“வேற என்ன? எதுவுமில்லையே? நீங்க மேல சொல்லுங்க….” என நிதர்ஷனா கண்சிமிட்டி புன்னகைக்க ‘கேடி அண்ணி’ என நினைத்துக்கொண்டாள்.
“ஆனா அப்போ சத்தம் போட்டவங்க திரும்ப உங்களையே கேட்க சொல்லி சொல்லுவாங்கன்னு யாருமே எதிர்பார்க்கலை. அவ்வளோ ஷாக். அண்ணா மனசுல இப்படி ஒரு விருப்பம் இருக்கறது எங்களுக்கு யாருக்குமே தெரியலை. அதான் சொல்றேன், ஆளை பார்த்து எடை போட கூடாதுன்னு….” என ஸ்வாதி சொல்ல,
“ஹாங், அப்பறம். நீங்க கல்யாண கதையை சொல்லுங்க…” என்றாள் நிதர்ஷனா ஆர்வத்துடன்.
“அதுசரி, அதெல்லாம் எங்களுக்கு. உங்களுக்கு இல்லை…” என்ற ஸ்வாதி,
“வேறென்ன அதான் உங்களை பொண்ணு பார்த்து பெங்களூர்ல வச்சு பேசி முடிச்சது. அப்பவும் ஒரே பிரச்சனை ஏன் காலேஜ் முடியறதுக்கு முன்ன பேசி முடிச்சீங்கன்னு. படிச்சிட்டிருக்கும் போது எப்படி கல்யாணம் பன்றதுன்னு. இதுல அம்மா தான் கோமகள் ஆன்ட்டியோட சேர்ந்து சீக்கிரம் பேசி முடிச்சது…” என்றாள்.
நிதர்ஷனாவுக்கு இன்னும் தன் திருமணத்திற்குள் எத்தனை ஒளிந்திருக்கிறது என தோன்றியது.
தான் தான் எதுவுமே தெரியாமல் தாலியை கட்டிக்கொண்டு வாழ வந்துவிட்டோம் என நினைக்க சங்கவையும் வந்துவிட்டார்.
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?…” ஸ்வாதியிடம் கேட்க,
“ரத்னா பெரியம்மா தான் இப்படின்னு சொன்னாங்க. அதான் நான் ஆதித் அப்பாட்ட சொல்லி என்னன்னு சுகேசவன் மாமாகிட்ட பேச சொன்னேன். அவரும் சங்கடப்பட்டு எல்லாம் பேசினார். அம்மாக்கிட்ட கேட்டா அவங்க இங்க பார்த்ததை சொன்னாங்க. சரி, அண்ணனும் எதுவும் சொல்லலையேன்னு கிளம்பி வந்தேன்…” என்றாள்.
அதன் பின்னர் ஆதித்துடன் நேரம் செல்ல மாலை பாலாஜி வந்து ஸ்வாதியை அழைத்து செல்லவும் நிதர்ஷனாவுக்கு ஸ்ரீதரிடமிருந்து போன்.
“வாலு, சடனா ஒரு ப்ளான். எனக்கு அங்க ஒரு வேலை இருக்கு. அதனால ஊருக்கு கிளம்பறோம். நாளைக்கு நீ ப்ரீனா வீட்டுக்கு வரியா நீ?…” என கேட்க,
“என்னடா ண்ணா அதிசயம் எல்லாம் நடக்குது?…” என கிண்டல் பேசினாள் நிதர்ஷனா.
“என்ன செய்ய உன்னை எல்லாம் பர்மிஷன் கேட்டு கூப்பிடவேண்டிய அதிசயம் எப்ப ஆரம்பிச்சதோ அப்ப இருந்து தான்…” என அவன் சிரிக்க இருவருக்குள்ளும் சண்டை.
“குடுங்க போனை…” என வாங்கிய மெர்லின்,
“நாளைக்கு நீ ப்ரீனா சொல்லு நிது. அடுத்த ரெண்டாவது நாள் மாமா, அத்தைக்கு கல்யாண நாள் வருது. இந்த தடவை நாங்களும் அங்க இருப்போம். பிரகாஷையும் நாளை மறுநாள் வர சொல்லிருவோம். இந்த வருஷமாச்சும் செலிபரேட் பண்ணுவோம்….” என்றாள்.
