“என்ன திரு? அம்மா என்னவோ சொல்றாங்க? சுகேசவன் பொண்ணு பத்தி?…” என்றார்.
“ஹ்ம்ம், நான் பார்த்துக்கறேன். அவரை இன்னைக்கு காலேஜ்க்கு வர சொல்லியிருக்கேன்…”
“திரு, என்ன எதுவும் பெரிய பிரச்சனையா?…” என பதட்டமாய் மகனை பார்க்க,
“ப்பா, அதெல்லாம் சமாளிக்க கூடியது தான். கவனிக்காம விட்டதால இவ்வளோ வளர்ந்திருச்சு. நான் வந்து சொல்லட்டுமா?…” என்றான் அவரிடம் திருமொழி.
“நான் நம்ம மெடிக்கல் காலேஜ்ல தான் இருப்பேன். எதுவும்ன்னா உடனே கால் பண்ணு…” என்று அனுப்பி வைத்தார் இளங்கோவன்.
அன்றாட வேலையில் கவனம் செலுத்தினாலும் சுகேசவனின் வருகையை எதிர்பார்த்தபடி இருந்தான் திருமொழி.
பதினோருமணி போல வந்துவிட்டார் சுகேசவன் சுடர் குழுமத்தின் அறக்கட்டளைக்கு.
“வாங்க…” என அவரை அழைத்தவன் அந்தநேரம் வேறு யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என சொல்லி வைத்தான் அலுவலக பணியாளர்களுக்கு.
சுகேசவனின் முகத்தில் பெரிதாய் அதிருப்தி. அதுவும் திருமொழி தன்னிடம் பேசியவிதத்தில்.
“என்ன விஷயம்னு சொல்லாம வாங்கன்னு சொன்னா என்ன தம்பி அர்த்தம்? எதுவும் பிரச்சனையா?…” என கேட்டிருந்தார் அவனிடம்.
“பிரச்சனைன்னே வச்சுக்கோங்க. வந்தா தெரிஞ்சிட்ட போகுது…” என அமர்த்தலாக அவன் சொல்ல,
“என் பொண்ணை வச்சா?…” என யோசனையுடன் அவர் கேட்க,
“ஆமா…” என்றான் அலட்டிக்கொள்ளாமல் திருமொழி.
“நான் உங்ககிட்ட தனியா பேசனும்ன்னு நினைக்கறேன். நீங்க இதை சொல்லி யாரையும் கூட கூட்டிட்டு வரதா இருந்தாலும் எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை. வந்து தெரிஞ்சுக்கோங்க…” என சொல்லிவிட்டான் அவன்.
அத்தனை கோபம் அதில் திருமொழி மேல். திருப்பூரில் தன் மதிப்பென்ன? இவன் என்னவென்றால் இப்படி வா என்கிறானே என கோபம் இருந்தாலும், இப்படி அழைக்கும் அளவிற்கு என்னவாக இருக்குமென யோசிக்காமலும் இல்லை.
அதனைக்கொண்டே வீட்டில் மனைவியிடமும் தெரிவிக்கவில்லை. மகளை அழைத்தும் இதுவிஷயமாக கேட்டுக்கொள்ளவில்லை.
ஒருவேளை மகள் மேல் தவறிருந்தால் யாரையும் அழைத்து செல்லவும் மனதில்லை.
மிருதுளாவிற்கு அழைத்து சாதாரணம் போல பேச அவள் அதற்கு மேல் எதுவுமே நடவாததை போல எப்போதும் பேசுவதை போல பேசி வைத்துவிட்டாள்.
“என்ன விஷயம் தம்பி? உடனே பார்க்கனும்ன்னு சொல்லியிருந்தீங்க…” என்றவர்,
“என் பொண்ண வச்சுன்னு சொல்லவும் தான் நான் இங்க வந்தேன். இல்லைன்னா வெளிலயே பேச வரவழைச்சிருப்பேன்…” என திமிராய் பேச திருமொழி முகத்தில் எவ்வித உணர்வுமில்லை.
“மிஸ்.மிருதுளாவை வர சொல்லுங்க. அப்படியே நீங்களும் வாங்க…” என்று சொல்லி வைத்தவன்,
“என்ன சாப்பிடறீங்க ஸார்?…” என கேட்டான் திருமொழி.
“தம்பிக்கு நான் என்ன உறவுமுறைன்னு ஞாபகம் இல்லையோ?…” என்றார் சுகேசவன் கொஞ்சம் நக்கலாகவே.
“ஞாபகமிருக்கு…” என்றவன் மீண்டும் தொலைபேசி எடுத்து,
“காபியா? டீயா?…” என கேட்க ‘இவன் என்னடா செய்கிறான்?’ என திகைத்து பார்த்தார் சுகேசவன்.
“காபி…” என அவர் சொல்லியும் விட அவருக்கு மட்டும் காபி சொல்ல மிருதுளா வரும்வரை அவரிடம் திருமொழி பெரிதாய் பேச்சுக்களை வைத்துக்கொள்ளவில்லை.
சுகேசவனுக்கு தான் அத்தனை எரிச்சலாகி போனது. எதற்கு தன்னை வர சொல்லவேண்டும் என்று.
வாய் திறந்து பேசும்முன் மிருதுளா அங்கே வந்து சேர கூடவே முதல்வர் ரத்னாவும்.
