“என்கிட்டயா? எப்படி?…” என தெரியாததை போல பார்த்தான்.
“இப்ப தான். கொஞ்சம் முன்னாடி. நீங்க இந்த ஷர்ட்டை இப்படி பண்ணும் போது…” என அவனை போலவே செய்கையில் காண்பிக்க மீசைக்கடியில் துடித்த இளநகையை அடக்கியபடி திருமொழியின் விழிகள் அவள் கை சென்ற திக்கில் விழுந்து தவழ்ந்தது.
“அப்போ தான்…” என்றாள் அவனின் பார்வையில் கையை எடுத்துக்கொண்டு.
“என்னன்னு கூப்பிட்ட?…” திருமொழி அவள் முகம் பார்த்து கேட்க நிதர்ஷனா விழித்தாள்.
“எப்படி கூப்பிடனும்ன்னு சொல்லுங்க. கூப்பிடறேன்…” என்றும் கூற இப்போது இதழ் மலர்ந்து ஒரு புன்னகை திருமொழி முகத்தில்.
“நீயே யோசி. எல்லாம் நான் சொல்லமுடியாது. அப்படியே யோசிச்சாலும் இப்ப அவசரப்பட்டு கூப்பிட்டுட்ட வேண்டாம். மிச்ச எக்ஸாமும் முடியட்டும். காட் இட்…” என்று சொல்லியவன்,
“சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட?…” என்று கேட்க, தான் கேட்க வந்ததே மறந்திருந்தது நிதர்ஷனாவிற்கு.
“ஓகே ஞாபகம் வந்தா கால் பண்ணு. நான் கிளம்பறேன்…” என சொல்லி செல்ல அவன் பின்னோடே சென்றாள் நிதர்ஷனா.
திருமொழி சாப்பிட அமர்ந்தும் உடன் இருந்தவள் சாப்பிடும் போது எதுவும் பேசமாட்டானே என்று அதற்குள் என்ன சொல்ல வந்தோம் என யோசிக்க ஆரம்பித்தாள்.
முறை சொல்லி கூப்பிடுவதை பற்றி சொல்லியதில் மற்றவை பின்னுக்கு செல்ல சட்டென ஞாபகம் வரவில்லை.
திருமொழி கிளம்பும் வரை அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். கையை கழுவிவிட்டு வந்தவன்,
“இன்னும் ஞாபகம் வரலையா?…” என கேட்க,
“ம்ஹூம்…” என தலையசைக்க சுற்றிலும் பார்த்துவிட்டு அவளை நெருங்கியவன் அவளோடு தன் கன்னம் உரச நின்றதும் அந்த நெருக்கத்தில் நிதர்ஷனா தன் பாதவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து சட்டென ஊன்றி நின்றாள்.
“ரொம்ப யோசிக்காத, அடுத்தா எக்ஸாமாவது நல்லா எழுது…” என சொல்லி இன்னும் அழுத்தமாய் அவள் கன்னத்தில் உரசி நிமிர்ந்தான்.
“பை….” என சொல்லி செல்ல சிலையாய் நின்றவளுக்கு அவனின் கார் சத்தத்தில் தான் உணர்வே வந்தது.
பரீட்சையை பற்றி பேசியதும் தான் சரியாக எழுதாததும் அது ஏன் என்றும் ஞாபகம் வர தான் கேட்க நினைத்ததும் ஞாபகம் வந்தது.
“ப்ச், சொதப்பிட்டியே நிது…” என தலையில் அடித்துக்கொண்டவள் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் மூளைக்குள் வண்டு குடையும் கதை தான்.
மாடிக்கு வந்தவள் சிறிது நேரம் படித்துவிட்டு கீழே வர இன்னும் சங்கவை வந்து சாப்பிட்டதை போல தெரியவில்லை.
பணியாளிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு அவரை அழைக்க சென்றவள் ஒருசாய்த்து திறந்திருந்த கதவை தட்டும் முன் அவரின் பேச்சுக்குரல் தடைசெய்தது.
நிச்சயம் அவர் கோமகளிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறார் என அவரின் பேச்சிலேயே புரிந்துபோனது.
“கொஞ்ச பொண்ணா பார்த்தேன் அவனுக்கு. வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லி கடைசில பாப்பாவை கேளுங்கன்னு நின்னான். அவன் பாப்பா மேல விருப்பப்பட்டததை தெரிஞ்சு உடனே சந்தோஷமா கல்யாணம் பண்ணி வச்சா இவன் என்னடான்னா? என்னவோ போ. சொல்லி பார்த்தாச்சு…”
“இப்ப அவ பரீட்சை முடியனும்ன்னு சொல்லுவான். அடுத்து அட்மிஷன் டைம்ன்னு சொல்லுவான். அதுவும் முடிஞ்சா இப்பதான் காலேஜ் திறந்திருக்குன்னு சொல்லுவான். இப்படியே சொல்லவேண்டியது தான். காதலிச்சு கல்யாணம் பண்ணினா போதுமா? அந்த பொண்ணை சந்தோஷமா வச்சுக்க வேண்டாமா?..”