“அப்பாவுக்கு தெரிஞ்சா தொலைஞ்சோம். எனக்கு விவரம் தெரிஞ்சு அவங்க கல்யாண நாளே கொண்டாடினதில்லை…” என சோகமாய் நிதர்ஷனா சொல்ல,
“பிசாசே, எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்தே கொண்டாடலை. என்னமோ நீ பிறக்கறதுக்கு முன்னாடி கொண்டாடின மாதிரி பேசற. அறிவு…” என்று ஸ்ரீதர் இடை புக,
“உன்னை பிச்சிடுவேன். போடா…” என்றாள் நிதர்ஷனா.
“சும்மாவே இருக்கமாட்டீங்களா?…” என கணவனை அதட்டிய மெர்லின்,
“இங்க பார் நிது, அதெல்லாம் நாம மட்டும் இருக்கும் போது மாமா கோவப்பட்டது. இப்ப மருமகன் வேற வந்தாச்சு. மாட்டேன்னு முறுக்கவா முடியும்? இனியாவது கொண்டாடட்டுமே?…” என்றாள்.
“அப்போ ஓகே, நான் அவங்கட்ட, அத்தைகிட்ட சொல்லிட்டு வரேன்…” நிதர்ஷனா உடனே உற்சாகமாகிவிட,
“ஓகே, நீ வரவும் என்னென்ன செய்யலாம்ன்னு ப்ளான் பண்ணுவோம்…” என சொல்லி போனை வைக்கவும் திருமொழி வரும்வரை பிரகாஷுடன் பேச்சுக்கள்.
கணவன் வந்ததுமே மற்றவை எல்லாம் பின்னுக்கு சென்று மிருதுளாவின் தாய் வந்ததும், அவர் சொல்லிய விஷயங்களும் மட்டுமே மூளையை ஆக்கிரமித்தது.
‘என்ன என்கிட்ட எதுவுமே சொல்லலை?’ என்று அவனையே விழிகள் வட்டமிட இரண்டு நாட்களாய் தள்ளியிருந்தவனால் மனைவியின் விழி தீண்டலில் அன்று பற்றிக்கொண்டான்.
‘ரூம்க்கு போனதும் நாமளாச்சும் கேட்போம்’ என நினைத்துக்கொண்டே மாடிக்கு சென்ற நொடி அவனின் பிடிக்குள் நிதர்ஷனா சிக்கிக்கொள்ள,
“ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்…” என அணைப்பிற்குள் துள்ளினாள்.
“ஏன் கை வலிக்குதா? உன் உள்ளங்கையை டச் பண்ணவே இல்லையே தர்ஷி…” என்றவன் குரலே கிசுகிசுப்பாய் காதுக்குள் ரீங்காரமிட முற்றிலும் மறந்து அவன் வசமானாள் நிதர்ஷனா.
விடிந்ததும் வழக்கம் போல திருமொழி கல்லூரிக்கு கிளம்ப ஆரம்பிக்க நிதர்ஷனாவும் கிளம்பி தயாராகி அவன் முன் வந்து நின்றாள்.
“என்னவாம்? நேத்துல இருந்து உன் லுக் என்னையே சுத்திட்டிருக்கு? தர்ஷிக்கு என்கிட்ட எதுவும் கேட்கனுமா?…” என்றான் புன்னகையுடன் திருமொழி.
“நேத்து ஈவ்னிங் ஸ்ரீதர் அண்ணனும், அண்ணியும் கால் பண்ணியிருந்தாங்க…”
“ஓகே…”
“இன்னைக்கு மார்னிங் தான் ஊருக்கு வந்திருக்காங்க. நாளைக்கு பிரகாஷ அண்ணாவும் வந்திருவாங்க…”
“குட். ஸோ?…”
“என்ன ஸோ? நாளைக்கழிச்சு அம்மாப்பாவுக்கு கல்யாண நாள். இதுவரைக்கும் அவங்க கொண்டாடினதே இல்லை…”
“எல்லாம் ஓகே. இப்ப விஷயம் என்ன?…” என்றான் அவள் சுற்றி வளைப்பதை கண்டு.
“அதான் என்னையும் வர முடியுமான்னு கேட்டாங்க. நான் ப்ரீயா இருந்தா கூப்பிட்டாங்க…” என்றாள் எதிர்பார்ப்புடன்.
“நேத்து ஈவ்னிங்கே கால் பண்ணியிருக்காங்க. இப்ப தான் எங்கிட்ட சொல்ற நீ? ஹ்ம்ம்?…” என்றவனின் கேள்வியில் நிதர்ஷனா விழிக்க,
“ஓகே, ஈவ்னிங் வந்து கூட்டிட்டு போறேன்…” என்று வாட்ச் எடுத்து தன் கையில் கட்ட ஆரம்பித்தான் திருமொழி.
