உடனே தன் போனை கீழே வைத்துவிட்டு நேராக அமர்ந்து அவள் விழிக்க கண்டவர்,
“உன் வீட்டுக்காரர்கிட்ட தான பேசற? ஏன்டி இன்னும் சின்ன புள்ளையா நீ?…” என மகளின் தலையில் தட்டிவிட்டு,
“என்னன்னு கேளு…” என போனை நீட்டினார் சரஸ்வதி.
“குட்டிச்சாத்தான் என்ன பன்ற நீ?…” என்றான் பிரகாஷ் அலைபேசியில்.
“நீ இன்னும் இங்க வராம என்ன பன்றதா பெரிய குட்டிச்சாத்தான்…” என அண்ணனுடன் மல்லுக்கு நிற்க திருமொழி அடுத்தடுத்து செய்தி அனுப்பும் வெளிச்சம் நிதர்ஷனாவின் மொபைலில்.
தாயும் அருகில் இருக்க, அண்ணன் போனில் பேச என அதனை எடுக்கமுடியாமல் அவள் நெளிந்துகொண்டிருந்தாள்.
“சொல்லுங்கண்ணா…” என்றுவேறு நல்லபிள்ளையாய் அண்ணனுக்கு மரியாதை தர,
“எதே சொல்லுங்க அண்ணனா?…” என பிரகாஷ் மயங்கி விழாத குறை தான்.
சரஸ்வதிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. மகனின் அதிர்வான அலறல் சத்தம் இங்கே கேட்டதே அவருக்கும்.
“போனை குடு. நான் அவன்கிட்ட சொல்லிக்கறேன். நீ பேசு…” என்று பிடுங்காத குறையாக மகளிடமிருந்து போனை வாங்கிக்கொண்டார் சரஸ்வதி.
“இல்ல பேசறேனே?…” என நிதர்ஷனா திணறலுடன் சொல்லிக்கொண்டே தன் போனை கையில் எடுக்க திருமொழி அழைத்துவிட்டான்.
“நீ மாப்பிள்ளைக்கிட்ட பேசு. நான் போறேன்…” சரஸ்வதி கிளம்ப போக,
“ம்மீ தூங்கற நேரமாச்சே?…” என அவள் நிறுத்த,
“அதெல்லாம் நான் தூங்கிப்பேன். நீ பேசு…” என கதவை சாற்றிவிட்டு புன்னகையுடன் செல்ல,
“அச்சோ…” என்றாள் நிதர்ஷனா போனை தலையில் வைத்தபடி.
“பிக்கப் பண்ணு தர்ஷி…” என அவன் மீண்டும் வரிசையாக அனுப்ப,
“என்னாச்சு உங்களுக்கு?…” என பதிலுக்கு அனுப்பி வைத்தாள் நிதர்ஷனா.
நள்ளிரவு வரை நேரம் செல்ல திருமொழிக்கு உறக்கம் கண்களை சுழற்றியது.
“முடியலைடி. தூங்கறேன்…” என்று குரல்வழி செய்தியை அனுப்பிவிட்டு அவன் சென்ற பின்னர் அதுவரை தாங்கள் பேசிய தொகுப்புகளை மீண்டும் மீண்டும் படித்து பார்த்தவள் முகத்தில் வெட்க துணுக்குகள்.
அன்று காலை தான் தாய் வீடு வந்து சேர்ந்திருந்தாள் நிதர்ஷனா. அதுவும் மிருதுளாவை கல்லூரி வேலையிலிருந்து அனுப்பிய இரண்டாம் நாள்.
கல்லூரியில் நடந்த எதையும் திருமொழி வீட்டில் சொல்லவில்லை. இளங்கோவனிடம் மட்டும் சொல்லி வைத்தவன் சங்கவையிடம், நிதர்ஷனாவிடம் சொல்லவில்லை.
அந்த பிரச்சனையை முடித்துவிட்டு அன்று வீடு வந்து சேர்ந்தவனுக்கு அதைவிட மற்ற வேலைகள் இழுத்துக்கொள்ள இதை சுத்தமாய் ஒதுக்கி இருந்தான்.
மிருதுளா வேலையில் இருந்து சென்ற மறுநாள் ஸ்வாதி தன் பிள்ளையுடன் ஈரோடு வந்திருக்க நிதர்ஷனா மொட்டை மாடியில் இருந்தாள் உடைகளை உலர்த்துவதற்கு.
எப்போதும் போல மிருதுளா தங்கியிருந்த வீட்டை பார்த்தவளுக்கு சுள்ளென்று பொங்கினாலும் இன்னொருமுறை பேசட்டும், இன்னொரு கன்னத்தையும் பழுக்க வைத்துவிட வேண்டும் என்ற பார்வை பார்த்தபடி கை காயத்தில் அழுத்தாமல் உடைகளை உலர வைத்தாள்.
எதேர்ச்சையாக அந்த பக்கம் பார்த்தவள் கவனத்தில் தன்னையே வெறித்தபடி நின்ற மிருதுளாவின் தாயை பார்த்தவளுக்கு இவருக்கு என்னவாம் என்று தோன்றியது.