இப்படி தன் போக்கில் மருமகள் வந்து நின்றதையும் கவனியாமல் சங்கவை தன் தோழியிடம் புலம்பிக்கொண்டிருக்க கேட்ட விஷயத்தில் நிதர்ஷனாவின் உலகமே சுழன்றது.
‘சேர்மன் லவ் பண்ணாரா? அதுவும் அவர் தான் என்னை பொண்ணு கேட்க சொன்னதா?’ என்ற அதிர்வின் எல்லைக்கு சென்றவள் சத்தமின்றி தன் அறைக்கு வந்துவிட்டாள்.
உணவாவது ஒன்றாவது என்று பசி மறந்து வெகுநேரம் அவள் அப்படியே இருக்க உணர்வுகள் ஒவ்வொன்றும் அவன் பெயர் சொல்ல முகத்தில் தன்னைப்போல அழகிய புன்னகை.
‘நிஜமாவே நான் கேட்டது உண்மையா? கனவு ஒன்னுமில்லையே?’ என மீண்டும் மீண்டும் தன்னை அத்தனைமுறை கிள்ளி பார்த்துக்கொண்டாள்.
திருமொழி தன்னிடம் பேசியவை, அவனின் பார்வைகள் என ஒவ்வொன்றாய் தேடி தேடி சிந்திக்க திருமணத்திற்கு முன் எங்கே அவனை அவள் கவனித்தாள்?
அதற்கு பின்பும் கவனமெல்லாம் இந்த வாழ்க்கை எப்படி செல்லுமோ என்றும் அதற்கு பொருந்தி போக வேண்டுமே என்பதில் இருக்க தன்னை போல வீட்டினருக்காக திருமணத்திற்கு அவன் சம்மதிக்கவில்லை என புரிந்தது.
அவனுக்காக தான் குடும்பத்தினர் சரி என்றிருக்கின்றனர் என்ற நினைவே அத்தனை சந்தோஷத்தை தந்தது.
கிடைத்த வாழ்க்கையை பிடித்தமானதாக அமைத்துக்கொள்வது ஒருவகை என்றால் அந்த வாழ்க்கை பிடித்தத்தினால் அமைந்தது எனும் பொழுது அந்த கூடுதல் மகிழ்ச்சியை ருசித்தது மனது.
போனை கையிலெடுத்தவள் திருமொழிக்கு அழைப்பதா வேண்டாமா என யோசிக்க விரல்கள் அவனின் எண்ணை அழுத்திவிட்டது.
“ஹ்ம்ம், சொல்லு தர்ஷி…” என்றான் இலகுவாய்.
முதன்முதலில் போனில் அவளாக அழைக்க அவனுக்கு அது ஸ்பெஷல் இல்லையா? ஆனால் நிதர்ஷனா அதை ஸ்பெஷலாக உணர்ந்தாள்.
“ஹோய் கால் பண்ணிட்டு என்ன சைலன்ட்? என்னன்னு சொல்லும்மா…” என்றவனின் சத்தத்தில்,
“இல்ல மறந்து போய் கால் பண்ணிட்டேன்…” என்று உளறி வைக்க,
“ஞாபகம் வந்தா தான் கால் பண்ண சொன்னேன். தெளிவா தான இருக்க?…” என்றவனின் கேலியில்,
“இல்லை, மாத்தி கால் பண்ணிட்டேன். டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?…” என்று கேட்க,
“திருமொழி திருமதிக்கு சரளமா பேச வருதே? என்னவாம்?…” என்றான் திருமொழி இன்னும் சலுகையாக புன்னகையுடன்.
“ஓஹ்…” என்றவள் அமைதியில்,
“சரி நான் ஈவ்னிங் வந்து பேசறேன்…” என்றவன் அழைப்பை துண்டிக்கவும் நிதர்ஷனா இன்னும் மோனநிலையிலேயே இருக்க எங்கே படிக்க?
வெகுநேரம் யோசித்து தன் இரு அண்ணன்களுக்கும் அழைத்தாள் கான்பரென்ஸ் காலில்.
“என்ன எலி கால் பண்ணியிருக்கு?…” என எடுத்ததும் பிரகாஷ் கேலி செய்ய,
“அவ சொல்லட்டும்டா. சும்மாருக்க மாட்டியா?…” என கேட்ட ஸ்ரீதர்.
“ப்ச், அவங்க நம்ம வீட்டுல நான் பேசினதை கேட்டது ஒரு சூழ்நிலையால தான். யாருக்கு வேணா நடக்கும். இன்னைக்கு நானும் அப்படி ஒரு சூழ்நிலையில என் அத்தை பேசினதை அவங்களுக்கு தெரியாம கேட்டுட்டேன்…”