“ஈவ்னிங்கா?…” என,
“ஆமா, ஈவ்னிங் தான். நீ நேத்தே சொல்லியிருந்தா நானும் யோசிச்சிருப்பேன். இப்ப முடியாது…” வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க சுர்ரென்று பொங்கிவிட்டது நிதர்ஷனாவிற்கு.
“நீங்களும் தான் எங்கிட்ட எதுவும் சொல்லலை. நான் கோவிக்கவா செஞ்சேன்?…” என பட்டென்று கேட்கவும் தலை வார சீப்பை எடுத்தவன் புருவங்கள் உயர திரும்பி மனைவியை பார்த்தான்.
அவன் பார்த்ததுமே படபடவென்று வந்துவிட்டது. ‘முகத்தை பார்க்காம பேசிடு நிது. எம்புட்டு சேட்டை இந்த சேர்மனுக்கு. விடாத’ என தன்னை தானே தட்டிக்கொண்டவள் அவன் கேட்கும் முன்,
“மிருதுளா வேலையை விட்டு போனதை என்கிட்ட நீங்க சொல்லவே இல்லையே. அதை சொன்னேன்…” என்றதும் இதழ்களுக்குள் புன்னகையை அடக்கியவன்,
“ஏன் சொல்லனும்?…” என்றான் பதிலுக்கு.
“என்ன?…” என வேகமாய் திரும்பியவள் அவன் தலையசைத்து என்னவென கேட்கவும் மீண்டும் முகம் பாராமல் திரும்பிக்கொண்டாள்.
“நீ என்கிட்ட சொன்னியா இப்படி பேசினாங்க, அதான் அடிச்சேன்னு. இல்லையே. ஏன் சொல்லலை?…” என கேட்க,
“ஏன் சொல்லலைன்னா? என்ன சொல்ல? எனக்கு சொல்ல பிடிக்கலை. என்னை விட ஒருத்தவங்க உங்களை பிடிச்சு, உங்களை இன்னும் நினைக்கிறாங்கன்னு நானே வந்து சொல்லுவேனா உங்கக்கிட்ட? அப்படியெல்லாம் சொல்ல முடியாது…” என சொல்லியவள்,
“அவங்க நினைப்பு தப்பாவே இருந்தாலும் அவங்க உங்களை விரும்பி. ப்ச், எனக்கு சொல்ல பிடிக்கலை. அதான் சொல்லலை. அவ்வளோ தான். இப்பவும் அவங்க என்ன பேசினாங்கன்னு சொல்லமாட்டேன். எவ்வளோ தைரியமிருந்தா என்கிட்டவே உங்களை புருஷனா நினைக்கறேன்னு சொல்லுவாங்க. அதை உங்கட்ட சொல்லனுமா?…”
“என்னை எப்படியாவது விரட்டிட்டு உங்களோட சேருவேன்னு சொல்றாங்க. அதை சொல்லனுமா?…” என இப்படி ‘சொல்லமாட்டேன்’ என்று மிருதுளா பேசியவற்றை எல்லாம் திருமொழியின் பார்வை கொடுத்த பதட்டத்தில் மொத்தமாய் உளறி வைத்து,
“நேத்தும் நான் வீட்டுக்கு போறதை பத்தி சொல்லனும்ன்னு தான் இருந்தேன். நீங்க, அந்த மேம், அப்பறம் அவங்கம்மா வந்ததுன்னு ஞாபகம் வந்துருச்சு. ஏன் நீங்க எதுவும் என்கிட்ட சொல்லலைன்னு தோணுச்சு. ரூம்க்கு வரவும் நீங்களும் என்னை பேச விடல. நான் கேட்கனும்ன்னு தான் இருந்தேன். ஆனா முடியலை…” என்றாள் படபடவென்று.
“இப்ப என்ன, உங்ககிட்ட முதல்லை சொல்லலை. அதனால போகவேண்டாம். அதானே? சரி போகலை…” என சொல்லியவள் உடை மாற்றும் அறையில் இருந்த தனது கப்போர்டை திறந்தாள்.
இத்தனை பேச்சிலும் திருமொழியை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனை பார்த்தால் எங்கே பேச?
“இந்த சேர்மன் டிஸைனா, என் டிஸைனான்னு தெரியலை. எதுவும் முகத்தை பார்த்து பேசவே வரமாட்டுது. இன்னும் எத்தனை நாளுக்கு? ம்மீ சரஸு, உன் மகளுக்கு பார்த்தியா? எனக்கு உன் சமத்து கொஞ்சமும் இல்லை…” என தன்னை தானே திட்டிக்கொண்டு வேறு உடையை தேடினாள்.