன்று இருக்கைகள் போடப்பட்டிருக்க அதை கடந்து அவனின் அலுவலகம்.
அந்த அறையிலிருந்து மெல்ல உள் அறையை அவள் எட்டி மட்டும் பார்க்க,
“ஹோய், என்ன அங்க நின்னு பார்க்கற? உள்ள வா…” என்றவன் உள்ளே சென்று அங்கு வைத்திருந்த கடவுளின் படத்தின் முன்பும் நின்று வணங்கியவன் அதன் பின்னரே அவனின் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“ஏன் பார்த்துட்டே நிக்கிற தர்ஷி? உட்கார்…” என அவளை அமர சொல்ல திருமொழியின் முன்னிருந்த சேர்களை பார்த்தவள் அங்கே அமராமல் அதே அறையில் சுவற்றை ஒட்டி இருந்த நீள்வடிவ இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
“ஹ்ம்ம் குட்…” என்றவன் அதன் பின் தன்னுடைய வேலையை ஆரம்பிக்க நிதர்ஷனாவிற்கு தான் பார்வை புத்தகத்தில் பதியவே இல்லை.
அவனை பார்ப்பதும், புத்தகத்தை பார்ப்பதுமாக இருக்க திருமொழியும் அதனை உணரத்தான் செய்தான்.
“இங்க நான் சேர்மன் தான். கான்சன்ட்ரேஷன் உனக்கு புக்ல இல்ல போல?…” என சொல்ல,
சிணுங்கலுடன் மீண்டும் புத்தகத்தில் பார்வையை பதித்தவள் கன்னத்தில் கையை வைத்துக்கொள்ள திருமொழிக்கு அவளின் விழிகளின் தீண்டல் இன்னுமே தேடலை அதிகப்படுத்தியது.
“தர்ஷி நீ க்ளாஸ்க்கு போ…” என அவனே நேரத்தை பார்த்து சொல்லவும் விட்டால் போதும் என கிளம்பி சென்றாள் நிதர்ஷனா.
தோழிகளின் கிண்டல்கள், ஆசிரியைகளின் வாழ்த்து என அன்றைய பரீட்சை சுபமாகவே இருந்தது.
அதற்கடுத்து இருநாட்கள் விடுமுறை என்றிருக்க இரண்டாம் தேர்வு அன்றும் திருமொழியுடன் தான் முதலில் வந்ததை போலவே வந்திருந்தாள் நிதர்ஷனா.
“நிதர்ஷனா….” என்ற சத்தத்தில் தேர்வு வகுப்பிற்குள் நுழையும் முன் திரும்பி பார்க்க மிருதுளா நின்றிருந்தாள்.
“மேம், குட்மார்னிங்…” என பார்த்ததுமே மரியாதையுடன் நிதர்ஷனா சொல்ல பதிலுக்கு மிருதுளா எதுவும் சொல்லாமல் வெறித்த பார்வை தான் பார்த்தாள்.
அவளிடம் இருந்த மென்மை, புன்னகை, சாந்தம் எல்லாம் மறைந்திருந்ததை போலிருந்தது நிதர்ஷனாவிற்கு.
“சொல்லுங்க மேம்…” என மீண்டும் நிதர்ஷனாவே கேட்க,
“ரொம்ப சந்தோஷமா இருக்கியா?…” என்றாள் மிருதுளா.
பல்லை கடித்துக்கொண்டு வந்த அந்த கேள்வியில் நிதர்ஷனா ஒருநொடி அதிர்ந்து போய் பார்க்க,
“சொல்லு, ரொம்ப சந்தோஷமா இருக்கியா நீ? திருவை கல்யாணம் பண்ணிகிட்ட. பெருமையா திரு கூடவே வர. உன் முகத்துலையே அது தெரியுதே?…” என்றதும் நிதர்ஷனா என்ன பேசுகிறார் இவர் என்று தான் பார்த்தாள்.
“இன்னைக்கு திரு லைட் ப்ளூ ஷேட் ஷர்ட் இல்லையா? சின்னதா வைய்ட் கலர் ஸ்ட்ரெய்ட் லைன். நைஸ்ல…” என்று சொல்ல நிதர்ஷனாவின் பாதமெல்லாம் சில்லிட்டது மிருதுளாவின் பேச்சிலும், பார்வையிலும்.
“நானும் அதே கலர்ல சேரி. எப்படி இருக்கு?…” என்றாள் மிருதுளா.
அவள் சொல்ல வருவதும், சொல்லியதன் அர்த்தமும் கொஞ்சம் கொஞ்சமாய் நிதர்ஷனாவின் மூளைக்குள் சென்றடைய இதை அவள் சுத்தமாய் எதிர்பார்க்கவே இல்லை.
“போ போ. உனக்கு எக்ஸாம்ல. போ…” என சொல்லிவிட்டு நக்கலாய் ஒரு சிரிப்புடன் பார்த்தவள்,
“என்னடா நான் இதெல்லாம் உன்கிட்ட பேசறேன்னு தோணுதா? தோணட்டும். யார்ட்டயாவது சொல்லனும்ன்னா சொல்லிக்கோ. எனக்கு பிரச்சனை இல்லை. நான் விஷ் பண்ண தான் செஞ்சேன். நீ ஏன் இப்படி பேசறன்னு எனக்கு தெரியாதுன்னு சொல்லுவேன்….” என சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.
“போன எக்ஸாம்லையே உன்னை பார்த்து பேசியிருப்பேன். வீட்டுக்கும் வர முடியலை. ஹெல்த் இஷ்யூஸ். ஏன் தெரியுமா? உன்னால தான். உன்னாலதான்டி…” என விழிகள் சிவக்க அவள் கூற பயத்தில் பின்னடைந்தாள் நிதர்ஷனா.