“என்னம்மா இன்னும் இங்கயே நின்னுட்டிருக்கீங்க?…” என்றார் தேர்வை கவனிக்க வந்திருந்த பேராசிரியை.
“நான் தான் மேம் பேசிட்டிருந்தேன். கல்யாணத்துக்கு போக முடியலை. அதான் தனியா கூப்பிட்டு விஷ் பண்ணலாமேன்னு பேசினேன்…” என சட்டென மாறிவிட்ட முகபாவனையுடன் மிருதுளா சொல்லிவிட்டு,
“போங்க மிஸஸ் நிதர்ஷனா. ஆல் தி பெஸ்ட்…” என்றதும் அந்த ஆசிரியை மிருதுளாவிடம் பேச நிதர்ஷனா உள்ளே வந்தமர்ந்தாள் அவளுக்கான இருக்கையில்.
மிருதுளாவின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்குமென நிதர்ஷனாவால் ஜீரணிக்க முடியவில்லை.
அவின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மூளைக்குள் நின்று ஆணியடிக்க இது தன் கணவனுக்கு தெரியுமா இல்லையா என்று வேறு தலைவேதனை.
‘என்ன செய்யனும்? இதை எப்படி நான் ஹேண்டில் பண்ணனும்? ம்மீ’ என பிரம்மையில் இருந்ததை போலவே வெகுநேரம் அமர்ந்திருந்தவள் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள்.
எந்த வினாவை பார்த்தாலும் மிருதுளாவின் பேச்சுக்கள் தான் தெரிந்தது. பதில் எழுதமுடியாமல் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர கணேசனின் முகம் தான் இப்போது முன்னின்றது.
அதன்பின் ஒருவாறு தேர்வை எழுதி முடித்துவிட்டவள் முகம் இன்னும் தெளிவில்லை.
சரியாக எழுதினாளா இல்லையா என அவளுக்கே தெரியாமல் அந்த கவலை ஒருபுறம் வாட்ட அல்லாடி போனாள் நிதர்ஷனா.
வகுப்பறையை விட்டு வெளியே வந்தவளின் எதிரே மிருதுளா வர அவளை பார்க்கவே பயந்து வீடு செல்ல வேண்டியவள் நேராக வந்ததென்னவோ திருமொழியின் அலுவலக அறைக்கு தான்.
விறுவிறுவென வேக நடையுடன் வியர்த்து போய் உள்ளே வந்துவிட்டவள் அங்கே திருமொழியுடன் பேச்சுவார்த்தையில் இருந்த கல்லூரியின் முதல்வர்கள் அனைவரும் திரும்பி பார்க்க திகைத்து நின்றுவிட்டாள்.
ஒருநிமிடம் செய்வதறியாது நின்ற நிதர்ஷனா பின் திருமொழியை பார்த்துவிட்டு,
“ஸாரி ஸார்…” என அனைவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு முன்னிருந்த அறையின் இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டாள்.
“ஓகே நீங்க கிளம்புங்க…” என்ற திருமொழி அவர்கள் எழுந்து செல்லும் வரை காத்திருக்க இறுதியாய் வந்த ரத்னா,
“என்னாச்சு நிது? உடம்புக்கு எதுவும் சரியில்லையா?…” என்றார்.
“இல்லை மேம்…” என்று சொல்ல அவரின் பின்னோட வந்தான் திருமொழி.
“நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கறேன்…” என அவரை அனுப்பியவன் மனைவியின் முகத்தை பார்த்தான்.
இன்னும் கண்ணீரை அடக்கியபடி கீழுதட்டை உள்ளிழுத்து கடித்து நின்றவளை பார்த்தவன்,
“வந்து உட்கார்…” என்று தானும் அவளோடு அமர்ந்தான்.
“என்னாச்சு? எக்ஸாம் சரியா பண்ணலையா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…”
“ஏன்? நல்லா படிச்சியே?…”
“என்னால எழுத முடியலை…” என்று சொல்லியவளுக்கு மிருதுளா சொல்லியதை பற்றி சொல்ல தோன்றினாலும் முடியவில்லை.
கல்லூரியில் உடை விஷயத்தில் அத்தனை தைரியமாக வந்து புகார் சொல்லியவளுக்கு தன் வாழ்க்கை என வரும்பொழுது சம்பந்தப்பட்டவனிடம் சொல்லவேண்டும் என்று தோன்றினாலும் ஒருபக்கம் பயந்து போயிருந்தாள் எதிர்பாராத அந்த தாக்கத்தில்.