மிருதுளாவிற்கு தன் தகப்பனை அங்கு கண்டதும் உடலெல்லாம் ஆட்டம் கண்டுவிட்டது.
“உள்ள வாங்க…” என அழைத்தவன்,
“மேம், மிஸ். மிருதுளாவோட சர்ட்டிபிகேட் எல்லாம் எடுத்து வைங்க. அப்படியே அவங்க ரிலீவ் லெட்டரை பிரிண்ட் பண்ணி கொண்டுவர சொல்லுங்க…” என்றான் திருமொழி.
அனைவருமே ஏன் எதற்கு என ஸ்தம்பித்து பார்க்க மிருதுளா முகம் அச்சத்தில் வியர்த்தது.
“ரீஸன் பர்சனல்ன்னு போட்டுக்கோங்க. க்விக். இன்னும் அரைமணி நேரத்துல எல்லாம் ரெடியா இருக்கனும்…” என்றான் திருமொழி அமைதியாக.
“ஓகே ஸார்…” என ரத்னா தலையசைத்து வெளியேற கதவு சாற்றிக்கொண்டதும்,
“நான் ரிலீவ் ஆகறேன்னு சொல்லவே இல்லையே?…” என்ற மிருதுளா,
“நீங்க சொன்னீங்களா ப்பா?…” என பயத்துடன் கேட்டாள் அவள்.
“என்ன தம்பி?…” என திரும்பி திருமொழியை சுகேசவன் பார்க்க,
“நேத்து என் வொய்ப் ஏன் உங்க பொண்ணை அடிச்சாங்கன்னு கேளுங்க…” என்றான் அவன் மிருதுளாவை திரும்பியும் பாராமல் சுகேசவனிடம் மட்டும்.
“என்ன? என் பொண்ணை அடிச்சாளா?…” என அவர் வெகுண்டு எழுந்துவிட்டார்.
“உட்காருங்க ஸார்…” என்றவன்,
“அவங்க என் வொய்ப். மரியாதையா பேசனும். வார்த்தையை பார்த்து விடுங்க…” என்றவன்,
“உங்க முன்னாடி தானே சொல்றேன். உங்க பொண்ணையே கேளுங்க. அவங்க என்ன பேசினாங்கன்னு. அவங்க பேசினதுக்கு தான் என் வொய்ப் அடிச்சிருக்காங்க…” என்றவன் பேப்பர் வெய்ட்டை உருட்டியபடி சுகேசவனை பார்த்தான்.
“என்ன நடக்குது? என்ன மிது?…” என்றார் மகளிடம்.
இப்படி நிதர்ஷனா திருமொழியிடம் சொல்லி, அது தன் தந்தை வரை செல்லும் என நினைக்கவே இல்லை மிருதுளா.
அதிகபட்சம் வீட்டிற்கு தெரிந்தாலும் ஸ்வாதி வழியாக சுசீலா மூலம் தன் தாய்க்கு வரும். இல்லையா திருமொழி கூப்பிட்டு விசாரிப்பான் என்றொரு குருட்டு நம்பிக்கையில் இருக்க நடப்பதோ வேறு.
“உன்னைத்தான் ம்மா கேட்கறேன்…” என்ற சுகேசவன்,
“என்ன தம்பி, என்ன பிரச்சனை? அதுவும் என் பொண்ணு தப்பு பண்ணினா என்கிட்ட சொல்லனும். உங்க வொய்ப் அடிக்கிறது எல்லாம் நல்லா இல்லை….” என்று வேறு இந்த பக்கம் அவர் பேச,
“என்ன நடந்ததுன்னு நான் என் மனைவி மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா உங்ககிட்ட நான் எப்படி சொல்ல? உன் பொண்ணையே கேளுங்க…” என்றான் அப்போதும் அவன்.
மிருதுளா முகத்தில் அத்தனை அவமான உணர்வு. தான் பேசியதை தகப்பனிடம் சொல்ல முடியுமா? எச்சிலை கூட்டி விழுங்கியவள் கண்ணீருடன் தலையசைக்க,
“என்னன்னு சொல்லி தொலையேன்…” என்றவர் கோபம் இன்னுமே அதிகமானது.
இங்கே மகள் பெரிதாய் என்னவோ செய்திருக்கிறாள் என தெரிந்துவிட்டது இதிலேயே.
“இல்லப்பா…” என அவள் பின்னடைய,
“சொல்லி தொலையேன். என் மானத்தை வாங்கன்னே எதுவும் செஞ்சியா நீ?…” என்று கேட்டவர் பளார் என ஒரு அறைவிட ஏற்கனவே முதல்நாள் நிதர்ஷனாவிடம் வாங்கியது வேறு வலித்திருந்தது.
அவளின் கைத்தடம் தெரியாமல் இருக்க அழகு சாதனங்கள் கொண்டு ஓரளவு மறைத்துவிட்டாள்.
“இப்ப நீ சொல்லலை….” என மீண்டும் அறைய போக,
“சொல்றேன் சொல்றேன் ப்பா…” என்று அலறியவள் எல்லாம் எல்லாமே சொல்லிவிட்டால் அவர்களின் முகம் பார்க்காமல் தலையை குனிந்துகொண்டு உடல் நடுங்க.
திருமொழி முகத்தில் அத்தனை அசூயை. தன் திருமணத்தின் முன் அவளின் விருப்பம் என்பது வேறு.