‘இவங்க ஏன் இவ்வளோ முறைக்காங்க?’ என நினைத்தவள் மிருதுளா தான் அடித்ததை பற்றி எதுவும் சொல்லியிருக்க கூடுமோ என யோசித்தாள்.
வேலையை முடித்து கீழே வர ஸ்வாதி சங்கவையுடன் பேசிக்கொண்டிருக்க அவளை பார்த்ததும்,
“வாங்க ண்ணி. எப்போ வந்தீங்க?…” என்றாள் நிதர்ஷனா.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்….” என்ற ஸ்வாதி,
“நீங்க போங்கம்மா. நான் பேசிக்கறேன்…” என்றாள் அவரிடம்.
பேரனுடன் சங்கவை எழுந்து சென்றதும் நிதர்ஷனாவின் கையை பிடித்து அமர வைக்க,
“ஸ்ஸ் அண்ணி…” என தன் கையை உருவிக்கொண்டாள்.
“என்னாச்சு கைக்கு?…” ஸ்வாதி மீண்டும் கையை பிடித்து பார்க்க காயம் கொஞ்சம் ஆறியிருந்தாலும் இன்னும் அழுத்தி பிடிக்கையில் வலி இருந்தது.
நிதர்ஷனா எதுவும் சொல்லாமல் கையை மீண்டும் உருவிக்கொள்ள பார்க்க,
“எனக்கு எல்லாம் தெரியும். தெரிஞ்சு தான் வந்திருக்கேன்…” என்றாள் ஸ்வாதி.
“என்ன என்ன தெரியும்?…” என்றவளுக்கு பதட்டமாகிவிட்டது.
“இங்க பாருங்க அண்ணி, அவங்க தப்பா பேசினாங்க. ரொம்ப மோசமா பேசினாங்க. தான் அடிச்சேன். நீங்க என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை. திரும்ப பேசினா திரும்பவும் அடிப்பேன். இது விஷயமா என்கிட்ட வேற பேச வேண்டாம்…” என வேகமாய் ஒப்புவிப்பதை போல நிதர்ஷனா சொல்லிவைக்க ஸ்வாதி முகத்தில் அப்படி ஒரு புன்னகை.
ஸ்வாதியின் வரவும், தெரிந்து வந்தேன் என்ற பேச்சும் எங்கே அவள் மிருதுளாவிற்கு பரிந்து தான் அடித்ததை பற்றி பேசுவாளோ என முந்திக்கொண்டு நிதர்ஷனாவே சொல்லிவிட,
“ஓஹ் அவ்வளோ தைரியமா போச்சா? எங்க எப்படி அடிச்சீங்க?…” என்று ஸ்வாதி சிரிப்புடன் கேட்கவும்,
“அப்போ நீங்க சண்டை போட வரலையா?…” என்றாள் நிதர்ஷனா அப்பாவியாய்.
“சண்டை தான் போட வந்தேன். அவ்வளோ பேசினவளுக்கு கூட நாலு அறை விடாம அழுதீங்களாம். அம்மா சொன்னாங்க…” என்று ஸ்வாதி கேட்கவும்,
“ஏன் சொல்லமாட்ட? என் இன்னும் நல்லா பொண்ணை அடிக்கலைன்னு உன் அண்ணன் பொண்டாட்டிட்ட கேட்பியோ? உன்னை என்னமோன்னு நினைச்சேன் ஸ்வாதி. என்ன ஒரு சின்ன புத்தி உனக்கு?…” என்றார் சாவித்திரி ஆக்ரோஷத்துடன்.
அவரை எதிர்பார்க்காத ஸ்வாதியும், நிதர்ஷனாவும் திடுக்கிட சங்கவையும் பேரனை செல்வாவிடம் விட்டுவிட்டு வந்துவிட்டார்.
“உள்ள வாங்க…” என்று சங்கவை மரியாதை நிமித்தம் அவரை அழைக்க,
“உங்க பொண்ணு பேசினதை கேட்டீங்களா நீங்க? உங்க மருமக என் பொண்ணை அடிப்பாளாம். இன்னும் நல்லா அடின்னு உங்க பொண்ணு சொல்லிக்குடுக்கா. நல்ல குடும்பம்…” என்று சாவித்திரி எகத்தாளமாய் பேச,
“அதை நீங்க சொல்லாதீங்க. எங்க குடும்பத்தை நீங்க ஏன் பேசறீங்க? முதல்ல உங்க பொண்ணை சரி பண்ண பாருங்க…” என்று நிதர்ஷனா சொல்ல,
“பாப்பா என்ன பேசற? இரு…” என்றார் சங்கவை மருமகளின் கையை பிடித்து.
“இங்க பாரும்மா என் பொண்ணு பேசினது தப்பு தான். அதுக்கு நீ அடிக்கவும் செஞ்சுட்ட. அதோட விட்டியா? உன் புருஷன்கிட்ட சொல்லி என் வீட்டுக்காரர் வரை விஷயத்தை எதுக்கு பெருசு பண்ணின நீ?…” என்று நிதர்ஷனாவை தீயாய் அவர் முறைக்க,
“அவ அவ புருஷன்கிட்ட சொல்லாம வேற யார்க்கிட்ட சொல்லுவாளாம்?…” ஸ்வாதி அதற்கு மேல் பார்த்தாள் சாவித்ரியை.