அவளின் இன்னொரு மனமோ அறிவின் பக்கமிருந்து யோசித்தது. இதை ஏன் மிருதுளா தன்னிடம் சொல்லவேண்டும் என யோசித்தபடி நிதானமாக இருக்க அறிவுறுத்த மூச்சை இழுத்து விட்டவள் திருமொழியை பார்த்தாள்.
“ஓகே வெய்ட் பண்ணு. வரேன்…” என்று சொன்னானே தவிர வேறு எந்த கேள்விகளும் கேட்கவில்லை.
ஏன் எதற்கு என கேட்டிருந்தால் நிச்சயம் துவண்டிருப்பாள் தான். எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றவன் மீண்டும் வரும்பொழுது அவனின் கையில் கார் சாவி.
“வா போகலாம்…” என அழைக்க வீட்டிற்கு தான் என்று நினைத்தவள் தன்னுடைய பேக்குடன் எழுந்துகொண்டாள்.
இருவருமாய் செல்வதை தூரத்தில் இருந்து மிருதுளா பார்க்க நிதர்ஷனாவும் அவளை பார்த்துக்கொண்டே தான் சென்றாள்.
மீண்டும் மிருதுளா தன்னுடையை விரல்களால் சுட்டி காண்பித்து திருமொழியை காண்பிக்க தடுமாறினாள் நிதர்ஷனா.
“எங்க பார்த்து நடக்கற தர்ஷி? ஸ்டெப்ஸ் வருது…” என்று திருமொழி அவளிடம் பேச,
“இல்ல கவனிக்கலை. இனிமே கவனிக்கறேன்…” என்றவளின் பேச்சின் பொருளை திருமொழி கவனிக்கவில்லை.
காரில் ஏறி அமர்ந்ததும் தலையெல்லாம் விண்ணென்று தெறிக்க அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டியவன் எதுவும் பேசாமல் காரை கிளப்பினான்.
சில நிமிடங்களிலேயே வேறு எதோ ஒரு பாதையில் கார் செல்ல ஈரோட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர் இருவரும்.
“வீட்டுக்கு போகலையா? எங்க போறோம்?…” என நிதர்ஷனா கேட்க,
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட….” என்ற திருமொழி,
“கொஞ்ச நேரம் சைலன்ட்டா வா. சும்மா ஒரு லாங் ட்ரைவ் போகலாம்…” என்றான்.
“அச்சோ நான் ஓகே தான். எக்ஸாம் சரியா எழுதலை. அதான் கொஞ்சம் அப்செட். மத்தபடி ஒண்ணுமில்லை…” என்றவள் அவனின் வேலை நேரத்தில் இப்படி தொந்தரவு செய்துவிட்டோமே என வருத்தத்துடன் சொல்ல,
வாகனம் கோவையை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இரண்டு மூன்று முறை சொல்லி பார்த்தவள் பின் அமைதியாகிவிட்டாள்.
மனைவியை திரும்பி பார்த்தவனின் முகத்தில் மெல்லிய முறுவல் கலந்த கனிவு.
திருமணம் முடிந்ததில் இருந்து சொந்தங்களின் வீட்டிற்கு விருந்து, உள்ளூருக்குள் பயணம் என்று தான் இருக்க முடிந்தது அவனால்.
தேனிலவு என்ற ஒன்றை நினைக்க முடியாத விதத்தில் தான் வேலைகளும் சூழ்ந்திருந்தது.
போதாததிற்கு நிதர்ஷனாவின் தேர்வு என அவனால் நகரவே முடியாது. இதன் இறுக்கம் கூட அவளுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கும் என்று கிளம்பியாகிற்று.
முடிந்தளவு அவளுடன் நேரம் செலவிடவே நினைத்தான் திருமொழி. சூழ்நிலை அதற்கு வாய்க்கவில்லை.
கண்ணில் நீருடன் தன் அறையின் முன் வந்து நின்றதற்கு பின் வேறு எதையும் யோசிக்கவில்லை.
செல்லும் வழியில் ஓரிடத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு சென்றனர். நேராக மருதமலைக்கு செல்ல வெயிலின் தாக்கம் இன்றி அன்றைக்கு வானிலையும் இதமாகவே இருந்தது.
“கோவிலுக்கு வரோம்ன்னு அத்தைட்ட சொல்லியிருக்கலாம். கூட்டிட்டு வந்திருக்கலாம்…” என நிதர்ஷனா சொல்ல,
“அத்தை மட்டும் போதுமா?….” என்றவன் கேள்வியில் நாக்கை கடித்துக்கொண்டவள் காரிலிருந்து இறங்கினாள்.