“ரெண்டுபேரும் அமைதியா இருங்க. இப்ப எதுக்கு இந்த பிரச்சனை?…” என்ற சங்கவை,
“நீங்க என்ன விஷயமா வந்தீங்கம்மா?…” என்றார் சாவித்ரியிடம்.
“இங்க பாருங்க, நான் என் பொண்ணு பேசினது சரின்னு சொல்ல வரலை. அதை சுசீலா மூலமா என் காதுக்கு கொண்டு வந்திருந்தா அவ கையில, கால்ல விழுந்தாவது ஏதாவது சரி பண்ண பார்த்திருப்பேன்…” என மூக்கை உறிஞ்சியவர்,
“உங்க மருமக என்னன்னா உங்க மகன்கிட்ட சொல்லி அவர் என் புருஷனை காலேஜ்க்கு வர சொல்லி என் பொண்ணை வேலையை எழுதி தர வச்சு அடிச்சு இழுத்துட்டு போக வச்சிருக்கார். என்ன மனுஷங்க நீங்க? இப்ப என் புருஷன் எங்க மிதுவை வெளிநாட்டுக்கு அவ அக்கா வீட்டுக்கு அனுப்ப போறேன்னு நிக்கிறார்….” என அழ ஸ்வாதிக்கு அப்படி ஒரு கோபம்.
“நல்ல கதையா இருக்கே உங்க பேச்சு. உங்க பொண்ணு என்ன நினைக்கிறான்னு உங்களுக்கு நல்லா தெரியும் தானே? அப்பறம் என் அண்ணன் கல்யாணம் முடிஞ்ச பிறகும் எப்படி இவ்வளோ நாள் உங்க பொண்ணை நீங்க இங்க விட்டு வச்சீங்க?…” என்றவள்,
“இவ்வளோ நாள் உங்க பேச்சை கேட்காதவ, இப்ப மட்டும் உங்க பேச்சை கேட்டுடுவாளா? இதுல உங்ககிட்ட கொண்டுவரனுமாம். எவ்வளோ அசிங்கமா பேசியிருக்கா? நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க. உங்க பொண்ணுக்கு உங்க புருஷன் ட்ரீட்மென்ட் தான் சரி…” என காய்ந்துவிட்டாள் ஸ்வாதி.
“எப்படி பேசறாங்க பார்த்தீங்களா? என் பொண்ணு மேல தப்பில்லைன்னு சொல்லலை. ஆனா அவ மனசு பொக்குன்னு போயிரும்ன்னு தான் அவ வழில போய் சரி பண்ண பார்த்தேன். கொஞ்சநாள்ல அவளே திரும்பி வந்துருவான்னு தான் விட்டுருந்தேன். இப்ப என் பொண்ணு என்னை விட்டு தூரதேசம் போறா…” என அழுது புலம்பினார்.
“இங்க பாருங்கம்மா, வேலைக்கு போன இடத்துல நாம போன காரியத்தை தான் பார்க்கனும். உங்க பொண்ணு விரும்பினது தப்பு இல்லை. ஆனா எங்களுக்கும், என் பையனுக்கும் அந்த அபிப்ராயமே இல்லாதப்போ உங்க பொண்ணு மனசை மாத்திக்க தானே வேணும்? இதென்ன பிடிவாதமும், கெட்டகுணமும்?…” என்றார் சங்கவை.
“என் பொண்ணுக்கு என்ன தலையெழுத்தா வேலை செஞ்சு சம்பாதிக்கனும்ன்னு? அவ வேலைக்கு வர காரணமே உங்க பிள்ளை தான். அவருக்காக தான் அவ அங்க வந்தா? சம்பளம் குடுக்க வேண்டிய முதலாளி அவ கால் கடுக்க நின்னு தொண்டைத்தண்ணி வத்த கத்தனும்ன்னு விதியா என்ன?…” என இன்னும் புரியாமல் பேசினார் சாவித்திரி.
“ம்மா இவங்க எல்லாம் புரிஞ்சுக்கறவங்க கிடையாது. நீங்க எதுவும் பேச வேண்டாம்…” என்ற ஸ்வாதி,
“இங்க பாருங்கம்மா. நீங்க முதல்ல உங்க பொண்ணை திருத்த பாருங்க. நான் சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்றேன், மனசளவுல அவ பாதிக்கப்பட்டிருக்கா. அதுக்கு முழு காரணம் நீங்க மட்டும் தான். ஏமாற்றத்தை தாங்கிக்க புள்ளைங்களுக்கு சொல்லி வளருங்க. இல்லைன்னா அடுத்தவங்க உங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டியதா போகும்…” என்றாள் சூடாக.
“ஸ்வாதி…” என மகளின் இந்த பேச்சில் சங்கவை கண்டிக்க,