மனதிற்குள் புது உற்சாகம். மிருதுளா எல்லாம் பின்னே சென்றுவிட இந்த பயணம் பிடித்தது.
தனக்காக அவன் கிளம்பி வந்தது, தன் மனதை பார்ப்பது என்று ஒவ்வொன்றும் அவளுள் மகிழ்ச்சியை பரப்ப இதமான காற்றின் குளுமையில் மனதால் நனைந்தாள்.
“ஹ்ம்ம், முகத்துல இப்ப கொஞ்சம் வெளிச்சம் தெரியுதே?…” என திருமொழி கேலி பேச,
“இப்படி கூட்டமே இல்லாம அமைதியா கோவிலுக்கு வரதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும். அதான்…” என்று தன் விருப்பத்தை தானாகவே அவன் கேளாமலே சொல்ல ஆரம்பித்திருந்தாள்.
இப்படி சின்ன சின்னதாய் வார்த்தைகளை கொடுத்து அவளிடம் வாக்கியங்களாய் பெற்றுக்கொண்டிருந்தான் திருமொழி.
மீண்டும் ஈரோடு திரும்பி வந்துகொண்டிருக்க காரில் பாடலை ஒலிக்கவிட்டவன் அதை அமர்த்திவிட்டு,
“உன் மொபைல் குடு தர்ஷி. கனெக்ட் பண்ணுவோம்…” என்றான் திருமொழி.
“ஏன், எதுக்கு?…” என நிதர்ஷனா கேட்க,
“பாட்டு கேட்க தான். உன் கலெக்ஷன்ஸ் எப்படி இருக்குன்னு கேட்போமே…” என கேட்க,
“இல்லை உங்க சாங்ஸ் கேளுங்க…”
“அதுல தமிழ் சாங்ஸ் இல்லை. பெருசா கேட்டதில்லை…” என தன் இடது கையை நீட்டியபடியே இருக்க,
“நானே கனெக்ட் பன்றேன்…” என்றாள் நிதர்ஷனா.
“ஏன் இவ்வளோ தயக்கம்? ஸாங்ஸ் தானே கேட்கனும்ன்னு சொன்னேன்?…” என்றவனின் நமுட்டு சிரிப்பை கவனிக்காதவள் ‘அவ்வளவும் ரொமாண்டிக் சாங். இவங்களை வச்சுக்கிட்டா கேட்க?’ என புலம்பியபடி அவனுக்கு பதில் சொல்லாமல் பாடலை ஒலிக்கவிட்டு போனை கையில் வைத்திருக்க,
“மொபைலை குடு, ஸாங் சேஞ்ச் பண்ணிட போற…” என அதையும் லாவகமாய் வாங்கி வைத்துக்கொண்டான் திருமொழி.
ஒன்றும் சொல்லமுடியவில்லை. இருக்கையில் சாய்ந்து மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டவள் கூந்தலை வலதுபக்கம் எடுத்துவிட்டு ஜன்னலின் புறம் திரும்பிக்கொண்டாள்.
பாடல்கள் ஒவ்வொன்றும் ஒலிக்க ஆரம்பிக்க இரண்டு மூன்று பாடலுக்கு பின் திருமொழியும் சேர்ந்தே அதற்கு சன்னமான புன்னகையுடன் ஹம்மிங் கொடுக்க ‘ஹைய்யோ’ என வெட்கத்தில் கைகளை இன்னுமே இறுக்கமாய் கட்டிக்கொண்டாள் நிதர்ஷனா.
“நைஸ் கலெக்ஷன்…” என்றுவேறு அவன் விஷமமாய் சொல்ல திரும்பினாள் இல்லை. சில நிமிடங்கள் சென்று,
“நிதர்ஷனா…” என்றவன் காரின் வேகத்தை குறைத்துவிட்டு கைகள் அவளின் முகத்தை மறைத்திருந்த கூந்தலை எடுத்து இடதுபக்கம் படரவிட்டு,
“இப்பத்தான் முகம் தெரியுது. பார்க்க முடியுது…” என்று சொல்ல சிவந்த முகத்தை மறைக்க முயன்று இன்னும் திரும்பிக்கொண்டாள் அவள்.
பாடல்களில் மனங்களும் ஒன்றிலொன்று சிக்கிக்கொள்ள மீள விரும்பா அந்த சுழலில் சுகமாய் சிறகடித்தனர் திருமொழியும், நிதர்ஷனாவும்.